சனி, பிப்ரவரி 14, 2004

புது வீடு போயாச்சு

ரெண்டு வாடகை (ஓசி ஹி..ஹி..) வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதமாய் குடியிருந்துவிட்டு சொந்தமாக மனை வாங்கி, அஸ்திவாரம் தோண்டி, சுவர் எழுப்பி, வீடு கட்டி, பூச்சு, வர்ணம் எல்லாம் செய்து, என் புதுமனை புகுகிறேன். எல்லாரும் அங்கு வந்து வாழ்த்தி, எப்போதும் போல் அடிக்கடி திண்ணைப்பக்கம் வந்து அரட்டைக் கச்சேரியில் பங்கெடுத்து, என்னை மகிழ்வியுங்கள். (மு. உஷாவுக்காக, விசேஷமாய் முட்டிக்கிற மண்டையெல்லாம் வெச்சிருக்கேன்)

இந்த வீடு கட்டிய அனுபவத்தையும் எழுதணும்.

அன்புடன்,
-கொத்தனார் காசி.

புதன், பிப்ரவரி 11, 2004

என் பைக்கணினி அனுபவங்கள் -2

'இத வெச்சு இதைச்செய்யலாம் அதைச்செய்யலாம்'னு வாங்கிடறோம். ஆனா அப்புறம் ஆனைக்கு அம்பார வகையறாக்கள்னு வேற தனியாச் செலவு பண்ண வேண்டியிருக்குது. அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் போக பொழுதுபோக்குக்கு இதில் நிறைய வசதி இருந்ததால அதுல ஒவ்வொண்ணா செய்துபார்க்க ஆரம்பித்தேன். முதலில் இதன் MP3 பிளேயர் உபயோகம்.

வாங்கிய நிலையில் நிறையப் பாடல்களை தேக்கி வைக்க இதில் இட வசதி பத்தாது. ஒரு 10MBக்குள்ளதான் மிச்சம் இருந்தது. அதுக்குத் தான் ஃப்ளாஷ் மெமரி கார்ட் என்கிற சிறு அட்டைகள் இருக்கு. அதில் ஒரு அட்டை முதலில் வாங்கினேன். அது ஒரு 64MB அளவு கொண்டது. அதுக்குள்ளே பாட்டெல்லாம் தேக்கி வைக்கும்போதுதான் என்னவிதமான ஒலி வடிவங்கள் இருக்கு, அதில் என்னவெல்லாம் செய்யலாம். எந்த வடிவம் எந்த செயலியில் ஓடும் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். ரொம்ப அறுக்காமல் சொல்வதானால், முக்கியமா மூன்று வகை ஒலிக்கோப்பு வடிவங்கள் இருக்கு. இந்த அட்டவணையை ஒரு கண் பார்த்தா கொஞ்சம் விளக்கம் கிடைக்கும்.

குறுவட்டில் வரும் பாடல்களின் தரம் அப்படியே வேணும் என்றால் சுமார் 6MB அளவில் ஒரு பாடலை அடக்கலாம். திருவிளையாடல் தருமி மாதிரி கொஞ்சம் குறைச்சுபோட்டுக் கொடுத்தாப் போதும்னா, 3MB அளவிலும் அடக்கலாம். அப்படிப் பாத்தா சுமார் 20 பாட்டுக்கள் இந்த 64MB அட்டையில் அடங்கும். அதுவே கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடுமே, எனவே நிறையப் பாட்டுக்களை (சினிமாப்பாட்டுத்தான்) இணையத்தில் இருந்து இறக்கிக் கொண்டேன். புதுசுபுதுசா படம் வர வர அதை இதில் போட்டுக்கிட்டு கேட்டேன். ஒரு ஹெட்போன் இருந்தது, ஆனால் சீக்கிரம் போரடிச்சுப்போச்சு. அதோடு, பேட்டரியும் அடிக்கடி இறங்கிப் போய் தொல்லைகொடுத்தது. அப்புறந்தான் காரில் இதையே ஓடவிடமுடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றியது. புதுசா இறக்கிய MP3 பாடல்களை காரின் கேசட் பிளேயர் வழியாக் கேட்பதற்கு ஒரு அடாப்டர் வாங்கினேன். காரின் சிகரெட் லைட்டர் மூலம் பேட்டரிக்கு சாப்பாடு போட ஒரு கார்-சார்ஜர். இரண்டும் வந்தபின் காரில் எப்பவும் சுடச்சுடப் புதுப்பாட்டுத்தான். கேக்கத்தான் நேரமில்லை. இங்கதான் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 3 நிமிடப் பிரயாணம் தானே!

கொஞ்சம் கொஞ்சமாய் இன்னும் ஆக்டொபஸ் தன் ஆயிரம் கைகளை விரித்தது. பாடல்கள் மட்டுமில்லாமல் 'ஒலியும் ஒளியும்' ஓட்டினால் ஜாலியா இருக்குமே. ஜீன்ஸ் வி.சி.டி.யை பிரிச்சுப்போட்டு, ஒலியும் ஒளியும் தயார்செய்தேன். அப்போதுதான் என்னென்ன விடியோ வடிவங்கள் இருக்கின்றன என்ன அளவில் எப்படி கையடக்கமாக விடியோத்துண்டுகளைத் தயாரிக்கலாம் என்பது பிடிபட்டது. ஒரு அருமையான விடியோ வடிவமாற்றி கிடைத்தது. இப்படி விடியோவேலையில் ஆழமாய் இறங்கவும் இந்த 64MB பத்தாமல் போனது. ஒரு 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்' மட்டும் 20MB பிடித்தது. இன்னும் பெரிசாய் அட்டை கொண்டுவா என்றது இந்த அட்டை. ஓடு, மறுபடியும் தேடு. தேடி 256MB அட்டை ஒண்ணு வாங்கினேன்.

அப்பாடா, இப்போ மணிக்கணக்கில் MP3 பாடும், அப்பப்ப உள்ளங்கையில் நெல்லிக்கனி ஆடும். இப்படியே கொஞ்ச நாள் பொழுது போச்சு. அக்கம் பக்கத்தில் நெறையப்பேரை ஏத்திவிட்டாச்சு. எல்லாரும் நானும்வாங்கணும்னு ஆசைப்பட ஆசைப்பட நமக்கு நம்ம குட்டிப்பாப்பாமேல் காதலும், பெருமையும் அதிகமாச்சு. அதுவும் இதுதான் சமயம்னு அடுத்த பட்டியலை நீட்டுச்சு.

-தொடரும்

திங்கள், பிப்ரவரி 09, 2004

என் பைக்கணினி அனுபவங்கள் -1

இன்றைக்கு ஜேம்ஸ்பாண்ட் கேமராவைப் பற்றி நண்பர் முத்து எழுதியிருந்தார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த மாதிரி 'பொடிஜாமானம்' (gadget-குத் தமிழில் என்ன சொல்வதென்று தெரியவில்லை) செய்து கொடுப்பதற்கென்றே ஒரு வயசான விஞ்ஞானி இருப்பார். அவர் 'டபுள்-ஓ-செவ'னுக்கு விளக்கிச் சொல்லவரும் போது ஜேம்ஸ் 'சொல்லித் தெரிந்து கொள்பவன் டபுள்-ஓ-ஓ, சொல்லாமலே தெரிந்துகொள்பவன் தான் இந்த டபுள்-ஓ-செவன்' என்பதுபோல 'கப்'பென்று பிடித்துக்கொண்டு காரியத்தில் இறங்கிவிடுவார். ஜேம்ஸ்பாண்ட் ஆக ஆசையிருந்ததோ இல்லையோ அந்த விஞ்ஞானியாக ஆக ஆசை இருந்தது (வயசெல்லாம் எதுக்கு:-)

இந்த மாதிரி புதுப்புது கையடக்கக் கருவிகள் பற்றியெல்லாம் கல்கண்டு, முத்தாரம் (இப்போது எதிலே, தினமலரிலா?) பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப ஆர்வமாய் இருக்கும். பேனாவில் கேமரா, கடிகாரத்தில் டேப்ரிகார்டர், கண்கண்ணாடி(மூக்குக்கண்ணாடி?)யில் வயர்லெஸ்போன் என்று, இதையெல்லாம் நினைத்தாலே பிரமிப்பாக இருக்கும். போதாக்குறைக்கு என் பாஸ்களில் (இது வசந்த் கணேஷைக் கூப்பிடும் 'பாஸ்', எம்ஜியார் படத்தில் ராமதாஸ் நம்பியாரைக்கூப்பிடும் அந்த 'பாஸ்' அல்ல. அட, இப்ப வேற ராமதாஸ், வேற நம்பியார் தமிழ்நாட்டைக் கலக்கிட்டிருக்காங்களாமே...) ஒருவர் இந்த குட்டிவஸ்துகளின் காதலர். மடிக்கணினி வாங்கினாலும் 12 இன்ச் திரையுள்ள சோனி(ஹும். எவ்வளவு நல்ல கம்பெனிக்கு எவ்வளவு மோசமான பேரு.., தமிழில் சொல்லிப்பாத்தா:-)), காமிரா வாங்கினாலும் பாக்கட்டுக்குள் இருப்பதே தெரியாத கேமரா என்று எல்லாமே பொடிப்பொடியா வாங்குவாரு. அதையும் பாத்துப்பாத்து இந்த குட்டிவஸ்துகள் மேல் எப்போதும் ஆர்வம் ரெடிஸ்டாக்கா இருந்தது என்கிட்டே.

அமெரிக்கா வந்த புதிதில் சிலர் கையில் வைத்திருக்கும் பாம் (அட கையெறிகுண்டு இல்லீங்க, palm) வகைக் கணினிகளைப் பார்த்ததில் அதில் ஒண்ணும் வாங்க ஆசை வந்துது. இது 2 வருடத்திற்கு முன். ஆசைக்கு தூபம் போட்டாற்போல ஒரு ஹாட் டீலும் (இங்க தான் ஹாட் டீல் இல்லாம அரிசி பருப்புகூட வாங்கறதில்லியே:-)) மாட்டவே 2001 டிசம்பரில் வாங்கினேன் ஒரு ஐபாக் 3635 (iPAQ) கைக்கணினி. அது அப்போது பிரபலமாயிருந்த பாம் வகைக் கைக்கணினிகளை விட பலவிதத்திலும் மேம்பட்டது. நான் வாங்கும்போது அதன் பட்டியல்விலை 550 டாலர், (நான் என்ன விலைக்கு வாங்கினேன் என்பது சஸ்பென்ஸ்;-). அது ஒரு *முழு* பல்லூடகக் கணினி. ஒரு 5 இன்ச் உயரமும் 3 இன்ச் அகலமும் கொண்ட அதில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பட்டியலிட்டால் உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அவற்றுள் சில:

1. மின்னஞ்சல், நேரத்திட்டம், முகவரிஏடு, சிறுகுறிப்பேடு போன்ற அடிப்படைத் தன்-மேலாண்மை (Personal Information Management - PIM) செயல்கள் அனைத்தும். அத்துடன் மேசைக்கனினியில் உள்ள இதே வகை செயலிகளுடன் ஒத்து இயங்கும் திறமை.
2. மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் ஆகியவற்றின் கையடக்க வடிவம்
3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியின் கையடக்க வடிவம்
4. விண்டோஸ் மீடியா பிளேயர், ஒலி மற்றும் வீடியோ படங்களை ஓட்டும் வசதி. உள்ளடங்கிய ஒலிபெருக்கி அல்லது ஹெட்போன் கொண்டு இனிமையாக MP3 இசையைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது 'ஐர ஐர ஐரொப்பா என்று ஐஸுவை உள்ளங்கையில் ஆடவிடலாம்:-)) [பாபா, அப்பவே விமர்சனமெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா?]
5. உள்ளடங்கிய மைக் மூலம் உடனடியாக, ஒற்றைப்பொத்தனை அழுத்தி ஒலிப்பதிவு செய்யும் வசதி (பெரிய மேசைக்கணினியில் ஒலிப் பதிவு செய்வது பற்றி ஒரு பெரும்பிரஸ்தாபமே ஒருவர் செய்தார் தன் வலைப்பதிவில், அந்த வேலை, இங்கு ஒரு சிறு பொத்தானை அழுத்தினால் நடக்கிறது :-(
6. தீப்பெட்டி அளவில் அதைவிட சன்னமான மோடெம் கொண்டு டயல்-அப் இன்டெர்னெட் தொடர்பைப் பெறும்வசதி. கம்பியில்லா வலைப்பின்னல் வசதி இருக்குமிடங்களில், அதற்குத்தகுந்த 'நெட்வொர்க் கார்ட்' கொண்டு அதிலும் பங்குபெறும் வசதி.
7. அகச்சிவப்பு ஒளி (Infrared light) மூலம் இன்னொரு கைக்கணினியுடனோ, அல்லது மடிக்கணினியுடனோ கம்பியில்லாமல் எளிதில் கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் வசதி.
8. எழுத்துகளை உள்ளிடும்போது, எளிதாக எழுதிக்காட்டி உணர்த்தும் வசதி. சில வரையறைக்குட்பட்டு கையால் எழுதியதை உணர்ந்து, எழுத்துக்களாக அதுவே மாற்றிக்கொள்ளும்.
9. ரீ-சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய பாட்டரி. 3.5 இன்ச் அகல வண்ண எல்.சி.டி. தொடு-உணர்-திரை, அதன்மேல் எழுத பிளாஸ்டிக் எழுத்தாணி.
10. வட்டுக்கள் ஏதுமின்றி திண்ம நிலையிலேயே (solid-state) இயங்கும் மெமரி & தேக்ககம். எனவே பையில் வைத்துக்கொண்டு ஆடினாலும், ஓடினாலும் எந்த சேதமும் இல்லை, தரவு இழப்பும் இல்லை.

அதன் அளவை வைத்துப் பார்க்கையில் இந்த திறன்கள் பிரமிப்பாகத்தான் இருக்கின்றன. இது கைக்குவந்த புதிதில் புதுப்பொண்டாட்டிபோல என் நேரங்கள் அதனுடன் விளையாடுவதிலே கழிந்தது. அப்புறம் தேனிலவெல்லாம் முடிந்தது. 'எனக்கு அதுவேணும், இதுவேணும், வாங்கித்தா' என்றது. பொண்டாட்டி கேட்டு இல்லை என்று சொல்ல முடியுமா?

-தொடரும்

வெள்ளி, பிப்ரவரி 06, 2004

காட்பாதர் வேணுமப்பா, ஒவ்வொருத்தருக்கும்!

உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு காட்·பாதர் வேணும். வாஷிங்டன் போஸ்ட் 'Pakistan's Nuclear Crimes' அப்பிடின்னு தலைப்பில தலையங்கத்துல சொல்றான்:
'அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் உலகப் பாதுகாப்புக்கும் பேரழிவு ஆயுதங்களால் வரக்கூடிய அபாயம், சதாம் உசேனையும், அல்-கொய்தாவையும் விட அதிகமாக பாகிஸ்தானின் ராணுவத் தலைமையால் செய்யப்பட்டிருக்கிறது என்கிற நிஜம்..' , என்று, ஆனாலும் அமெரிக்கா இன்னும் அந்த ராணுவ ஜெனரலைத் தாங்குதாங்கு என்று தாங்குகிறது என்றால், பாகிஸ்தானுக்கு (முஷாரபுக்கு) கிடைத்த காட்பாதர் அமெரிக்கா (புஷ்) தான் காரணம்.

ஒரு டீ பார்ட்டியில் கவுத்த அம்மாவைத் தேடிப்பிடிச்சு அசடு வழிஞ்சு தேசியக் கட்சி நிக்குதுன்னா, அங்கேயும் ஒரு அத்வானிங்கிற காட்பாதர் தெரிகிறார்.

நியாயமா ஒருத்தர் மாஞ்சு மாஞ்சு கேட்டும் பதில்தராமல், ஒருத்தர் தடவிக்கொடுத்து கேட்டதும், மழுப்பலும் குழப்பலுமா பதில் வந்ததும், 'ஆங்..இத இதத் தான் நான் எதிர்பாத்தேன்'னு பாராட்டு மழையால் குளிர்வித்தால் அதே சந்தேகம்தான் வரும்.

அநியாய உலகமடா சாமி!

வியாழன், பிப்ரவரி 05, 2004

ஆளில்லாத லெவல் கிராசிங்கில் காரில் சென்ற இருவர் பலி


Picture courtesy: Mikes Railroad crossing

இது என்னவோ தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்கா? 'ரயில் வருவது தெரியாமல் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் ரயில் மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள்' என்பது இன்றைய உள்ளூர் செய்தி. உள்ளூர் இங்கு ரோச்சஸ்டர் (மறுபடியும்!). அந்த ரயில்ரோடு கிராசிங்கில் நானும் பலமுறை கடந்திருக்கிறேன். அப்போதெல்லாம், 'பாரடா, என்ன சிஸ்டமேடிக்கா, ஆட்டோமேடிக்கா எல்லாம் பண்ணி வச்சிருக்கானுங்க'ன்னு சிலாகிச்சுட்டே போவேன். இங்கே நிறைய வேலைகளில் ஆளில்லாமல் செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால், நம்ம 'ஆளில்லா லெவல் கிராசிங்'குக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம், இதில் ஆளில்லாவிட்டாலும், ஆள் பண்ணுகிற வேலையெல்லாம் அதுவாக நடக்கும்.

ஒரு படம் மேலே இருக்கு, அதில் பார்த்தால் தெரியும். முக்கியமாகப் பார்க்கவேண்டியது சாலையில் அரைப்பாகத்தை (மட்டும்) மறைக்கும் தடுப்பு, மற்றது ஓரமாய் இல்லாமல் நடுவில் மின்னிமின்னி எரியும் சிவப்பு விளக்கு. ரயில் வரும் முன் சிவப்பு விளக்கு மின்ன ஆரம்பித்து, பிறகு தடுப்பு கீழே இறங்கும். ஒரு நிமிடம் முன் தான் இது நடக்கும். பிறகு ரயில் போனதும், தானாகத் திறக்கும். ஓரளவுக்கு விதிகளை எல்லாரும் சிரத்தையாக கடைப்பிடிப்பதால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.

நேற்று இந்த லெவல் கிராசிங்கில் கட்டாயம் சிவப்பு விளக்கு மினுக்கியிருக்கலாம், ஆனால் தடுப்பு கீழே வரவில்லை என்று பலர் சாட்சியம் அளித்துள்ளனர். விளக்கைப் பார்த்து னிற்பது என்ற 'மென்' தடுப்பு சில சமயம் வேலை செய்யாமல் போக நிறையக் காரணம் இருக்கும். கண்பார்வைக் கோளாறில் இருந்து, மன உளைச்சல், கவனமின்மை வரை நிறையச் சொல்லலாம். அதற்காகத்தான் 'வன்'தடுப்பும் தேவைப்படுகிறது. இந்த வன் தடுப்பு பழுதாகி இருப்பது, ரயில் நிறுவனத்துக்குத் தெரியும் என்றும், ரயில் ஒட்டுனர்கள் இந்த சந்திப்பில் ரயிலை நிறுத்தி எடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றும் இன்றைய செய்தி சொல்கிறது. அப்படியும் ஏன் நிறுத்தவில்லை என்று விசாரணை செய்வார்கள். ஆனால் பாவம் திவ்யதம்பதிகள் போய்விட்டது போய்விட்டதுதான். இனி அடுத்த முறை இந்த தானியங்கியை நம்பி இங்கே கடப்பதற்குப் பயமாக இருக்கிறது.

ரயில்வே கேட்டை கடப்பதில் ஒரு சமயம் உலகுவும் நானும் பி.ஹெச்.டி யே பண்ணியிருந்தோம். அப்போது கோவையில் எவெரெஸ்ட் எஞ்சினீரிங் வாசலில் கேட், அது அரை மணிக்கொருமுறை மூடப்படும் கேட். அதில் நீண்ட வரிசை வாகனங்களுக்கிடையில் சைக்கிளில் நெருக்கி அடித்துக் கடப்பதில் இருக்கும் கிக், ஃபார்முலா ஒன் ரேசில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி (தன்னை வைத்து உலகை அளந்தால் அதற்குப் பெயர் கிணத்துத் தவளையாமே, அதனாலென்ன, அப்படியே இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது). அப்படி ஒரு நாள் பஸ்ஸின் பின்புறம் இஞ்ச் கணக்கில் தொடர்ந்துவர, பஸ் பிரேக் போடும்போது அதன் கூண்டுக்கடியில் சைக்கிளின் முன்சக்கரம் நுழைய, பஸ் அப்படியே அந்தச் சக்கரத்தின் மேல் உட்கார, சக்கரம் சதுரமாகிப் போனதெல்லாம், கிளைக்கதை.

அதெல்லாம் சரி, இங்கே ரோச்சஸ்டர் கூட்ஸ் ரயிலில் நசுங்கி சாவிலும் இணைபிரியா அந்த ஜோடியின் வயதென்ன தெரியுமா, 75&75! போன வருஷம் கலிபோர்னியாவில் ஒரு கிழவர் கடைத்தெருவில் காரில் உழுததில் எத்தனையோ பேர் மாண்டார்கள். அனேகமாக கண்பார்வை, உடனடியாக இயங்கமுடியாமை போன்ற முதுமை சம்பந்தமான காரணங்கள் இங்கே முக்கியமாகப் படுகின்றன.

ஒன்று தெரிகிறது, அமெரிக்காவானாலும், ரயில்வே கேட் ரயில்வே கேட் தான். நாம் தான் கவனமாய் இருக்கணும்.

திங்கள், பிப்ரவரி 02, 2004

ஜனவரியில் ரெகார்ட் பனிப்பொழிவு

எங்க ஊர் ரோச்சஸ்டரில் இந்த ஜனவரியில் 61 அங்குலம் (5 அடி) பனிப்பொழிவு ஆனது. இது இந்த 120 வருடமாக பதிவானதிலேயே மிக அதிகம். நாங்கள் இங்கு வந்த முதல் வருடம் மிக மிகக் குறைவான பனிப்பொழிவு. சென்ற குளிர்காலம் முழுமைக்கும் பார்த்தால் பனிப்பொழிவு மிக அதிகம் என்றாலும் ஒரே மாதத்தில் இவ்வளவு இல்லை. இதுவும் ஒரு புது அனுபவம்தான்.

இந்த ஒரு மாதமாக தேவையில்லாமல் எங்கும் வெளியே போவதில்லை. மனைவியை அதிகம் கார் ஓட்டவிடுவதில்லை. எனக்குத் தெரிந்த இருவர் 180டிகிரி எபவுட் டர்ன் அடித்திருக்கிறார்கள், நல்ல வேளையாக அந்த நேரம் வேறு வண்டிகள் சாலையில் வராததால் பிரச்னை இல்லாமல் தப்பித்தார்கள். வேறு ஒருவர் சாலையின் ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதி $1000 செலவு செய்தார். குழந்தைகளும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சில சமயம் எதற்கு இந்த சிறை வாழ்க்கை என்று வெறுப்பாய் இருக்கிறது. அமெரிக்காவிலேயே டெக்சாஸ் போன்ற இடங்களில் வாய்ப்புக் கிடைத்திருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று ஆதங்கமாயும் இருக்கும். ம்..வாழ்க்கையில் எதுவுமே சமரசம் தான், ஒன்றைப் பெற ஒன்றை இழந்தாகவேண்டும்.


பனிக்காலக் காட்சிகளில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன். (பெரிதாய்ப் பார்க்க சொடுக்கவும்)


Icicles from roof
ஐசிக்கிள்ஸ் (Icicles) என்பது வெள்ளைப் பனி உருகி வடிய ஆரம்பித்து ஆனால் கீழே முழுதும் விழுவதற்குள் மீண்டும் உறைந்து குச்சிகுச்சியாய் ஆலம்விழுதுகள் போல் தொங்கும் பனிக்கட்டி ஈட்டிகள். இம்முறை கூரையிலிருந்து தொங்கும் சில ஐசிக்கிள்ஸ் பதுப் பதினைந்து அடி நீளம் வரை வளர்ந்து, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கே அப்படிப்பட்ட ஐசிக்கிள்ஸ் சில.


Icicles from roof
Icicles from roof
சில சமயம் காற்று அடிக்காமல், வெயில் வெளியே தெரியும்போது கொஞ்ச நேரம் குளிர்கால உடுப்புகள் இல்லாமலேயே வெளியில் நிற்கமுடியும். அப்படிப்பட்ட நேரத்தில் எடுத்த படங்கள்.


Icicles from roof

Icicles from roof
பனிப்பொழிவு இல்லாத நேரத்தில் காரின் முன்னிருக்கையில் இருந்து ஒரு நெடுஞ்சாலைத் தோற்றம். வலப்புறம் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் லாட்டில் சில கார்கள். (மேலே கிடக்கும் பனியைச் சுத்தம் செய்தபின் வெளியே போய் வந்த கார்கள் இந்த லட்சணம்!)

வெள்ளி, ஜனவரி 30, 2004

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3

நம்மில் நிறையப்பேருக்குத் தெரிந்த ஒரு நிர்வாகவியல் உத்தி 'ஸ்வாட் அனாலிசிஸ்' (SWOT analysis)என்பது. அதென்ன ஸ்வாட்? SWOT - Strength, Weakness, Opportunities and Threat. பலம், பலவீனம், வாய்ப்பு, மிரட்டல் என்று சொல்லலாம். ஒரு காரியத்தில் இறங்கி அதில் வெற்றி பெறுவதற்கு ஆராய வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்கள் என்று இவற்றைச் சொல்கிறார்கள் நவீன நிர்வாகவியலாளர்கள்.

இதை நான் இங்கு ஆழமாக விளக்க வரவில்லை. ஆனால் இதில் முக்கால் வாசிக்கு மேல் பொருந்தக்கூடிய ஒரு குறள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)

(பொருட்பால், அரசியல், வலியறிதல்)


இந்தக் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. எந்தப் பரிமேலழகரின் உரையும் தேவைப்படாமல் புரிகிற குறள்களில் இதுவும் ஒன்று. இதில் 'ஸ்வாட்'டில் உள்ள ஒவ்வொன்றும் இருப்பதைப் பார்க்கலாம்.

S-strength: தன்வலி - தன்னுடைய வலிமை.
W-weakness: வினைவலி - வினையின் வலிமை என்பது செய்யக்கூடிய செயலின் கடினத்தைக் குறிக்கிறது. செயல் கடினம் என்றால் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது சரிதானே. வலிமை(பலம்) என்பதும் பலவீனம் என்பதும் இடத்தைப் பொருத்தவை. ஒன்றுகொன்று தொடர்புடையவை. எனவே இரண்டு விதமாகவும் சொல்லப்படுக்கூடிய கருத்து ஒன்றே.
O-opportunity: துணைவலி - நமக்குத் துணையாக வருபவையைப் பற்றி அறிதல். துணையாகக் கிடைத்தவை பொருளாக இருக்கலாம், அறிவாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், எல்லாமே நமக்குக் கிடைத்த வாய்ப்புத்தான். வாய்ப்பு என்ற நேரடி மொழிபெயர்ப்பு சொல்ல வருவது இதுதானே.
T-threat: மாற்றான்வலி - மாற்றானின், எதிரியின், போட்டியாளரின் வலிமை நமக்கு மிரட்டல் தானே.

இப்படி திருக்குறளே இந்தக் கருத்துகளை சொல்லுகிறதென்றால் அதுவே போதுமா என்றால், இல்லை. எப்படி ஒருவர் SWOT என்ற சுருக்கப்பெயருடன், அதற்கு விரிவான நான்கு பெயர்களை மட்டும் தெரிந்து கொண்டால் மட்டும் வெற்றிகரமாக இவற்றை நடைமுறைப்படுத்த முடியாதோ, அப்படியே, இந்தக் குறளைமட்டும் படித்தும் ஒருவர் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் எப்படி 'ஸ்வாட் அனாலிசிஸ்' என்ற பெயர் சொன்னதும் நமக்கு கற்றுகொண்டவற்றை எளிதில் ஞாபகப்படுத்த முடிகிறதோ, அதுபோல சரியாக விளக்கமளித்து இந்த மாதிரிக்குறளை முன்வைத்து சொல்லித்தந்தால், எளிதில் நினைவில் நிறுத்தவும், தேவைப்படும்போது சுட்டவும் இம்மாதிரிக் குறள் கட்டாயம் கைகொடுக்கும்.

திருக்குறள் ஒரு கலைக்களஞ்சியமா?

இன்று வெங்கட்டின் வலைக்குறிப்புகளில் கிடைத்த ஒரு தொடுப்பு சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' பகுதிக்கு இட்டுப்போனது. தமிழ்லினக்ஸ் பற்றி சுஜாதா மீது வெங்கட் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி என்னால் கருத்து எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனால் சுஜாதாவின் மீது என் தனிப்பட்ட அபிப்ராயம் அவரின் நிஜம் நீதிக்கதைகள் படித்தபின் கொஞ்சம் குறைந்துபோனது உண்மை (என் அபிப்ராயம் அவரை என்ன செய்யப்போகிறது?) ஆனால் இன்று அவர் க.பெ. பகுதியில் திருக்குறளைப்பற்றி பலரும் சிலாகித்துச் சொல்லுவதை (மீண்டும்) கிண்டல் செய்திருந்தார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. எந்த ஒரு நூலும் உலகத்தில் உள்ள எல்லா அறிவுகளையும் தன்னுள் கொண்டிருக்கமுடியும் என்று நினைக்கும் ஒருவர் ஒரு கிணற்றுத்தவளைக்கு ஒப்பாவார். அன்று என் கிருஷ்ணபக்த நண்பர், 'கீதையில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை' என்று சொன்னபோதும் இதையேதான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் நாம் நம்மையே ஒரு எல்லைக்குள் பூட்டிக்கொள்கிறோம்; பின் 'நம் கருத்தே சரி'யென்று வாதிடவும் துணிகிறோம்! கைனகாலஜியிலிருந்து, ஜெனடிக்ஸ், திரைப்படத் தயாரிப்பு என்று எல்லா நுட்பவியலும் திருக்குறளில் தேடுவது மடமை.

மற்ற நுட்பவியல்கள் வளர்ந்துகொண்டே இருப்பவை. சொல்லப்போனால் ஒவ்வொரு இயல்களில் புதுக்கருத்துகள் மட்டுமன்றி, அவ்வப்போது புதுப்புது 'இயல்'களே தோன்றுவதையும் பார்க்கிறோம். பொறியியல் என்பது இன்று கிளை கிளையாய்ப் பிரிந்து எத்தனை வகை இருக்கிறதென்று அறிவோம். இந்தப் பொறியியலே ஒரு கலையாகக் கருதப்பட்டது ஒரு காலம். இன்னும் மாணிக்கவாசகம் பிள்ளையின் பொறியியல் பட்டப்படிப்புகான கணிதப் புத்தகத்தில் பார்த்தால் பி.ஏ.(எஞ்சினீரிங்) என்று ஒரு பட்டப்படிப்பு இருந்திருப்பது தெரிய வரும். பிறகு இது ஒரு கலை அல்ல என்று உணர்ந்து, பி.எஸ்.சி.(எஞ்சினீரிங்) வந்திருக்கிறது. பிறகு இது விஞ்ஞானமும் அல்ல என்று உணர்ந்து பி.இ. என்று வந்தது... இப்படியே விரிந்து கொண்டிருப்பது இந்த அறிவுசார் கல்வி. ஓரளவுக்கு 'எல்லா'த்துறைகளிலும் வீச்சுக் கொண்ட கலைக்களஞ்சியங்களே வருடந்தோறும் புதுப்பதிப்பு வெளியிடும்போது, 2000 வருடத்திற்கு முந்தைய ஒரு சிறு நூலில் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்வாரென்றால் என்ன வென்பது. அதைப்பற்றி விமர்சிப்பதே கூட வீண்.

ஆனால் நிர்வாகம் என்பது அப்படியல்ல. ஒரு சமூகம், தலைவன், குடிமக்கள் என்ற அமைப்புகள் வந்த நாளிலேயே நிர்வகிப்பது பற்றிய அறிவும் சிந்தனைகளும் வந்துவிட்டன. எனவேதான் திருக்குறளில் வரும் சில நிர்வாகக் கருத்துகள் என்றும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன. இந்த வகையில் ஏற்கனவே எனக்குப் பிடித்த இரு குறள்கள் நிர்வாகவியல் கருத்துகளை விளக்கும் முறை பற்றி எழுதியிருந்தேன். அதற்கான சுட்டி:

ஒன்று
இரண்டு

அவ்வகையில் மூன்றாவதாக இதோ இன்னொன்று.

வியாழன், ஜனவரி 29, 2004

ஒன்பது ரூபாய் நோட்டு

இன்றைய தினமணியில் ஒரு செய்தி. 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற ஒரு படத்தின் தொடக்க விழா பற்றியது. இதைப் படித்ததும் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது, சும்மா டமாஸ். கோயமுத்தூர்காரனா இருந்துட்டு இந்தக் கதை சொல்லவும் பயமா இருக்குது. முதலில் ஒரு டிஸ்கிளைமர்: தயவு செய்து இதுக்கும் எங்க ஊருக்கும் முடிச்சுப் போடாதீங்க;-)

ஒருத்தன் சரியான கேப்மாரி. எல்லாவிதமான ஃப்ராடு வேலைகளிலும் கில்லாடி. எத்தனை நாளைக்கி திருட்டு, பிக்பாக்கட்டுன்னு உடம்பை வளைச்சு கஷ்டப்படறது. நேத்து முளைச்ச பசங்கல்லாம் சைபர் திருட்டு, அது இதுன்னு நோகாம நோம்பிகும்பிடறானுங்க. நானும் இனி கொஞ்சம் சொகுசான தொழில் பண்ணப்போறேன்னுட்டு, கள்ள நோட்டு அடிக்கலாம்னு திட்டம் போட்டான். ஒரு ஆர்டிஸ்டைக் கூட்டுச்சேர்த்து, ப்ளாக்கெல்லாம், (அட நம்ம blog இல்லீங்கோ) பண்ணி மெஷினை எங்கியோ புடிச்சு நோட்டும் அடிச்சுட்டான். முதல் நோட்டு ரெடியானதும், சாமி கிட்டே வெச்சு பூசையெல்லாம் பண்ணி (அவன் உஷா மாதிரி இல்லே;-) போணி பண்ணறதுக்கு எடுத்துட்டுப் போனான். அப்பத்தான் பாத்தான், அந்த டோரிக்கண்ணு ஆர்டிஸ்ட்டு 10 ரூபாய்னு போடற எடத்துல, 15 ரூபாய்னு போட்டு வச்சிருக்கிறதை!

சரி, தொலைஞ்சு போகட்டும். இவ்வளவு சிரமப்பட்டு அடிச்ச நோட்டை தூக்கி எறியவும் மனசு வல்லே. எங்காவது இதுக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டாமலா போயிறுவான், பாக்கலாம்னுட்டு நோட்டம் விட்டான். அப்பத்தான் பக்கத்துல ரயில்வே கேட்டுக்கிட்ட நொண்டி விளக்கு ஒண்ண வெச்சுக்கிட்டு ஒரு பெருசு பொட்டிக்கடை வச்சிருக்கிறது ஞாபகம் வந்தது. பகல்லியே அந்தப் பெருசுக்கு பத்துக்கும் இருபதுக்கும் வித்தியாசம் தெரியாது, இந்த இருட்டில என்ன தெரியப்போகுது. அந்தாளுதான் நமக்கு சரியான கேஸ்ன்னு அங்க போனான்.

'அய்யா, சவுக்கியங்களா?'ன்னு ரொம்ப பாசமா விசாரிச்சுட்டே, 'ஏனுங்க, இதுக்கு சில்லரை கிடைக்குங்களா'ன்னு நைசா புது நோட்டை நீட்டினான். அந்தப் பெருசும் வாங்கி என்னமோ பெரிசாக் கண்டுபுடிக்கிறமாதிரி உத்து உத்துப் பாத்துட்டு, காசுப் பெட்டிக்குள்ளே பொட்டுட்டு, சில்லரையா ரெண்டு நொட்டுக் குடுத்தது. அதை வாங்கினதும், 'வுடுறா சவாரி'ன்னு நம்மாளு அங்கிருந்து நைசா நழுவிட்டான்.

கடையிலேர்ந்து கண்மறைவா வந்து நின்னு கையிலிருந்த ரூபாயைப் பாத்தா, எட்டு ரூபாய் நோட்டு ஒண்ணும், ஏழு ருபாய் நோட்டு ஒண்ணும் இருந்துச்சாம்.

இந்த படத்திறப்பு விழாவில் ஜெயகாந்தன், தங்கர் பச்சான் போன்ற பெரிய தலைகள் எல்லாம் தெரியுது. அதனால் இது நல்ல நோட்டா வரும்னு நம்புவோம்.

செவ்வாய், ஜனவரி 27, 2004

பனிக்காட்டில் ஒரு விளையாட்டு

என் 1991 டயோட்டா (தேசிமுத்திரை;-) கேம்ரி பொதுவாக ஒரு பிரச்னையும் தராது. கொள்ளு மட்டும் கொடுத்தால் லொள்ளு எதுவும் பண்ணாமல் அதுபாட்டுக்கு முச்சிரைக்க ஓடிக்கொண்டே இருக்கும் அரபுக்குதிரை.

போனவாரம் ஒரு நாள் இரவில் காரின் உட்புறக் கூரை விளக்கை அணைக்காமல் விட்டுவிட அடுத்த நாள் ஸ்டார்ட் ஆகவில்லை. பேட்டரியில் வழக்கமான கொள்திறன் பெருமளவு இந்தக் குளிரில் குறைந்துவிடுகிறது. ஆனால் அதே குளிர் காரணமாக எஞ்சினோ ஸ்டார்ட் ஆவதற்கு அதிக ஆற்றலைக் கேட்கிறது. எனவே பேட்டரியை சிறிது விரயப்படுத்திவிட்டாலும் போச்சு, அடுத்தநாள் ஜம்ப்ஸ்டார்ட் தான். அதற்கென்றே AAA போன்ற அவசர உதவி சேவைகள் இருக்கின்றன. பழைய'காரர்'கள் ;-) இதில் கட்டாயம் உறுப்பினராய் இருக்கிறோம். விளக்கை அணைக்காமல் விட்டதற்காக அம்மணியைத் திட்டிவிட்டு (இது மாதிரி சான்ஸெல்லாம் சுலபத்தில் கிடைக்காது-)) தொலைபேசியில் உதவியை அழைக்க, அடுத்த 15 நிமிடத்தில் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார், இந்தக் குளிரில் கையுறைகூடப் போடாத புண்ணியவான்.

அடுத்த நாள் டார்கெட் கடைக்குப் போகும்போது, கொட்டும் பனியில் அவசர அவசரமாய் இறங்கி ஒடி, மணிக்கணக்கில் இதமாக சுற்றிவிட்டு வந்துபார்த்தால், முகப்பு விளக்குப் போட்டது போட்டபடியே இருந்து பேட்டரியை உறிஞ்சி சாப்பிட்டிருந்தது. சூடாக பெண்டாட்டியிடம் ஏத்து வாங்கிக்கொண்டு (பழிக்குப் பழி வாங்குவதில் ரிவால்வார் ரீட்டா தோற்றுவிடுவாள்:-)), மறுபடியும் தொலைபேசியில் அழைத்து ('நேத்துத்தான் ஜம்ப்ஸ்டார்ட் கேட்டிருக்கீங்க...'-மாதரசி. 'ஹி.ஹி. ஆமாம்..இதை இப்படியே விடமுடியாது. நாளைக்கே பேட்டரியை செக் பண்னுகிறேனா இல்லையா பார்..'-அடியேன்) வேண்ட, இன்னொரு புண்ணியவான் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தார்.

இந்த வாரம் மறுபடியும் பொழுது போகவேண்டுமே. மறுபடியும் அணைக்காமல் விட, மறுபடியும்..அட கேவலம்ப்பா, எத்தனை தடவை பிரதாபங்களை திரும்பச்சொல்வது? ஆனால் இன்னொரு முறை AAA வை அழைக்க நெஞ்சில் உரமில்லை. அன்றே சொன்னார் ஒரு நல்லவர் 'ஜம்ப்ஸ்டார்ட் கேபிள் வாங்கி வண்டியிலேயே வெச்சிக்குங்க' என்று. 'நீங்க வச்சிருக்கீங்களா, என்னைமட்டும் சொல்லுறீங்க'ன்னு அவர்கிட்டே வீர வசனம் பேசினேன். அவர் கார் புதுசு. அத்தோடு அது லைட்டை அணைக்காமல் வந்தா கூப்பிட்டுச் சொல்லும், கத்தும். நம்மளுது சாந்த சொருபி, தேமேன்னு நின்னு கழுத்தை அறுக்கும்.

இந்த முறை பக்கத்தில் இருக்கும் தேசி நண்பரை உதவிக்கு அழைத்து அவரிடம் இருந்த ஜம்ப்பர் கேபிள் மூலம் ('இன்னிக்கே நானும் ஒண்ணு வாங்கப்போறேன், தாய் மேல் ஆணை..') ஸ்டார்ட் பண்ணினோம். அதிலும், கார் மூக்கு உள்ளேபார்த்து நின்றதால், 0F குளிர்நிலையில், -20F உணர்நிலையில், அதை வெளியே தள்ளி, ஸ்டார்ட் பண்ணுவதற்குள் மூக்கில் தண்ணிவந்து கைகள் மரத்துப் போச்சு. ('தேங்க்ஸ், என்னை மாதிரி ஆளுகளுக்காகவே கேபிள் வாங்கி வெச்சு உதவறதுக்கு..' 'மிஸ்டர், உங்களை மாதிரி ஆளுகளுக்கா, எனக்கு வாராவாரம் கேஸ் [பெட்ரோல்] போடலைன்னாகூட சமாளிச்சுடுவேன், ஆனா அடிக்கடி ஜம்ப்ஸ்டார்ட்டலைன்னா ஒண்ணுமே ஓடாது, தெரியுமா'-இது அந்தத் தெய்வம்) சொன்னமாதிரியே, பிறகு வால்மார்ட்டில் ஜம்ப்பர் கேபிள் வாங்கியாச்சு. ஆனால், எனக்குத் தெரியும், இனி ஒரு நாள் கூட இது மாதிரி நடக்காது. அது பாட்டுக்கு முதுகுப்பெட்டியில் தூங்கும்.

கேபிள் வாங்கினதுக்காகவாவது இன்னொரு நாள் லைட்டை அணைக்க மறக்கணும் என்று நினைக்கிறேன். சனியன், அதுக்கப்புறம் ஒரு ஏழெட்டு வாய்ப்பு வந்துவிட்டது, நானும் இதை மறக்காமல் இருக்கிறேன், ஆனால் லைட் மட்டும் எப்படியோ அணைந்திருக்கிறது. (யாரோ குரங்கு, மருந்து என்ற வார்த்தைகளைபோட்டு ஒரு கதை வைத்திருக்கிறார்களாமே, இதுக்குத்தோதாக..) எப்படியும் ஒரு வாரத்துக்குள் இன்னொரு வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும்? கிடைக்கும், கிடைக்கும்! அதிலும் 'நாளை இரவு எப்படியும் ஒரு அடி பனி இருக்கும்'னு டிவிலெ சொல்றான், கட்டாயம் சான்ஸ் இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை!

சனி, ஜனவரி 24, 2004

தீவிபத்துகளின் கொடுமை

உயிர் போவதிலேயே மிகுந்த வதைபட்டு துடித்து இறப்பது தீவிபத்தாகத் தான் இருக்கமுடியும். அதிலும் ஒரே இடத்தில் பல உயிர்கள் துடித்து அடங்குவதை நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது. இன்று காலை (இந்திய நேரம்) ஸ்ரீரங்கத்தில் நடந்தது மிகப் பெரிய சோகம். மணமகன் உள்பட நெருங்கிய குடும்பங்கள் பலரை இழந்து தவிக்கும் நிலைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். விரைவாக வெளியேற சரியான வழியை அமைக்காத மண்டப நிர்வாகத்தைச் சொல்லலாம். அல்லது இடம் கொள்ளும் அளவைக் கணிக்காமல் அடைந்து கொண்ட மணவீட்டாரைச் சொல்லலாம். அவசரக் கோலத்தில் மின்சாரக் கம்பிகளை அங்கும் இங்கும் இழுக்கும் வீடியோ எடுப்பவர்களைச் சொல்லலாம். ஆனால் இழந்தது இழந்ததுதான். மீட்டு எடுக்க முடியாத இழப்பு.

சில சமயம் இந்தியாவில் உயிரின் விலை ரொமப மலிவு, சரியான பாதுகாப்பில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டிவிடுகிறோம். நம் மக்கள்தொகை, அடர்த்தி, பொருளாதார நிலை என்று எத்தனையோ இடர்ப்பாடுகள். பல ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி என்று நினைக்கிறேன், அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் தீப்பிடித்து பலத்த உயிரிழப்பு. அப்போது அரசு ஒரேயடியாக டூரிங் டாக்கீஸ்களை தடைசெய்தது. கொஞ்ச நாள் முன் ஏர்வாடியில் என்று நினைக்கிறேன், மனநல விடுதி (?) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலும் பெரிய சேதம். அதிலும் ஏதோ தடாலடியாக உத்தரவெல்லாம் வந்தது என்று நினைக்கிறேன். அதுபோல இந்த துயரத்துக்குப் பின்னும் ஏதாவது வரலாம். வரவேண்டும். ஆனால் சட்டம் என்பதாக இல்லாமல், மக்களும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இயன்ற வரை கடைப்பிடிக்கவேண்டும்.

இதுவே அமெரிக்காவானால் இப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி விட முடியாது. சென்ற வருடம் பிப்ரவரியில் இரு பெரிய விபத்துகள் நடந்தன. அதில் ஒன்றில் ஒரு இரவுவிடுதியில் 97 பேர் இறந்தார்கள். சட்டங்கள், படிப்பு, கடைப்பிடித்தல், வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தது, ஆனாலும் என்ன ஆனது? ஆகவே ஒரேயடியாக நம் நாட்டையும் குறைசொல்ல முடியாது. அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக அமையும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

வெள்ளி, ஜனவரி 23, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15


என் அம்மாவும் மகளும் 2000-ல்

திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது. வேலைக்கு வெளியே நிறைய நேரம் கிடைத்தது. எனக்கு அங்கு மிகவும் பிடித்த விஷயம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கிடைத்த வசதிகள். CAD எனப்படும் கணினி உதவியுடன் வடிவமைக்கும் வசதி அங்கு அப்போதுதான் வந்திருந்தது. கோவையில் மாலையில் படிப்புக்காக செலவிட்ட பழக்கம், பெரிய நட்போ, சுற்றமோ இருந்து நம் நேரத்தை எடுத்துக் கொள்ளாததால் செய்ய ஒன்றுமில்லாமல் வீட்டில் இருந்தது, எளிதில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி புதியன கற்றுக் கொள்ளும் ஆர்வம், எல்லாம் சேர்ந்து என்னை கணினியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தின.

அங்கு எனக்குக் கிடைத்த Godfather தான் திரு. ராஜகோபாலன் அவர்கள். ஆர்ஆர் என்று சொல்லப்படும் அவர் பழைய எம்.ஐ.டி. ஆட்டோ பட்டதாரி. அங்கு எம்.ஐ.டி. யில் படித்த படையே உண்டு. அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் உண்டு. மோட்டார் கம்பெனி என்பதால் அந்த சிறப்புப் படிப்பு ஒரு கூடுதல் தகுதியை வழங்கியது (என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டார்கள்!) ஆனால் அங்கு செய்யப்பட்ட இயந்திரங்கள் மோட்டார் வாகங்கள் அல்ல, மோட்டார் வாகன அமைப்புகளின்மேல் கட்டப்பட்ட இயந்திரங்கள். ஆகவே மோட்டார் வாகனவியலுக்கு இணையாக எந்திரவியலுக்கும் வேலை இருந்தது. இதையெல்லாம் புரிந்து கொண்டு என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ஆர்ஆர்.

அவர் சிரமப்பட்டு நல்ல வேலைகளை எனக்கு பெற்றுத்தந்தார். என்னை நன்றாக முன்னிறுத்தினார். இரண்டு வருடத்தில் நல்ல பேர் எடுத்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் என்னை மேற் கொண்டு படிக்கச்சொல்லித் தூண்டியவரும் அவரே. முதலில் எம்.ஐ.டி.யில் மாலை நேர எம்.ஈ. வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். அது ஒரு கொடுமையான அனுபவம். எனக்கு சென்னைக்கு வீட்டை மாற்றவும் தயக்கமாய் இருந்தது. நல்ல வேளையாக அடுத்த வருடம் ஐஐடியில் எம்.டெக். வகுப்புக்கு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. எல்லாரும் சொன்ன கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் எனக்குப் பிடித்த எஞ்சினீரிங் மெக்கானிக்ஸ் இரண்டுக்கும் விண்ணப்பித்தேன். இரண்டுமே கிடைத்தது. ஆனால் அதற்குள் யாரோ குளறுபடிசெய்து எங்கள் துறைத்தலைவரிடம் நமக்கு எதுக்கு கம்பியூட்டர் சயன்ஸ்? என்று (சரியாக) கேட்கவும் அவர் என்னை எஞ்சினீரிங் மெக்கானிக்ஸில் சேரச் சொல்லிவிட்டார். எனக்கு வருத்தமில்லை.

ஐஐடியில் ஒருவருடம் சொல்லப்போனால் எட்டுமாதம்தான், எளிதில் ஓடியது. பிறகு மீண்டும் இரு வருடங்கள் திருவள்ளூரில் கழித்துவிட்டு, கோவைக்குப் பயணமானதும், அங்கு ரூட்ஸ் நிறுவனத்தில் அடுத்த ஏழு வருடம் பணிபுரிந்ததும், பிறகு இந்த இரண்டரை வருடமாக அமெரிக்காவில் வசிப்பதும்...காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லவர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் காண, அவர்கள் கண்ணில் நாம் பட, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருக்க, தேவை எளிமையான மனம் மட்டுமே. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயல்வதன் மூலம் அன்று எனக்குக் கிடைத்த நல்லவர்களை நினைவுகூருகிறேன்.

வாழ்க வளமுடன்!
-முற்றும்

வியாழன், ஜனவரி 22, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14


சண்முகம், நான், அழகிரி - 2000-ல்

அழகிரி எனக்குக் கிடைத்த அருமையான தோழன். ஐடிஐ தொழிற்பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர். உலகு மூலம் அறிமுகமானாலும், என்னுடனேயே அதே வருடம் பி.ஈ. படித்ததால் நெருக்கமான நட்பு. நெல்லைச் சீமை சொந்த ஊர். பெரும்பாலும் கோவையிலேயே வேலை+வாழ்க்கை. அப்போது சாய்பாபா காலனியில் ஒரு மான்சனில் அறை. அழகேசன் சாலையில் ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. வெகுவிரைவில் ஒட்டிக் கொண்டோம். ஒருவர் இல்லாமல் இன்னொருவரைப் பார்க்க முடியாது என்னும் அளவுக்கு.

ஞாயிறுகளில் காலையில் அழகிரி அறையில் கூட்டுப்படிப்பு. மற்ற பாடங்களை விட, கணிதம் மட்டும் போட்டுப் பழகினால்தான் வரும். எஞ்சினீரிங் கல்வியில் பெரும்பாலும் பாடங்களில் கணக்கு அடிப்படையில் கேள்விகள் இருக்கும். எனவே அவற்றை செய்து பார்த்து எங்களைத் தீட்டிக்கொள்ள இந்தக் கூட்டுப் படிப்பு உதவியது. எங்கள் கூட்டுப்படிப்புக்கு கால அட்டவணை செய்து, தேவையான புத்தகங்கள், நோட்ஸ் எல்லாம் சேகரித்து, என்னையும் கறாராக வரவைத்து, 'படிக்க வைத்தது' அழகிரி. இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த நாட்கள் நிறைய. ஒரு மணி நேரம் படித்தால், அரை மணின் நேரம் பேக்கரி விசிட், அரசியல் அரட்டை, என்று பொழுது கழியும். அழகிரி அறையிலும் படிக்கும் போது ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும். அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட பார்வையும் இருவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்ததும் நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

இப்படி என்னைப் படிக்க வைத்ததில் அழகிரிக்கு ஒரு அஞ்சு மார்க் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்றால் எனக்கு ஒரு இருபது மார்க்காவது இந்தக் கூட்டுப்படிப்பினால் மட்டுமே கிடைத்தது. முதல் செமஸ்டரில் மற்ற மாணவர்களைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. என்னை போல இரண்டு வருடம் முன் டிப்ளமா படித்தவர்களில் இருந்து, பாலிடெக்னிக்கில் டிப்ளமாவுக்கு வாத்தியாராக இருக்கும் 45 வயதுக்காரர் வரை இருந்தார்கள். சிலர் வேலையை விட்டுவிட்டு, அடுத்த மூன்றுவருடம் படிப்புக்கே முன்னுரிமை என்றும் இருந்தார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய பயமெல்லாம் முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்ததும் தெளிந்தது. சித்தூருக்கப்புறம் முதல் இடத்தில் இருந்து நழுவிப்போயிருந்தவன் இப்போது மீண்டும் அங்கு வந்தது மட்டுமல்லாமல், முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் இடையில் பத்துப் பதினைந்து மார்க் வித்தியாசமும் இருந்தது. அந்த இரண்டாம் இடம் வேறு யாருமல்ல, அழகிரிதான்.

என்னைப் பார்க்க வேண்டுமானால், வீடு, அலுவலகம், கல்லூரி, அழகிரி அறை- இந்த நான்கு இடங்கள்தான் என்று ஆகிப்போனது. உலகுவைப்போலவே, அழகிரியும் எனக்காக பேக்கரிக்கும் மெஸ்ஸுக்கும் செலவு செய்தது எத்தனை முறை என்று கணக்கில் அடங்காது. இறுதி செமஸ்டர் வெகேஷனில் மைசூர், பெங்களூர் டூர் போகலாம் என்று திட்டம் போட்டதும் , அப்போது மறுபடியும் சில பிரச்னைகளால் எவரெஸ்ட் நிறுவனம் மூடப்படும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்க, நான் தயங்கியதும், எனக்காக அழகிரியே எல்லா செலவுகளையும் செய்ததும் மறக்க முடியாதவை.

ஒரு வழியாக பி.ஈ. படிப்பு முடிவுக்கு வந்தது. எவரெஸ்ட் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்கள் தாக்குப்பிடித்தால் எப்படியும் பி.ஈ.-ஐ வைத்து வேலை கிடைக்கும் என்று எப்படியோ இழுத்துப் பிடித்து ஓட்டினோம். கோவையில் வேறு வேலை கிடைப்பது அரிதாய் இருந்தது. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை பார்த்து அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தேன். எவரெஸ்ட்டின் போட்டிக் கம்பெனிகளுக்கும் போட்டேன். பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் 'அடுத்து 5 வருடங்களுக்கு வேறு வேலைக்குப் போக மாட்டேன் என்று' ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கக் கேட்டார்கள், மாட்டேன் என்று வந்துவிட்டேன். இன்னொரு கல்லூரியில் ஒப்பந்தம் இல்லாமல் கிடைத்தது. சரி என்று போய்விட்டு ஒரு மாதம் கழித்து விலகிக் கொண்டேன். அதற்குக் காரணம் பூனாவில் ஒரு வேலை கிடைத்ததுதான். ஆனால் அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்குள் ஹிந்து பேப்பர் பார்த்து அப்ளை பண்ணியிருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலைக்கு இன்டர்வியூ வந்தது. கிடைத்தும் விட்டது.

1987 ஜனவரியில் கோவையை விட்டு திருவள்ளூருக்குப் பயணமானேன்.

புதன், ஜனவரி 21, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13

என்னுள் இருந்த எஞ்சினீயரை முழுதாய் வெளியே கொண்டுவந்தது எவரெஸ்ட் எஞ்சினீரிங் வொர்க்ஸ் பணிதான். முதல் வருடத்திலேயே 'டெவெலப்மென்ட்' என்ற ஒரு சிறப்புப் பணிக்கு இழுத்துக்கொள்ளப்பட்டேன். இயந்திரங்கள் பற்றி இயற்கையிலேயே இருந்த ஆர்வத்தையும், எண்ணியதை, அடுத்தவர் விளக்குவதை, நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து எளிதில் செய்யும் அளவுக்கு தெளிவான வரைபடங்களாக வெளிப்படுத்தும் திறமையையும் அடையாளம் கண்டு என்னை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர், நிறுவனத்தின் முழு உரிமையாளர் திரு. சோமசுந்தரம் அவர்கள்.

ஒரு நாளாவது பணி போரடித்ததில்லை. அவர் பச்சை இங்க்கிலும் சிவப்பு இங்க்கிலும் தீட்டி வரைந்து கொடுக்கும் ஐடியாக்கள் கண்முன்னே உருவெடுத்து இயங்குவதைப் பார்க்கையில் ஒரு படைப்பாளனுக்குரிய பெருமையும் ஆனந்தமும் கிடைக்கப் பெற்றேன். ஒரு பதினெட்டு வயது டிப்ளமா ஹோல்டர்தானே என்று யாரும் அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அனுபவசாலிகளுடன் பணியாற்ற எனக்குத் தளம் அமைத்துக் கொடுத்தவர் திரு. சோமசுந்தரம். கொஞ்சம் கொஞ்சமாக என் யோசனைகளையும் ஏற்றுக்கொள்லும் அளவுக்கு என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.

ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள கருவிகள் என் வடிவமைப்பில் உருவாகும் அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்தார்கள். என் மீது முழு நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். பெரும்பாலும் என் பணி தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவோ, உடல் உழைப்பைக் குறைக்கவோ தேவைப்படும் சிறு கருவிகள், எஸ் பி எம் எனப்படும் விசேஷ தன்னுபயோக எந்திரங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, மூலப்பொருட்கள் சேகரித்து, செய்யும் இடத்தில் ஒருங்கிணைத்து, சோதனை செய்து, பணியில் ஈடுபடுத்துவது வரை தொடரும். இத்தனையும் நான் மட்டும் செய்யவில்லை. ஆனால் இத்தனை செய்பவரையும் ஒருங்கிணைக்கும் பணி, முக்கியச் சிக்கல்களைக் களையும் பணி, என்னுடையது.

இந்தப் பணி என் பி.ஈ. பகுதி நேரப்படிப்புக்கு ஒரு அருமையான ஆய்வுக்களமானது. உதாரணமாய் அன்று தான் மோட்டாருக்கு வி-பெல்ட் எப்படித் தேர்வு செய்வது என்று படித்திருப்பேன், அடுத்த நாள் அலுவலகத்தில் அதையே பணியில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இன்னொரு நாள் மோட்டாரின் குதிரைத்திறன் கண்டு தேர்வு செய்திருப்பேன். அடுத்த நாள் மாலை அதையே படிப்பேன். இப்படி பாடத்துக்கும், பணிக்கும் தொடர்புடன் படித்தால் படிப்பு எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை அனுபவித்தாலே புரியும். ஜெர்மனியில் இத்தகைய கல்விமுறை இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜெர்மன் எஞ்சினீயர்கள் உலகளவில் சிறந்த எஞ்சினீயர்களாக இருப்பத்ற்கு இதுவும் காரணம் என்று நினைக்கிறேன்.

தினமும் ஒரு முக்கோணத்தில் பயணம். வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்கு சைக்கிளில் புறப்பட்டால் அலுவலகத்தில் பணி முடித்து, மாலை 5 மணிக்கு வெளியே வந்து, வயிற்றுக்கு ஒரு ரூபாயில் எதாவது பதில் சொல்லிக்கொண்டு, அப்படியே சைக்கிளில் கல்லூரிக்குப் போவேன். இரவு 9 மணிக்குத் திரும்பவும் சைக்கிளில் வீடு வந்து 15 நிமிட ஆங்கிலச்செய்திகளோடு உணவை முடித்துப் படுக்கையில் விழவேண்டியதுதான். (அந்தச் சைக்கிளையும் ஒருவன் திருடிய கிளைக்கதை வேறு). 450 ரூபாயில் இருவர் மாதத்தை ஓட்டவேண்டியிருந்ததால், குறைந்த வாடகையில் ஒரு குடிசைவீட்டைப் பிடித்து அங்கேதான் வசித்தோம். அங்கும் மின்விளக்கில்லை. அப்புறம் எப்படிப் படிப்பது? வீட்டில் படித்தால் தானே? இது என்ன ஏழாம் வகுப்பா, வீட்டில் படிக்காமல் பாஸ் பண்னுவதற்கு, அப்படியே பாஸ் பண்ண முடிந்தாலும், வெறும் பாஸ் என்ன பயனைத் தரும்? நல்ல மதிப்பெண்ணுடன் பாஸ் பண்ண வேண்டாமா?

அழகிரி இருக்கையில் இந்தக் கவலை எல்லாம் எனக்கெதுக்கு?

திங்கள், ஜனவரி 19, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12


உலகுவுடன் நான் - 199? -ல்

கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கம்பெனிகளில் முயற்சிக்குப் பின் மூன்றாவதாக எவரெஸ்ட் நிறுவனத்திற்குப் போனேன். காந்திபுரத்தில் தலைமை அலுவலகம் போகச் சொன்னார்கள். பர்சானல் ஆபீஸர் ஒருவர், வயசானவர், அவரிடம் அப்ளிகேஷன் கொடுத்ததும், அவர் ஒரு சிறு இன்டர்வியூ ஏற்பாடு செய்து, ஆச்சரியமூட்டும்விதமாய் அதில் நல்ல முடிவும் கிடைத்தது. அந்தக் கம்பெனி அப்போது ஸ்டிரைக்கில் இருந்ததால், உடனே வேலைக்கு எடுக்காமல், சோதனை (trial basis) முறையில் என்று சொல்லி மூன்று மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த டிசைன் டிபார்ட்மென்டில் போட்டார்கள். 300 ரூபாய் ஸ்டைபன்ட், சம்பளம் என்று சொல்வதில்லை. எப்படியோ மூன்றுமாதம் செய்த வேலையில் திருப்தி ஏற்பட்டு, வழக்கமான ட்ரெய்னீயாக 450 ரூபாய் சம்பளத்தில் எடுத்துக் கொண்டார்கள். அதிலும் 50 ரூபாய் பிடித்தம் உண்டு. வருடம் 50 ரூபாய் உயர்வும் உண்டு.

அங்கே கிடைத்தவன் தான் என் நண்பன் உலகு. என்னுடனே டிப்ளமா முடித்திருந்தாலும், என்னைப் போல் இல்லாமல் நேரடியாக அங்கு வந்திருந்ததால், ஏற்கனவே ஒரு வருடம் அங்கு எனக்கு சீனியர். டிப்ளமாவுடன் நின்றுவிடாமல் மேற்கொண்டு நான் படிக்கப் பெரிதும் காரணம் உலகு. சாமானியமாக கோபம் வராது. எல்லாருடைய நியாயங்களையும் அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்/முயற்சிக்கும் எண்ணம் உண்டு. வெளிப்படையான பேச்சு. எல்லாவற்றையும்விட என்மீது தனிப்பட்ட அன்பு, நம்பிக்கை, எல்லாம் உண்டு.

கோவைக்கு அம்மாவைக் கூட்டிவர என்ணியதும் உலகுதான் கவுண்டம்பாளையத்தில் தன் வீட்டருகே ஒரு வீடு பார்த்துக்கொடுத்து உதவினான். அன்று வடக்குப் பார்த்து மேட்டுப்பாளையம் ரோடு பக்கம் போனது, இன்றுவரை தொடர்கிறது. 'நான் ராம்நாட் டிஸ்ட்ரிக்ட்' என்று பெருமையாகச் சொன்னாலும், கோவை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சினிமாவின் மேல் ஆர்வம் உண்டு. பைத்தியம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஓரளவுக்கு பேர் தெரிந்த ரிலீஸ் படங்களைப் பார்க்க ஆர்வம். வேலை முடிந்து என்னையும் கூப்பிடுவான். ஆனால் நான் தயங்குவேன். பையில் காசில்லாததால் தான் என்று தெரிந்து கொண்டு அவன் காசில் அழைத்துச்செல்வான். படம் பார்த்துவிட்டு சைக்கிளில் திரும்பும்போது, என் சைக்கிளில் லைட் இல்லை என்பதால், குறுக்கு வழியில், போலீஸ் கண்ணுக்குப் படாதவகையில் கூட்டிவருவான். எனக்காகத் தன் சைக்கிளில் லைட் இருந்தாலும் போட மாட்டான். கோவையின் விசேஷ அடையாளமான பேக்கரிக் கடைகளில் டீ சாப்பிட என்றாவது அழைக்கும்போது, நான் தயங்குவதைப் புரிந்துகொண்டு, அவனே செலவு செய்வான்.

இதெல்லாம்விடப் பெரிய உதவி, 1983 மேமாதம் ஒருநாள் அவன் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விவரித்த செய்தி:
'பார்ட் டைம் பி.ஈ. அட்மிஷனுக்கு இந்த வருடம் நாம் அப்ளை பண்ணமுடியும், தெரியுமா?'
'பார்ட் டைம் பி.ஈ.? அதைப்படித்து என்ன ஆகப் போகிறது? படிக்க எவ்வளவு செலவாகும்?...',

என் சந்தேகங்களை தீர்த்து, அந்த வருடம் அப்ளைபண்ணுவதற்கும் தூண்டுகோலாய் இருந்தான். துக்காராம் என்ற இன்னொரு நண்பனுடன் சேர்த்து நாங்கள் மூவரும் அப்ளை பண்ணினோம். என் அனுபவச் சான்றிதழ் கிடைக்க தாமதமாகவே, துக்காராம் உதவியால்தான் கடைசிநேரத்தில் கிடைத்தது. பிறகு இன்டர்வியூக்கு கூப்பிட்டார்கள். அதற்குப்பின் நடந்ததுதான் சோகம். அந்த வருடம் செலக்ஷனில் உலகுவை முன்னேறிய வகுப்பினர் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்கள். என் நல்ல நேரம் எனக்கு கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமானதாக இருந்துவிட, எனக்கு ஒபன் கோட்டா எனப்படும் அனைவருக்கும் பொதுவான பிரிவில் கிடைத்துவிட்டது. கடைசியில் உலகு 'வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று' என்ற நிலையில் நின்றதும், நான் மட்டும் என் 'பின்தங்கிய' பிரிவில் வந்திருந்தால் அவனும் அந்த வருடம் பி.ஈ. படித்திருப்பான் என்பதையும் என்ணும்போது, இந்த பின்தங்கிய அடையாளத்தால் இப்படியும் பிரச்னைவருமா என்று தோன்றியது.

ஆனால் இதற்கெல்லாம் பிறகும் உலகுக்கு என் மேல் இருந்த பிரியம் எவ்விதத்திலும் குறைவில்லை. அடுத்தவருடம் அதே கல்லூரியில் அதே வகுப்பில் சேர்ந்தான். இன்று வெளிநாட்டில் குடும்பத்துடன் இருக்கிறான். எப்படியும் கோவையில்தான் செட்டில் ஆகப்போகிறேன் என்கிறான். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்று என்றுதான் தெரியவில்லை. எல்லா NRIக்களையும் போல தாமரை இலைத்தண்ணீராகத் தான் இப்போது இருக்கும் இடத்தில் இருக்கிறான். மீண்டும் எல்லாரும் ஒரே இடத்தில் இருக்க முடிந்தால்...

ஞாயிறு, ஜனவரி 18, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11


1981 மே மாதம். எல்லாப் பரிட்சைகளும் முடிந்தது. ப்ராக்டிகல்ஸ், ப்ராஜக்ட் வொர்க்..எல்லாம் முடிந்தது. எல்லாருக்கும் ஆங்கிலத்தில் எப்படி அப்ளிகேஷன் எழுதலாம் என்று...இல்லை, இல்லை, ஒரு அப்ளிகேஷனின் டெம்ப்ளேட்டே கொடுத்தார்கள். அதில் அங்கங்கு பெயர், முகவரி, இத்யாதிகளைத் தூவினால் அப்ளிகேஷன் ரெடி. 'கண்ணுங்களா, இனிமே கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு, வேலை தேடிப் பிழைச்சுக்குங்க' என்று, தாய்க் கோழி வளர்ந்த குஞ்சுகளைக் கொத்தித் துரத்துமே, அதுபோல துரத்திவிட்டார்கள். எந்தக் கம்பெனிக்குப் போடறதுன்னுதான் தெரியலே. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. எனவே, பிரிவு பெரிதாய் வருத்தவில்லை.

ராமலிங்கம் என்று ஒரு வொர்க்ஷாப் வாத்தியார். எனக்கு சின்னதிலிருந்தே கைவேலை எல்லாம் நல்லா வரும்கிறதாலே ஓரளவுக்கு செய்வேன். அதைப்பாத்து அவருக்கு ஒரு பிரியம். அவர் கடைசி நாள் கேட்டார், 'ஏம்ப்பா, பக்கத்திலே தொழிற்பேட்டையிலே ஒரு வேலை இருக்கு, போறயா?'. தொழிற்பேட்டை எங்க வீட்டில் இருந்து பாலிடெக்னிக் தாண்டி இன்னும் ஒரு கி.மீ. கூடப் போகணும். வெளியூருக்கெல்லாம் போய் வேலைதேடுவதை விட இது நல்லதாச்சேன்னு சரின்னு சொன்னேன்.

அது ஒரு சிறிய கம்பெனி. குரோம்பேட்டை எம் ஐ டி யில் படித்த இருவர் சுயமாகத் தொடங்கிய ஒன்று. எம் ஐ டி ஐப்பற்றியெல்லாம் பிறகு தெரிந்து கொண்டது. அப்போது இவர்கள் நமக்கும் மேல் படித்தவர்கள் என்று மட்டும் தெரியும். போனேன். திரு. ஹரிஷங்கர் பேசினார், எடுத்துக்கொண்டார். திங்கக் கிழமையே வேலைக்குச் சேர்ந்தாச்சு. '200 ரூபாய் சம்பளம். ஆறு மாதம் பாத்துட்டு அப்புறம் உயர்த்துவோம்'. 'சரிங்க'. 'அப்புறம் சாயந்திரம் கரெக்டா அஞ்சு மணிக்குப் போகணும்னு பாக்கக் கூடாது, வேலை இருந்தா கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகணும்'. 'சரிங்க'. இந்த இரண்டாவது சமாசாரம் பிறகு பெரிய நெருடலாகிப் போனது. ஆறுமாதத்திற்குப்பின் 250 ருபாய் ஆனது. ஆனாலும் தினமும் எப்படியும் 2 மணி நேரமாவது கூடுதல் வேலை, அதற்கு ஓவர்டைம் எல்லாம் கிடையாது. லீவு எடுக்க முடியாது. 25 பேர் வேலை செய்யும் அந்த சிறு இடத்தில் முன்னேற்றத்துக்கு என்ன வழி என்று தெரியாது. எனவே எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு விட்டுப்போனது. ஆனாலும், அங்கு கிடைத்த, லைட் எஞ்சினீரிங் தொழிற்சாலையைப் பற்றிய ஒரு பரவலான அறிவு, பின்னால் பெரிதும் பயன்பட்டது. மேலும், லேத், மில்லிங் மெஷின் போன்ற நிறைய மெஷின்களில் கைப்பட வேலை பார்த்தது நம்பிக்கையளித்தது. சில உப கருவிகளை வடிவமைத்தது மனதுக்கு திருப்தியும் தெம்பையும் கொடுத்தது.

அம்மாவை இனி வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ரொம்ப வருடங்களுக்கப்புறம் இப்போதுதான் ஓய்வு கிடைத்தது.

அதற்குள் அண்ணனுக்குக் கல்யாணப் பேச்சு வந்தது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். வயசும் ஆகவில்லை. மதுரை காமராஜ் திறந்த வெளிக்கல்வியில் முதல் வருடம் பி.காம். கூட முடித்துவிட்டார். இன்னும் இரண்டு வருடம் பொறுத்திருந்தால் முடித்திருப்பார். ஆனால் யாரோ என்னவோ பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தைக் காரணம் காட்டி, இதுதான் சாக்கென்று நானும் அந்தக் கம்பெனியில் இருந்து கழன்று கொண்டேன். சொல்லப் போனால் மீண்டும் திரு. ஹரிஷங்கரைப் பார்த்து சொல்லிக்கொண்டு வரக் கூட தைர்யமும் விருப்பமும் இல்லை. நான் 'நின்னுட்டேன்', அவ்வளவுதான்.

அண்ணி உடுமலை அருகே ஒரு மில்லில் வேலை பார்த்தார்கள். அண்ணனும் அண்ணியும் வேலை செய்யும்போது நாம் வேலையில்லாமல் இருப்பது நல்லாயில்லை. என்ன செய்யலாம்? எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன், ஹீரோ சென்னைக்கு ரயிலேறி, ப்ரீப்கேசோடு சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆபீஸ் படியேறி வேலை தேடுவதை. நமக்கு சென்னைக்கெல்லாம் போக முடியாது, ப்ரீப்கேசும் இல்லை. அதற்காக விட்டுவிடமுடியுமா?

ஒரு பாக்ஸ்-ஃபைல் எனப்படும் பெட்டிவடிவ ஃபைலில் சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு, கோவைக்கு, பஸ் ஏறினேன். எங்கு போவது என்று தெரியாது. ஆனால் கோவைக்குப் போகும் வழியில் ஒரு சிறுதொழில் பேட்டை (மறுபடியும் சிறுதொழிலா :-( ) இருந்தது. அதுதவிர வேறு சில கம்பெனிகளையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒவ்வொன்றாய்ப் போய் முட்டிப்பார்ப்போம்.

ரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா?

நேரடியாக மூலப்பொருட்களைக் கொண்டு எந்த ரெடிமேட் மிக்ஸ்களும் இல்லாமல் செய்யும் ரவா தோசை இது. முக்கியமாக, வெளிநாட்டில் இருப்பவர்கள், மிக்ஸி கிரைண்டர் கைவசம் இல்லாதவர்கள், இதை சுலபமாய் செய்யலாம். முந்தின நாளே மாவு ஆட்டி வைக்காதபோதும், திடீர் தோசை வேண்டும் என்றாலும் இது கைகொடுக்கும்.

மேலும் படிக்க நம்ம புது வீட்டுக்கு வாங்க.

சனி, ஜனவரி 17, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10


பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பித்தாயிற்று. வீட்டில் இருந்தே போகமுடிந்தாலும், 'செமஸ்டருக்கு கட்டணம் முன்னூறு ரூபாய் தேவைப்படுமே, உங்களால் முடியுமா' என்றுகூட சிலர் கேட்டார்கள். ஆனால் அம்மாவும் அண்ணனும் உறுதியாக இருந்தார்கள். நேர்முகத்தேர்வில் ஒரு வேடிக்கை; 14 வயதாகிய நான், மிகவும் பொடியனாக இருப்பேன். அதுவரை 11ஆம் வகுப்பு தேறியவர்களையே பார்த்துப் பழகியவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வந்தது ஒரு சந்தேகம்.

நீளமான கான்பரன்ஸ் ரூமில் நடந்தது நேர்முகத்தேர்வு.
'ஏம்ப்பா, இங்கே லேத் மிஷினில் எல்லாம் வேலை செய்யணும், நீ என்ன இவ்வளவு பொடியனா இருக்கிறே, உன்னால் முடியுமா?'
'ஓ, செய்வேனுங்க'
'சரி, எங்கே இந்தச் சேரைத் தூக்கிக் காமி பாக்கலாம்', பக்கத்தில் இருந்த எஸ்-வடிவ பின்னல் நாற்காலியைக் காட்டினார் ஒருவர்.
காந்தியுடன் எடுத்த அந்தப் போட்டோ வைப் பார்த்தால் ஏன் அவர்கள் அப்படிக்கேட்டார்கள் என்பது புரியும். என் மகன் 5ஆம் வகுப்புப் படிக்கும்போது அதே மாதிரி இருக்கிறான்! ஆனது ஆகட்டும் என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு தூக்கினேன். சிரித்துக் கொண்டே ஓகே பண்ணினார்கள்.

வெளியில் வந்ததும் அம்மா 'எங்கே நீ தூக்குவியோ மாட்டியோன்னு நெனச்சேன்' என்றதும், இருவரும் சிரித்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

பாலிடெக்னிக் படிப்புக்கு என்று சில கூடுதல் விஷ்யங்கள் தேவைப்பட்டன. ஷூ தான் அணியவேண்டும் என்றார்கள். பாட்டாவில் உள்ளதிலேயே சிக்கனமாய் ஒன்று வாங்கியபிறகு, நல்லதாக செருப்பு ஒன்று வேணும் என்றதுக்கு என் அண்ணன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: 'உனக்குத்தான் ஷூவே வாங்கியாச்சு, இனி எதுக்கு செருப்பு?'

பாடங்கள் மனதுக்குப் பிடித்திருந்தன. ஆனாலும், இந்த கெமிஸ்ட்ரி மட்டும் தகராறு செய்தது. முக்கியக்காரணம், அது ஆங்கில வழியில். கணிதம் மொழிக்கு அப்பாற்பட்டது. இயற்பியலும், வரைபடவியலும் தமிழில் இருந்தது. கேமிஸ்ட்ரி புரிந்தாலும், எழுதும்போது வரவில்லை, மனப்பாடம் செய்யவேண்டியிருந்தது. அதில்தான் நான் வீக்..

அந்தக் காலங்களில் அண்ணனும் அம்மாவும் நிறைய ஓவர்டைம் வேலை செய்வார்கள். அண்ணனுக்கு ஓவர்டைம் செய்யும்போது பேட்டா என்று ஒரு சிறு தொகை தருவார்கள். அதன் நோக்கம் ஒருவேளைச் சாப்பாடுதான். சில நாட்களில் இரவு நேரங்கழித்து வரும்போது, தனக்குக் கிடைத்த பேட்டாவில் எனக்கும் சேர்த்து 'குஸ்கா' வாங்கிவருவார். ஒரு முறை நான் அதற்குள் தூங்கிப்போக, என்னை எழுப்ப முயற்சித்து, முடியாமல் போய், 'பாரு, கஷ்டப்பட்டு இவனுக்கு வாங்கீட்டு வந்திருக்கேன், எந்திரிக்கிறானா பாரு..' என்று சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினதாய் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விரும்பிய துறையான இயந்திரவியல் துறையும் இரண்டாம் ஆண்டில் அமைந்தது. இதற்கிடையில் அண்ணனையும் வேலையில் நிரந்தரம் செய்தார்கள். சின்னாம்பாளையத்தில் தில்லைமுத்து, ரகுநாதன், மணிபாரதி, கருப்புச்சாமி என்று சில நண்பர்கள் அமைந்தார்கள். கிரிக்கெட்டெல்லாம் சொல்லிகொடுத்தார்கள். பொள்ளாச்சி பூங்கா நூலகம் அடிக்கடி உலாவும் இடமானது. பல நாள் இரவு எட்டு மணிக்கு பூட்டும்வரை உட்கார்ந்திருப்பேன். பெரிய சிக்கல் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. டிப்ளமாவுக்கு அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று பெரிய திட்டமெல்லாம் இல்லை. என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லவும் யாரும் இல்லை. ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தேன். வேலைக்குப் போகவேண்டும்!

நிரலி நம் கையில்

பிரபலமான blogger.com, redfiffblogs.com, blogrive.com போன்ற சேவைகளில் ஓரளவு தமிழ் எழுத்துருக்களைக்கொண்டு தமிழில் வலைப்பதித்தாலும், சில இடங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு முறை செல்வராஜ் (அய்யா ஊருக்குப் போனீங்களே, அப்பப்ப எங்காவது தலைகாட்டி மறுமொழியலாம் அல்லவா?) கூட blogger.comக்கு எழுதியிருந்ததாக ஞாபகம், மாதத்தின் பெயரெல்லாம் தமிழில் வருவதில்லையே என்று. நியுக்ளியஸ் தான் முழுவதும் கைவைக்கக்கூடியதாச்சே இதில் இன்னமும் ஏன் மாதம் ஆங்கிலத்தில் இருக்கிறதென்று யோசித்ததில், ரொம்ப சுலபமாக தமிழ் தெரிய வைக்க வழி தெரிந்தது. 'locale' என்று ஒரு அமைவு இருக்கிறது, அதை மாற்றியவுடன் ஜனவரி தானாக வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் குடைந்து %A என்று வார்ப்புருவில் சேர்த்ததும், கிழமையும் தெரிகிறது. :) தமிழுக்கான சரியான குறியீடு தமிழ்லினக்ஸ் குழுவில் பழைய மடல் ஒன்றில் கிடைத்தது: ta_IN.UTF-8 என்பதுதான் அது. இன்னும் கடைசியாக வந்த மறுமொழிகள் முகப்புப் பக்கத்தில் தெரியச் செய்ய ஒரு சொருகு நிரல் இருக்கிறது, அதை நிறுவ வேண்டும். அப்புறம், இதுவரை அழகுபடுத்துவற்காக என்று ஒன்றும் செய்யவில்லை, அதில் கொஞ்சம் விளையாடிப்பார்க்க வேண்டும்.

எனக்கு நியூக்ளியஸ்ஸின் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. அனேகமாக பிப்ரவரியில் இருந்து அங்கே குடிபோய்விடுவேன் என்று நினைக்கிறேன்.

வெள்ளி, ஜனவரி 16, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9

பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு அம்மச்சியிடம் விடைபெற்று திரும்பவும் கோவைக்கு வந்துவிட்டேன். அம்மா 'இட்லிக்காரம்மா'வாகி இருந்தார்கள். கோடை விடுமுறையாதலால் நானும் இட்லிக்கடையில் அம்மாவுக்கு உதவியாக இருந்தேன். நேரம் எளிதில் போனது. இட்லிக்கடை அனுபவம் மற்ற வேலைகளைவிட வித்தியாசமானது. காலையில் 6 மணிக்கெல்லாம் சட்டினி, சாம்பார் செய்து ஆறரைவாக்கில் தயாராகிவிட வேண்டும்.

வாசலில் தரையில் அமர்ந்துதான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். இரண்டு அடுப்புகள், ஒன்று இட்லிக்கு, மற்றது ஆப்பத்துக்கு. ஆப்பம் கேட்கும்போது மட்டுமே சுடவேண்டும், அதிகம் சுட்டு வைக்கக்கூடாது. இரண்டுமே ஒரே விலைதான், பத்து பைசா! ஒருவர் 50 பைசா இருந்தால் ஒரு வேளையை சமாளித்துக் கொள்ளலாம். சாம்பாருக்கு பெரும்பாலும் தக்காளி+கத்தரிக்காய் கூட்டாக ஒரு குழம்பு மாதிரி செய்வோம், அதுதான் கட்டுபடியாகும். அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுபவரும் இருப்பர். அவர்களுக்கு மறுமுறை சட்டினி கொடுத்தால் கட்டுபடியாகாது, சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.

ஆப்பம் சுடுவது ஒரு கலை. பச்சரிசி+புழுங்கல் இரண்டும் கலந்த மாவில், குறைந்த அளவே உளுந்து இருக்கவேண்டும். கொஞ்சம் சமையல் சோடாவும் சேர்க்கவேண்டும், அப்போதுதான் நுரைநுரையாக வரும். ஒரு ஆப்பத்துக்கு சுமார் ஒரு துளி எண்ணைதான் செலவாகும். அது அந்த ஆப்பக்கல், மாவு, ஊற்றும் வாகு இதில் இருக்கிறது. காலை சுமார் 9 மணிக்கு முடியும். பிறகு பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு, தேவையான காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கிவைக்க வேண்டும். பிற்பகலில் கொஞ்சம் ஓய்வு. பிற்பகலில் அரிசி, உளுந்து கழுவி மெஷினில் கொடுத்து ஆட்டிவர வேண்டும். பிறகு மாலை 6 மணிமுதல் 9 மணிவரை. அவ்வளவுதான். இதில் ஒரு சிரமம், எளிதில் லீவு எடுக்க முடியாது. ஆட்டிவைத்த மாவு புளித்துப்போனால் வீணாகிவிடும். ஒருசில நாட்களில் கல்யாணம், இழவு எதற்காவது அம்மா போகும்போது நான் மட்டுமே கடைநடத்தியிருக்கிறேன். ஒரு முறை அதில் நான் பண்ணிய கூத்து...

காலையிலேயே அரிசி உளுந்து ஊறப்போட்டால்தான் மாவு அரைக்கத் தயாராக இருக்கும். அந்த நேரத்துக்கு அரைத்து வைத்தால்தான் சரியாகப் புளித்து அடுத்தநாள் சரியான பதத்தில் இருக்கும். நான் ஏதோ ஞாபகத்தில் உளுந்து ஊறப்போட மறந்துவிட்டேன்! ஆட்டுவதற்கு எடுக்கும் போதுதான் தெரிந்தது. அம்மா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார்கள், இரவில் தான் திரும்புவார். ஆனால் அதற்குள் மாவு ஆட்டி, உப்புப் போட்டுக் கலக்கி வைக்கவேண்டுமே. ஐசக் நியூட்டனின் அருளில் ஒரு யோசனை உருவானது. கெட்டியாய் இருப்பதால்தானே உளுந்து ஆட்டமுடியாமல் இருக்கிறது, லேசாக வேகவைத்துவிட்டால்? அடுப்பில் நீரைவிட்டு கொஞ்ச நேரம் வேகவைத்துப் பின், சூடு தணியும் விதமாக பச்சைத் தண்ணீரைவிட்டு சிலமுறை கழுவி, மெஷினுக்குக் கொண்டுபோய்விட்டேன். அங்கு ஆட்டும்போது வழக்கமாக வரும் மிருதுத்தன்மை வரவில்லை. அதற்குள் அம்மாவும் வந்துவிட, அம்மா கண்டுபிடித்துவிட்டார், நான் என்னவோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கிறேன் என்று. நானும் ஒத்துக் கொண்டேன். பிறகு புதிதாக ஊறவைத்து, பின்னிரவில் அரைத்து...

அரிச்சந்திரன் மகனைச் சொல்லி என்ன செய்ய?

நாங்கள் இருவரும் இப்படி கோவையில் இருக்க, அண்ணன் இன்னும் பொள்ளாச்சியில் தான் இருந்தார். கொஞ்சநாள் பெயின்டிங் செக்சனில் ஹெல்ப்பர் வேலையும் பார்த்தார். கடினமான வேலை, கையெல்லாம் பழுத்துவிடும். பிறகு, அப்பா வேலைபார்த்த இடத்திலேயே ஓரளவுக்குத் தொடர்ந்து வேலை கிடைத்தது. என் படிப்பு தொடரவேண்டும் என்பதில் இருவரும் குறியாக இருந்தார்கள். என்னை பாலிடெக்னிக்கில் சேர்ப்பது என்று அண்ணன் முடிவு செய்தார். அவருடன் வேலைபார்க்கும் தோழர்கள் சிலர் ஆலோசனையும் இதில் வேலைசெய்தது. அண்ணனின் மேலதிகாரிகள் அப்போது பெரிதும் டி.எம்.இ. படித்தவர்களே. எனவே அண்ணனுக்கு என்னையும் டிப்ளமா படிக்கவைக்க விருப்பம். இது நடக்கவேண்டுமென்றால் மீண்டும் நாங்கள் ஒன்றாகப் பொள்ளாச்சியில் வசிப்பது என்று முடிவானது. அம்மாவுக்கு வேஸ்ட் காட்டன் மில்லில் எப்படியும் வேலை கிடைக்கும். எனவே சமாளித்துக் கொள்ளலாம்.

பொள்ளாச்சியில் வீடு பார்த்து, குடிபுகுந்தோம். இம்முறை பாலிடெக்னிக்குக்கும் மில்லுக்கும் சரிபாதி தூரம் வரும் சின்னாம்பாளையம் எங்களை வரவேற்றது. இது உண்மையிலேயே மகிழ்வளிக்கும் வரவேற்பு. 'இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம்' என்பது உண்மையிலேயே நிகழ்ந்தது.

வியாழன், ஜனவரி 15, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8

ஒரு வருடகாலமாய் பழகிப்போன அரிசிச்சாப்பாடு புதுப்பாளையத்தில் அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோக அம்மச்சி அரிசி, அல்லது சாமை இரண்டு மட்டும் செய்துதரும். சாமை, நெல்லஞ்சோத்துக்கு (அரிசிக்கு) உண்ணும் குழம்பு, ரசம் எதனுடனும் ஒத்துக்கொள்ளும். ஆறினபின்னும் பெரிய வித்தியாசம் இருக்காது. ராகி, சோளம் போன்றவை அப்படியல்ல. தோசை பெரும்பாலும் ராகியில் இருக்கும். ராகி ஒரு அற்புதமான தானியம். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ராகியை அரைத்து மாவாக்கிவைத்துக்கொண்டால், களி செய்யலாம். ரக்கிரி (காட்டுக்கீரை) கடைந்து சுடச்சுட ராகிக் களியுடன் உண்டால் நன்றாய் இருக்கும். மேலும், புட்டுமாவு (ஈர மாவில் புட்டு செய்து, தாளித்தது) மிகவும் பிடித்த டிபன். யாராவது விருந்தினர் வந்துவிட்டால், அல்லது அடை மழைக்காலங்களில் குளிருக்கு இதமாக ராகி வடை நன்றாய் இருக்கும். நிறைய சின்ன வெங்காயம், மிளகாய் அரிந்து போட்டு கெட்டியாய் பரோட்டா போல தோசைக்கல் அல்லது வடைச்சட்டியில் சுடும் 'ரொட்டி'யும் அடுப்புக்கருகேயே உட்கார்ந்து சாப்பிட்டால் சொர்க்கம் தான். இப்போதும் நிறைய இடங்களில் ராகி பக்கோடா கிடைக்கிறது. அமெரிக்காவிலும் எங்கள் வீட்டில் என்றாவது கிடைக்கிறது.

பள்ளிக்கு வெளியே படித்துப் பழக்கமில்லாத்தால் மின் விளக்கு இல்லாதது பெரிய குறையாய்த் தெரியவில்லை. ஆனாலும் சித்தூரில் இருந்த அளவு படிப்பு சோபிக்கவில்லை. அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதாலோ, பஸ் பிரயாணத்தில் ஏற்படும் அலுப்பினாலோ, அந்த அளவுக்கு ஆசிரியர்-மாணவர் இருபாலரிடமும் அக்கறையின்மையோ ஏதோ ஒன்று. கண்ணன் என்று ஒரு சூட்டிகையான பையன் வகுப்பில் இருந்தான். பள்ளியிலிருந்து அரை கி.மீயில் வீடு, அங்கிருந்து நடந்து வரும் அந்த நேரத்திலும், புத்தகத்தை விரித்து, ஒருகையில் பிடித்துக்கொண்டு படிப்பதும், மனப்பாடம் செய்வதும், புத்தகத்தை முதுகுப்புறமாய் மறைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்ததைச் சொல்லிப் பார்த்துக்கொள்வதுமாய், அவன் படிப்பதைப் பார்க்கையில், 'இதுவல்லவோ படிப்பு' என்று தோன்றும். அதே மாதிரி மாநில அளவில் பள்ளியிறுதித்தேர்வில் அவன் 13ஆம் இடம் பெற்றான், டாக்டருக்குப் படித்தான் என்று நினைக்கிறேன்.

ஒன்பது-பத்தாம் வகுப்புகளில் எனக்குக் கிடைத்த அருமைத்தோழன் எம் ஜி ஆர். அவனும் மறக்க முடியாத ஒரு உதவியைச் செய்தான். அவனது இன்னொரு பெயர் காந்தி. பிறகு கருணைக்கோ, வள்ளல்தன்மைக்கோ கேட்பானேன். அவன் உண்மைப் பெயரைச் சொல்லவில்லையே, உண்மையில் அவன் பெயர் எம். ராமசாமி. அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்ததால் காந்தி என்று செல்லப்பெயர். அதை இடையில் போட்டு, 'நான் எம். காந்தி ராமசாமி, அதாவது எம். ஜி. ஆர்.' என்று சொல்லிக்கொள்வான். அவன் வீட்டில் எல்லாரும் போல நானும் காந்தி என்றுதான் அழைப்பேன். அவன் வீட்டில் அனைவரும் அருமையாகப் பழகுவார்கள். அப்பா ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போதே வீட்டில் போன் வைத்திருப்பார்கள். அங்கு போகும்போதெல்லாம் சாப்பிடாமல் விடமாட்டார்கள்.

நாங்கள் தான் முதன்முதலில் பத்தாம் வகுப்பில் பள்ளியிறுதித்தேர்வு எழுதியவர்கள். அந்த வருடம் எங்கள் சீனியர்கள் 11ஆம் வகுப்பில் பள்ளியிறுதி எழுதினார்கள். ஆக அந்த வருடம் இரண்டுமடங்கு பேர் பள்ளியிறுதியை முடித்தார்கள். எனக்கு தேர்வுசமயத்தில் ஒரு பிரச்னை. தேர்வு நடக்கும் வாரம் பஸ் எல்லாம் ஏதோ காரணத்தால் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பாயிருந்தது. எப்படி புதுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் வந்து தேர்வு எழுதுவது? 'நீ பரிட்சை முடியும் வரை இங்கேயே இரு. முடிந்ததற்கப்புறம் போகலாம்' என்று ஆர்டர் போட்டுவிட்டார் காந்தியின் அப்பா. அந்த வாரம் முழுதும் அங்கேயே தங்கிவிட்டேன். எந்தக் கவலையும் இல்லாமல் பரீட்சை எழுதினேன். இரண்டாம் வகுப்புக்குப் பிறகு எடுத்த என் ஒரே போட்டோ அவர்கள் வீட்டில் காந்தியின் மாமா ஒருவர் எடுத்ததுதான்.

வலைப்பூ - சில சிந்தனைகள்

கடந்த சில நாட்களாக என் வலைப்பதிவில் வாழ்க்கைக்கதை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இதை குழாய்த்தண்ணீரைப்போல விட்டுவிட்டு எழுத விருப்பம் இல்லை. இரண்டு, எனக்கு நியூக்ளியஸ் மென்கலம் சம்பந்தமான சோதனைகளுக்கு நிறைய நேரம் செலவிடவேண்டி இருக்கிறது.

இருந்தாலும், நம் தமிழ் வலைப்பதிவுகள் சஞ்சிகையான வலைப்பூ பற்றி எனக்கு சில கருத்துகள் தோன்றியது, அதை இங்கு பதிக்கலாம் என்று எண்ணம்.

இதன் முக்கிய நோக்கமாக நான் கருதுவது:எல்லாராலும் 100 வலைப்பதிவுகளுக்கும் போய்ப் படிக்க முடியாதாகையால், இந்த வலைப்பூ ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடி, அந்த வாரம் பதிவான விஷயங்களில் குறிப்பிடத்தகுந்ததை எடுத்துக் காட்டலாம். கூடவே அந்த வார ஆசிரியரைப்பற்றி, அவர் ரசித்த மற்ற விஷயங்களைப்பற்றியும் கோடி காட்டலாம். இதுகூட, தனியே வலைப்பதிவு செய்யாத ஆசிரியருக்கே பொருத்தமாக இருக்கும்.

முதலில் வந்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் செய்தார்கள். ஆனால் கடந்த சில வாரங்களில் இந்த பாணி மாறிக்கொண்டே வருவதாக ஒரு தோற்றம். இன்னொன்றும் சொல்லலாம், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒருவர் வலைப்பதிவு செய்யும் அளவுக்கு விஷயங்களை இந்த ஒரு வாரத்தில் தந்து அஜீர்ணம் ஆக வைத்துவிடுவதுபோலவும் தோன்றுகிறது.

இதில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாருக்கும் பிடித்திருந்தால் இப்படியே தொடர்வதில் தப்பில்லை.

புதன், ஜனவரி 14, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7

கோவை போனபின், வாழ வழியற்ற பெண்கள் நிறையப்பேருக்குக் கைகொடுக்கும் இட்லிக்கடை அம்மாவுக்கும் கைகொடுத்தது. அலுவலகம் ஒன்றில் வெள்ளைச்சட்டை வேலை பார்க்கும் என் மாமாவுக்குத் தன் வீட்டு வாசலில் இட்லிக்கடை என்பது கொஞ்சம் கௌரவக்குறைவாய் இருந்ததால், அம்மா பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் வாசலில் கடை நடத்தினார். ஓரளவுக்கு இது நன்றாகப் போனது, எனவே அம்மாவால் யாருக்கும் சுமை இல்லை என்கிற அளவில் நாட்கள் நகர்ந்தன.

என்னதான் பெரிய கொள்கைகளோடு அரசாங்கங்கள் திட்டம் போட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது வரும் சிக்கல்கள், திட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகின்றனவே. பெரியப்பாவின் திட்டம் ஆமைவேகத்தில் போகும்போது, பெரியம்மாவின் திட்டு முயல்வேகத்தில் ஓடி, மூன்று மாதத்துக்குப் பின் எனக்கும் அடுத்த இடம் தேடவேண்டி ஆனது. பொறுத்துக் கொண்டுதான் இருந்தேன், ஆனால், ஒரு ப்ரேக்-பாயின்ட் வந்தது. அங்கே இருக்க விடுத்த அழைப்பு திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு ஏழெட்டு மாதம்தான், அதற்குப்பின் பத்தாவது பரீட்சை முடிந்துவிடும், அப்புறம் என்ன படிப்பேன், எங்கே படிப்பேன், ஒன்றும் தெரியாது. ஆனால் அதற்குள் இந்த நிகழ்வு. இந்த எட்டுமாதம் பொடியனுக்கு எங்கு இடம் கிடைக்கும்? அழுதுகொண்டு கோவைக்குப் போனேன். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும், எனக்குத் திட்டு விழும் என்று பயந்தேன். 'அழுகாதீடா, மலை போல மனுசனே போயிட்டாரு, இனி இதெல்லாம் என்ன..' என்று சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் உள்ளே இருந்த உரமேறிப்போன நெஞ்சை உணர்த்தின.

ஆனாலும், இன்னும் எட்டு மாதத்திற்கு எங்கே தங்கப் போகிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் ஒரே இருட்டாய் இருந்தது. அந்த இருட்டிலிருந்து எனக்கு ஒளிகொடுத்தவர் என் சின்ன அம்மச்சி, (அம்மாவின் அம்மாவின் தங்கை.) அவரொன்றும் வசதியானவரில்லை, அங்கும் மாதாமாதாம் சம்பளம் கொண்டுவந்து யாரும் கொட்டுவது கிடையாது. நானும் அவரின் நேரடிப் பேரன் கிடையாது. ஆனால், அவரும் அம்மாவுக்குப் புதிதாய்க் கிடைத்த வெள்ளைப்புடவைப் பரிசை ஏற்கனவே பெற்றுவிட்ட பாட்டாளி. ஆறு மக்களுடன் தனியாய் நின்று, போராடி நிமிர்ந்துகொண்டிருப்பவர். அவரின் நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு மகனும் என் அண்ணனைப்போலவே பள்ளியிறுதிக்குமேல் படிக்க முடியாமல் பலவேலைகளுக்குப் போய்க் கஷ்டப்படுவதும் என் மேல் பரிவு வரக் காரணமாயிருக்கலாம். ஆனால் அவர் கொடுத்த ஆதரவு, அந்தச் சமயத்தில் கோடி ரூபாய்க்குச் சமம்.

அவர் இருப்பது பொள்ளாச்சியில் இருந்து 16கி.மீ. தள்ளி, புதுப்பாளையம் கிராமம். ஆனால், அங்கிருந்து டவுன் பஸ் வசதி ஓரளவுக்கு இருந்தது. சந்தை நாட்களில் மாலையில் பொள்ளாச்சியில் இருந்து பஸ் ஏறுவதற்குள் பெரிய பாடாகிவிடும். ஒரு மாமன் அங்கேயே தனிக்குடித்தனம் இருந்தார். இன்னும் மூன்றுபேர் வேறு இடத்தில் இருந்தார்கள். அங்கு மின்சாரவசதியும் கிடையாது. அது ஒரு பெரிய பிரச்னையாய் இல்லை. புதுப்பாளையத்தில் இருந்த எட்டு மாதங்களும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல், காலையில் 7 மணிக்கெல்லாம் எனக்கு சமையல்செய்து சாப்பிடவும் கொண்டுபோகவும் கொடுத்துவிடும் அம்மச்சி. இத்தனைக்கும் அவரும் காட்டு வேலைக்குப் போகவேண்டும். பஸ்ஸுக்கு மட்டும் அம்மா பணம் கொடுத்துவிடும். மற்றபடி என்னைத் தன் சொந்தப் பேரனைவிடப் பார்த்துகொண்டார் அம்மச்சி.

செவ்வாய், ஜனவரி 13, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6

அது எமர்ஜென்சியின் இறுதிக் காலம். அப்பாவுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. சித்தூரில் கிடைத்ததை விட அதிகமான செய்தித்தாள்கள் தினமும் நூலகத்தில் மாலையில் படிப்பது, வேலையிடத்தில் தோழர்களுடன் விவாதிப்பது போன்றவற்றால் இங்கு வந்தபின் ஈடுபாடு இன்னும் அதிகரித்தது. 1977 மார்ச்சில் தேர்தல் அறிவிக்கப்பட, பொதுக்கூட்டங்கள் நிறைய நடந்தன. சில முறை நானும்கூட அவருடன் போயிருக்கிறேன். தேர்தல் நாள் நெருங்கியது. சித்தூர் வாக்காளர் பட்டியலில்தான் இன்னும் பெயர் இருந்தது. எனவே தன் வாக்கைப் பதிவுசெய்யவும், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவரலாம் என்றும் சித்தூருக்கு தேர்தல் நாளன்று சென்றுவந்தார்.

அடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் உடம்புக்கு சரியில்லை என்று படுத்திருந்தார். அன்னேரத்துக்கு அவர் வீட்டுக்கு வந்து நான் பார்த்ததில்லை. அப்புறம்தான் தெரிந்தது, வேலை செய்யும் இடத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழ, அவர்கள் தான் வீட்டில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். பிறகு நடந்தது எதுவும் கோர்வையாக நினைவில்லை.

பொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆக்ஸிஜன் உதவியெல்லாம் கொடுத்து, நினைவில்லாமல் கிடந்தார். அதிகம் கோயிலுக்கெல்லாம் போகாத நானும் அம்மாவுடன் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குப் போனது நினைவிருக்கிறது. அம்மா முகத்தில் சோகம் அப்பியிருந்தது. நான் சாமியிடம் ஒரு டீல் போட்டுக்கொண்டேன். 'சாமி, எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாம சரி பண்ணிட்டீன்னா, இனிமே உன்னைக் கும்பிடறேன், நிந்திக்க மாட்டேன்'னு. ஆனால் சாமிக்கு அதில் ஒண்ணும் பெரிய ஆர்வமில்லை என்பது தெரிந்தது. அப்பா மூன்றாம் நாள் காலமாகிவிட்டார். ஃபுட் பாய்சனிங், சித்தூர் நண்பர்களுடன் சாப்பிட்ட நாட்டுச்சரக்கில் கோளாறு, முன் விரோதம் காரணமான சதி, இதில் ஏதோ ஒன்று, இது தான் காரணம் என்று இன்று வரை தெரியாது.

'ஒருவழியாக நம் சோகத்துக்கெல்லாம் விடிவு பிறந்துவிட்டது' என்று கடந்த பத்து மாதங்களாக விட்ட நிம்மதிப் பெருமூச்சு காற்றில் கரைந்தது. 'சம்பாதித்து, உட்காரவைத்து சோறு போடாவிட்டாலும், கணவன், குடும்பத்தலைவன் என்று பெருமையுடன், பாதுகாப்புடன் இருக்க முடிந்ததே, இனி அதற்கும் வழி இல்லையே', என்று அம்மா அரற்றி, அழுதது நினைவில் இருக்கிறது. இப்படி பலிகொடுப்பதற்கா ஊரைவிட்டு வந்தோம்? இனி என்ன வழி? ஏன் நமக்கு மட்டும் எல்லாம் இப்படி எல்லாமே எதிராகவே வேலை செய்கிறது? இங்கேயே இருப்பதா? இங்கு யாரைத்தெரியும், என்ன செய்ய முடியும்? கேள்விகள், கேள்விகள்..விடை தெரியாக் கேள்விகள்!

அண்ணனுக்கு இன்னு பத்து நாளில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு. 'எப்படி எழுதப்போகிறான்' என்று அனைவரும் பரிதாபப் பட்டனர். அதற்கடுத்து என் ஒன்பதாவது முழுப்பரீட்சை. இரண்டும் முடிந்ததும், அனைவரும் கோட்டாம்பட்டிக்கு விடை சொல்லி, மாமன்மார் ஆதரவில் மேலும் எப்படியாவது எதையாவது செய்யலாம் என்று கோவைக்குப் பயணம் ஆனோம். சித்தூருக்குத் திரும்பிப் போக மனமில்லை. என் படிப்பு மேலும் தொடரவேண்டுமானால், அங்கே போய் பயனில்லை. அண்ணனுக்கு அப்பா வேலை பார்த்த இடத்திலேயே ஏதாவது வேலைக்கு முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனை கிடைத்தது. அப்பா அங்கே சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் கொஞ்சம் நம்பிக்கையளித்தது. அதுவரை, கிடைத்த வேலையை செய்துகொண்டு அங்கேயே அண்ணன் இருப்பது என்று முடிவானது.

நாங்கள் வசித்த வீட்டருகிலேயே திண்ணையில் இலவசமாய்த் தங்கிக்கொள்ள பெரிய மனதுள்ளவர்கள் அண்ணனுக்கு இடம் கொடுத்தார்கள். அது ஒரு புகையிலைக் குடோன். எனவே கொஞ்சம் சுறுசுறுவென்று மூக்கை உறுத்தும், தும்மல் போடும். ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை. அம்மாவுடன் கோவைக்குப் போனாலும் என்னைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ள என் பெரியப்பா முன்வந்ததால், கோடை விடுமுறைக்குப் பின் நான் மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்துவிட்டேன். பெரியப்பாவுக்கு என்னை விட ஒருவயது மூத்த மகன். கொஞ்சம் படிப்பில் மந்தம், நான் அங்கே இருந்தால் அவனுக்கும் படிப்புக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்ற எண்ணமும் கூட.

மூவரும் மூன்று இடமாய் சிதறிப்போனோம்.

திங்கள், ஜனவரி 12, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5

பொள்ளாச்சி போனபின்னும் அம்மா வேஸ்ட்காட்டன் மில் ஒன்றில் பஞ்சிலிருந்து கொட்டை, குப்பையெல்லாம் பொறுக்கி சுத்தம் பண்ணும் வேலைக்குப் போனார். நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலை. பெரிய குடோனில் வரிசையாய்ப் பெண்கள் தரையில் உட்கார்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் ஏதோ கல்யாணத்தில் பந்தி வழங்குகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.

புதிய இடமாதலால் கோட்டாம்பட்டியில் அப்பாவுக்கும் வெட்டி நண்பர்கள் இல்லை. ஒன்றுக்கு இரண்டாய் இருந்த நூலகங்கள் எங்கள் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கின. அங்கே என் பள்ளித்தோழன் பாபுவுக்கு ஒரு ட்யூஷன் மாஸ்டர். அவரை பாபுதான் போய் அழைத்து வருவான், கொண்டுபோய் விடுவான். ஏனென்றால் அவர் முகத்திரண்டு கண்ணில்லாதவர். பிறகு எப்படி பாபுவுக்கும் அவன் தம்பிக்கும் பாடம் சொல்லிக்கொடுப்பார்? ஒரே முறை இவர்கள் தங்கள் பாடத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தால் போதும், பிறகு, அங்கேயும் ஹார்ட் டிஸ்க் கெட்டி, கப்பென்று வாங்கி ரைட்-ப்ரொடெக்ஷன் போட்டு உட்கார வைத்துக்கொள்ளும். மனிதன்தான் எப்பேற்பட்ட இயந்திரம்! ஒரு சென்சார் வேலை செய்யவில்லையென்றால் வேறொன்று எவ்வளவு எளிதில் கூடுதல் பொறுப்பேற்கிறது! அவர் காட்டியதுதான் பள்ளிப்படிப்புக்கு மேல் என்ன படிக்கலாம் என்ற வழி. அண்ணன் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. 'அது முடிந்ததும் பி.யு.சி. படிக்கவேண்டாம், பாலிடெக்னிக்கில் பி.டி.சி. படிக்கச்சொல்லுங்கள். பிறகு முடிந்தால் பி.இ. இல்லையென்றால் டிப்ளமா... வேலை எளிதில் கிடைக்கும்' என்ற மந்திர உபதேசம். ஆனால் அந்த உபதேசத்தை பயன்படுத்திக் கொள்ள அண்ணனுக்குப் கொடுத்துவைக்கவில்லை, அதற்கு அடுத்த வருஷம் தம்பிக்குப் பயன்பட்டது.

கால்பரீட்சை லீவில் சித்தூர் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒரு சேதி வந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் இரண்டு இடம் பெறும் மாணவர்களை சேர்த்து, ஊராட்சி ஒன்றிய மட்டத்தில் இன்னொரு தேர்வு வைத்து அதில் தேறுபவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் என்று ஒன்று கொடுப்பார்கள். அது வருடத்திற்கு 1000 ருபாய் மதிப்புள்ளது. அப்பா பால் மொத்தவியாபரம் செய்யும்போது ஆயிரம் ரெண்டாயிரம் என்று நோட்டுப்புத்தகத்தில் கணக்கெல்லாம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். மற்றபடி ஆயிரம் ரூபாய் அந்தக் கட்டத்தில் பெரிய பணம். எப்படியோ தேர்வு நேரத்துக்குள் தகவல் கிடைத்து 'கல்லு மெத்தை' பள்ளிக்கூடத்தில் போய்ப் பரீட்சையும் எழுதினேன்.

எழுதியது மறந்துபோய் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பின பின் ஒருநாள் தேர்வான ஓலையும் வந்தது. ஆனந்தமோ ஆனந்தம், ஆனால் அதில் ஒரு சிக்கல். அந்த 1000 ருபாய் ஹாஸ்டல் வசதியுள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்தாலே கிடைக்கும். அதே பள்ளிகளில் வீட்டில் இருந்து படித்தால் வருடத்திற்கு 500 ரூபாய். அதை விடுத்து வேறு எந்தப்பள்ளியில் படித்தாலும் 150 ரூபாய். நான் படித்துக் கொண்டிருந்த மூணுமாடிப் பள்ளி 150 லிஸ்டில் வந்தாலும், நல்லவேளையாகத் தொலைவில் இருந்த கல்லுமெத்தைப் பள்ளி 500 ரூபாய் லிஸ்டில் வந்தது. 'கல்லுமெத்தை' என்ற நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு வகுப்பாசிரியர் ராஜலட்சுமி டீச்சருக்கு ஏக சந்தோஷம், ஏதோ பெரிய படிப்பாளி கிடைத்துவிட்டான் தன் வகுப்புக்கு என்று. பொடியனைத் தனக்கு நடைத்தோழனாக நியமித்து, தான் மாலையில் தன் வீட்டில் எடுக்கும் ட்யூஷனில் இலவசமாய்ச் சேர்த்தும் கொண்டார்.

இன்னும் விளக்குகள் வரவில்லை, வழிகாட்டிகளே தலை காட்டுகிறார்கள். இன்னும் ஓரிருநாளில் முதல் விளக்கை சந்திக்கலாம்.

சனி, ஜனவரி 10, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4


உயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை?) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். 'நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது', என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் எல்லாம் உண்டு. அதைக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டி, 'இதில் இந்த இடத்தில் வரிசையா 1 என்று போட்டிருக்கிறது பாருங்க, அப்படின்னா வகுப்பிலேயே நான் தான் முதல் இடம்', என்று சொல்லும்போது அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷம், வீதியில் அவ்வப்போது தட்டுப்படும் எட்மாஸ்டர், தாங்கள் ஒன்றும் கேட்காமலே, 'பையன் நல்லாப் படிக்கிறான், எப்படியும் அவன் விருப்பம் போல படிக்க வையுங்க', என்று சொல்லிப் போகும்போது கிடைத்த போதை, இதெல்லாம் தான் 'என்ன சிரமம் வந்தாலும், இவர்கள் படிப்பை நிறுத்தக் கூடாது' என்று வைராக்கியத்தை கொடுத்திருக்க வேண்டும்.

படிப்பு ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அமைந்தால் எதுவும் எளிதே. புத்தகம் ஒன்றைத்தவிர பெரிதாய் செலவு வைக்க மாட்டார்கள். அதிலும் தமிழாசிரியர்கள்...பெரியவர், சின்னவர் என்று இரண்டுபேர். அதிலும் பெரியவர் வகுப்பு... பிற்காலத்தில் சுகி.சிவம் அவர்கள் டிவியில் பேசிக் கேட்டபோது அப்படியே அவரை நினைவுக்குக் கொண்டுவரும். ஒருமுறை யாரோ ஒரு பையன் செய்யுளுக்கோ, இலக்கணத்துகோ தெரியவில்லை, தேவைப்படும் என்று 'கோனார் தமிழ் உரை'யை டவுனில் இருந்து வாங்கி வந்துவிட்டான். அது அவர் கண்ணில் பட்டதுதான் தாமதம், 'ஏண்டா இதெல்லாம் வாங்கிப் படிக்கறே, அப்ப இங்க நான் ஒருத்தன் என்னத்துக்கு இருக்கிறேன், மொதல்லே அதை வீசி எறிஞ்சிட்டு வா'ன்னு அப்படி ஒரு கோபம்! அவர் அப்படிக் கோபப்பட்டு என்றும் பார்த்ததில்லை.

மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன் பாத்திரம் எல்லாம் கழுவி, விறகுக்கு முள் தரித்து(நறுக்கி) வைக்க வேண்டும். நான் வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கவேண்டும். பிறகு விளையாட்டுத்தான். ஆனாலும் வீட்டைவிட்டு தூரமாய் எங்கும் விளையாடப் போகக்கூடாது. ஆறு மணிக்கு வீட்டில் லைட்டெல்லாம் போட்டு நடையைத் திறந்துவைக்கவேண்டும் (லட்சுமி வரும் நேரம்!). அதற்குப்பின் தான் கச்சேரியே. 'வினாயகனே வல்வினையே வேரறுக்க வல்லான்..' என்று டூரிங் டாக்கீஸில் பாட்டுச்சத்தம் கேட்டால், வாசலில் கிடக்கும் உரல் சோபாவில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சத்தம் போட்டுக் கூடப்பாடி...ஏழரையாகும் பாட்டு நிறுத்த. அதுவரைக்கும் நம்ம கச்சேரிதான்.

பிறகு எதையாவது பேசி, சாப்பிட்டு விட்டுத் துங்கப்போகணும், அம்மாவுக்குத்தான் காலையில் சீக்கிரம் எழவேண்டுமே. ஒரு நாளாவது வீட்டில் புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்ததில்லை. ஒரு வரி எழுதியதும் இல்லை. 'ஏண்டா படிப்பதே இல்லையே?' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில் ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு? 'ப்ரின்ட்' என்றால் கடகடவென்று கொட்டப்போகிறது.

இப்படி எட்டாவது வரை கழிந்தது. வழக்கம்போல அந்தக் கோடை விடுமுறையிலும் கோவையில் அம்மச்சி வீட்டுக்குப் போனவன், அங்கிருந்து சித்தூருக்கு வராமல் நேரே பொள்ளாச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. யாரிடமும் சரியாய் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரம் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லாரையும் விட அம்மாவுக்குத் தான் இந்த மாற்றத்தில் பெரிய நிம்மதி. கடின உழைப்பில் இருந்து விடுதலை. அப்பாவுக்கு வேலை ஓரளவுக்கு நிரந்தரமானதுபோல ஒரு நிலை. அவருக்கு எட்டரை ரூபாய் கூலி. அதுபோக ஓவர்டைம் உண்டு. எனவே நம் சோகத்துக்கெல்லாம் முடிவு வந்துவிட்டது, என்ற சந்தோஷம் முகத்தில் தெரிய வந்த எங்களை பொள்ளாச்சி எல்லையில் கோட்டாம்பட்டி வரவேற்றது. அங்கே 20 ரூபாய் வாடகையில் ஒரு ஒற்றை அறை வீடு. அந்த வரவேற்புக்கும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஆடி அசைந்து வரவேற்ற(?) கொடிக்கும் இருந்த ஒரு ஒற்றுமை அப்போது யாருக்கும் தெரியவில்லை.

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3

அப்பா பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே அம்மாவுக்கு நல்ல சம்பளத்துக்கு '·பாரின் ஆ·பர்' ஒன்று கிடைத்துவிட்டது. முன்பு வாங்கின சம்பளத்துடன் ஒப்பிட்டால் மூணு நாலு மடங்கு சம்பளம், அது மட்டுமில்லாமல் வேலை செய்தவரைக்கும், திறமையுள்ளவரைக்கும் சம்பாதிக்கலாம், வரம்பில்லா ஊதியம்! ஆண்/பெண் வித்தியாசம் இல்லை, எல்லாருக்கும் ஒரே அளவு அங்கீகாரம்.

ஆனால் அந்த வேலை நடக்குமிடம் சித்தூரிலிருந்து 5-6 கிலோமீட்டர் தூரத்தில், கொண்டம்பட்டி தாண்டிப் போக வேண்டும். 'வன்கலம்' சம்பந்தப்பட்ட வேலையாதலால் கடப்பாரை, மண்வெட்டி, கூடைதான் கருவிகள். 'ஏரி போடுதல்' என்று அழைக்கப்பட்ட அந்த வேலையின் 'ஸ்டேட்மென்ட் ஆ·ப் வொர்க்' எளிமையானது. சாலை ஒரங்களில் ஒரு அடி ஆழத்தில் பத்துக்குப் பத்து சதுரத்தில் குழி வெட்டி அதில் இருக்கும் மண்ணை அடுத்து சாலைக்கோ, அல்லது ஒரு வரப்பு மாதிரி திட்டுக்கோ அணைப்பாய் கொண்டுபோய் பரப்ப வேண்டும். இந்த ஒரு குழி ஒரு யூனிட். அதற்கு ஒண்ணே கால் ரூபாய் என்று நினைக்கிறேன். அதுமாதிரி ஒருவர் எத்தனை குழி முடிக்கிறாரோ அத்தனை சம்பளம். எந்த உச்ச வரம்பும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அத்தனையும் டாக்ஸ்-·ப்ரீ. அந்த வறட்சிக் காலத்தில் இறுகிப்போன நிலத்தை அகழ்ந்து தோண்டி எடுப்பது எவ்வளவு சுகமாய் இருந்திருக்கும்....

இதில் ஒரு சிரமம், வெயில் ஏற ஏறக் களைப்பு அதிகமாகும். எனவே காலையில் 'பலானு'விடிய (வெளிச்சக் கீற்று தெரியும்போது) 'க்ளையன்ட் சைட்'டில் இருந்தால்தான் சூரியனோடு போட்டிபோட்டு நான்கைந்து குழி முடிக்க முடியும். எல்லாம் உச்சி வேளை வரைதான், அதற்கப்புறம் ஜெயிப்பது அவன்தான். இதற்காக காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலையை முடித்து, தூக்கில் எடுத்துக்கொண்டு, நடக்க ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும். பிறகு ஒரு இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி, 'போர'டிக்காமல் இருக்க அரட்டை அடித்துக் கொண்டு 'நிலா' வெளிச்சத்தில் திரும்பவும் நடந்து, மூன்று மணி வாக்கில் வீட்டுக்கு வந்து சேர்ந்து, திண்ணையில் விழுந்தால், நாங்கள் 4 மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும்போது நாங்கள் வந்தது கூடத் தெரியாமல் அப்படியொரு தூக்கம்! பிறகு எழுந்து, 'இன்னிக்கு நான் சுப்பிரமணியை விட ஒரு குழி அதிகமா வெட்டினேன்' என்று பெருமையாகச் சொல்லும் அம்மா...

எழுத்தெல்லாம் கலங்கலாய்த் தெரிவதால் இதற்குமேல் எழுதமுடியவில்லை...நாளை தொடரலாம்.

வெள்ளி, ஜனவரி 09, 2004

ஒரு சோதனைக்கு உதவுங்கள்

நியூக்ளியஸ் என்ற புதிய மென்கலம் ஒன்றைப் பயன்படுத்தி என் வலைப்பதிவை சோதித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் இங்கு வந்து அதில் எல்லாம் தூஊஊஊஉ என்றில்லாமல் கட்டம் கட்டமாக இல்லாமல், ஒழுங்காகத் தெரிகிறதா, எல்லாக் கலப்பையிலும் கோடு போட முடிகிறதா, திரையில் சீக்கிரம் விழுகிறதா என்றெல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும்:-))

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2


(c)Project Atmosphere Australia->  http://www.schools.ash.org.au/paa1/default.htm


ஆறாம் வகுப்புக்கு வெளியூரெல்லாம் போகவேண்டியதில்லை. சித்தூர் ஒண்ணும் பட்டிக்காடில்லை. வாரச் சந்தை, ஐஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, கரண்ட் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், சினிமாக் கொட்டாயி, ஆயில் மில், கதர்க்கடை, கடைவீதி இதெல்லாம் கொண்ட பெரிய கிராமம்தான். ஊரை ஒட்டி ஒரு சிற்றாறும் ஒடியது. நான் பார்க்க ஓடியதில்லை, ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரிருமுறை மழைக்காலங்களில் நானே பார்த்தும் இருக்கிறேன். அதில் இரவு நேரத்தில் பேட்டரி லைட் அடித்து நீண்ட கத்தியால் மீன் பிடித்திருக்கிறார்கள், மதி சொன்ன சூள்-ஐப்போல.

ஆனால் அந்த வறட்சியின் போது, (1974 என்று நினைக்கிறேன்) ஊரில் ஒரு கிணறு கூட பாக்கியில்லாமல் வறண்டு போக, அரசாங்கத்தினர் போர்வெல் போட்டு தண்ணீர் கொடுக்க எங்கெல்லாமோ இடம் தேடி, தண்ணீர் வராமல், கடைசியில் அந்த ஆற்றங்கரையிலும் நான்கைந்து இடங்களில் கிடைக்காமல், ஒருவழியாக, அதே ஆற்றங்கரையில் ஊருக்கு மேற்காலே நாராயணசாமி கோயிலுக்குப் பின்னால் ஒரு இடத்தில் கிடைத்தது. அதுவும் 300 அடியோ என்னவோ ஆழத்தில். அந்தத் தண்ணியில் குழம்பு வைத்தால் கடையில் உப்பு வாங்கவேண்டிய செலவு மிச்சம். கடல் என்பதையே கண்ணில் பார்க்காத மக்களுக்கு கடல் தண்ணீராவது காட்டலாம் என்று தான் அந்த உப்புத்தண்ணியை சாமி கொடுத்திருப்பார் என்று தமாஷ் பேசுவோம்.

அந்த வறட்சியிலும் அம்மாவுக்கு ஒரு காட்டில் தொடர்ந்து வேலை கிடைத்தது. அந்தக் கவுண்டர் வீட்டுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர்களால் முடிந்தவரையில் வேலை கொடுத்தார்கள். தினமும் ஒண்ணரை ரூபாய் கூலி. ஏழுநாட்களும் வேலை. திங்கக் கிழமை மட்டும் வேலை சீக்கிரம் முடிந்துவிடும். அன்றுதான் வாரம் பூராவும் வேலை செய்ததற்கு பத்தரை ரூபாய் கூலி கிடைக்கும். பிறகு வந்து அரப்புத்தேய்த்து தலைக்குக் குளித்துவிட்டு, அம்மாக்கள் சந்தைக்குப் போவார்கள். சிறுவர்கள் வீதிமுக்கில் விளையாடிக்கொண்டே தலையில் 'சாடு'டன் (பெரிய கூடை) தூரத்தில் புள்ளியாக நடந்துவரும் அம்மாக்களை அவர்கள் சேலை வண்ணத்தை வைத்துக் கண்டுபிடிக்க, ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். வந்ததும், 'கடலை பொரி' கட்டாயம் கிடைக்கும். சில நாள் முறுக்கும் கூடக் கிடைக்கும். சந்தை காரணமாக தொடக்கப் பள்ளிக்கு வார விடுமுறை ஞாயிறு, திங்கள் அன்றுதான்.

வறட்சியோ தன் இறுக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது. எங்கள் பள்ளிப் படிப்புக்கு புத்தகம் வாங்கவாவது பணம் வேண்டாமா? அந்தப் பள்ளியாண்டுத் துவக்கத்தில் வேறு வழியில்லாமல் அப்பா தனக்கு பட்டாவாகி கிடைத்த ஒரு சிறு துண்டு நிலத்தை விற்றார். பெரிய சொத்தில்லை, 120 ரூபாய்க்குப் போனது. ஆனாலும் அன்று அவர் அதைச் செய்யாமல் விட்டிருந்தால், எங்கள் பள்ளி வாழ்க்கை ஒருவேளை பாதியில் நின்றுபோயிருக்கலாம்.

'அரசுயர்பள்ளி' தலைமை ஆசிரியர் அப்துல் வகாப் அவர்கள் மிகுந்த கண்டிப்பானவர். கையில் பிரம்புடன் அவர் பள்ளியைச் சுற்றி நடந்துவரும்போது ஒரு குஞ்சு கூட மூச்சு விடாது. கண்டிப்பு என்பதுடன் கரிசனமும் கொண்டவர் என்பது ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்போதுதான் தெரிந்தது. வழக்கமாக எங்கள் ஜாதிக்கு ஊரில் சொல்லப்படும் பெயர் அரசாங்கப் பட்டியலின் படி முன்னேறிய வகுப்பாம். இதே ஜாதிக்கு வேறு ஒரு பெயர் (அது வடமொழிப்பெயர்) உள்ளதாம், எங்கள் ஜாதியை அந்தப் பெயரிட்டு அழைத்தால் பிற்பட்ட வகுப்பாம், பின்னாளில் சலுகைகள் எல்லாம் கிடைக்குமாம். இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என் அண்ணனை ஆறாம் வகுப்பில் சேர்க்கும் முன் எங்களை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டார். அந்த நிலையில் மாற்றாவிட்டால் அதற்கப்புறம் முடியவே முடியாதாம். யாருக்குத்தெரியும் இதெல்லாம், இப்படியெல்லாம் சொல்லித் தான் நாங்கள் பிற்பட்டவர்கள் என்று தெரியுமா?

'காக்கைக் குருவி எங்கள் ஜாதி...' என்ற பாட்டெல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தாலும் இது அப்படித்தான் நடந்திருந்திருக்கும். இந்த பிற்பட்ட வகுப்பு அடையாளம் எனக்கு பெரிய உதவியை எங்கும் செய்யவில்லை, ஆனால் பின்னாளில் என் நெருங்கிய நண்பனுக்கு இதனாலேயெ ஒரு நல்லது நடக்க நான் தடையாக இருக்கும்படி ஆனது ஒரு சோகம். அதை அந்த சமயத்தில் பார்க்கலாம்.

வியாழன், ஜனவரி 08, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1



முதலில் என்னை ஒண்ணாவதில் சேர்த்துக்கொண்ட அந்த டீச்சருக்கு நன்றி சொல்லணும். அவருக்கும் என் வயதில் ஒரு பெண் இருந்ததால் அவளை சேர்த்துக் கொண்ட போது 'இலவச இணைப்'பாக என்னையும் சேர்த்துக் கொண்டதாக என் அம்மா ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு எதிரில், எதிரில் என்றால் வெறும் ஒரு பத்தடி வண்டித்தடம் தான் குறுக்கே, அவ்வளவு கிட்டத்தில் பள்ளி. பல நாள் பள்ளியில் இருந்து தண்ணி குடிக்கக் கூட எங்க வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். 'கிட்டத்தில் இருந்ததால் நீ சின்ன வயசிலேயெ பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டே' என்று இன்னொரு நாள். 'உன் அண்ணன் பள்ளிக்கூடம் போகும்போது, நீயும் கூடக் கூடப் போவே, அதனாலெ உன்னையும் சேர்த்துக்கிட்டாங்க', என்று மற்றொரு நாள். இன்னதனால் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், நாலு வயசு ஆன போதே ஒண்ணாவதில் சேர்ந்துவிட்டேன். அதில் ஒரு லாபம் பின்னால் சீக்கிரம் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டது. ஆனால் அதுக்காக அந்த டீச்சர் ஏன் பிறந்த தேதியை, மாதத்தை, வருடத்தை என்று எல்லாவற்றையும் மாற்றினார் என்று இன்னும் விளங்கவில்லை? நிறையப் பேருக்கு வருடத்தை மாற்றி எழுதியது கேள்விப்பட்டிருக்கிறேன். ஹும்.

ஆறாம் வகுப்புக்கு மேல் தான் நன்றாய் நினைவில் இருக்கிறது. தொடக்கப் பள்ளியில் ஒரு சில நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன. படிப்பில் சூரனான அக்பர் அலி, பள்ளியில் ஒண்ணுக்குவிடும் நேரம், 'சுக்குட்டிப்பழம்' (மணத்தக்காளி) பறிக்க செடிக்குள் கைவைத்து, பாம்பு கொத்தி செத்துப்போனது, அமெரிக்காவிலோ எங்கேயோ இருந்து வரும் கோதுமை ரவையை மதிய உணவு செய்து பரிமாறுவது, அதை சில குழந்தைகள் மட்டும் தங்கள் ஈயத்தட்டத்தில் வாங்கி சாப்பிடுவது, தலைமை ஆசிரியர் அறையிலேயே அஞ்சாம் வகுப்பு என்பதால், புதிதாய் ஒண்ணாவதில் சேர்க்க வரும் குழந்தைகளை அவர் தலைக்கு மேல் கைவத்து, காதைத் தொடச்சொல்லி நுழைவுத்தேர்வு நடத்துவது (என்னை மட்டும் இப்படிச் சோதித்திருந்தால் கட்டாயம் 'போடா வீட்டுக்கு'ன்னு சொல்லியிருப்பார்), அவர் அதில் மும்முரமாக இருக்கும்போது, சாக்கில் கட்டி வைக்கப்பட்டுள்ள காய்ந்த கெட்டியான கோதுமை ரவையைக் கைப்பிடி எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு பிறகு மெதுவாக மென்று சுவைப்பது... வாழ்வின் ஒரே இளமைக்கால போட்டோ இரண்டாம் வகுப்பில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ தான். இன்னொன்றும் ஞாபகம் வருகிறது, என்னுடன் அஞ்சாம் வகுப்பில் படித்த பெண், நெடுநெடுன்னு வளத்தியா இருப்பாள், ஆறாம் வகுப்புக்கு வரவில்லை, சில நாள் கழித்து ஒருநாள் அவளை அவள் புருஷனுடன் பார்த்து அதிசயித்தது!

எனக்கு அறிவு தெரிய, ஊரில் பஞ்சம் வந்துவிட்டது. வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி. அப்பாவும் பல முயற்சிகளுக்குப் பிறகு அமைந்திருந்த பால்வியாபாரத்தில் உள்ளதையெல்லாம் தொலைத்துவிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரம். அம்மாவின் இன்னிங்ஸ் ஆரம்பமானது அப்போது. அம்மா காட்டுக்கு கூலிவேலைக்குப் போயும்கூட, அதில் வரும் சொற்ப வருமானத்தில் நாங்கள் நால்வரும் சாப்பிடுவதென்பது சாமானியமான காரியமாக இல்லை. எங்கும் போகப்பிடிக்காமல், யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வேப்ப மரத்தடி மேடையில் வெட்டி நண்பர்களுடன் 'பதினஞ்சாங் கரம்' (ஆடு புலி ஆட்டம்) ஆடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த அப்பாவை, சரியான கோபக்கார அம்மா அப்படிப் பொறுத்துக் கொண்டார் என்பதிலிருந்து, அப்பா அதற்குமுன் அம்மாவை நன்றாக வைத்திருந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

அந்த நாட்களில் ஒரு இரவு. அண்ணாடும் போல கூட்டாளிகளுடன் வெட்டி அரட்டையெல்லாம் முடிஞ்சு சாமம் ஆகியும் அப்பா வந்துசேராததால் அம்மா கவலையுடன் இருக்க, கதவு தட்டப்படும் சத்தம்! அம்மா போய்க் கதவைத் திறந்தால் தூக்கமுடியாமல் பெரிய சாக்குப்பையைத் தூக்கிக் கொண்டு அப்பா! அப்பாவும் கூட்டாளிகளும் இரவில் மந்தைக்குப் போகும்போது, அந்த வழியே சந்தேகமான முறையில் ஒரு மாட்டு வண்டியில் சரக்கெல்லாம் போக, இவர்கள் சத்தம் போட்டு யாரென்று விசாரித்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துப் பயந்து அந்த வண்டிக்காரன் ஓடிப்போக, கிட்டப் போய்ப் பார்த்த போதுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, வண்டியில் போவது கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசி என்று. சோளத்துக்கும், ராகிக்குமே பஞ்சம் வந்துவிட்ட அந்த வறட்சிக்காலத்தில் மூட்டை மூட்டையாய் அரிசியைப் பார்த்ததும், தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறார்கள். சோத்துக்கு லாட்டரி அடிப்பது என்பது இதுதானோ? அந்தக் கடத்தல்காரன் புண்ணியத்தில் அந்த அரிசி சில நாள் எங்கள் வீட்டில் மணந்தது. ஆம், உண்மையைச் சொன்னால் நாற்றம்! நான்கைந்து முறை கழுவியபின் கொஞ்சம் வாசம் குறையும், அப்படியும் சோறு ஆக்கினால் சாப்பிட முடியாது. எனவே அது தீரும்வரை 'சந்தகை'யாய் (இடியாப்பம்) செய்து சாப்பிட்டோம். இந்த அரிசியை கடத்தி...அதையும் அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இருக்கிறதென்பது ஆச்சரியமாக இருந்தது.

இப்படி சில நாள் சந்தோஷமானாலும், நிறைய நாள் சோதனையே. அந்த வேளையில் என் பெரியப்பா (என் பெரியம்மா வீட்டுக்காரர்) உருவில் வந்தது பொள்ளாச்சியில் புதிதாக ஆரம்பித்திருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டுமானப்பிரிவில் (பாடிபில்டிங் யூனிட்) அப்பாவுக்கு ஒரு வேலை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மயில்சாமி பெரியப்பாவுக்கு நாங்கள் நிறையக் கடன்பட்டிருக்கிறோம்.

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0

எனக்கும் சரித்திரக் கதை எழுத ஒரு ஆசை. உண்மையில் 'அக்கினிச் சிறகுகள்' மாதிரி ஒரு சுய சரிதம் எழுத ஆசைதான். அதற்கு, முதலில் அப்துல் கலாமாக இருக்க வேண்டுமே. சுய சரிதம் எழுவதற்கு என்று யாரும் தகுதி நிர்ணயிக்கவில்லை என்பதனாலேயே நானெல்லாம் எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா? இருந்தாலும், நான் சந்தித்தவர்களிடையே காணக்கிடைத்த நல்லவர்களை நன்றியுடன் நினைவு கூர, அவர்களைப் பற்றி இங்கு எழுதி வைக்கிறேன். அவர்களோடு நானும் நடந்து வருவேன். என் பிள்ளைகளிடம் இந்தக் கதையெல்லாம் சொல்ல, அதை அவர்கள் புரிந்து கொள்ள, நேரமும், பொறுமையும், இன்ன பிறவும் இப்போது அமையவில்லை. நகரத்தில் பிறந்து, பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவை அதிகமின்றி வாழ்ந்த என் மனைவிக்கே இவற்றில் பலவும் புதிதாக இருக்கும். என் நெருங்கிய நண்பர்களுக்கே நான் இந்தக் கதைகளை முழுதும் சொன்னதில்லை. இதைப் பதிவு செய்வதின் மூலம் என்றாவது ஒருநாள் என் குழந்தைகள் படிக்கலாம் என்று நம்புகிறேன். படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்பன் பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைத் தெரிந்து கொள்ளவாவது என் குழந்தைகள் தமிழ் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். என் மகனைப் பற்றி எனக்கு பயமில்லை. மகள் தான் தமிழ் என்றால் 'பவுண்டு என்ன விலை?' (கிலோ என்ன விலை என்று கூடக் கேட்க மாட்டாள்;-) என்று கேட்கிற நிலையில் இருக்கிறாள். ஆனால் அவளும் வழிக்கு வந்துவிடுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறுவயதில் எனக்கு இருந்த ஏக்கங்களுக்கும், இழப்புகளுக்கும் ஈடு செய்யும்வகையில் எனக்கு வழிகாட்டிகளும், வாழ்வளித்தவர்களும் அமைந்தனர். என்னை வஞ்சித்தவர்கள் என்று யாரும் எனக்கு ஞாபகமில்லை, ஆனால் உதவி செய்தவர்கள், என்னைக் கைதூக்கிவிட்டவர்கள் என்று பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக வருகிறது. அவர்களில் முக்கியமான சிலரை ஒட்டிய நிகழ்ச்சிகளை நினைவு கூர, எழுத்துகளில் பதிக்க நான் முயல்கிறேன். இவை பெரும்பான்மையை பிரதிபலிக்காத ஒரு சாமானியனின் வாழ்க்கைப்பயணத்தின் சில நிகழ்வுகள். பல சமயங்களில், 'இது போதும், உள்ளதைக் கொண்டு சந்தோஷமாய் இருக்கலாம்' என்று நான் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் இதையெல்லாம் மீண்டும் நினைத்துப்பார்த்தால் நான் ஏன் அப்படி இருக்கிறேன் என்பது புரிகிறது. ஒருவேளை இதெல்லாம் நான் அப்படி இருப்பதற்காக சொல்லிக்கொள்ளும் சமாதானமோ? எது எப்படியோ, வாருங்கள் என்னோடு கைகோர்த்து. நான் நடந்துவந்த வடசித்துர், பொள்ளாச்சி, கோவை, சென்னை எல்லாப் பக்கமும் இன்னொரு முறை போய் வரலாம்.

செவ்வாய், ஜனவரி 06, 2004

நியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்

நேற்றும் நியூக்ளியஸ் சோதனை தொடர்ந்தது. 1and1.com என்ற புண்ணியவான்கள் தயவில் PHP மற்றும் MySQL வசதியுடன் ஒரு "கிட்டத்தட்ட" இலவச வழங்கிச் சேவை கிடைத்தது. அதில் நியூக்ளியஸை நிறுவி என் சோதனையைத் தொடர்ந்தேன். இதில் இன்று தெரிந்து கொண்டது.

1. PHP மற்றும் MySQL போன்றவற்றில் அனுபவம் இல்லாத என்னாலேயே சில நிமிடங்களில் நியூக்ளியஸ் நிரலியை என் வலைத்தளத்தில் நிறுவி, செயல்பட வைக்க முடிந்தது. எதுவுமே ஆரம்பிக்கும்வரை பயமாகத்தான் இருக்கும், ஆனால் ஆரம்பித்துவிட்டால் செய்வதற்குத் தேவையான அறிவும், வசதியும் தானாக அமைந்துவிடும் என்பதற்கு உதாரணம் இந்த இரண்டு நாளில் நான் செய்தது. இததனை நாள் ~5MB இடவசதி மட்டும் கொண்ட வழங்கி சேவை மட்டும் என்னிடம் இருந்தது. இப்போது, 500MB இட வசதி, PHP/MySQL உடன் ஒன்றை பிடித்து, அதில் இந்த மாதிரி ஒரு மென்பொருளையும் நிறுவி பயனுக்கு வந்தாகிவிட்டது. ஆகவே என்னை மாதிரி சாதாரண பயனர்கூட முயன்றால் செய்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னமும் நம் எல்லாருக்கும் இது சாத்தியப்படாது என்பதும் உண்மை.

2. அலங்காரக் குறிப்பை (நன்றி: கண்ணன்:-) - Style sheet - மாற்றி அமைப்பதன் மூலம் சில எளிய தோற்ற மாறுதல்களை செய்ய முடிகிறது. உதாரணமாய் நான் முயன்றது: பின்புல வண்ணம், எழுத்து வண்ணம், எழுத்துரு. ஆனாலும் ஆடையில் கைவைக்க இன்னும் பயமாக இருக்கிறது. அதில் கைவைத்தால் தான் பக்கத்தின் வடிவத்தை முழுதாய் நாம் விரும்பும் வண்ணம் மாற்ற முடியும். இதே அலங்காரக் குறிப்பை மாற்றி அமைப்பதன் மூலம் இயங்கு எழுத்துருவையும் பயன் படுத்த முடியும் என்று தொன்றுகிறது, இன்னும் சோதிக்கவில்லை.

3. வழக்கமான யுனிகோட் உரையின் நீளம் சம்பந்தமான பிரச்னைகள் இப்போதே வர ஆரம்பித்துவிட்டன. சாதாரணமாக நியூக்ளியஸ் கீழ்க்கண்ட உரை நீளங்களை அனுமதிக்கிறது.

வலைப்பதிவின் பெயர்: 60
இடுகையின் தலைப்பு: 160
கருத்து: 5000

ஏற்கனவே என் வலைப்பதிவின் அனுமார்வால் பெயர் (சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள்) வெட்டுப்பட்டுவிட்டது. ஏனென்றால் யுனிகோடில் ஒவ்வொரு எழுத்துக்கும் குறைந்தது 3 பைட்டுகள் எடுத்துகொள்ளும் (நன்றி: ரமணன்:-) எனவே அனுமதிக்கப்பட்ட 60 பைட்டுகளில் சுமார் 20 தமிழ் எழுத்துகள்தான் கொள்ளும். இன்னும் உயிர்-மெய் என்று கணக்கு இருக்கிறதென்று நினைக்கிறேன், எனவே 20க்கும் குறைவாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவகையில் இதுவும் நல்லதுதான் என்று சமாதானம் செய்துகொண்டேன். அப்படியாவது சுருக்கமான பெயர் வைக்கலாம்.

இதே போல் இடுகையின் தலைப்பும் சுமார் 50 எழுத்துகள் என்பது சில சமயம் ஒரு சிறைக்குள் அடைபட்ட உனர்வைத்தரலாம். இப்போதைக்கு அதற்குள் விளையாடலாம். கருத்தும் சுமார் 1500 எழுத்துகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் இது பெரிய குறையாகப் படவில்லை. இடுகையின் நீளத்திற்கு எதுவும் எல்லை இருப்பதாக எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை.

நியூக்ளியஸ் ஒரு திறவூற்றுச் செயலி என்பதால் இந்த நீளங்களே மாற்றி அமைக்கப் பட முடியலாம். ஆனால் என் சிற்றறிவுக்கு இதெல்லாம் இன்னும் எட்டவில்லை. ஆனால் தமிழுக்கென்று வரும்போது இவற்றை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

4. rss ஒடை சரியாக வேலை செய்வது போல்தான் தோன்றுகிறது. கண்ணன் சோதித்த மாதிரி நானும் bloglines மூலம் சோதித்தேன். முதலில் யுனிக்கொட் எழுத்துகள் கலங்கலாய்த் தான் தெரிந்தன. பிறகு சரியாகத் தெரிகின்றன. இன்னும் எனக்கு இதில்சில சந்தேகங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் தெளிந்துவிடும், எனவே அடுத்தவரைக் குழப்ப விரும்பவில்லை.

5. இடுகையை பதிப்பிக்கும் முன் வரைவாக சேமிக்க முடிகிறது. ஆனால் முழுத் தோற்றத்தையும் முன்பார்வையிட முடிவதில்லை. அதன் html வடிவம் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒருவர் இதற்கு என்று சில ஆடை மாற்றங்களை வெலியிட்டிருக்கிறார், ஆனால் எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.

இன்னும் சில நாட்கள் குடைந்தால் அனேகமாக ஒரளவிற்கு பிடிபடும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு சோதனை ஓட்டமாக சில நாட்கள் என் வலைப் பதிவை இரு தளங்களிலும் இணையாகப் பதிப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

திங்கள், ஜனவரி 05, 2004

நியூக்ளியஸ் வலைப்பதிவு மென்பொருள்


இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. முகுந்தராஜ் தயவில் கிடைத்த இந்த மென்பொருளைக் கொஞ்சம் குடைந்து பார்த்தேன். நான் தெரிந்து கொள்ளவேண்டியது இரண்டு.
1. இந்த மென்பொருள் எப்படி இயங்குகிறது, இதன் அமைப்புகள், வசதிகள் என்னென்ன.
2. தமிழுடன் இது எவ்வளவு சரியாக வேலை செய்கிறது, 'என் புருஷனும் கச்சேரிக்குப் போறான்' என்பதுபோல நானும் தமிழ்ப்'படுத்திய' இதன் கட்டளைச் சொற்கள் எந்த அளவுக்குப் புரிகின்றன, சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

வெள்ளி, ஜனவரி 02, 2004

சாமானிய சங்கீதம்

நண்பர் நா.கண்ணன் தன் வலைப்பூவில் சங்கீத நினைவுகள்-02 என்ற தலைப்பில் இன்று இசையரசி திருமதி. சுதா ரகுனாதன் அவர்களுடன் தன் சந்திப்பை நினைவு கூர்ந்திருக்கிறார். எங்கள் வீட்டிலும் கொஞ்சம் கர்நாடக இசைப் பாடல்கள் ஒலிக்கக் காரணம் சுதா ரகுனாதன் தான் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். கண்ணன் பாட்டுக்களில் ஈடுபாடு வந்தபிறகு கொஞ்சம் தேடி சுதா ரகுனாதனின் பாடல்களில் இருந்து சிலவற்றை Music India Online தளத்தில் கண்டு எடுத்தேன். இப்போது தினமும், ஏற்கனவே சொன்ன மூன்று பாசுரங்களுடன், சுதா ரகுனாதனின் பல கண்ணன் பாடல்களும் தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கின்றன.

ராகத்திற்கும், தாளத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கூடத் தெரியாதாகையால் இதிலெல்லாம் முன்பு ஒரு ஒட்டாமை (ஒவ்வாமை என்று கூடச் சொல்லலாம்) இருந்தது. இவரின் கண்ணன் பாடல்களைக் கேட்ட பிறகு அப்படி எந்த உணர்வும் இல்லாமல் விரைவில் பிடித்துப்போயிற்று. தமிழிசையின் பலமாகவும் இருக்கலாம். கண்ணன் மேல் ஏற்பட்ட பிடிப்பாகவும் இருக்கலாம். அற்புதமான வரிகளில் பாடல்களை அமைத்த ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர், பாபனாசம் சிவன், அருணாசலக் கவிராயர், போன்றோரின் இசைத் திறமையும் சொல்லாட்சியும் காரணமாய் இருக்கலாம். சுதா ரகுனாதனின் குரல் இனிமையாக இருக்கலாம். இல்லை எனக்கு வயசாகிவிட்டதால் கூட இருக்கலாம்:-)) ஆனால் இந்தப் பாடல்கள் மனதில் உட்கார்ந்துவிட்டது மட்டும் உண்மை.

தினமும் கேட்கிறோம், இதுவரை ஒரு 200 முறை கேட்டிருப்போம், இன்னும் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய்க் கேட்பதுபோல இருக்கிறது. இம்மாதிரி கற்பூர வாசனையை ஏன் என்னை மாதிரிக் கழுதைகள் எல்லாரும் அனுபவிக்கும் விதமாய் எல்லா இசைக்கலைஞர்களும் கொடுக்கக் கூடாது? அல்லது ஏற்கனவே கொடுக்கிறார்களோ என்னவோ, எனக்குத்தான் தெரியவில்லையோ? ஆண்களில் உன்னிகிருஷ்ணன் பாடிய நிறையத் தமிழ்ப் பாடல்கள் ஒரு 'பாகவதர்'பாடின மாதிரியில்லாமல் மனசோடு ஒட்டுகிறது. இன்னும் நிறையத் தேடிப் பிடிக்கவேண்டும். அதிலும் அந்த ஜகத்ஜனனி நன்றாகப் பிடித்துப் போயிற்று.

வானொலியைத் தொடர்ந்து கேட்ட அந்த நாட்களில் இந்த கர்நாடக இசை எதுவும் மனதில் ஒட்டவில்லை. இவர்கள் யாருக்கு வானொலி சேவை நடத்துகிறார்கள், என்னேரம் பார்த்தாலும் புரியாத மொழி, அல்லது ராக ஆலாபனை, ஒரு வார்த்தையை திருப்பித் திருப்பி ஜவ்வாக இழுத்து...உடனே ரேடியோப்பெட்டியை சிலோனுக்கு மாற்றிவிடுவோம், அல்லது அணைத்துவிடுவோம். வெகுஜன மக்களுக்கு அன்னியமாகிப் போய்விட்ட இந்த இசை வடிவத்தை, இம்மாதிரி தமிழ்ப் பாடல்கள் மனதின் அண்மைக்குக் கொண்டுவரும். இதைப் பாடகர்கள் புரிந்துகொண்டால் எல்லாருக்கும் நல்லது. நடக்கும் என்று நம்புவோம்.

நாங்கள் கேட்கும் அந்தப் பாடல்களைக் கேட்க விரும்புகிறவர்கள் இங்கே போனால் கேட்கலாம்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...