வியாழன், ஜனவரி 08, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0

எனக்கும் சரித்திரக் கதை எழுத ஒரு ஆசை. உண்மையில் 'அக்கினிச் சிறகுகள்' மாதிரி ஒரு சுய சரிதம் எழுத ஆசைதான். அதற்கு, முதலில் அப்துல் கலாமாக இருக்க வேண்டுமே. சுய சரிதம் எழுவதற்கு என்று யாரும் தகுதி நிர்ணயிக்கவில்லை என்பதனாலேயே நானெல்லாம் எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா? இருந்தாலும், நான் சந்தித்தவர்களிடையே காணக்கிடைத்த நல்லவர்களை நன்றியுடன் நினைவு கூர, அவர்களைப் பற்றி இங்கு எழுதி வைக்கிறேன். அவர்களோடு நானும் நடந்து வருவேன். என் பிள்ளைகளிடம் இந்தக் கதையெல்லாம் சொல்ல, அதை அவர்கள் புரிந்து கொள்ள, நேரமும், பொறுமையும், இன்ன பிறவும் இப்போது அமையவில்லை. நகரத்தில் பிறந்து, பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவை அதிகமின்றி வாழ்ந்த என் மனைவிக்கே இவற்றில் பலவும் புதிதாக இருக்கும். என் நெருங்கிய நண்பர்களுக்கே நான் இந்தக் கதைகளை முழுதும் சொன்னதில்லை. இதைப் பதிவு செய்வதின் மூலம் என்றாவது ஒருநாள் என் குழந்தைகள் படிக்கலாம் என்று நம்புகிறேன். படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்பன் பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைத் தெரிந்து கொள்ளவாவது என் குழந்தைகள் தமிழ் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். என் மகனைப் பற்றி எனக்கு பயமில்லை. மகள் தான் தமிழ் என்றால் 'பவுண்டு என்ன விலை?' (கிலோ என்ன விலை என்று கூடக் கேட்க மாட்டாள்;-) என்று கேட்கிற நிலையில் இருக்கிறாள். ஆனால் அவளும் வழிக்கு வந்துவிடுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறுவயதில் எனக்கு இருந்த ஏக்கங்களுக்கும், இழப்புகளுக்கும் ஈடு செய்யும்வகையில் எனக்கு வழிகாட்டிகளும், வாழ்வளித்தவர்களும் அமைந்தனர். என்னை வஞ்சித்தவர்கள் என்று யாரும் எனக்கு ஞாபகமில்லை, ஆனால் உதவி செய்தவர்கள், என்னைக் கைதூக்கிவிட்டவர்கள் என்று பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக வருகிறது. அவர்களில் முக்கியமான சிலரை ஒட்டிய நிகழ்ச்சிகளை நினைவு கூர, எழுத்துகளில் பதிக்க நான் முயல்கிறேன். இவை பெரும்பான்மையை பிரதிபலிக்காத ஒரு சாமானியனின் வாழ்க்கைப்பயணத்தின் சில நிகழ்வுகள். பல சமயங்களில், 'இது போதும், உள்ளதைக் கொண்டு சந்தோஷமாய் இருக்கலாம்' என்று நான் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் இதையெல்லாம் மீண்டும் நினைத்துப்பார்த்தால் நான் ஏன் அப்படி இருக்கிறேன் என்பது புரிகிறது. ஒருவேளை இதெல்லாம் நான் அப்படி இருப்பதற்காக சொல்லிக்கொள்ளும் சமாதானமோ? எது எப்படியோ, வாருங்கள் என்னோடு கைகோர்த்து. நான் நடந்துவந்த வடசித்துர், பொள்ளாச்சி, கோவை, சென்னை எல்லாப் பக்கமும் இன்னொரு முறை போய் வரலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...