வெள்ளி, பிப்ரவரி 16, 2018

எழுத்தென்னும் அற்புதம்


நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார்.


இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும், பகுத்தறிந்ததும்):

கலைப்படைப்புகள் இருவகைப்படும்: நிகழ்த்துகலை (performing art) & உருவக்கலை (visual art).

குயவன், சிற்பி, கருவி/எந்திரம் சமைப்போன், கட்டடமாக்குவோன், ஓவியன், அணிகலன் செய்வோன், துணி நெய்வோன், ஆடை தைப்போன், போன்றோர் உருவக்கலைஞர்கள். அவர்கள் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்கள் கையாலேயே முழுமை பெற்றுவிடுகின்றன. இவ்வகைக் கலைப் பொருட்கள் உருவாகப்பட்டபின் இயல்பான சிதிலமடைதல் தவிர்த்து பெரும்பாலும் காலம் கடந்து நிற்கும் தன்மையை தாமாகவே பெற்றுவிடுகின்றன. இந்த உருவக்கலையிலும் படைப்பு(creation), மறுஉருவாக்கம் படியாக்கம் (reproduction) இரண்டும் நிகழ்கின்றன. காட்டாக, ஒற்றைக்காலில் நிற்கும் நடராச உருவத்தை முதன்முதலில் மனக்கண்ணில் வடித்து, அதை உலோகத்தில் கொண்டு வந்து நிறுத்திக் காட்டியவன் படைப்பாளி(artist). இன்றும் பூம்புகார் நிறுவனத்துக்காக நடராசரை சிலையை (அந்த முதல் படைப்பாளியின் செய்நேர்த்தியைவிடவும்கூட சிறப்பாக) செய்து விற்பனைக்கு அனுப்பும் சிற்பி, படைப்பாளி அல்லர். வெறும் கைவினைஞர் (craftsman/artisan)! இந்தக் கைவினைஞர் மரபுவழிக் கற்றவரானால் artisan என்றும் அதற்கான பள்ளியில் படித்து வந்தால் craftsman என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.

நிகழ்த்துகலைகளில் முதன்மையானவை ஆட்டமும் பாட்டும். கண்கட்டு வித்தைக்காட்சி, சிலம்பம்/கராத்தே போன்ற போர்ப்பயிற்சிகள், சதாவதானம், போன்றவையும் நிகழ்த்துகலைகளே. இவற்றிலும் விற்பன்னரும் நிகழ்த்துவோரும் படைப்பாளி (creator/composer) கலைஞர்(performer) என்ற இரு நிலையிலும் இருப்பர். காட்டாக இளையராஜா படைப்பாளியாக உருவாக்கியதை லட்சுமண்சுருதி என்ற மேடைநடத்துநர் தம் வாத்தியக்குழுவினரை வைத்து நிகழ்த்தும்போது அவர் வெறும் இசைக் கலைஞரே.

நிகழ்த்துகலைகளை வெளிப்படுத்தவும், ரசிக்கவும் ஒரு அரங்கம்/மேடை தேவைப்படுகிறது. நிகழ்த்துகலைகள் நிகழ்நேரத்து விந்தைகள். இவற்றைச் சேமிக்க, பரப்ப, காலங்கடந்து நிறுத்த ஒரு மிடையம்/ஊடகம் தேவைப்படுகிறது. இன்றைய ஒலி/ஒளிப்படக் கருவிகளின் வரவாலேயே இந்த நிகழ்த்துகலைகள் பதிவுசெய்யப்பட்டு காலங்கடந்த தன்மையை எட்டும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு முன் நிகழ்த்துபவரின் நேரடியான பொழுதில் அன்றி  அவர் உருவில்/குரலில் நிகழ்த்துகலைகளை வேறெவரும் காண, கேட்க இயலாதிருந்தது. ஒளிக்காட்சியாக நிகழ்த்து கலைகளின் சில நிலைகளை சிற்பம்/ஓவியம் வழியாகக் காண முடிந்தாலும் முழு இயக்கத்தோடே காணும் அனுபவம் ஒளிப்படக்கருவிகளின் வந்ததாலேயே சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆகவே நிகழ்த்துகலைகளின் பரவலுக்கும், காலங்கடந்த தன்மைக்கும் அறிவியல் வளர்ச்சி இன்றியமையாததாகிவிட்டது கண்கூடு. மாறாக உருவக்கலை பெரிய அளவில் அறிவியல் சார்பின்றி காலங்கடந்து நிற்பது எளிதில் காணக்கிடைக்கிறது.

இந்தப் பின்னணியில் நாம் எழுத்துக்கலையை அணுகலாம். எழுத்திலும் மூலப் படைப்பாளி(author)யுடன் பகிர்வோன்/உரைப்போன்/விளக்குவோன்/தொகுப்போன்/பதிப்போன் (propagator) என்ற சார்நிலைகளும் உண்டு. எழுத்து காலங்கடந்து நிற்க நிகழ்த்துகலை போலவே ஊடகம் ஒன்று தேவைப்படுகிறது. சுட்ட களிமண் பலகைகளிலிருந்து, பனை ஓலைகள், கல்வெட்டுகள், என்று பரிணமித்து இன்று காகிதம், அதற்குமேல் கணினித் திரை, கைப்பேசி/படிப்பான் கருவிகள் என எழுத்தின் ஊடகங்கள் பலவிதம். ஆனால் நிகழ்த்துகலைகளின் ஒரு குறைபாடு எழுத்துக்கலையில் இல்லை. நிகழ்த்துகலை பதிவாக்கத்துக்கு அறிவியல் வளர்ச்சி தேவைப்பட்டது. எழுத்துக்கு அவ்விதமில்லை. இதனாலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைகூட காலத்தைக் கடந்து இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. சுருதி என்று அழைக்கப்படும் வேத உபநிடதக் கூற்றுக்களும், காடு கரைகளில் பாட்டாளிகள் படைத்த, பரப்பிய தெம்மாங்கு, ஒப்பாரி, தாலாட்டு, கூத்து வகைப் படைப்புகளும் ஒலிவடிவிலேயே காலங்கடந்து சேமிக்கவும் பரப்பவும் ஆகின. 

எழுத்தின் இன்னொரு முக்கியக் குணம், எந்த இழப்பு சிதைவுமில்லாமல் இவை சேமிக்க, கடத்தப்படுவது. அறிவியலில் அனலாக் & டிஜிடல் என்று சொல்வோம். மற்ற நிகழ்த்துகலைகள் அனலாக் சமிக்ஞையாக சேமிக்கப்படுகின்றன. அதனாலே அவற்றின் நேரடி அனுபவமும் ஊடகங்களின் வாயிலாகப் பெறும் அனுபவமும் வேறுவேறாய் இருக்கின்றன. இசையரங்கில் கேட்பதும், ஒலிப்பேழைவழிக் கேட்பதும், வானொலியில் கேட்பதும், செல்பேசியிலிருந்து இயர்போன்வழி கேட்பதும் வேறுவேறு தரம், வேறுவேறு உணர்வு. ஆனால் எழுத்து அப்படியல்ல. எந்த ஊடகமென்றாலும், எழுத்து ஒன்றே. ஏனென்றால் எழுத்து உள்ளத்துக்கானது. எழுத்து முழுமை பெறுவது மூளையில், மற்ற நிகழ்த்துகலைகளைப் போல ஐம்புலன்களில் அல்ல. இந்த வேறுபாட்டாலேயே எழுத்து தரும் உணர்வு எல்லைகளற்றது. வாசிப்போரின் கற்பனைத் திறன் சார்ந்தது.

சாண்டில்யனின் கடல்புறா வாசிப்பவர் அக்ஷயமுனையில் இளைய பல்லவன் நிகழ்த்திய வீரதீரங்களையும் மஞ்சள் அழகியுடன் விளையாடிய பொழுதுகளையும் தம் மனக்கணால் காணச் செய்வது எழுத்து. அஹூதா, அமீர் என்றெல்லாம் பாத்திரங்களை நம்மால் அகக்கண்ணாலேயே காணச்செய்வது எழுத்து. விவரிப்போர் வாசிப்போர் இருவரின் கற்பனைத் திறனும் சேர்ந்த பெருக்கல் விளைவே எழுத்தின் தாக்கம். இதனாலேயே காலம் எழுத்தின்மேல் தன் அதிகாரத்தைச் செலுத்த முடியாததாயிருக்கிறது. தாராசுரம் சிறபங்களின் செய்நேர்த்தியைவிட எவ்விதத்திலும் குறைவில்லாத ஆனால் இன்னுமே புதியதுமான கொனார்க் சிற்பங்களும் பேலூர் ஹளபேடு சிற்பங்களும் சோழன் படைப்பைவிடவும் சிதைவடைந்திருப்பது முன்னது கருங்கல்லாலும், பின்னவை மணற்கல் மற்றும் மாவுக்கல்லால் செய்யப்பட்டதாலுமே. இங்கே படைப்பின் திறன் படைப்புக்கு எடுத்துக்கொண்ட பருப்பொருளால் காலப்போக்கில் இழப்பை சிதைவை எதிர்கொள்வதுபோல எழுத்துக்கு நேர்வதில்லை. இதனாலேயே மற்ற எல்லாக் கலைகளையும்விட எழுத்துக்கலை வேறுபட்டது. காலங்கடந்து நிற்பது.

நிற்க. இது எழுத்து என்ற கலையின் சிறப்பேயன்றி எழுத்துக்காரன் என்ற படைப்பாளியின் தனிச் சிறப்பென்று கொள்ளவேண்டியதில்லை. மற்ற நிகழ்த்துகலைஞர்களையும் உருவக்கலைஞர்களையும் போலவே அவனும் படைப்பாளி. சொல்லப் போனால் படிப்போனும் சேர்ந்தே எழுத்தென்னும் படைப்புக்கு முழு உருவம் கொடுக்கிறான். ஆனால் படைக்கப்படும் பொருளான எழுத்தின்  இயல்தன்மையால் எழுத்துக்கலை இந்த உன்னத நிலையை அடைகிறது.

புதன், மார்ச் 11, 2015

வட்டெழுத்து வரிவடிவத்தை உங்கள் வலைப்பதிவில் காட்டலாமா?

எப்படி வட்டெழுத்து வரிவடிவத்தை உங்கள் வலைப்பதிவில் காட்டுவது?

தேவையான கோப்புகள் ஏற்கனவே ஒரு வழங்கியில் ஏற்றப் பட்டிருக்கவேண்டும்.

கோப்புகளின் பெயர்கள் கீழ்வருமாறு:
  1. e-Vatteluttu OT-webfont.eot
  2. e-Vatteluttu OT-webfont.ttf
  3. e-Vatteluttu OT-webfont.woff
  4. e-Vatteluttu OT-webfont.woff2
இவை தற்போது ட்ராப்பாக்சில் ஏற்றப் பட்டிருக்கின்றன. நீங்கள் உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருவில் (Template) சிறு மாற்றத்தைச் செய்து இந்த எழுத்துரு வசதியைப் பெறலாம்.

இந்த வழங்கிக்கான மீயுரைத்துண்டு( HTML code Snippet), நீங்கள் வார்ப்புருவில்சேர்க்கவேண்டியது,  கீழே:
/* Generated by Font Squirrel (http://www.fontsquirrel.com) on March 6, 2015 */

@font-face {
    font-family: 'e-vatteluttu_otregular';
    src: url('https://dl.dropboxusercontent.com/s/to25hzj9t5suxsf/e-Vatteluttu%20OT-webfont.eot');
    src: url('https://dl.dropboxusercontent.com/s/to25hzj9t5suxsf/e-Vatteluttu%20OT-webfont.eot?#iefix') format('embedded-opentype'),
         url('https://dl.dropboxusercontent.com/s/gzr76qidgxavx3a/e-Vatteluttu%20OT-webfont.woff2') format('woff2'),
         url('https://dl.dropboxusercontent.com/s/3mcslrckpu66llv/e-Vatteluttu%20OT-webfont.woff') format('woff'),
         url('https://dl.dropboxusercontent.com/s/u325jb6w8ezhelq/e-Vatteluttu%20OT-webfont.ttf') format('truetype');
    font-weight: normal;
    font-style: normal;

}
இதை எங்கே எப்படிச் சேர்க்கவேண்டும் என்பதற்கு கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்:
1. Go to your Blogger dashboard


2. Select "Template" option and clcik on "Edit HTML"

3. Search for tag inside stylesheet box. You may have to expand sections by clicking the blue arrows

4. Just before the searched tag, insert the code snippet given above.

5. Save Template. Voila! Your blog is ready to show vatteluttu script now.

சரி, வார்ப்புருவை மாற்றியாயிற்று, எப்படி வட்டெழுத்தில் ஒரு உரையை (பத்தியை)க் காண்பிப்பது?

அது மிக எளிது. உங்கள் இடுகையை எழுதும் முகப்பில் Compose/ HTML என்ற இரு வசதிகளைப் பார்க்கலாம். வழக்கமாக Compose பயன்படுத்துவோம். இப்போது HTML பயன்படுத்தினால் தேவைப்படும் சிறு மீயுரைத் துண்டை வட்டெழுத்து வரவேண்டிய பகுதிக்கு முன்னும் பின்னும் சேர்க்கலாம்.

முன்பு வரவேன்டியது:
<span style="font-family: e-vatteluttu_otregular; font-size: 30px; font-weight: bold;"> 
பின்பு வரவண்டியது:
</span>
இதை நீங்கள் HTML Viewல் தான் செய்யவேண்டும். இடுகையை சேமித்து, பதிப்பித்து, பின் தனியாக உலாவியில் பார்த்தால்தான் சரியாகத் தெரியும். Previewல் சரியாகத் தெரியாது. வாழ்க வளமுடன். தமிழ் தழைக்க!

வட்டாடுவோமா?

வட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் என்ற ஆர்வலர் உருவாக்கியிருப்பதாக அறிந்தேன்.  தரவிறக்கி நிறுவி நம் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வட்டெழுத்துக்காலத்தில் எப்படியிருந்தது என்று பார்த்து ரசித்தேன்.

நண்பர் நா. கணேசன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: இந்த எழுத்துரு நிறுவிப் பார்ப்பவர்களுக்கு சரி, எதையும் நிறுவாமலேயே ஒரு இணைய வாசகருக்கு வட்டெழுத்து வரிவடிவத்தில் எதையும் காட்ட முடியுமா? உமரின் தேனீ போல வட்டெழுத்து வடிவத்தைக் காட்டும் ஒரு இயங்கு எழுத்துரு சாத்தியமா?

நமக்குத்தான் இம்மாதிரி சீண்டல்கள் உவப்பானதாயிற்றே. கொஞ்சம் முட்டி மோதி செய்துவிட்டேன்.

இதோ பாருங்கள், இந்தப் பக்கத்திலேயே கீழே பாரதிதாசனின் கவிதை தற்காலத் தமிழ் வரிவடிவத்திலும், அதற்கடுத்து வட்டெழுத்து வடிவத்திலும்.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே!

 இனி வட்டெழுத்து:

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே!



இதை நீங்களும் எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த இடுகையில் பகிர்ந்துகொள்வேன்

சனி, செப்டம்பர் 26, 2009

வறுமைக்கோடு

அவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பச்சைக் குழல்விளக்கு ஒன்றின் முன் காரை நிறுத்தினேன். சட்டத்தால் ஏற்படுத்தியிருக்க முடியாத தரப்படுத்தலை நடைமுறை வசதி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துச் சாலைகளில் பச்சைக் குழல்விளக்குகளைக் கண்டால் இரவு உணவுக்கு அங்கே நிறுத்தலாம்.

தமிழனின் வழக்கமான இரவு உணவான புரோட்டா இரண்டு சொல்லி அமர்ந்தேன். சில நிமிடங்களில் சூடான அடுக்கடுக்காகப் பிரியும் புரோட்டா வாழை இலையில் பரிமாற்றம். தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்டினியும், காரச்சட்டினியும், கெட்டியான காய்கறிக் குருமாவும்.

சாப்பிட்டுக்கொண்டே நோட்டமிட்டதில் அடுப்பு அமைக்கப்பிருந்த ஒழுங்கு தெரிந்தது. புகை கொஞ்சமும் வெளிவராமல் குழாய்மூலம் மேலெழும்பி வெளியேறுமாறு செய்யப்பட்டு, தென்னை மட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. டிவி ஓடிக்கொண்டிருக்க சிறுவர் இருவர் விளையாடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தனர். கடையில் என்னைத் தவிர இன்னொருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு சுடப்பட்ட தோசை ஏற்படுத்திய ஓசை காதுக்கு இனிக்கவே எனக்குப் பிடித்த ஆப் பாயில் ஒன்று கேட்டேன். சந்தோசமாக சரியான பதத்தில் கொண்டுவரப்பட்டது.

தேவகோட்டைப் பக்கம் சொந்த ஊராம். கோவைப் பக்கம் வந்து பதினெட்டு ஆண்டாச்சாம். வேறு கடையில் வேலைக்கு இருந்துவிட்டு இந்தக் கடை தொடங்கி ஒரு ஆண்டு ஆச்சாம். இருபத்துநாலு மணி நேரமும் புரோட்டா கிடைக்குமாம். வாகனப் போக்குவரத்தை எதிர்பார்த்து நடப்பதால் கூட்டம் விட்டுவிட்டு சேருமாம்.சாப்பிட்டுக்கொண்டே ‘புரோட்டா நல்லாருக்கு’ என்றேன். அவர் முகத்தில் ஒரு மின்னல்.

போதும்போல இருந்தாலும் ஒரு தோசை சாப்பிடுவமே என்றும் தோன்றியது. ‘பெரிசா மொறுமொறுன்னு எண்ணையா வேண்டாம், அளவா ஒரு தோசை கிடைக்குமா?’ ‘ஓ... வீட்டுத் தோசை மாதிரி போட்டுத் தரட்டுங்களா?’’ம்.’வழக்கமான கிண்ணத்தை கொண்டு தேய்க்காமல் கரண்டிகொண்டு பரப்பி, மூடிவேகவைத்து பக்குவமாகக் கொடுத்தது அசல் வீட்டுத் தோசை மாதிரியே இருந்தது. இதற்கு கெட்டிச்சட்டினியும், மணக்கும் முருங்கைக்காய் சாம்பாரும். விட்டிருந்தால் இன்னும் ரெண்டு தோசை சாப்பிட்டிருப்பேன். தொப்பையைக் குறைக்க காலையில் வெக்குவெக்குனு நடப்பதில் பயனில்லாமல் போய்விடும் என்பதால் அத்துடன் எழுந்து இலையை பாத்திரத்தில் போட்டுவிட்டு கையைக்கழுவினேன்.

’எவ்வளவாச்சு?’

’பதினெட்டுரூபா சார்’

எடுத்த ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு, இரு பத்துரூபாய்த் தாள்களைக் கொடுத்து, மீதிவேண்டாம், வெச்சுக்கங்க’ என்று சொல்லி நடையைக்கட்டினேன். இன்னும்கூட ரொம்பக் குறைவாய்க் கொடுத்த மாதிரி குற்ற உணர்வு.

இன்று 300 ரூபாய்-400ரூபாய் சம்பாதிக்கிறார்கள் கொத்தனார்கள். 100ரூபாய்க்குக்கீழ் எந்த வேலைக்கும் ஆள்கிடைப்பதில்லை. ஆனாலும் ஒருவேளை உணவு இருபதுரூபாய்க்குள் சாப்பிட முடிகிறது ஆச்சர்யமாகத் தானிருக்கிறது.

இங்கே பட்டினிமூலம் இனி ஒரு சாவு வராது. விவசாயிகள் தூக்குப் போட்டுக்கொள்வதும் இங்கேயில்லை. வாழ்க தமிழகம்!

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

செல்பேசியில் தமிழ் - சோனி எரிக்சன் C510 அனுபவம்

நட்சத்திர வாரம்னுட்டு நுட்பக்கட்டுரை எழுதலைன்னா எப்படி? குறைந்தபட்சம் நுட்பம் மாதிரி பாவனையாவது காட்டவேண்டாமா?அதான்.

ஏற்கனெவே ஒரு முறை
  1. தமிழ்ப்பக்கங்கள் வாசிக்க,
  2. குறுஞ்செய்தி/மறுமொழி தமிழில் எழுத,
  3. வரும் தமிழ் குறுஞ்செய்தி வாசிக்க
ஏதுவான செல்பேசியைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து ஒரு கட்டுரை எழுதினேன்.

ஆனால் தொடர்ந்து அந்த செல்பேசியை அதிகம் பயன்படுத்த வாய்ப்பிருக்கவில்லை. இப்போது வாங்கிய சோனி எரிக்சன் C510 + ஏர்டெல் மொபைல் ஆபீஸ் இணைய சேவை மூலமாக நான் பெற்றுவரும் சில வசதிகளையும் இன்னும் நிறைவேறாத தேவைகளையும் எழுதிவைக்க வேண்டி இந்த இடுகை.

  1. முன்பு சொன்னபடி, இந்தியாவில் விற்கும் பல குறைந்த விலை செல்பேசிகளில் தமிழுக்கும் பல இந்திய மொழிகளுக்கும் மேலேசொன்ன மூன்றுவகையான ஆதரவுடன் வருகின்றன.
  2. அந்தோ, கொஞ்சம் படிப்போ வசதியோ உள்ள இந்தியன்தான் தாய்மொழியில் புழங்குவதில்லையே, அதனால் மேம்பட்ட, உயர்ரக செல்பேசிகளில் இது எதற்கு என்று அவற்றில் இவ்வசதி வருவதில்லை. எனவே சிரமப்பட்டுத்தான் தமிழ் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
  3. ஒபரா மினி என்ற இலவச உலாவியைத் தரவிறக்கி, சில அமைப்புத் தெரிவுகளைச் செய்வதன் மூலம் (Use bitmap fonts for complex scripts=yes) வலைப்பக்கங்களில் தமிழ் வாசிக்கலாம்.
  4. இலகுவாகத் தரவிறக்கம் ஆக (செலவு குறைய :)) முக்கியமான வலை சேவைகளின் மொபைல் வடிவத்தைப் பயன்படுத்தலாம். உ.ம். m.gmail.com, m.twitter.com, m.thamizmanam.com
  5. ஜிமையிலின் imap சேவையில் இயங்குமாறு செல்பேசியின் மின்னஞ்சல் செயலியை அமைப்பித்துவிட்டால் அதிலும் push email என்ற தெரிவைச் செய்வதன்மூலம், ப்ளூபெர்ரி போலவே உடனடியாக மின்னஞ்சல் நம் செல்பேசிக்கு வருமாறு செய்யலாம். இதற்கென்று தனியான செலவில்லை. GPRS மட்டும் போதும். பலமுறை என் மடிக்கணியின் ஜிமெயில் திரைக்கு ஒரு புது அஞ்சல் காட்டப்படும் முன்னமே, செல்பேசியில் ட்ட்டடாய்ங் என்று வந்துவிடும். நண்பர்கள் மத்தியில் ஒரு கீக் (geek) எபக்ட் கிடைக்கும்:)
இன்னும் கேமரா, கூகிள் மேப்ஸ் போன்றவற்றிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார்கள் சோனி எரிக்சன் காரர்கள். ஆனாலும், தமிழுக்கு நேரடி ஆதரவு என்றைக்கு வருமோ?

தமிழ்மணம் குழு

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மணம் சேவையை நடத்துவது தமிழ் மீடியா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் என்பது தெரிந்த செய்தி. இது லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டது.

இப்போது
முனைவர் இரா. செல்வராஜ் - தலைவர்,
முனைவர் நா. கணேசன் - துணைத் தலைவர்,
முனைவர் பா. சுந்தரவடிவேல் - செயலாளர்,
மயிலாடுதுறை சிவா - பொருளாளர்.

இவர்களோடு,

முனைவர் சொ. சங்கரபாண்டி
தமிழ்சசி
முனைவர் இரமணீதரன்
முனைவர் பாலு
இளங்கோ
முனைவர் சுந்தரமூர்த்தி
கார்த்திக்ராமஸ்
முனைவர் தங்கமணி
முனைவர் பாலாஜி பாரி

ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். சுரதாவும் நானும் ஆலோசகர்களாக உள்ளோம்.

தமிழ்மணம் தொடர்ந்து இயங்குவதற்கு இவர்கள் அனைவரின் பங்களிப்பும் ஆர்வமும் பெரிதும் காரணம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்சசியின் நுட்பரீதியான பங்களிப்பு மிக முக்கியக் காரணி. தமிழ்மணம் நுட்பத்தின் குழந்தை. தொடர்ந்து நுட்ப மேம்பாடுகள் செய்துகொண்டிருந்தாலே இது காலமாற்றங்களுக்கேற்ப பரிணாமித்து இயங்கமுடியும். ஏற்கனவே சொன்னதுபோல தமிழ்மணத்தின் நிரல்கள் ஒரு வழமையான மென்பொருளாளரால் உருவாக்கப்படாததால் தொழில்முறை உத்திகளைப் பயன்படுத்தி ஒரு குழுமுயற்சியால் மேம்படுத்துவதில் பல சவால்கள் ஏற்பட்டன. அப்போது தனியொருவராக பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்று கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் நுட்பம் முழுமைக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழ்சசி.

திரைமணம், செய்திகள், மறுமொழி திரட்டி என பல பரிமாணங்களாக விரிந்திருக்கும் தமிழ்மணம் தளத்தின் முதன்மை நுட்பவியலாளருக்கு வந்தனங்கள். இரு குழந்தைகளுடன், தற்போதைய சிக்கலான பொருளாதார மந்த நிலை சூழலில், தமிழ்சசி எடுத்துக்கொண்டுள்ள பணியை எண்ணிப் பார்த்து, தமிழ்மணத்தின் நுட்பச் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிடும் நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகிறேன். மாற்றாக பலரும் பங்களிக்க ஏதுவான வேறு தீர்வுகள் இருப்பினும் முன்வைத்தால் தமிழ்மணம் குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக மென்பொருளாளர்கள் கவனத்துக்கு இதை வைக்கிறேன்.

தற்போதைய தலைவர் செல்வாவும் சரி, முன்னாள் தலைவர் சங்கரபாண்டியும் சரி, தலைவருக்குரிய முதிர்ச்சி, கண்டிப்பு, பொறுமை, போன்ற எல்லாக் குணங்களும் கொண்டு தமிழ்மணத்தை நடத்திச் செல்வதைப் பார்க்கிறேன். செல்வா கிட்டத்தட்ட நான் வலைப்பதிவுக்கு வந்த நாள்முதலே நல்ல நண்பர். ஈரோட்டுக்காரர். நுட்பத்திலும், இலக்கிய சமூக எழுத்துக்களிலும் சமமான ஈடுபாடு கொண்டவர். தேவைக்கேற்ப நுட்பப் பங்களிப்பும் செய்யக்கூடியவர்.

சங்கரபாண்டிக்கென்று வலைப்பதிவே கிடையாது! பின்னூட்டப் புகழ் சங்கரபாண்டியென்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பெரும் சமூக ஆர்வம் கொண்டவர். இணையத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கம் போன்ற பணிகளில் அதிகம் செயலாற்றுபவர். எங்க ஊர் மாப்பிள்ளை!

எங்கூர்க்காரர் கணேசனைப் பத்திச் சொல்வதானால் சொல்லிட்டே இருக்கலாம். நாசாவில் விஞ்ஞானி. அற்புதமான நினைவாற்றல். ஆனால் தினமும் மணிக்கணக்காகப் படிப்பது தமிழ். வெறுமனே படித்துக்கொண்டிராமல் தமிழ்க் கணிமைக்காகப் பல பங்களிப்புகளைச் செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார். பல பெரிய தமிழறிஞர்கள், நுட்பவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை!

’பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்! மேலோட்டமான பொதுப்புத்தியில் அவரைப் பார்த்துவிட்டு சிறுமைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு. ஈழத்து நிகழ்வுகளால் காயப்பட்டிருக்கும் அவரைப் போன்ற நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தமிழ்மணத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் பலநாள் பங்களித்துள்ளார்.

சுந்தரவடிவேல், கலையார்வம் நாட்டுப்புறவியல் ஆர்வம் மிக்க நண்பர். பெட்னா விழா போன்ற நிகழ்வுகளில் நாட்டுப்புறக்கலை வடிவங்கள்மூலம் பல செய்திகளை உணர்த்தியிருக்கிறார்.

இளங்கோ, பாலு, கார்த்திக், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சிவா, பாலாஜி பாரி ஆகியோரும் சாத்தியத்துக்குட்பட்ட பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இது சிறப்பான அமைப்பா என்றால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் நுட்ப ஆதரவு/பங்களிப்பு சாத்தியப்பட்டிருந்தால் தமிழ்மணம் இன்னும் உச்சங்களை எட்டியிருக்கும். ஆனால் சிறப்பான குழுவா என்றால் உரக்கச் சொல்லலாம் ஆம் என்று.

புதன், ஆகஸ்ட் 26, 2009

கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர், அக்கப்போர்

அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந்தியாவிலேயே மத்த மாநிலத்தவங்களுக்குக்கூட இருக்காமாப்பா, நமக்கு மட்டும் இல்லியாம்ப்பா...என்னதுங்கிறீங்களா? அதுதாங்க: கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர்... இங்லீஷில் சொன்னா last name, surname, family name.
எனக்குத் தெரிஞ்சு நம்ம தமிழ்மக்கள் எல்லாருக்குமே ஒருத்தருக்கு ஒரே பேருதான். (செல்லப்பேர், லொள்ளுப்பேர், பட்டப்பேர், குலதெய்வப்பேர், அப்பாரு பேர், அப்பச்சி பேர், புனைபேர், முகமூடிப்பேர் இதெல்லாம் கணக்கில் சேர்க்கறதாயில்லை, சட்டபூர்வமா, சர்டிபிகேட்டில் போடறது மட்டும்தான் பேச்சு :-)) அது நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி - யாரோ வெச்சதா இருக்கும். அதனால அது வெச்சபேரு, இங்லீஷில் given name அல்லது first name. சண்முகம், ஆறுச்சாமி, சுந்தரம், ராஜேந்திரன்னு எதுவானாலும் ஒருபேர், ஒரே ஒரு பேர். அதுக்குமேல் கிடையாது.

ஆனா பாஸ்போர்ட் எடுக்கும்போது கேப்பான், 'கடேசிப்பேரு என்ன'ண்ணு. அங்கதான் ஆரம்பிக்கும் வில்லங்கம். அதுவரைக்கும் ஒரு இனிஷியலை ஒட்டிக் கூட்டியாந்திருப்போம், சில பெரியவங்க ரெண்டு இனிஷியலும்கூட வெச்சிருப்பாங்க (இதில கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்- எல்லாம் தனி). உடனே அந்த இனிஷியலை நீட்டி முழக்கி, 'இதுதாங்க கடேசிப்பேரு'ன்னு சொல்லி... அப்பத்திக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் இருக்குபாருங்க விவகாரம்..

எங்கப்பாவுடைய வெச்சபேரு என்னோட கடேசிப்பேரு ஆயிட்டுது. எனக்கு வெச்சபேரு என் மகனுக்குக் கடேசிப்பேரு ஆச்சு. இனிஷியலை இழுத்துவிட்டா அப்படித்தானே வருது. அங்கதான் நம்மளை எல்லாவனும் கேவலமாப் பாக்குறான். ஒரு குடும்பத்துல கடேசிப்பேரு எல்லாருக்கும் ஒண்ணாத்தான் இருக்கணுமாமில்லே. ஒவ்வொரு இடத்திலேயும், 'என் கடேசிப்பேரு வேற, என் மகனின் கடேசிப்பேரு வேற'ன்னு சொன்னா ஏன் மேலேயும் கீழேயும் பாக்கறானுவ?

இதிலே, 'என் வெச்சபேருதான் என் மகனின் கடேசிப்பேரு'ன்னா இன்னும் திருதிருன்னு முழிச்சு எனக்குத்தான் புரியலைன்னு நினைச்சுக்கிறாங்க. கடேசிப்பேரு இல்லேன்னா என்னவாம்? இதிலே அன்னிக்கு இங்க ஒரு வெள்ளக்காரன் பெருமையாச் சொல்றான், ஊடால நடுப்பேருன்னு வேற ஒண்ணு இருக்காமாப்பா...இங்லீஷில middle name. அப்பாவீட்டிலிருந்து கடேசிப்பேரு வந்துருமாம், அம்மா வீட்டு சீதனமா இந்த நடுப்பேராம். நம்ம ஒரு பேரைச் சொல்லவே இவங்க நாக்கு சுளுக்கிக்குது, ஓரசை, ஈரசை பேராப் பழகிட்டு, நம்ம 'எக்கச்சக்க அசை'ப் பேரை வெட்டிப்புடறாங்க. இதிலே அதே பாணியில் நடுப்பேரும் கடேசிப்பேரும் வெச்சுட்டா, ஒருத்திகிட்டக்கூட போனில் பேசி பேரை முழுசாச் சொல்லமுடியாது. என் சூப்பர்நேம் 'காசிலிங்கம்', முதல் மாசம் எலக்ட்ரிக் பில்லில் Kefilangham ஆகியிருந்தது. இன்னும் லக்ஷ்மிநரசிம்மன், வெங்கடரமணன் எல்லாம் என்ன பாடுபடறாங்களோ!

இது எப்போ ஆரம்பிச்ச பிரச்னை? 400 வருஷம் பின்னோக்கிப் போனாக்கூட 'வில்லியம்' ஷேக்ஸ்பிய'ருக்குக்கூட ரெண்டுபேரும் இருந்துருக்கு போலத்தெரியுது. 'வில்லியம்' 'வொர்ட்ஸ்வொர்த்', 'ஜான்' 'மில்டன்' எல்லாம் அப்படியேதான் போல. நம்ம கம்பரும் வள்ளுவனும் இளங்கோவும் கடேசிப்பேரு வெச்சிருந்தாமாதிரித் தெரியலையே. அட நம்ம முண்டாசு, அவரு பேரில் 'சி.' கூட சின்னசாமி அய்யர்தானே, அது அவரோட அப்பா பேருதானே. அப்படின்னா எப்பவுமே நம்ம மக்கள் இப்படிக் கடேசிப்பேரு, குடும்பப்பேருன்னு வெச்சிக்கலையா?

இந்த கடேசிப்பேரு சமாச்சாரம் மட்டும் இல்லீன்னா, இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் அட நம்ம பீட்சாலேண்ட்-பார்ன் சோனியாகாந்தியும் இந்த அளவுக்குப் பேர் வாங்கியிருப்பாங்களான்னு தெரியலை. எனக்குத் தெரிந்து, 'மகாத்மா காந்தியும் இவங்களும் ஏதோ மாமன் மாச்சான் கூட்டம்'னு நெனைக்கிறவங்க எத்தனைபேரு!

இங்கே சில கன்னடத்து நண்பருங்க 'ஹெக்டே'ன்னு, 'காமத்'துன்னு கடேசிப்பேரு வெச்சிருக்காங்க. தேலுங்குதேசத்துக்காரங்க 'ராவு' 'ரெட்டி'ன்னு சொல்லிக்கிறாங்க, சேட்டன்மாரு 'நாயர்' 'பிள்ளை'ங்கிறாங்க. இதெல்லாம் எனக்கு வெறும் கடேசிப் பேராத்தெரியலை. கூடவே ஜாதியயையும் தம்பட்டமடிக்கறமாதிரியில்ல தெரியுது. ஒருவேளை இந்தக் கடைசிப்பேரு ஜாதியின் அடையாளம், அதனால இது வேண்டாம்னு நம்ம பெரியவங்க இதைத் தூக்கிக் கடாசிட்டாங்களோ?

நான் ஒண்ணு பண்ணிடலாமுன்னு இருக்கேன். இந்தப் பேர்ப்பஞ்சம் என்னோடு போகட்டும். என் மக்களுக்கு என் வெச்சபேரை கடேசிப்பேரா ஆக்கியாச்சு, அதுவும் எல்லா இடத்திலும் கெட்டியா உக்காந்திருச்சு. இனிமேல் என் பேரப்புள்ளைங்களுக்கும் இதையே கடேசிப்பேராக்கிட்டா என்ன? என் குடும்பம் இனி 'காசிலிங்கம்' குடும்பம்னு இருக்கட்டுமே. அட தாத்தா பேரை பேரனுக்கு வைக்கிறது நம்ம ஊரு வழக்கம் தானே. என் பேரனுக்கு என் பேர்தான் கடேசிப்பேரு. ஸ்டைலா ஒருபேரை வெச்சு, அதை 'வெச்ச பேரு' ஆக்கிடலாம். ஸ்டைலுக்கு ஸ்டைல், சாங்கியத்துக்கு சாங்கியம், சட்டத்துக்கு சட்டம். ஒரே கல்லுல மூணு மாங்கா!

தமிழ்மணமெல்லாம் வரும் முன்னாடி எழுதியது. மீள்பதிவு. இன்னும் நிலைமை மாறியிருக்கிறமாதிரி தெரியலை.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...