எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
திங்கள், அக்டோபர் 27, 2003
NRI பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
நான் அறிந்தவரை, முக்கியமாக மூன்று வகையினராகத் தரம் பிரித்துப் பார்க்க முடிகிறது.
முதலில் ஒரு பத்து-இருபது வருடங்களுக்கு முன் இங்கு வந்து இங்கேயே உறையுரிமை, பிறகு குடியுரிமை என்று தங்கிவிட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப, பொறியியல், மற்றும் விஞ்ஞான வல்லுனர்கள். சிலர் இங்கு மேல்படிப்புக்காக வந்து பிறகு இங்கேயே வேலை தேடிக்கொண்டவர்கள். இவர்களின் குழந்தைகள் இந்த அமெரிக்க சூழ்நிலையிலே வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இணையத்தொடர்பு, இந்திய பலசரக்கு சாமான்கள் ஆகியவை இல்லாத அந்தக்காலங்களில் (நல்ல அரிசி, பருப்பு கூடக் கிடைக்காத நிலை) இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியை, இந்திய சமூக சூழலை அறிந்தவர்களாக வளர்க்க மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். அதில் எல்லாரும் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியில்லையென்றால் அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. இவர்களில் பெரும்பாலானோருக்கு திரும்ப நிரந்தரமாக இந்தியா வருவதைப்பற்றி ஆழ்ந்த ஆர்வம் இருப்பதில்லை. வந்தாலும் அவர்களால் சமாளிக்க முடியுமா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. இவர்கள் அந்த 'பணக்கார NRI' உருவத்திற்குக் கிட்டத்தில் வருபவர்கள். கொச்சையாக ABCDs (American Born Confused Desis) என்று அழைக்கப்படும் குணாதிசயங்கள் இவர்களின் குழந்தைகளுக்கு ஓரளவேனும் பொருந்தும். இவர்கள் பேச்சு அமெரிக்கப் பொருளாதாரம், இராக், இந்தியாவின் குப்பை அரசியல், எந்த நகர்ப்பகுதியில் கல்வித்தரம் உயர்வு, வீட்டின் கணப்புக்கு எரிவாயு செலவை எப்படிக் குறைப்பது, புல்வெட்ட, பனியைத்தள்ள ஒப்பந்தக்காரனை வைக்கலாமா அல்லது தானே செய்வது நல்லதா... என்று போகும்.
இரண்டாவது வகையினர் இந்தப் பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாய் வந்த அதிலும் முக்கியமாய் மென்பொருள்-கணினி சம்பந்தப்பட்டவர்கள். குறைந்த கால இடைவெளியில் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் பலர் இப்போது உறையுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இப்போது தான் பள்ளிக்குப்போக ஆரம்பித்திருக்கும் குழந்தை, பச்சை-அட்டை விண்னப்பத்தின் முன்னேற்றம், ஊரிலிருந்து வந்துள்ள பெற்றோர், இந்த இடத்தில் இன்னும் எத்தனை நாள் போன்றவை இவர்கள் எண்ணங்களையும், உரையாடல்களையும் ஆக்கிரமிக்கும் விடயங்கள். இன்னும் சொந்த ஊர், உறவினர் ஆகியவற்றோடு தொப்புள் கொடி உறவு, புதிதாய் கிளம்பியிருக்கும் 'அக்கரைக்குச் செல்லும் வேலைகள்' ஆகியவை இவர்களை இங்கும் அங்கும் அலைக்கழித்து மன உளைச்சலிலேயே வைத்திருப்பதைப் பார்த்தால் முதல் வகை ஜீவன்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
மூன்றாவது வகை, என்வகை. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களிலிருந்து, தற்காலிகம் என்று பறையறிவிப்போடு அமெரிக்கா வந்துள்ளவர்கள். இவர்களில் நேற்று வந்தவர்களும் இருப்பார்கள்; போன மாதம், போன வருடம் வந்தவர்களும் இருப்பார்கள். ஒட்டுனர் உரிமம், வாடகை வீட்டு ஒப்பந்தக் காலம், ஊருக்கு தொலைபேசிக் கட்டணத்தை எப்படிக் குறைப்பது, இலவச இணையசேவையில் எப்படி தொடர்வது, விசா என்று காலாவதியாகிறது, ஏதாவது பொருள் வாங்கினால் அது இந்தியாவில் வேலை செய்யுமா, சுங்க சோதனைக்கு தப்புமா; பயன் படுத்திய மேசை, இருக்கை, பாய் படுக்கையானாலும் பரவாயில்லை எங்காவது குறைந்த விலையில் (இலவசமாய்க் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி) கிடைக்குமா, இருக்கும் ஒரே வேலைக்கு என்னை வைத்துக்கொள்வார்களா அல்லது அந்தத் தெலுங்கரையோ மராத்திக்காரரையோ வைத்துக்கொள்வார்களா, ஊரில் வாடகைக்கு விட்டு வந்த வீடு எப்படி இருக்கிறதோ - இது மாதிரி ஓடும் இவர்கள் சிந்தனை. இவர்களுக்குத்தெரியும், இங்கு இருப்பதெல்லாம் மாயை, அன்னை பூமியே நிரந்தரம் என்று. இங்கு தங்கள் தங்கலை எவ்வளவு மாதம் நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்ட எதுக்கும் தயாராய் இருப்பார்கள். நாளைக்கே பெட்டிகட்டச்சொன்னால் அத்ற்கும் தயார். ஊரில் ஒரு வீடு கட்டுவதற்காக இங்கு இருக்கும் காலத்தில் எப்படியாவது சேமிக்கத் தயாராயிருப்பார்கள்.
எனவே இப்போதெல்லாம் அமெரிக்க வாழ் தமிழரைப் பார்க்கும்போது அவர்கள் பேச்சு நடவடிக்கையிலிருந்து இம்மூன்றில் அவர்கள் எவ்வகை என்று தெரிந்து அதற்குத்தக்கபடி உரையாட முயற்சிக்கிறேன்.
ஞாயிறு, அக்டோபர் 26, 2003
Updates
கணினியில் ஒலிப்பதிவு செய்ய, செய்ததை வெட்டி, ஒட்டி, கோர்த்து, வடிவம்மாற்றி இன்னும் பலதும் செய்ய நண்பர் வெங்கட் ஒரு செயலியை எனக்குச் சுட்டியுள்ளார். அது நன்றாக இருக்கிறது. இரண்டாவது பாகத்தில் அதையும் உள்ளடக்கி எப்படி கணினியில் கேட்கும் அனைத்தையும் பதிவு செய்யலாம் என்று என் அனுபவததைப் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். கூடிய விரைவில்.
Update 2:
ஆப்பிள் ஊறுகாய் பெருவெற்றி! ஆந்திரதேசத்துப் பக்குவத்தில் செய்தது. சரக்கு வேண்டுபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் :-)) மேலும் நண்பர் வாசன் பிள்ளை பீச் பழத்திலும் (காயிலும்?) ஊறுகாய் போடலாம் என்று தன் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார், யார் முயற்சி செய்யப்போகிறீர்கள்?
Update 3:
என் வலைப்பூவைப் படிக்க வேண்டி நான் செய்த தொல்லைகளால், ஒரு நண்பர் கோவையைவிட்டு வெளியூருக்கு (வேலையாய்த்தான்) போய்விட்டார். இருப்பவர்கள் படித்து, கருத்தும் சொல்லிவிட்டார்கள், எனவே அந்தக் குறை ஒருவழியாகத்தீர்ந்தது:-))
Update 4:
கடந்த வாரம் மேலதிகமாய் வலைப்பூ வாத்தியார் வேலை வேறு பார்க்கவேண்டி வந்ததால் இங்கு கொஞ்சம் கவனம் குறைந்துவிட்டது. தீபாவளீ விடுமுறைக்குப்பின் நம் பூ இனி தொடர்ந்து மலரும். (ஜாக்கிரதை!)
பி.கு. இந்த update என்ற வார்த்தைக்கு சரியான தமிழ்ப்பதம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றியுடையவனாவேன். நன்றிக்கடனாக அதை update 5 ஆகப் போட்டுவிடுகிறேன், பார்ப்பவர்கள் அனைவருக்கும் பயன்படும் (ஆமா, இது பெரிய தினமலர் வெப்சைட், இதில் போட்டதும் உலகத்துக்கே தெரிந்து விடப்போகுது - இது என் பாதி, என்னிலும் நல்ல பாதி (better half), உஸ் அப்பாடா!)
வியாழன், அக்டோபர் 23, 2003
மயிலந் தீபாவளி
எங்க வீட்டிலிருந்து சும்மா 100 அடி தூரத்தில் ஒரு மைதானம் உண்டு. அங்கே தான் எல்லாக் கொண்டாட்டமும். மேலே இருந்து கீழே வரும் ராட்டின தூரி, தரை மட்டத்தில் சுற்றி வரும் குடை தூரி (மெர்ரி கோ ரவுண்ட்) இன்னும் பலூன், சீக்கி (ஊதல்), மிட்டாய் என்று பாரதிராஜா காண்பித்த எல்லாம் அன்னிக்கு கலர் கலரா பளபளக்கும். வண்ணக் காகிதத்தில் செய்த நிறைய பூச்செண்டுகள், பலூன் வைத்த சீக்கி (இது நாம் ஊதும்போது பலூன் காற்றை வாங்கிப் பெருக்கும், பின் அதுவாக ஊதி சத்தம் போடும்) இதெல்லாம் எனக்குப் பிடித்த விளையாட்டுகள்.
இந்த தூரி வகைகள் அவ்வளவாய் ஈடுபாடில்லை (இன்னிக்கும் amusement park-ல் ரைட் போக ஆசைப்படமாட்டேன், என் மனைவி நான் எல்லார் எஞ்சாய்மென்டையும் கெடுக்கிறேன் என்று முறைப்பாள்!) இத்தனைக்கும் தூரி நடத்துபவர்கள் என் தூரத்து உறவினராய் இருப்பார்கள், இலவச சவாரி கிடைக்கும். என் அண்ணன் நிறைய ரவுண்ட் சுத்தி வருவார். அதிலும் ஆணும் பெண்ணும் போட்டி, சீண்டல், என்று அமர்க்களப் படுத்துவார்கள். ராட்டினத் தூரியில் ஒருவர் தன் பெட்டி கீழே வரும்போது கையில் இருக்கும் அடையாளப்பொருளை வைப்பார்கள், வேறு பெட்டியில் இருப்பவர் அதை லாவகமாக கையில் எடுத்துக்கொள்வார்கள், பதிலுக்கு அவர்கள் ஒன்று வைக்க, இவர்கள் எடுக்க, இது இப்படியே நடக்கும்.
மாலையில் ஆண்கள், (கவனிக்க: முழுக்க முழுக்க ஆண்கள்) ஆடும் கும்மியாட்டம் நடக்கும். கிட்டத்தட்ட ஒயிலாட்டம் போலிருக்கும், ஆனால் அதுவல்ல. நான்றாகப் பாடி கைகொட்டிக் கும்மியடித்து ஆடுவார்கள். அது ஒரு மணி போல நடக்கும்.
இந்த மாதிரி ரெண்டு நாள் தீபாவளி வேறு எங்கும் கொண்டாடுகிறார்களா தெரியவில்லை. ஊரைவிட்டு வந்து 27 வருடம் ஆகிறது சில ஆண்டுகளுக்கு முன் வரை இது நடந்து கொண்டுதானிருந்தது. இன்னும் நடக்கும் என்று நினைக்கிறேன். ரெண்டு வருடம் முந்தி சன் டிவியில் கூட எங்க ஊரின் மயிலந்தீபாவளியை செய்தியாக ஒளிபரப்பினார்கள் என்று கேள்விப்பட்டேன். என்றாவது ஒருநாள் ஒரு மயிலந்தீபாவளிக்கு ஊருக்குப் போவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.
செவ்வாய், அக்டோபர் 21, 2003
அஞ்சு வயது ஆனந்தம்
ஒரு அஞ்சு வயதுக்குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியும்? ஒருநாள் அம்மாவிடம் mommy, you are not nice, you are hurting my feelings என்கிறது. இன்னொருநாள் I have this super duper fixing machine, bring anything you want to fix என்கிறது. ஏன் இன்றைய குழந்தைகள் இவ்வளவு விவரமாக இருக்கின்றன. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். இன்னும் ABCD, 123யே சரியாச்சொல்லத் தெரியாது, ஆனால் கதைப் புத்தகம் எழுதுகிறது, அந்தப் புத்தகத்திற்குத் தானே படம் போட்டு, stapler கொண்டு தைத்து, அதை பரிசளிக்கிறது. யாராவது பிறந்த நாள் என்று அழைப்புக் கொடுத்தால், தானே கலர் கலராக பதிலுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, 'எம்பலப்' கேட்டு நச்சரித்து, உள்ளே இட்டு, எச்சில் தடவி ஒட்டி... இறைவா எத்தனை கோடி இன்பம் வைத்தாய், அதில் ஒரு கோடியைக் குழந்தையின் கையில் கொடுத்தாய்.
திங்கள், அக்டோபர் 20, 2003
அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்
ஒருவிதத்தில் இது கத்தொலிக்க மதம் சம்பந்தப்பட்ட விவகாரமானாலும், இந்தியாவில் இது அப்படியெல்லாம் பிரித்துப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் பேரூடகங்கள் இதைத் திருப்பித் திருப்பி பறை சாற்றிக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு இந்தியருக்கு இவ்வாறான அங்கீகாரம் கிடைக்கிறது என்ற அளவில் இது பெருமைப்படத்தக்கதே. ஆனால், அன்னை நிகழ்த்தியதாகக் கூறிய அற்புதத்தை மறுத்தும் பல அபிப்ராயங்கள்இருக்கத்தான் செய்கின்றன. எது உண்மையென்று ஆராய்வதைவிட, அவர் எளியவர்களிடம் காட்டிய பரிவை, சேவை உள்ளத்தை, நன்றியுடன் நினைவு கூறி முடிந்த அளவு நாமும் நம்மாலானதைச் செய்யவேண்டும்.
சனி, அக்டோபர் 18, 2003
நான் இன்னும் வளரவே இல்லையா?
நான் வலைப்பூவெல்லாம் எழுதுகிறேன் என்று பெரிதாய் அலட்டிக் கொண்டு, இவர்களுக்கு குறிப்பாக மடல் அனுப்பி அதைப் படித்து கருத்துச்சொல்ல மீண்டும் மீண்டும் விரட்டுகிறேன். ஆனால் அவரவர் இருக்கும் இன்றைய நிலையில் ஓட்டமாய் ஒட வேண்டிய இன்றைய வாழ்க்கையில், இதற்கெல்லாம் எங்கு நேரம் என்பதை எண்ண மறந்தேன். அவர்களைக் கொஞ்சம் வருத்தி விட்டேனோ என்று தான் இப்போது மனதில் கூச்சமாய் இருக்கிறது.
இன்னொரு விதத்தில் எண்ணிப்பார்த்தால், எனக்கு அவர்களை நினைத்துப் வருத்தமாயும் இருக்கிறது. உழைத்து உழைத்து, இன்னும் ஓடி ஓடி கடைசியில் என்ன மிஞ்சப்போகிறது? வேலை வேலை என்ற சுழலில் இருந்து சற்று இளைப்பாறவாவது வேறு சிந்தனைகளை, கருத்துக்களை படிக்க, அலச மனதை அனுப்பினால் மனம் புத்துணர்வு பெறாதோ? கட்டாயம் சினிமா, TV என்று அவர்கள் மனமும் மாற்றுத் தளம் வேண்டி அலைந்து கொண்டுதானிருக்கும். ஏன் இந்த மாதிரி எண்ணமுடிவதில்லை? திரும்பிப்பார்த்தால், அந்த ஏழு வருடங்களும் நானும் அச்சு அசலாக இப்படித்தானிருந்தேன். அதே சுழலில் இருந்திருந்தால் அனேகமாக இப்படியே தான் இருந்திருப்பேன். ஆனால் அப்போதும் கொஞ்சமாவது மாற்றுச் சிந்தனைகள், தன் மன அலசல்கள் என்று நிச்சயம் என்னைப் புதுப்பித்துகொண்டேதான் இருந்தேன். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி என்று நம்மை வந்து தாக்கும் பேருடகங்களிருந்து நம்மைக் காத்து, கொஞ்சமாவது சுயசிந்தனை உள்ளவராக வைத்துக் கொள்ள வலைப்பூ போன்றவை நிச்சயம் உதவும். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை 'தி ஹிந்து' படித்த 20 வருடத்திற்கு முந்திய நாட்களிலும், நான் 'ஆசிரியருக்குக் கடிதம்' படிக்காத நாளிருக்காது. அந்த 'வேறு என்ன அபிப்ராயம் இருக்க முடியும்?' என்ற ஆர்வமே, இன்று வலைப்பூக்களைத் தேடிப் பிடித்துப் படிக்க என்னை இட்டுச்செல்கிறது.
ஆகவே நாளெல்லாம் உழைப்பிலே உழலும் நேரமில்லாத என் நண்பர்களே, எனக்காக அல்ல, உங்களுக்காக உங்களைப் புதுப்பித்துக்கொள்ள படியுங்கள். பலம் வாய்ந்த ஊடகங்களின் தாக்குதலில் உங்களின் எண்ணக்கள் மழுங்கிப் போகமலிருக்கப் படியுங்கள். உங்கள் மூளைக்கு உணவு வேண்டின் படியுங்கள். வெங்கட்டைவிஷய கனத்திற்காகப் படியுங்கள், பத்ரியைப்பளிச் பளிச் அலசல்களுக்காகப் படியுங்கள், கண்ணனைஇளகிய மனத்துடன் உலகை உணருவதற்காகப் படியுங்கள், புலம் பெயர்ந்தும் நம் குலம் பெருமை பெற பலதும் செய்யும் சுபாவை, சந்திரவதனாவைப்படியுங்கள். இளைஞர்கள் பரி, மதி, ஹரன்எண்ண ஓட்டம் எப்படியென்று அறியப் படியுங்கள், கணினியில் தமிழ் தழைக்க இன்னும் பலர் பதியும் வலைப்பூக்களைப் படியுங்கள்.
நிச்சயமாய் உங்கள் வேலைப்பளுவின் இடையிலும் உங்கள் மூளைப்பளு குறைவதை உணர்வீர்கள்.
வியாழன், அக்டோபர் 16, 2003
இன்விடேஷன் ஃப்ரம் டமில் சங்கம்
எங்க ஊர் டமில் சங்கத்தில் தீபாவளி விழாவுக்கு அமைப்பாளராக இருக்கும் ஒரு குடும்பத்துப் பெண்மணி என் மனைவியிடம் இங்லீஷில் பேசி அழைக்க, தமிழ்ச் சங்கம் தானே தமிழிலேயே பேசலாமே என்று என் மனைவி சொல்லப்போக, இப்போது இருவரும் TV சீரியலில் வரும் மாமியார்-மருமகள் அல்லது நாத்தனார் அளவுக்கு வாய்ச்சண்டை போடும்படி யாகி விட்டது. ஒரு சாதாரண விஷயம் பெரிசுபடுத்தப்பட்டு விட்டது வேறுபுறம். என் கவலை எல்லாம், தமிழ்ச்சங்கத்துக்கு தமிழில் அழைக்கலாமே என்று சொன்னதே குற்றமாகிவிட்டதே என்பதுதான். பரி, கவலையே வேண்டாம், அடுத்த தலைமுறைக்கெல்லாம் தமிழ்ச்சங்கம் இருக்காது. சண்டைகளும் இருக்காதென்றெல்லாம் நான் உத்தரவாதம் தரமுடியாது :-)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
இணையத்திலே தமிழ் வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள் . என்னடா இது சோதனை , வலை...
-
பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்...