வியாழன், பிப்ரவரி 28, 2008

'சுஜாதா' ரங்கராஜன் (1935-2008)

முதலில் சுஜாதாவின் தாக்கம் ஏற்பட்டது நீண்ட தொடராகக் குமுதத்தில் வெளிவந்த 'கொலையுதிர்காலம்'. தலைப்பிலேயே சுஜாதாவைப் பார்க்கலாம். அதுவரை எந்த வார,மாத இதழும் வாங்கும் வழக்கமில்லாத எங்கள் வீட்டில் கொலையுதிர்காலத்துக்காக குமுதம் வாங்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் கிடைப்பதைவிட முந்தின நாளே வாங்கமுடியும் என்பதற்காக தூரத்தில் உள்ள பெரியகடைக்குப் போய் வாங்கிவந்து உடனே தொடரின் பகுதியை வாசித்துவிட்டுத்தான் அடுத்தவேலை. கிட்டத்தட்ட கஞ்சாவுக்கு அடிமையானதுபோல அந்த நாள் வந்தால் கை பரபரக்கும்! கால் பலமுறை கடைக்குப் போய்... 'வந்தாச்சா' என்று கேட்டு...

2004-ல் நியூக்ளியஸ் என்ற நிரற்பொதியை தமிழாக்கம் செய்யத் தலைப்பட்டபோது புதிய சொற்கள் பலவற்றிற்கு தமிழ்வடிவம் தேடி, பயன்படுத்தியது சுஜாதாவின் கலைச்சொல் தொகுதி ஒன்று (அப்போது இணையத்தில் கிடைத்தது). ழ கணினி என்ற திட்டத்துக்காகவோ என்னவோ சுஜாதா தலைமையில் ஒரு குழு இயங்கியபோது கோர்க்கப்பட்ட திரட்டு அது.

'தமிழ்மணம்' வலைவாசல் உருவானபோது 'வலைப்பூ' என்ற 'வாரம் ஒரு ஆசிரியர்' பொறுப்பேற்கும் வலைப்பதிவு வாயிலாக அதற்கு அறிமுகம் கொடுக்க எண்ணி முன்மொழிந்த பெயர் 'சுஜாதா'. அறிவியல், கணிமை - இவற்றில் ஈடுபாடு, புதுமுயற்சிகளுக்கான அவரின் ஆதரவு ஆகியவற்றால் சுஜாதா என்ற ஆளுமையின் பொருத்தம் இருந்தாலும், அணுகுவதற்கும், அவர் ஒத்துக்கொள்ளுவதற்குமான சாத்தியங்கள் பற்றிய பல கேள்விகள்/ முன்முடிவுகள் அந்த வேண்டுகோள் அவருக்குப் போகாமலே செய்துவிட்டன. குழந்தைத்தனமாக இருந்தாலும் இன்றும் நம்பிக்கொண்டுள்ளேன், 'அன்று கேட்டிருந்தால் நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார்'.

சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ்.

12 கருத்துகள்:

Kasi Arumugam சொன்னது…

அருள்செல்வன் பதிவில் இட்டது:
என்ன சொல்வதென்று தெரியவில்லை. இளமைக்காலத்தில் சுஜாதாவை எல்லாத்துக்குமே ஆசானாக வரிந்துகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். 'ஏன் எதற்கு எப்படி' ஜூனியர் விகடனில் வந்தபோது அதன் கட்டிங்குகளை வரிசையாக சேர்த்துவைத்து மீண்டும் மீண்டும் வாசித்த நினைவுகள்! சுஜாதாவின் அறிவியல் விளக்கங்கள் எளிமையானவை, முதல்படியில் நிற்கும் வாசகரை விரட்டாமல் வாஞ்சையுடன் சொல்லிக் கொடுப்பவை. (சிலர் அங்கேயே நின்றுவிடுவது அவர் தவறல்லவே) விமர்சனங்கள் கிடக்க, சுஜாதாவின் இடம் இன்னொருவரால் என்றும் இட்டு நிரப்பப்பட முடியாதது.

துளசி கோபால் சொன்னது…

செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

cheena (சீனா) சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள் -- ஆத்மா சாந்தியடைவதாக.

Agathiyan John Benedict சொன்னது…

வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.

வவ்வால் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களும், அஞ்சலியும்!

அரை பிளேடு சொன்னது…

”தொடர்ச்சியாக ஒரு காலக் கட்டத்தில் நாம் சில வருஷங்கள் உயிர் வாழ்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை நம் உடலும் உள்ளமும் விருத்தியாகிறது. இறந்து அழியும் போது நாமும் அழிந்து விடுகிறோமா? முழுவதுமே அழிந்து விடுகிறோமா? அல்லது நம்மிலிருந்து ஏதாவது பிரிந்து பரம்பொருளை அல்லது ஒரு சாஸ்வத உண்மையைப் போய்ச் சேருகிறதா?”
-சுஜாதா "ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து”.

அவருக்கு கண்ணீர் அஞ்சலி.

K.R.அதியமான் சொன்னது…

வாசகர்களுக்கும், அன்பர்களுக்கும் பெரும் இழப்பு. அவரின் இடத்தை நிறப்ப வேறு யாரும் இல்லை. முடியாது.

இரு முறை நேரில் சந்தித்து உரையாடினேன். (மெரினா பீச்சில்) ; ஒரு புத்தகம் பரிசளித்தேன் ; (முச்சந்தி இலக்கியம்) மிகவும் மகிழ்ந்தார் ; சில் ஆண்டுகளாக, வார வாரம் சனிக்கிழமை காலை அம்பலம்.காமில் அவருடன் பல மணி நேரங்கள் பல பல விசியங்கள் குறித்த சாட். அருமையான நினைவுகள்.

அவரின் முழு எழுத்தக்குகளையும் படிக்காமல், சினிமா வசனங்கள், க்ரைம் திரல்லர்கள் மட்டும் படித்து அதன் பாலியல் வர்ணனைகளை ம‌ட்டுமே குறை சொல்லும் வாசகர்கள், அவரது non-ficiton கட்டுரைகள், புதுக்கவிததை, சங்க இலக்கியம் அறிமுகங்கல், விஞ்ஞான தொடர்கள் மற்றும் பல நூறு ஆக்கங்களை அனைத்தையும் படித்தால் தான் அவரது வீச்சும், ஆழமும்ஜ் புரியும். பலருக்கும் பல அருமையான, புதுமையான் விசியங்களை, புத்தகங்களை, எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

a versatile genius indeed.

Subbiah Veerappan சொன்னது…

/////சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ்.////

சூப்பரா சொன்னீங்க சாமி! இதுதான் - இப்படிச் சொல்றதுதான் சாமி
கோயமு்த்தூரு வெள்ளந்தி மனசுங்கிறது!

சுபானு சொன்னது…

சுஜாதாவின் படைப்புக்களின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்... அவரின் மறைவுச் செய்தி என்னைக் கலங்கடித்துவிட்டது....ஆத்மா சாந்தியடைவதாக பிரார்த்திப்போம்...

ILA (a) இளா சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்!

காண்டீபன் சொன்னது…

அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

manjoorraja சொன்னது…

ஒரே ஒரு முறை ஒரே ஒரு நிமிடம் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது.

மாபெரும் இழப்பு

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...