வியாழன், பிப்ரவரி 28, 2008

'சுஜாதா' ரங்கராஜன் (1935-2008)

முதலில் சுஜாதாவின் தாக்கம் ஏற்பட்டது நீண்ட தொடராகக் குமுதத்தில் வெளிவந்த 'கொலையுதிர்காலம்'. தலைப்பிலேயே சுஜாதாவைப் பார்க்கலாம். அதுவரை எந்த வார,மாத இதழும் வாங்கும் வழக்கமில்லாத எங்கள் வீட்டில் கொலையுதிர்காலத்துக்காக குமுதம் வாங்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் கிடைப்பதைவிட முந்தின நாளே வாங்கமுடியும் என்பதற்காக தூரத்தில் உள்ள பெரியகடைக்குப் போய் வாங்கிவந்து உடனே தொடரின் பகுதியை வாசித்துவிட்டுத்தான் அடுத்தவேலை. கிட்டத்தட்ட கஞ்சாவுக்கு அடிமையானதுபோல அந்த நாள் வந்தால் கை பரபரக்கும்! கால் பலமுறை கடைக்குப் போய்... 'வந்தாச்சா' என்று கேட்டு...

2004-ல் நியூக்ளியஸ் என்ற நிரற்பொதியை தமிழாக்கம் செய்யத் தலைப்பட்டபோது புதிய சொற்கள் பலவற்றிற்கு தமிழ்வடிவம் தேடி, பயன்படுத்தியது சுஜாதாவின் கலைச்சொல் தொகுதி ஒன்று (அப்போது இணையத்தில் கிடைத்தது). ழ கணினி என்ற திட்டத்துக்காகவோ என்னவோ சுஜாதா தலைமையில் ஒரு குழு இயங்கியபோது கோர்க்கப்பட்ட திரட்டு அது.

'தமிழ்மணம்' வலைவாசல் உருவானபோது 'வலைப்பூ' என்ற 'வாரம் ஒரு ஆசிரியர்' பொறுப்பேற்கும் வலைப்பதிவு வாயிலாக அதற்கு அறிமுகம் கொடுக்க எண்ணி முன்மொழிந்த பெயர் 'சுஜாதா'. அறிவியல், கணிமை - இவற்றில் ஈடுபாடு, புதுமுயற்சிகளுக்கான அவரின் ஆதரவு ஆகியவற்றால் சுஜாதா என்ற ஆளுமையின் பொருத்தம் இருந்தாலும், அணுகுவதற்கும், அவர் ஒத்துக்கொள்ளுவதற்குமான சாத்தியங்கள் பற்றிய பல கேள்விகள்/ முன்முடிவுகள் அந்த வேண்டுகோள் அவருக்குப் போகாமலே செய்துவிட்டன. குழந்தைத்தனமாக இருந்தாலும் இன்றும் நம்பிக்கொண்டுள்ளேன், 'அன்று கேட்டிருந்தால் நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார்'.

சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...