வியாழன், ஜூலை 31, 2008

பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள் : ஆக்கம்- மா. நன்னன்

சென்னை வந்து 4 மாதமாகிறது. நேற்றுத்தான் ஒரு விழாவுக்கு செல்ல முடிந்தது. நமக்கெல்லாம் தொலைக்காட்சி மூலம் தமிழ்ப்பாடம் நடத்திய/நடத்தும் பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் ஆக்கிய 'பெரியாரைக் கேளுங்கள்' என்ற தலைப்பிலான 24 குறுமங்கள் கொண்ட தொகுப்பை வெளியிடும் நிகழ்வு தி.நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. தமிழக நிதி அமைச்சர் திரு. க. அன்பழகன் அவர்கள் தலைமையில் முனைவர்கள் திரு. பொன்னவைக்கோ, திரு. சொ. ந. கந்தசாமி, திரு. சிலம்பொலி செல்லப்பன் இவர்களோடு திரு. முகம் மாமணி, திரு. இரா. நல்லக்கண்ணு ஆகியோரும் பங்கேற்றார்கள்.

விழா முடிவில் 24 குறுமங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். ஒவ்வொன்றும் 64 பக்கங்கள் கொண்ட, சிறு கையேடு வடிவில் அமைந்திருக்கிற தொகுப்பின் தலைப்புகளைக் கீழே தருகிறேன்:
  1. தாம்
  2. ஒழுக்கம்
  3. கல்வி
  4. தொண்டு
  5. பொருள்
  6. மனிதன்
  7. மொழி
  8. இலக்கியம்
  9. கடவுள்
  10. சமூகச் சீர்திருத்தம்
  11. சாதி
  12. திருமணம்
  13. மதம்
  14. மூடநம்பிக்கை
  15. சுயமரியாதை
  16. புராணங்கள்
  17. கட்சிகள்
  18. தனிநாடு
  19. அரசியல்
  20. தொழிலாளர்
  21. பகுத்தறிவு
  22. பார்ப்பனியம்
  23. கிளர்ச்சி
  24. தமிழர்
வெளியீடு:
ஏகம் பதிப்பகம்,
தபால் பெட்டி எண் 2964,
3, பிள்ளையார் கோயில் தெரு,
2ஆம் சந்து,
முதல் மாடி,
திருவல்லிக்கேணி,
சென்னை -5

விலை: குறுமம் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் ரூ. 240/- (சலுகை விலை ரூ. 200)

மா. நன்னன் அவர்கள் பெரியாருடன் உரையாடும் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தொகுப்பின் முகவுரையில், 'இக்குறுமங்களிலுள்ள வினாக்கள் மட்டும் எம்முடையவை என்றும் விடைகள் யாவும் அய்யா பெரியாருடையவை மட்டுமே' என்று குறிப்பிடப்படுகிறது.

குறுமங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் சில துளிகளை ஒவ்வொரு நாளுக்கு ஒன்றாக எடுத்துப் போட ஆசை. பார்க்கலாம்.

சனி, மார்ச் 08, 2008

மேதாவி மதனின் ஆணாதிக்க மனப்பான்மைக்குக் கண்டனம்!

உலக மகளிர் தினத்தன்று இதைப் படிக்க நேர்ந்ததும் என்னால் எரிச்சலை அடக்க முடியவில்லை.நீங்களும் படியுங்க:

கேள்வி: புத்திசாலிகூடத் தோற்கும் இடம் எது?
மதன் பதில்: பெண்ணிடம் மட்டுமே புத்திசாலி கூடத் தோற்பான்.

(ஆ.வி. மார்ச் 12,2008)

கொஞ்சம் பொறுங்க, பெண்ணிடம் தோற்றுபோன ஒரு 'புத்திசாலி' ஆணைப்பற்றியதல்ல என் எரிச்சல். 'புத்திசாலி' என்ற, இருபாலருக்கும் பொதுவான ஒரு சொல்லை வைத்துக்க் கேட்ட கேள்விக்கு இந்த மேதாவி மதன் அய்யா சொன்ன பதிலிலிருந்து 'புத்திசாலி' என்றாலே, by default, ஆண்தான் என்ற எண்ணம் வெளியாகவில்லையா? காட்டாக, 'கணவன் சம்பளத்தை வெளியிலே சொல்லலாமா?' என்று ஒரு கேள்வி வந்தால்,'கணவன்' என்ற சொல் ஒரு ஆணைத்தான் குறிக்கும் என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளலாம். 'புத்திசாலி' என்று பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு ஆணாதிக்கத்தில் ஊறிய ஒருவரே இந்த மாதிரி பதிலளிக்கமுடியும். மதன் மன்னிப்புக் கேட்கவேண்டும். அபத்தமான ஹாய் மதனை ஆ.வி. நிறுத்தவேண்டும். ஆ.வி.யையே நிறுத்த நாள் பார்த்துக்கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது!

வியாழன், பிப்ரவரி 28, 2008

'சுஜாதா' ரங்கராஜன் (1935-2008)

முதலில் சுஜாதாவின் தாக்கம் ஏற்பட்டது நீண்ட தொடராகக் குமுதத்தில் வெளிவந்த 'கொலையுதிர்காலம்'. தலைப்பிலேயே சுஜாதாவைப் பார்க்கலாம். அதுவரை எந்த வார,மாத இதழும் வாங்கும் வழக்கமில்லாத எங்கள் வீட்டில் கொலையுதிர்காலத்துக்காக குமுதம் வாங்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் கிடைப்பதைவிட முந்தின நாளே வாங்கமுடியும் என்பதற்காக தூரத்தில் உள்ள பெரியகடைக்குப் போய் வாங்கிவந்து உடனே தொடரின் பகுதியை வாசித்துவிட்டுத்தான் அடுத்தவேலை. கிட்டத்தட்ட கஞ்சாவுக்கு அடிமையானதுபோல அந்த நாள் வந்தால் கை பரபரக்கும்! கால் பலமுறை கடைக்குப் போய்... 'வந்தாச்சா' என்று கேட்டு...

2004-ல் நியூக்ளியஸ் என்ற நிரற்பொதியை தமிழாக்கம் செய்யத் தலைப்பட்டபோது புதிய சொற்கள் பலவற்றிற்கு தமிழ்வடிவம் தேடி, பயன்படுத்தியது சுஜாதாவின் கலைச்சொல் தொகுதி ஒன்று (அப்போது இணையத்தில் கிடைத்தது). ழ கணினி என்ற திட்டத்துக்காகவோ என்னவோ சுஜாதா தலைமையில் ஒரு குழு இயங்கியபோது கோர்க்கப்பட்ட திரட்டு அது.

'தமிழ்மணம்' வலைவாசல் உருவானபோது 'வலைப்பூ' என்ற 'வாரம் ஒரு ஆசிரியர்' பொறுப்பேற்கும் வலைப்பதிவு வாயிலாக அதற்கு அறிமுகம் கொடுக்க எண்ணி முன்மொழிந்த பெயர் 'சுஜாதா'. அறிவியல், கணிமை - இவற்றில் ஈடுபாடு, புதுமுயற்சிகளுக்கான அவரின் ஆதரவு ஆகியவற்றால் சுஜாதா என்ற ஆளுமையின் பொருத்தம் இருந்தாலும், அணுகுவதற்கும், அவர் ஒத்துக்கொள்ளுவதற்குமான சாத்தியங்கள் பற்றிய பல கேள்விகள்/ முன்முடிவுகள் அந்த வேண்டுகோள் அவருக்குப் போகாமலே செய்துவிட்டன. குழந்தைத்தனமாக இருந்தாலும் இன்றும் நம்பிக்கொண்டுள்ளேன், 'அன்று கேட்டிருந்தால் நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார்'.

சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ்.

புதன், ஜனவரி 30, 2008

சென்னை பயணம் - பிப்ரவரி 08

அலுவலக வேலையாக சனிக்கிழமை 2-2-2008 அன்று சென்னையில் இருப்பேன். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை மெரினா கடற்கரையில் கழிக்க யோசனை. நேரமும் விருப்பமும் இருக்கும் வலைப்பதிவு நண்பர்கள் (எதிரிகளும்தான்:-) தொடர்புகொள்ள செல்பேசி எண்: 94426 09820

செவ்வாய், ஜனவரி 22, 2008

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை சற்றுமுன் கண்டேன். (நன்றி: ஸ்ரீனிவாசன்) சில உடனடியான கருத்துக்கள்:

நல்ல ஸ்கிரிப்ட். பொதுவாக வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாத/அரைகுறையாகத்தெரிந்த ஒருவருக்கு நன்றாகப் புரியவைக்க இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பணியாற்றியிருக்கிறது. தயாரித்தவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்.

சில குறைகள்: (அதானே, அது இல்லாமலா?:-))
  • முற்பாதியில் எழுத்தாளர்கள் தொல்லை அதிகம். 'பத்திரிகைகளில் இடம் கிடைக்காத புனைவு எழுத்துக்களுக்குத்தான் வலைப்பதிவுகளே' என்று ஐயுறும் அளவுக்கு கதை,கவிதை என்று போனது,பிற்பாதியில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் மனுஷயபுத்திரனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் விடவும் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் *சென்னையிலேயே* இருக்கிறார்களே இன்னும் ஏன் எழுத்தாளர்கள் பிரேமை என்றுதான் தெரியவில்லை. இவங்க தொல்லை தாங்கமுடியலப்பா! :-)
  • தமிழ்மணத்தைப் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டது, அடுத்த முறை சரிசெய்யப்பட்டு விடும்:-) அப்போதுகூட தமிழ்மணம் இணையத்தில் சுயம்புவாக இருக்கவில்லை என்பதும், ஒரு வேலைகெட்டவன் செய்தான் என்பதையும் சொல்லியிருக்கலாம். (அதுசரி அவன்தான் சென்னையில் இல்லையே, சென்னையில் இருப்பது என்ற அடிப்படைத் தகுதிகூட இல்லாதவனைப் பற்றியெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது!:P) இன்னொன்றும் சொல்லிக்கணும்: 'உலகின் முதல் திரட்டி'க்கெல்லாம் நான் பொறுப்பில்லை, மா.சி.யின் கருத்து. ('சரி' போலத்தான் தோணுது!)
  • பத்ரியின் விளக்கம் நன்றாக இருந்தது. புனைவுகளை விடுத்து பொதுவாகக் குறிப்பிட்டதும் சேர்த்து.கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். மா.சி. சொன்னதும் புனைவுகளைப் பற்றி அதிகமில்லாததால் நன்றாக இருந்தது. (ஜால்ரா என்று சில வக்கிரங்கள் சொல்லட்டும, கவலையில்லை)
  • சில முக்கியமான யு.ஆர்.எல்.களை பெரிய எழுத்தில் காட்டியிருக்கலாம். அது காரணத்தோடுதான் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  • தமிழில் எல்லாரும் எழுதணும் என்ற ஸ்ரீனிவாசனின் அழைப்புக்கு ஒரு சபாஷ். வலைப்பதிவு என்று சொல்லாமல் ப்ளாக் என்றே பேசியதற்கு ஒரு குட்டு! (தலைப்புக்கு அர்த்தம் வந்தாச்சா?:-))

உதகைப் பயணம் செல்பவருக்கும், இணையத் தொடர்பில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும்.

4-5 வருடமாக கிடப்பில் கிடந்த ஆங்கிலப் பதிவை தூசிதட்டி எடுத்து, இரண்டு இடுகைகளும் எழுதிவிட்டேன். அதே இடுகைகளைத் தமிழிலும் இங்கே எழுதி வைக்க ஆசை. நேரமில்லாததால், அப்படியே அவற்றின் சுட்டிகளை மட்டும் இங்கே போட்டுவைக்கிறேன்.
Notes on our Trip to Ooty
BSNL broadband - Parental control (prevent visits to unwanted sites)

ஞாயிறு, ஜனவரி 13, 2008

பொங்கல் வாழ்த்து - சிரிக்க

நம்ப நண்பர் ரங்கராஜு் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவருங்க. அப்பப்ப தங்கிலீசில் அவர் புதுமையாக எதையாவது அனுப்புவார். 'கொஞ்சம் தங்கிலீசை விட்டு தமிழுக்கு வாங்க,. பலருக்கும் கொண்டுபோகலாம்'னு சொன்னதில், முயன்று தமிழில் எழுதியிருக்கிறார். பார்த்து எப்படின்னு சொல்லுங்க மக்களே.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
-காசி.

இனி, ரங்கராஜு:

சில தலைவர்கள், கட்சிகள் பொங்கல் வாழ்த்து சொன்னால் எப்படி இருக்குமென்று ஒரு கற்பனை..............

கற்பனை மட்டுமே, சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் துளி கூட இல்லை. யார் , எது என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.


சொரணை கெட்ட தமிழர்கள்
சொல் அம்பு விடும் மறவர்கள்
நன்றி கெட்டு நான்கைந்து முறை
நாற்காலி கொடுக்காவிட்டாலும்
எண்பதிலே என்பால் பற்று கொண்டு
எழுச்சி கண்ட ஏமாற்றுக்காரர்கள் அல்ல...
சேலைகட்டி ஆட்சி செய்த கேவலம்
சோழர்களின் வரலாற்றில் இல்லை என்பதை
வேட்டிக் கட்டிய எனக்கு
வாக்குச்சீட்டில் எழுதிய வல்லமைக்காரர்கள்.
புத்தியில்லை என்று புத்தாண்டில் சொல்லி
பத்தி கொளுத்தும் பழக்கத்தை
பெரியாரின் பள்ளியில் பயிலவில்லை....
அண்ணாவின் ஆசிரமத்தில் அறியவில்லை....
பானையில் அரிசி இல்லாவிட்டாலும்
பார்வையில் இலவச டிவி யுடன்
பொங்குக பொங்கல் என்று வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------
காவிரியில் கப்பல் விட கையெழுத்திட்டு ஆணையில் ரேகை வைக்க அன்றய தினம் நான் அனுப்பிய கடிதம் ஏமாற்றுக்காரர்களின் பிடியில் சிக்கி பிரதமர் கைக்கு போகாததை இந்த நாடே கைகொட்டி சிரிக்கிறது. தஞ்சை மாவட்டம் பஞ்சனல்லூர் கிராமத்தில் எல்.கே.ஜி படிக்கும் மாணவன் சக மாணவனிடம் பென்சில் கேட்க, கொடுக்க மறுத்தவனோடு கை கலப்பு ஏற்பட்டு கட்டி புரண்டிருக்கிறார்கள்.எனது கட்சி நிர்வாகிகள் வரும் பொங்கல் தினத்தன்று போராட்டம் நடத்தவுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு இந்த மைனாரிட்டி அரசில் சரியில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். அடுத்த பொங்கலுக்குள் என் ஆட்சி அமைவது உறுதி, வரும் காலம் இனி வசந்தகாலம் என் கட்சியினருக்கு என்று பொங்கல் திருநாளில் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------
மடியும் வரை மருத்துவர்களும், இருக்கும் வரை இன்ஜினியர்களும், ஆயுள்வரை ஆசிரியர்களும் சம்பளம் வாங்காமல் அரசு பணியாற்ற வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக சட்டமாக இயற்ற வேண்டும்,மறுத்தால் போராடுவோம். மறுக்காவிட்டால் நாங்கள் வாபஸ் வாங்குவோம். இந்த பொங்கலுக்கு இங்கே உள்ளோம். அடுத்தபொங்கலுக்கு அ.. ங்கே இருப்போம். எந்த பொங்கலுக்கு எங்கே இருந்தாலும்,தைப் பொங்கலுக்கு தை...புரம் வந்து தமிழனைகாப்போம் என்று வாழ்த்துகிறேன்.
------------------------------------------------------------------------
தலைவர்களை விடதொண்டர்களே எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், மாற்றத்திற்கு ஒரு தொண்டர் வாழ்த்து தெரிவிக்கிறார். அகிம்சை வழியில் சத்தியாகிரக போராட்டம் கண்ட பாரம்பரிய இயக்கம் தொடர்ந்து சத்தியமூர்த்தி முன் கத்தி சண்டை நடத்தி o+, B+,AB-, என இரத்தம் அற வழியில் ஒன்று கலந்து பின் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்த பெருமையினை இந்த தைத் திருநாளில் நினைவு கூர்ந்து தலைவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து முன்னிலை பெற வாழ்த்துகிறேன்".
-------------------------------------------------------------------------------------------------
மேம்பாலம் வருதுன்னு சொன்னா மண்டபத்திற்கு ஆபத்துன்னு அர்த்தம் புத்தாண்டு தைக்கு வருதுன்னு சொன்னா என் அரச‘ங்கத்துக்கு ஆபத்துன்னு அர்த்தம் நான் புறப்படும்போது புயல் வருதுன்னு சொன்னா என் பிரசாரத்துக்கே தடைனு அர்த்தம் தடை, ஆபத்தை மீறி நான் ஆட்சிக்கு வருவது உறுதி.நானாக கூட்டணிக்கு போகமாட்டேன் திராவிட கூட்டணிக்கு இப்போது போகமாட்டேன், திராவிட் இந்திய கேப்டனாக வரும்வரை..... த .அரசுபொங்கலுக்கு வழங்கிய இலவச துணியில் ஒரு சிலருக்கு தையல் விட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தைத்தவருக்கும் அமைச்சர்களுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பினை முதல்வர் தைத் திருநாளில் தெளிவாக விளக்க வேண்டும் என கேட்டு, வாழ்த்து கூறி ஏழைகளுக்கு பிறந்த நாள் தையல் மிஷின் வழங்க புறப்படுகிறேன்.
-----------------------------------------------------------------------
தைத்திருநாளை புத்தாண்டாக அறிவிக்குமுன் அரசு எங்களை கலந்தாலோசிக்க வேண்டும். ஆடி மாதத்தில் AUDI கார், தைமாதத்தில் THAI(தாய்லாந்து) இருப்பதால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மீறி அறிவித்தால் ஆதரவை விலக்கிக் கொள்வோம். இருப்பினும் எங்கள் நிலைமையை நினைவில் கொண்டு சிறுமாற்றத்தோடு அனுமதி அளிப்போம் என்ற ஸ்திரத்தன்மையான கொள்கையோடு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
---------------------------------------------------------------------------
தைப்பொங்கல் வைக்கமுடியாமலும், விக்கலை அடக்கமுடியாமலும் அந்தோ என் தமிழினம் யாழ்ப்பாணத்தில் தவியாய் தவிக்கும் தருணத்தில் கூட அறிக்கைவிட முடியாத இடத்தில் எனை தள்ளிய தாண்டவராயர்கள்,சேது சமுத்திரம் பற்றி செய்தி படித்தால்கூட சினம் வரக்கூடிய சிம்மாசனம் அருகே அமர வைத்து விட்டார்கள் பாவிகள்.கோடியை கொடுக்கும் தங்கங்கள் என்னிடத்தில் இல்லை. வெள்ளியை கொடுக்கும் வறியவர்கள், கொள்கையோடு என்னோடு நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.படைபலம் இல்லாதவன் போர் பரணி பாட முடியாமல் போகலாம், பீனிக்ஸ் பறவையாய் உயிர் பெற்று உங்களை கோட்டான்களிடமிருந்து காத்திட இந்த தைப்பொங்கல் நன்னாளில் சூளுரை ஏற்கிறேன்.
----------------------------------------------------------------------------

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...