வியாழன், ஜூலை 06, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -1

தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை சுருக்கமாகவேனும் ஓரிடத்தில் எழுதி வைப்போம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் குறுந்தொடர். வாழ்க்கை அனுபவங்கள் பற்றிய தொடர் வாசிக்க ஆர்வமுள்ளவர்களை பழைய 'சில விளக்குகள் சில வழிகாட்டிகள்'-க்கு அழைக்கிறேன்.

வலைப்பதிவுகள் வட்டத்தில் முதலில் இயங்கியவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே இணையக்குழுமங்கள், சஞ்சிகைகள் வாயிலாக இணையத்தில் தமிழின் போக்கை அறிந்தவர்களாக இருந்தார்கள். என்னைப்போன்ற சிலரே நேரடியாக வலைப்பதிவுக்கு வந்தவர்களாக இருந்தார்கள். வலைப்பதிவுகள் தந்த சுதந்திரம் + நுட்பநீதியான சாத்தியங்கள், இவையே என்னை இந்த வடிவத்தின்பால் ஈர்த்த காரணிகள்.

நண்பர் ஒருவர் ஹரேகிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபட்டு பல கருத்துக்களையும் என்னுடன் கலந்துரையாடியபோது வைணவக் கருத்துக்களின் ஊற்றுக்கண் தேடி அதன்மூலம் இணையத்தில் தமிழ் வழியாகக் கிடைத்த ஆழ்வார்களின் அறிமுகம், நா.கண்ணனின் குடில்...அங்கிருந்து அவரின் 'வலைப்பூ'... என்று என் வலைத்தமிழ்ப் பயணம் இருந்தது. கண்ணனின் தொடர்ச்சியான வாசகனானேன். அப்போது மதி கந்தசாமி/சுரதா தொகுத்திருந்த வலைப்பதிவுகளுக்கான உதவிப்பக்கங்கள், பட்டியல் போன்றவையும் அறிமுகமாயின. 2003 ஆகஸ்ட் மாத திசைகள் இதழ் வலைப்பதிவுகளை முன்வைத்து வெளியானது. மாலன் அவர்கள் வலைப்பதிவுகளின் சாத்தியங்களைப் புரிந்து அவற்றுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தார். அது என்னையும் வலைப்பதிக்கத் தூண்டுவதாக இருந்தது. ஒரு கணப்பொழுதில் எடுத்த முடிவால் வலைப்பதிவனானேன். ரிடிஃப் சேவையில் சில நாள் உழன்றுவிட்டு ப்ளாக்கர் சேவையில் ஐக்கியமானேன்.

தொழில்நுட்ப அம்சங்களின்பால் எனக்கு இருந்த இயற்கையான ஈடுபாடு, புத்துருவாக்கலில்(Innovation) எனக்கு இருப்பதாக நான் நம்பிய திறமை இவை இரண்டும் என்னை ஒரு சாதாரண வலைப்பதிவனாக இருக்க விடவில்லை.

மதியின் முயற்சியினாலான அங்கும் இங்குமான சில உதவிப்பக்கங்களின் நீட்சியாக ஒரு முழுமையான உதவிப்பக்கங்களின் தொகுப்பு, 'வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்' என்ற வடிவில் கூட்டுமுயற்சியாகச் செய்யலாம் என்று யோசனை பலராலும் முன்வைக்கப்பட்டபோது, 'மூத்த' பதிவர் எவரும் முன்வராததால் நான் இந்தக் கூட்டுமுயற்சிக்கு ஒருங்கிணைப்பாளனாக இருக்கத் தலைப்பட்டேன். இன்று என்னோடு தமிழ்மண நிர்வாகத்தில் தோள்கொடுக்கும் மதி, செல்வராஜ் ஆகியோருடன், பரிமேலழகர், சுரதா, வினோபா ஆகியோரும் பங்களிக்க சில பக்கங்கள் தொகுக்கப்பட்டன, ஆனாலும் இந்த முயற்சி முழு வெற்றியடையவில்லை. ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட குறிப்புகளை தமிழ்ப்படுத்த தான் தயார் என்று பத்ரி சேஷாத்ரி சொல்லியிருந்தார். இந்த முயற்சிகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

இடையில் தமிழா மென்பொருளாளர் குழுவின் முகுந்தராஜ் நியூக்ளியஸ்சிஎம்எஸ் என்ற திறமூல நிரல்பொதியை (open source software package) சுட்டிக் காட்டி, அதன் மொழிக்கோப்பைத் தமிழாக்கம் செய்ய 'யார் முன்வருகிறார்கள்?' என்று கேட்டார். உடனே யாரும் முன்வராததால் அங்கும் 'நான் செய்கிறேன்' என்று முயன்றேன். க்ருபாஷங்கர் தானும் ஆர்வமாக இருப்பதாகவும், நான் செய்வதால் தான் ஒதுங்கிக்கொள்வதாகவும் சொன்னார். இப்படி தமிழ்மணம்.காம் தளம் உருவாவதற்கான முதல் விதையை ஊன்றியவர் முகுந்தராஜ் என்றே சொல்லலாம்.

13 கருத்துகள்:

Muthu சொன்னது…

நல்ல முயற்சி. பதிவு செய்யுங்கள் காசி. வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. நீங்கள் இதுவரையில் செய்தது தமிழ் இணைய உலகில் புதிய சாதனை .. மைல் கல்.

ஜூலியன் சொன்னது…

Dear kasi anna this series should be written in full for sake of keeping the would be as well as future historians on Tamil web straight in talk without blending facts and their fantasy.

Sivabalan சொன்னது…

Kasi Sir,

நல்ல பதிவு. நல்ல விசயம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

நன்றி.

Jayaprakash Sampath சொன்னது…

வரவேற்கிறேன். அத்தியாயங்களுக்கு இடையிலான ஃப்ரிக்வென்ஸி குறைச்சலாக இருக்க வேண்டும் என்று மருதமலையானை வேண்டிக் கொள்கிறேன் :-)

enRenRum-anbudan.BALA சொன்னது…

Kasi,

எழுதுங்கள்.

வாழ்த்துக்கள் !!

enRenRum anbudan
BALA

Kasi Arumugam சொன்னது…

முத்து, ஜூலியன், கோவி.கண்ணன், சிவபாலன், பிரகாஷ்,பாலா,
வரவேற்புக்கு நன்றி.

பார்த்தா, நான் தனியாக எழுதி, நேரம் கிடைக்கும்போது வலையேற்றுகிறேன்.

பிரகாஷ், வாரம் 5 இடுகையாவது வரும் சரிதானா?

பழூர் கார்த்தி சொன்னது…

நன்றி காசி, இத்தொடர் நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..

வசந்தன்(Vasanthan) சொன்னது…

அவசியமான முயற்சி. வரலாறுகள் சரியாகத் தொகுப்பட வேண்டும். இப்போதே அவரா இவரா என்று குழப்பங்கள் வரத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் மிக முக்கிய ஆவணமாக இருக்க வேண்டிய தொடரிது.

கருப்பு சொன்னது…

எந்த முயற்சியில் இறங்கினாலும் சில எதிர்ப்புகளும் ஆதரவும் இருக்கத்தான் செய்யும். உங்கள் தொடர் ஒரு படிப்பினை.

மதுமிதா சொன்னது…

மனமார்ந்த நன்றி காசி

Kasthuri Rengan சொன்னது…

இன்னாது தமிழ்மணம் ஒரு ஒப்பன் சி எம் எஸ்?
தூக்கி வாரிப்போடுது.. சரி சரி..
இன்னாப்பா ஒரு நல்ல தொடர பாதியில் விட்டமாதிரிகீது... தொடரவேண்டிய தளம் உங்களது..

Thenammai Lakshmanan சொன்னது…

தமிழ் மணம் பற்றி அறிந்தேன். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் :)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...