புதன், அக்டோபர் 15, 2003

ஆப்பிள் சொல்லும் பாடம்

என் மகன் (அரிச்சந்திரன் மகன்:-)

பஜ்ஜி எதிலெல்லாம் பண்ணலாம்? வாழைக்காய் என்று டைப் அடித்தாலே கை பஜ்ஜி என்று அடிக்கத் துடிக்கிறது. அந்த அளவிற்கு பஜ்ஜிக்கும் வாழைக்காய்க்கும் பந்தம். அடுத்து வெங்காயத்தைச் சொல்லலாம். அப்பள பஜ்ஜி அவசர பஜ்ஜி. மிளகாய் பஜ்ஜி கண்ணீர் பஜ்ஜி. ஆப்பிள் பஜ்ஜி?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் ஒருநாள் கேகே நகர் சரவணபவனில் ஆப்பிள் பஜ்ஜி சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போது சரவணபவன் என்றாலே வேறு என்ன என்னவோ நினைவுக்கு வருகிறது. அன்று 'இன்றைய ஸ்பெஷல்' போர்டில் ஆப்பிள் பஜ்ஜியைப்பார்த்து என்னவோ புதுமையாய் இருக்கும் என்று (அன்றே விலை பையைக் கடித்தது) ஆர்டர் பண்ணி, பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்து விட்டு வந்தவன் தான் பல மாதங்கள் சரவண பவனுக்கும் போகவில்லை, ஆப்பிள் பழமும் சாப்பிடவில்லை. இனிப்பும் புளிப்பும் கலந்த ஆப்பிளுக்கும், உப்பும் காரமும் கலந்த மாவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவர்கள் தான் புதுமை, ஆடம்பரம் என்று எதையாவது செய்தார்களென்றால் எனக்கெங்கே போனது புத்தி?

அதற்கடுத்துப் புதுமையாக இப்போது எங்கள் வீட்டில் ஆப்பிள் ஊறுகாய் ஊறிக் கொண்டிருக்கிறது. என்னடா மறுபடியும் புத்தியில்லையா என்று நினைக்காதீர்கள். சென்ற வார இறுதியில் ஆப்பிள் தோட்டத்துக்குப் போய் வந்ததின் ஒரு விளைவு இது.

பொன்னிறத்தில் பரங்கிக்காய்கள்

சாறு செறிந்த விதம் விதமான ஆப்பிள்களை, கையால் பறித்து, நறுக் நறுக்கென்று கடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை எத்தனை நாளாய் மனசை குடைந்து கொண்டிருந்தது! சிறுவயதிலிருந்து ஒவ்வொரு சினிமா பார்க்கும்போதும் முதலில் வந்து, மனப்பாடம் ஆகிவிட்ட 'வஜ்ரதந்தி, வஜ்ரதந்தி, விக்கோ வஜ்ரதந்தி...', அதில் பல்லைக் காட்டிகொண்டு ஒரு பெண் சரக்கென்று ஒரு ஆப்பிளைப் பறித்து கடிக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் ஒருநாள் இப்படி ஆப்பிளைக் கடிக்க மாட்டோ மா என்று ஏக்கமாயிருக்கும். எனவே இப்போது அமெரிக்க சித்தூரில் இதோ கூப்பிடுதூரத்தில் (உள்ளுர் தொலைபேசியில் கூப்பிடுதூரம், ஹி ஹி) ஆப்பிள் தோட்டம், அங்கு போனால் எத்தனை பழம் வேணுமானாலும் பறிக்கலாம், கடிக்கலாம், சுவைக்கலாம்; திரும்பி வரும்போது பையில் உள்ள ஆப்பிளுக்கு மட்டும் பவுண்டுக்கு 40 சென்ட் கொடுத்தால் போதும் (நல்லவேளை நம்மை எடை போட்டுப் பார்ப்பதில்லையாம்) என்று கேள்விப்பட்டவுடன் சும்மா இருக்க முடியவில்லை.

இந்த மாதிரி விஷயம் என்று கேள்விப்பட்டதுதான் தாமதம், 'நானும் வர்ரேன்' என்று ஒன்று, இரண்டு..மொத்தம் ஆறு குடும்பங்கள் அணிவரிசை ஆகிவிட்டது. கிளம்பினோம். பூந்து விளையாடிடணும் என்று தீர்மானம் செய்துவிட்டேன். முதல் ஆப்பிள் முழுசாய் சாப்பிட்டேன், அடுத்த ஆப்பிள் அரை வாசிக்கு மேல் உள்ளே போகவில்லை திகட்டியது. அடுத்த வகை வேறு மாதிரி இருக்குமே என்பதற்காக மூன்றாவது ஆப்பிளை ஒரு கடி. அவ்வளவுதான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், ஆப்பிள் அஞ்சு கூட இல்லை. ஆப்பிளைப் பார்த்தாலே வெறுக்க ஆரம்பித்துவிட்டது.

உலகமே இப்படித்தான். எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்கும்போது தான் பெரிய விஷயம். ஒன்றை அடையவேண்டும், அதற்காக எவ்வளவு மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று இருக்கும். அது கிடைத்தவுடன், அட இவ்வளவு தானா என்று இருக்கும். இது இந்த மண்டைக்கு உறைப்பது இது முதல் முறையல்ல. ஆனாலும் இப்படி நிறைய விஷயங்கள் இன்னும் ஆளை ஈர்த்தபடியேதானே இருக்கின்றன! ஒருவிதத்தில் இந்த ஈர்ப்பு தானே வாழ்க்கையின் உயிர்நாடி என்றும் தோன்றுகிறது. இப்படி சின்னச்சின்ன ஆசைகள் விருப்பங்கள் தானே வாழ்க்கையை இன்னும் அலுக்காமல் வைத்திருக்கின்றன.

திராட்சைப்பழம் கிடைக்காமல் போனதால் நரி 'சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்' என்று சொல்லிப் போன கதை தெரியும். எண்ணிப் பார்த்தால் கொத்து திராட்சைப்பழம் கிடைத்திருந்தாலும் அது அப்படித்தான் சொல்லியிருக்கும் என்று நினைக்கிறேன். (அதெல்லாம் சரி, நரி சாக பட்சிணியா மாமிச பட்சிணியா, திராட்சையெல்லாம் சாப்பிடுமா? அதைக் கண்டுபிடிக்கணும்

எத்தனை ஆப்பிள் விரயம்?

அங்கு ஆப்பிள் தோட்டத்தில் மனத்தை உறுத்திய இன்னொரு விஷயம், ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு 50 பழங்களாவது வீணடிக்கப் பட்டுக் கிடந்ததுதான். ஒரு வரிசைக்கு 30 மரங்களாவது இருக்கும், இப்படி ஒரு கூட்டத்தில் 20 வரிசை இருக்கும், அப்படியானால் ஒரு கூட்டத்தில் எத்தனை பழம் வீண்? 30000? இப்படி அந்தத் தோட்டத்தில் ஒரு 4-5 ஆப்பிள் கூட்டங்கள் இருந்தன, அப்படியானால் மொத்தம் வீணடிக்கப்படும் பழங்கள்...ஒரு லட்சத்திற்கும் மேல்! மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. இதெல்லாம் இந்த நாட்டில் தான் சாத்தியம். எத்தனை பேர் நம்மூரில் வருடத்திற்கு ஒரு ஆப்பிளுக்கும் குறைவாக சாப்பிடுபவர்கள்? இந்தியாவில் இருக்கும்வரை எங்கள் வீட்டிலேயே ஒரு ஆப்பிளை ஒருவர் மட்டும் சாப்பிடுவது மிக அபூர்வம், சொல்ல வெட்கப்படவில்லை. உலகில் ஏனிந்த ஏற்றத் தாழ்வு? பதில் தெரியாத கேள்விகள்.

அதெல்லாம் சரி, அதென்ன ஆப்பிள் ஊறுகாய்?

நெல்லிக்காய் ஆப்பிள் (crab apple)

நெல்லிக்காய் சைசில் ஆப்பிள் ஒரு மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்திருந்தது. பறித்து சுவைத்ததில் அப்படியொரு புளிப்பு. அசல் நெல்லிக்காய் புளிப்பு, ஆனால் ஆப்பிள் மணம், வடிவம், நிறம், கவர்ச்சி! இங்கேதான் எதில் R&D பண்ணலாம் என்று மண்டையில் எப்போதும் ஒரு அரிப்பு ரெடி ஸ்டாக்காக இருக்குமே, சரி, ஆப்பிள் ஊறுகாய் போட்டுப் பார்த்துவிடலாம் என்று அதில் கொஞ்சம் கொண்டுவந்து, அதை அன்பு மனையாள் ஊறுகாயும் போட்டிருக்கிறாள். இது வெற்றியா இல்லை ஆப்பிள் பஜ்ஜி கதையாகப்போகிறதா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரியும். வெற்றி என்றால் சொல்கிறேன்.

திங்கள், அக்டோபர் 13, 2003

ஒலிவிளையாட்டைப் படிக்கும் முன்

எச்சரிக்கை 1:இந்த முறை தொழில்முறை ஒலிப்பதிவுக்கல்ல. திருட்டு ஆடியோ CD தயாரிப்பதற்கு அல்ல. (தயாரித்தாலும் ஒரு பயலும் வாங்கப்போவதில்லை)
எச்சரிக்கை 2: வெறும் windows மட்டுமே பயன்படுத்தி எப்படி கேட்கும்படியான தரத்தில் ஒலிப்பதிவு செய்வதென்பது தான் நோக்கம். மேலதிகமாக மற்ற மென்பொருட்களை உபயோகிக்க தயாரென்றால், இன்னும் சிறப்பாகச் செய்யமுடியும்.
எச்சரிக்கை 3:இங்கு மென்பொருள் வல்லுனர் என்பது யாரையும் குறிப்பிட்டு அல்ல, முக்கியமாக என் இனிய நண்பர் பரிமேலழகரை அல்லவே அல்ல.
எச்சரிக்கை 4: ***இந்த இடம் காலியாக இருக்கிறது*** யாராவது நிரப்ப உதவுங்களேன்.

ஒலியுடன் விளையாட்டு

கணினியின் பல பரிமாணங்களில் ஒலி முக்கியமான ஒன்று. ஆனால் அலுவலகங்களில் பெரும்பாலும் உபயோகிக்கப்படாத ஒன்றும் கூட. எனக்குத்தெரிந்து மென்பொருள் துறையில் வருடக்கணக்கில் பணிபுரியும் நண்பர்களே பலர் ஒலித்தரவைக் கையாளும் செயலிகளை அதிகம் அறிந்திருப்பதில்லை. நேற்று சந்தித்த ஒரு நண்பர் ஏழு வருடமாக அமெரிக்காவில் மென்பொருள் வல்லுநராக (வல்லுனர்?) இருக்கிறார், ஆனால் அடிப்படை ஒலிப்பதிவு செயலி (sound recorder) விண்டோஸில் எங்கு இருக்கிறது, எப்படி உபயோகிப்பது என்பது தெரியவில்லை. இவர் போன்ற பலர் யூனிக்ஸ் உலகத்தில் பணியாற்றுவதும் ஒரு காரணமானாலும், இந்த ஏழு வருடமும் அவரிடம் விண்டோஸில் இயங்கும் மடிக்கணினி ஒன்று இருந்தேதான் வந்துள்ளது. நண்பர் கண்ணன் அவர்கள் தன் 'குரல்வளை' முயற்சிக்கு பங்களிக்க ஆர்வமிருந்தும் சிலர் தொழில்நுட்பக் காரணங்களால் செய்யாமலிருப்பதாக சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நான் நச்சரித்து சிலரிடம் பெற்ற ஒலிக் கோப்புகளும் கேட்கமுடியாமல் கரகரவென்று முறுக்குக் கடித்தாற்போல் இருந்ததும் அதே காரணத்தால் தான்.

என் மகளின் இசை ஆசிரியர் கொடுத்திருந்த ஒலி நாடாவை குறுவட்டாக்கி காரில் ஓடவிட்டிருப்பதை அந்த நண்பர் ஆச்சர்யமாகப் பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் AVM 'G' தியேட்டரில் தான் செய்ய முடியும் என்பது போல ஒரு எண்ணம்!

எனவே எனக்குத்தெரிந்த ஒலிப்பதிவு விளையாட்டுக்களை இங்கு பதிவு செய்தால் யாருக்காவது பயன்படுமென்று இதோ செய்கிறேன். விளையாட்டுக்கள் என்று நான் குறிப்பிடக்காரணம்:
1. இது சுய உபயோகத்திற்காக, தன்னிடம் இருக்கும் வசதிகளை வைத்து செய்யக் கூடியது,
2. இந்த நகல்தடுப்பு சட்டங்கள் (copyright laws), அதன் பாதிப்பு ஆகியவற்றை இந்த விளையாட்டுக்கு வருபவர்கள் தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும். நான் எதற்கும் பொறுப்பில்லை:--o

நான் உங்களை அந்த சட்டங்களை மீற தூண்டுவதாகவோ, உதவுவதாகவோ யாரும் என் மேல் வழக்குப் போட்டால் காப்பாற்ற இந்த அமெரிக்காவில் எனக்கு யாரும் இல்லை. என் ஒரே வழக்கறிஞ நண்பர் சுபாஷ்கூட இங்கில்லை. அமெரிக்கா சிறையில் களி கிடைத்தால் சந்தோஷம், ஆனால் இந்த பர்கர், சுடுநாய், பீசாவெல்லாம் என் வயிறு தாங்காது! ஜெயில் என்றதும் எல்லே ராம் எழுதின NRI கோதுவின் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. மனுஷன் என்ன அருமையாக அனுபவித்து(?) எழுதியிருந்தார்!

இந்த ஒலிப்பதிவு விளையாட்டுகளில் பலவகை உண்டு:
1. ஒலிநாடா அல்லது வானொலிப்பெட்டி போன்ற ஒலிஎழுப்பும் கருவியிலிருந்து அல்லது ஒலிவாங்கியிலிருந்து (mic) கணினியில் ஒலியைப் பதிவு செய்தல்.
2. வேறு கருவியிலிருந்தல்லாமல், உங்கள் கணினியிலிருந்தே வெளிப்படும் ஒலியை பதிவுசெய்தல். இணைய வானொலி, மற்றும் இறக்கிக் கொள்ளமுடியாத ஆனால் கேட்கமுடிகின்ற ஒலித்தரவுகளை இதன் மூலம் பதிவு செய்யமுடியும் (Again, copyright warning!).
3. ஒலிக் கோப்புகளை குறுவட்டில் பதிவுசெய்தல் (audio CD or MP3 CD)

இவற்றில் மூன்றாவது, CDRW உள்ள கணினியில் மட்டும் சாத்தியம். அதை வைத்திருப்பவர்கள் இதை செய்வதெப்படியென்பதைக் கட்டாயம் அறிந்திருப்பார்கள், எனவே இங்கு அது விளக்கப்படாது.

முதல் விளையாட்டு பலருக்கும் தெரிந்த ஒன்று, இருந்தாலும் முழுமை கருதி இங்கு அதை மீண்டும் அலசி, அதில் உள்ள சில சூட்சுமங்கள் என்ன என்றும் பார்ப்போம்.

ஒலிவாங்கியை கணினியுடன் இணைப்பது எளிது. வேறு கருவியென்றால் ஒரு இணைப்பு கேபிள் தேவைப்படும். அது இருபுறமும் 3.5 mm ஸ்டீரியோ ஜாக் கொண்டுள்ள விசேட கேபிள். கீழே பார்க்கவும்.

இணைப்பு கேபிள்
சும்மா ஒரு விளக்கத்துக்காக இப்படி இருக்கு,
இது போல் ரெண்டு துண்டு பண்ணினா எப்படி இருக்கும்? :-))

அதன் ஒரு முனையை கணினியின் ஒலிவாங்கி வாயிலில் (mic port) செருகி, மறுமுனையை உங்கள் ஒலிக்கருவியின் earphone/speaker/line-out இதில் ஏதாவது ஒன்று இருக்கும், அந்த வாயிலில் செருகிவிட்டால் இனி மென்பொருள் வேலை தான் பாக்கி.

நாம் இங்கு காணும் முறை விண்டோஸ் XPயில் இயங்கும் கணினிக்குப் பொருந்தும். பெரும்பாலான முறைகள் எல்லா விண்டோஸ் வகைகளுக்கும் பொதுவானவைதான். மற்றவர்கள் கொஞ்சம் முயன்று கவனித்தால் மாற்று முறை கிடைக்கும்.

1. செயலி (Program): Start-->Programs-->Accessories-->Entertainment-->Sound Recorder. இதைத் திறந்து கொள்ளவும்

ஒலிப்பதிவு செயலி

2. ஒலிமூலம்(Sound source): எங்கிருந்து வரும் ஒலியை பதிவுசெய்யவேண்டும் என்று நீங்கள் சொல்லவேண்டும். வேறுவிதமாய் சொல்லாதவரை, விண்டோஸ் தானாக ஒலிவாங்கி வாயிலை தெர்ந்தெடுத்துக்கொள்ளும். எனவே இப்போதைக்கு இந்தப் படியை நீங்கள் தாண்டிச்செல்லலாம்.

3. ஒலிப்பதிவு நேரம் (length of recording): இங்குதான் முதல் சூட்சுமம் இருக்கிறது. இயல்பாக விண்டோ ஸ் ஒரு நிமிடம் வரை நீளம் கொண்ட ஒலித்துண்டுகளைத் தான் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த எல்லையை எப்படி விரிவு படுத்துவது? ஒரு எளிய வழியை இங்கு காண்போம்.
ஒலிப்பதிவுச் செயலியின் 'பதிவு' பொத்தானை அழுத்தி ஒரு நிமிட நேரம் கொண்ட ஒரு வெற்று (dummy) ஒலித்துண்டினை முதலில் தயார் செய்யலாம். பிறகு இதே செயலியில் உள்ள Edit-->copy & Edit-->Paste insert உபயோகித்து, அந்த நீளத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். ஒருமுறை ஒட்டினால் 60 Sec என்பது 120 sec ஆவதைக் காணலாம். எத்தனை முறை தேவையோ அத்தனை முறை செய்து நமக்குத் தேவையான நேரம் அல்லது அதைவிட சற்று அதிகமான நேரம் வரும்படி செய்யலாம். இப்போது இந்த நீளமான ஒலிக்கோப்பை ஒரு பெயரில் (e.g. 240SecTemplate) சேமித்து வைத்தால், ஒவ்வொரு முறை நீளமான ஒலிப்பதிவு செய்யும்போதும் இதை ஒரு முன்மாதிரி (template) ஆக உபயோகிக்கலாம். இவ்வாரு நீளமாக்கப்பட்ட ஒரு ஒலிக்கோப்பு இந்தச் செயலியால் திறக்கப்பட்டிருக்கும் வரை இந்தச்செயலி 60 நொடி எல்லையை மறந்துவிடும்!

4. ஒலிச்சத்த அளவு (volume level): நாம் ஒலி எழுப்பப் பயன் படுத்தும் கருவியின் ஒலி அளவு (அல்லது பேச்சைப் பதிவு செய்வதானால் ஒலிவாங்கியின் திறன்) சரியான அளவில் குறைந்தாலும் கூடினாலும் செய்யும் ஒலிப்பதிவின் தரம் சிதைந்துவிடும். வெளிக்கருவியில் பாதிக்கும் குறைந்த அளவே சத்தம் வைத்துக்கொள்வது நல்லது. இருப்பினும் ஒலிப்பதிவு செய்யும்போது சிறிது கவனம் செலுத்தி இதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்குத்தான் பச்சை வண்ணத்தில் ஒரு மானி(meter) இந்தச்செயலியில் அமைக்கப் பட்டிருக்கிறது. செயலியின் பதிவு பொத்தானை அழுத்தி அதேசமயம் வெளிக்கருவியில் ஒலிஎழுப்பினால் அந்தப் பச்சை வண்ண மானி உயிர் பெற்றுத்துடிப்பதை அதில் தோன்றும் அலைகளால் காணலாம். நம் ஒலி மூலம் சரியான சத்த அளவில் இருந்தால் இந்த மானியில் அலைகளின் உயரம் நடுக்கோட்டுக்கு மேல் மாறிமாறி எழும்பும். இந்த உயரம் அந்த மானியின் மேல் எல்லையைத்தொட்டுவிட்டால் நம் ஒலி மூலத்தின் சத்த அளவு அதிகம். மாறாக அலைகளின் சராசரி உயரம் மிகவும் குறைவாய் இருந்தால் சத்த அளவு குறைவு.

சத்த அளவு அதிகம் ___________ சத்த அளவு குறைவு
இதை சற்று நம் கைப்பட பல முறை செய்து, அப்படிப்பதிவு செய்ததை ஒலிக்கச்செய்து கேட்டால் சுலமாய்ப் புரிந்துவிடும். இந்த சிறு விஷயம் சரியாக கையாளப்படாதாலேயே, அந்த 'முறுக்குக் கடிக்கும்' சத்தம் கேட்பது! அல்லது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்பது!
ஒலிப்பதிவு செயலியில் உள்ள மற்ற பொத்தான்கள் எளிதில் விளங்குவன. அவற்றை பயன்படுத்தி பதிந்த ஒலியை ஒலிக்கச் செய்யலாம். சுட்டி முள்ளை முன்பின் நகர்த்தி தேவையற்ற ஒலித்துண்டுகளை வெட்டி எறியலாம். இன்னும் நிறைய விளையாடலாம்.

5. ஒலித்தரவு வடிவம் (audio format): இப்படி பதிவு செய்த ஒலி இன்னும் தற்காலிகமாக விண்டோ ஸின் நினைவகத்திலேயே இருக்கும். அடுத்து அதை நிரந்தரமான கோப்பாக சேமிக்கவேண்டும். File-->Save as மூலம் அது சாத்தியம். பிடித்த பெயர்கொடுத்து சேமிக்கும்போது கீழே கடைசியில் என்ன வடிவத்தில் நமக்கு வேண்டும் என்று சொல்லிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. அங்கே Mpeg Layer-3 என்று சொல்லிவிட்டால் mp3 வடிவத்தில் சேமித்துக்கொள்ளலாம். இயல்பான வடிவம் wav எனப்படுவது. இந்த வடிவங்களிலும் bitrate என்று சொல்லப்படுகின்ற இன்னொரு அமைப்பு இருக்கிறது. அதையெல்லாம் நாமே சோதித்து அறிந்து கொள்வது எளிது.

இப்போது ஒலிக்கோப்பு உங்கள் கையில், அதாவது கணினியில். இனி அதை என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம்.

இணைய வானொலியிலிருந்து எப்படிப் பதிவு செய்வது, மற்றும் சத்த அளவைக் கையாள என்ன வழிகள் என்பதை பின்னொருநாள் காண்போம்.

பின்குறிப்பு:தொழில்நுட்ப விஷயங்களைத் தமிழில் தர சற்று மெனக்கெட வேண்டியிருக்கிறது, படிப்பவர்கள் பாடு இன்னும் கடினம் என்றும் தோன்றுகிறது. ஆனாலும் விடப்போவதில்லை. நடப்பது நடக்கட்டும்.

செவ்வாய், அக்டோபர் 07, 2003

சாக்குப்போக்கு

சில முக்கியமான நண்பர்கள் இன்னும் என் வலைப்பூவைப் படிக்காமல் (தொழில்நுட்ப, மற்றும் கட்டமைப்பு காரணங்களால் தான்) இருப்பதால், அவர்களைப் படிக்க வைத்துவிட்டுத்தான் மேலும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். இந்த வாரம் ஆப்பிள் தோட்டத்துக்குப் போய் கைப்பட ஆப்பிள் பறித்து வந்த அனுபவம், அமெரிக்க உழவர் சந்தை அனுபவம், மற்றும் ஏற்கனவே ஆரம்பித்து நடுவில் நிற்கும் மனித உணவு தர்மம், எங்கள் நிறுவனத்தில் வங்கிக் கொள்ளையனால் கிடைத்த அனுபவம் என நிறைய எழுத வேண்டியிருக்கிறது. மீண்டும் வருவேன்.

சனி, அக்டோபர் 04, 2003

கணினித்திரையில் கலைடாஸ்கோப்



சிறு வயதில் பள்ளியில்/பாலிடெக்னிக்கில் படிக்கையில் இயற்கையாக அறிவியல் ஆர்வம் அதிகம். முக்கியமாக இயற்பியல். குண்டு பல்பு ஒன்றை கவனமாக அதன் அலுமினிய வாய்ப்பகுதியைத் திறந்து, உள்ளே இருக்கும் ஃபிலமென்ட் தாங்கும் தண்டுப்பகுதியை தூக்கி எறிந்து விட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, அதற்கென்று அட்டையால் செய்யப்பட்ட சதுர வடிவப்பெட்டிக்குள் வைத்து, 35mm filmஐ அதன் மூலம் சுவரில் பெரியதாகக் காட்டி விளையாடியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பைசா செலவில்லாமல், விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானம், விளையாட்டுக்கு விளையாட்டு, கைகளுக்கும் வேலை என எவ்வளவு ஆக்கபூர்வமாக பொழுது கழிந்தது என்று நினைத்தால் மகிழ்வுடன், பெருமையாகவும் இருக்கிறது.

50 பைசாவுக்கு ஒரு லென்ஸ் (கைரேகை ஜொசியம் கூட பார்க்கலாம் அதை வைத்து) வாங்கி, அந்த குண்டு பல்பு லென்சுடன் நீண்ட ஊதுபத்திக்குழலால் இணைத்து, தொலைநோக்கி ஒன்று செய்ததும், வாசலில் கிடக்கும் ஆட்டாங்கல்லில் உட்கார்ந்து கொண்டு தூரத்தில் தெரியும் பனைமரத்தின் இலைகளை, பறவைகளை (தலைகீழாகத் தெரிந்தும்) ஆர்வமாய் கண்காணித்ததும், ஆயிரம் Gameboy Advanceகள் கொடுக்க முடியாத ஆனந்தம். பாவம் என் மகன் Yu-Gi-Oh, Pokemon என்று தலையில் கல்லைத்தூக்கிபோட்டாலும் தெரியாமல் மூழ்கிக் கிடக்கிறான். (BTW, அந்த Cartridge வந்துவிட்டது. ஆனால் ஏன் என்னைக் குழப்பினான் என்பது தான் புரியவில்லை!)

நீராவி டர்பைன் பண்ணியிருக்கிறேன், மின் மணி பண்ணியிருக்கிறேன், பெரிஸ்கோப் பண்ணியிருக்கிறேன், ஆனால் கலைடாஸ்கோப் மட்டும் பண்ணினதில்லை. ஒரே அகலத்தில் மூன்று கண்ணாடிப் பட்டைகள் கிடைக்கவில்லை. ஆனால் நண்பன் ஒருவன் டவுனில் வாங்கிவந்தது என்று காண்பித்தபோது அதிசயமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.

வலைப்பூக்களைச் சுற்றிவந்தபோது நண்பர் மீனாக்ஸ் அல்லது பரி, அல்லது வேறு யாரோ, பெயர் மறந்து விட்டது, அவர்கள் கொடுத்திருந்த தொடர்பு ஒன்றின் மூலம் Flash மென்பொருள் கொண்டு தயாரான ஒரு கலைடாஸ்கோப் கிடைத்தது. மிகச்சிக்கனமாக வெறும் 5 கிலோ (ஷோபனா ரவி பாணியில் கில்லோ) பைட்டுகள் மட்டுமே அளவான ஒரு flash object. சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏழு விதை வடிவங்களில் ஒன்றைச் சொடுக்கி, பின் சுட்டியை அங்கும் இங்கும் அசைத்துப் பாருங்கள் எண்ணற்ற வர்ண ஜாலங்கள் தெரியும். அவற்றில் சிலவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன். நீங்களும் அதனுடன் விளையாடிப்பாருங்கள்.

இது ஒரு போட்டிக்காக நிறையப்பேர் அனுப்பியிருந்த அளிப்புகளில் ஒன்று. நேரமும், ஆர்வமும் உள்ளவர்கள், குறிப்பாக இணையத்தொழிலில் இணைந்திருப்பவர்கள் கட்டயம் பார்க்கவேண்டிய தொகுப்பு இது.

அந்த இளமைக்கால அறிவியல் சோதனைகளை எண்ணுகையில் இன்னொன்றும் தோன்றியது, அவற்றை விளக்கமாக என் வலைப்பூவாய் பதிப்பித்தால் என்ன என்று. நேரம் கிடைக்கும் போது செய்ய ஆசை.

புதன், அக்டோபர் 01, 2003

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2


முன்பு பலமுறை என் சக மேலாளர்களுடன் உரையாடும்போது, எங்கள் பேச்சு எங்கள் நிறுவனத்தில் பகிர்ந்தளித்தல் (Delegation) போதுமான அளவுக்கு இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வதாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சூழலுக்குப் பொருத்தமான நிர்வாகப் பகிர்வு அமைப்பை வைத்துக்கொள்ளுகின்றன. எது சரி எது சரியில்லை என்பது நிறுவனத்தின் வெற்றி தோல்வியை வைத்துத்தான் கணிக்க வேண்டியிருக்கிறது. நமக்குப் பிடித்தவண்ணம் இருக்கிறதா என்பதைவிட இதைக்கொண்டு எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று சிந்திப்பவரே வெல்லுகிறார்.

சரி, இந்த பகிர்ந்தளித்தல் பற்றி அய்யன்(?) திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தால்,

இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (514)


பொருட்பால், அரசியல், தெரிந்து வினையாடல்

இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. பெரும்பாலான குறட்பாக்கள் தானே விளங்கிக் கொள்ளும்படியாகத் தானே இருக்கின்றன! 'இந்தச் செயலை, தன்னிடமிருக்கும் ஆற்றல், செல்வம், திறமை போன்ற இவற்றால், இவன் செய்து முடிப்பான் என்பதை ஆராய்ந்து, அப்படிப்பட்ட செயலை அவனிடத்தில் விட்டுவிட வேண்டும்' என்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் எண்ணற்கரிய எதையும் சொல்லுவது போல் தெரியவில்லை. ஆனால் மூன்று முக்கியமான சொல்லாடல் மூலம் சொல்ல வந்த கருத்தை ஆழமாகச் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒரு வாதத்திற்காக இப்படி மாற்றிச் சொல்லிப் பார்ப்போமே:
இதனை இதனான் இவன்செய்யும் என்றோர்ந்து
அதனை அவன்கண் கொடல்.

(ஓர்ந்து - எண்ணி)

இதுவும் கிட்டத்தட்ட அதே கருத்தைச் சொல்லுவது போல இல்லை?

மூன்று இடங்களில் சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை
1. முடிக்கும் - செய்யும்
2. ஆய்ந்து - ஓர்ந்து
3. விடல் - கொடல்
இந்த மூன்று இடத்தில் தான் நிர்வாகப் பகிர்ந்தளித்தலின் அடிப்படையைத் தொட்டு விடுகிறான் அய்யன்.

ஒன்று, இந்தக் காரியத்தை இவன் செய்வான் என்று பார்த்தால் போதாது, இவன் 'முடிப்பானா' என்று பார்க்க வேண்டும்.
இரண்டு, அந்த வண்ணம் பார்க்கும்போது, அவனின் தகுதியை, கைக்கொண்ட ஆற்றல், செல்வம், திறமை (Means என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஈடான தமிழ்ப்பதம் என்ன, தெரியவில்லையே!) இவற்றை எண்ணிப்பார்த்தால் போதாது, 'ஆராய்ந்து' பார்க்க வேண்டும்.
மூன்று, அப்படி ஒருத்தனிடத்தில் ஒப்படைக்க முடிவு செய்தபின் அவன் கையில் கொடுத்தால் மட்டும் போதாது, அவனிடத்தில் 'விட்டுவிட' வேண்டும்.

இந்த மூன்றாவது ஒன்றிற்காகவே இந்தக் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்!

ஒண்ணேமுக்கால் அடியில் சொன்னாலும் ஒருபக்கம் எழுதிச்சொல்லவேண்டியதை அழுத்தம் திருத்தமாய் சொல்பவனுக்கு ஒரே பெயர் தான் இருக்கமுடியும், அவன் தான் வள்ளுவன்! வாழ்க அவன் வாக்கு!

2003, செப்டம்பர் மாதத்துப் பதிவுகள்


ஏனிந்த வலைப்பதிவு?



கிடாவெட்டும் தடைச்சட்டமும்



மனிதனின் உணவு தர்மம் - 1



குருவிடம் கற்காத கலை



Unicode-ல் தமிழ் செய்தால் கிட்டும் அனுகூலம்!



சுய விளம்பரம்



உயிருள்ள கூகிள்



வார்ப்புக்களோடு யுத்தம்



மெல்லிசை பாசுரங்கள்



திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் -1



காலங்கடந்த நீதி



இப்போதைக்கு ரோச்சஸ்டர்



அரிச்சந்திரன் மகன்



மனிதனின் உணவு தர்மம் - 2



ஆண்பிள்ளை சமையல்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...