சனி, மார்ச் 08, 2008

மேதாவி மதனின் ஆணாதிக்க மனப்பான்மைக்குக் கண்டனம்!

உலக மகளிர் தினத்தன்று இதைப் படிக்க நேர்ந்ததும் என்னால் எரிச்சலை அடக்க முடியவில்லை.நீங்களும் படியுங்க:

கேள்வி: புத்திசாலிகூடத் தோற்கும் இடம் எது?
மதன் பதில்: பெண்ணிடம் மட்டுமே புத்திசாலி கூடத் தோற்பான்.

(ஆ.வி. மார்ச் 12,2008)

கொஞ்சம் பொறுங்க, பெண்ணிடம் தோற்றுபோன ஒரு 'புத்திசாலி' ஆணைப்பற்றியதல்ல என் எரிச்சல். 'புத்திசாலி' என்ற, இருபாலருக்கும் பொதுவான ஒரு சொல்லை வைத்துக்க் கேட்ட கேள்விக்கு இந்த மேதாவி மதன் அய்யா சொன்ன பதிலிலிருந்து 'புத்திசாலி' என்றாலே, by default, ஆண்தான் என்ற எண்ணம் வெளியாகவில்லையா? காட்டாக, 'கணவன் சம்பளத்தை வெளியிலே சொல்லலாமா?' என்று ஒரு கேள்வி வந்தால்,'கணவன்' என்ற சொல் ஒரு ஆணைத்தான் குறிக்கும் என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளலாம். 'புத்திசாலி' என்று பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு ஆணாதிக்கத்தில் ஊறிய ஒருவரே இந்த மாதிரி பதிலளிக்கமுடியும். மதன் மன்னிப்புக் கேட்கவேண்டும். அபத்தமான ஹாய் மதனை ஆ.வி. நிறுத்தவேண்டும். ஆ.வி.யையே நிறுத்த நாள் பார்த்துக்கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது!

26 கருத்துகள்:

manjoorraja சொன்னது…

மதன் என்ன நினைத்து எழுதியிருந்தாலும் புத்திசாலி என்பது இரு பாலருக்குமே பொருந்தும் ஒரு வார்த்தை.

ஆகவே மதன் தன் தவறை புரிந்துக்கொண்டால் நல்லது.

G.Ragavan சொன்னது…

:) அதானே.. புத்திசாலி அப்படீங்குறது இருபாற்சொல்தானே. கேள்வியைக் கேட்டவன் யோசிக்காம தோற்பான்னு கேட்டா...அதைத் தேர்ந்தெடுத்து இப்பிடியொரு பதிலைச் சொல்லனுமா? வரவர மதன் பதில்கள் சவசவ.

பெயரில்லா சொன்னது…

//மதன் மன்னிப்புக் கேட்கவேண்டும். //

He has better things to do than reading your blogs! Such cheap writings against a great cartoonist and writer of our time only shows how biased you are :-)

Kasi Arumugam சொன்னது…

ராசா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜீரா, 'தோற்பான்' என்று கேள்விகேட்டவர் கேட்கவில்லை. அவர் பால்சார்பு இன்றித்தான் கேட்டிருக்கிறார். பதில்சொன்னவர்தான் தன்னை மறந்து இப்படிப் பிதற்றியிருக்கிறார்.

anonymous arinjarE,

I know what better thing he has, and who are all reading blogs without telling others that they are reading!:P

I admire him as a great cartoonist, and wish him continue to treat us with his cartoons (ONLY), period. Thanks for putting aside your better things and visiting this blog. Keep coming:-)

பெயரில்லா சொன்னது…

யார கோளாறு சொல்லலாமுன்னு ரூம் போட்டு யோசிப்பிங்களோ

ரவி சொன்னது…

ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டீங்க...இதே மாதிரி திரு.சந்துமணி அவர்களும் அபத்த பதில் அளிப்பதையே தொழிலாக வைத்துள்ளார்...

Kasi Arumugam சொன்னது…

// யார கோளாறு சொல்லலாமுன்னு ரூம் போட்டு யோசிப்பிங்களோ//

லட்சம் பேர் படிக்கும் பத்திரி்கையில் எழுதுற ஆள் தனியா ரூம் போடாட்டியும், பாத்ரூமுக்குள்ள போகும்போது யோசித்திருந்தாக்கூட இப்படி எழுத மாட்டார். இதில இந்த அபத்தத்தை கண்டிக்க ரூம் போட்டு யோசிக்கணுமாக்கும்! படிச்ச அஞ்சாவது நிமிடத்தில் எழுதின இடுகைங்க இது. நாங்கள்லாம் ரூம் போட்டு யோசிச்சாத் தாங்க மாட்டீங்க:-)

Kasi Arumugam சொன்னது…

ரவி,

அந்துமணி மேல் பெரிதாக என்றைக்கும் மதிப்பு இருந்த்திலை. ஆனால் ஒரு அனானிமஸ் சொன்னதுபோல மதன் ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் என்ற வகையில் மரியாதைக்குரியவர். ஒருத்தரின் ஒரு திறமையினால் கவரப்பட்டு அவரை இன்னொன்றுக்கும் தகுதியானவராய் வரித்துக்கொள்ளும் நிலைமை இங்கே சாதாரணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

மதன் சொன்னது ஆணாதிக்கம் தான்.

இதுபோன்று கண்ணதாசன் கொஞ்சம் லைட்டாக வேறு மாதிரி சொல்லி இருக்கிறார்.

"எந்த ஒரு புத்திசாலியையும் வீழ்த்தும் ஆற்றல் பெண்ணுக்கு இருப்பதால், பெண்ணே புத்திசாலி" என்று

-L-L-D-a-s-u சொன்னது…

//ஒருத்தரின் ஒரு திறமையினால் கவரப்பட்டு அவரை இன்னொன்றுக்கும் தகுதியானவராய் வரித்துக்கொள்ளும் நிலைமை இங்கே சாதாரணம்.//

Repeattuuu

சரவணன் சொன்னது…

///அபத்தமான ஹாய் மதனை ஆ.வி. நிறுத்தவேண்டும். ஆ.வி.யையே நிறுத்த நாள் பார்த்துக்கொண்டிருக்கையில் ///

அருமை! மதன் என்றைக்குமே தன் பதில்களில் எழுத்துலக தார்மீகங்களைக் கடைப்பிடிப்பதில்லை. 'இப்படித்தான் போன வாரம் நியூயார்க்கில் ஒருவர்...' என்று பதில் போகும்; அச்செய்தி வெளியான இடம் நியூயார்க் டைம்ஸ் என்ற தகவல் இருக்காது! ஏதோ தானே நேரில் பார்த்த மாதிரி எழுதியிருப்பார்.

முன்பு ஒருமுறை ஒருவர் 'முற்போக்கு இலக்கியம்' என்றால் என்ன? என்று கேட்டதற்குப் பதிலாக, ஒரு மனிதன் சிறுநீர் கழிக்கும் கார்டூனைப் போட்டு 'இதுதான் முற்போக்கு' என்று பதில் சொல்லித் தன் வெறுப்பை வெளியிட்டார்.

முற்போக்கு இலக்கியம் [தமிழ்] பற்றி எனக்கே கடும் விமரிசனம் உண்டு. ஆனாலும். உலக மொழிகள் பலவற்றிலும் அப்படி அழைக்கப்படும் இடதுசாரி எழுத்து உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. 'சாதத் ஹசன் மண்டோ' போல உருது முற்போக்கு இலக்கியத்தில் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது உலகறிந்தது. அதனை இவ்வளவு அலட்சியமாக எல்லல் செய்வது மதனுக்கே சாத்தியம்.

Kasi Arumugam சொன்னது…

அனானி ஆங்கில அறிஞரே,
உம்ம காமெண்ட்டை ரிலீஸ் பண்ணமுடியாது. என்னைத்திட்டுறதா நினைச்சு உம்ம ஷேக்ஸ்பியர் இங்கிலீசில எங்கம்மாவைத் திட்டற பாத்தியா! நீ எத்தனை முகமூடி போட்டுக்கிட்டாலும் இன்னும் இந்த ஈனப்புத்தி போகமாட்டேங்குது பாத்தியா! உங்கம்மாவை நினைச்சா பரிதாபமா இருக்குப்பா.

ஓகை சொன்னது…

வணக்கம். மதன் என்னையும் பல நேரங்களில் கடுப்பேற்றியிருக்கிறார். ஆனால் இந்த சிறிய தவறுக்கு இவ்வளவு சீற்றம் அதிகம் போலத் தோன்றுகிறதே!

புத்திசாலி ஆண் பெண்ணிடம் தோற்பான் ஆனால் புத்திசாலிப் பெண் தோற்பதே இல்லை என்றும் பொருள் காணலாம் அல்லவா?

PRABHU RAJADURAI சொன்னது…

காசி,
'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று தொடங்கும் வைரமுத்துவின் பாடலும் இதே ரகம்தான்.

ஆண்களே உலகம், பெண்கள் அவர்களை சந்தோஷிக்க வந்த பொருட்கள் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வஞ்சபுகழ்ச்சிகள்!

ஆயினும் மதனுக்கோ, வைரமுத்துவுக்கோ எவ்வித உள்நோக்கமும் இல்லை.

பதிவு சம்பந்தமில்லாதது...மதன் இங்கு பலர் குறிப்பிட்டது போல சிறந்த கார்ட்டூனிஸ்டா?

கார்ட்டூன் என்பது, படம் வரையும் கலை மட்டுமல்ல என்பது ஆர்.கே.லக்ஷ்மணனை தொடர்ந்தால் புரியும்...எனக்கு விவாதிக்க நேரமில்லை:-))

Kasi Arumugam சொன்னது…

கோவி.கண்ணன், தாசு, சரவணன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஓகை,
வணக்கம், வாங்க:-)

//ஆனால் இந்த சிறிய தவறுக்கு இவ்வளவு சீற்றம் அதிகம் போலத் தோன்றுகிறதே!// ஆமாம், அதிகம் தான், சும்மா ஒரு சோதனைக்கு காரத்தைக் கூட்டி சமைத்திருக்கிறேன்:-)


//புத்திசாலி ஆண் பெண்ணிடம் தோற்பான் ஆனால் புத்திசாலிப் பெண் தோற்பதே இல்லை என்றும் பொருள் காணலாம் அல்லவா?// மன்னிச்சுக்குங்க, இது அப்பட்டமான சப்பைக்கட்டு.

பிரபு,

ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் 99.9% பேரும் உள்நோக்கத்துடனெல்லாம் செய்வதில்லை. (ஆசிப்பு, மோகனெல்லாம் சுவாரசியத்துக்காக சொல்வதெல்லாம் விட்டுறலாம், உண்மையில் அவங்க தன்மை எனக்குத் தெரியும்:P) ஆனால், அதுதான் உலக இயல்பு என்ற, மாற்றுப் பிரக்ஞை அற்ற நிலையிலேயே அப்படிச் செய்கிறார்கள். அதன்மூலம் இந்த 'இயல்புத்தன்மை'க்கு மேலும் உரமிடுகிறார்கள். ஒரு தனிமனிதனைவிட, பெரும் வீச்சுக் கிடைக்கப்பெற்ற பத்திரியாளர்கள், கலைஞர்கள் இத்தகைய இயல்பை மிக எளிதில் கட்டமைக்கிறார்கள், எனவே அவர்களின் இத்தகைய செய்கை கண்டிக்கப்படுவது அவசியமென்றே நான் நம்புகிறேன்.

இங்கே என்னைத் தூற்றி எழுதிய அந்த மேட்டிமைக்காரன் கூட என் அம்மாவை வைத்து என்னை வைவது அவனின் ('பெண் ஒரு உடைமை') என்ற ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே.

Kasi Arumugam சொன்னது…

//மதன் இங்கு பலர் குறிப்பிட்டது போல சிறந்த கார்ட்டூனிஸ்டா?//

என் பார்வையில் மதன் நிச்சயம் //ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட்// தான் பிரபு:) பெரிதாக விளக்கமெல்லாம் சொல்லத்தெரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

காசி அண்ணாச்சி

நீங்க ஒரு பெண்ணாதிக்கவாதி. உங்களை ஒடுக்கப்பட்ட ஆண்கள் சார்பாக வன்மையாகக் கண்டித்து இணையப் பேரணி நடத்தலாம்னு இருக்கேன். ஏதாவது உதவி செய்ய முடியுமா? :-)

சாத்தான்குளத்தான்

Kasi Arumugam சொன்னது…

மொக்கைக்கு இங்கே இடமில்லை ஆசிப். இன்னொரு நாள் வேறு ஒரு இடத்துல் பாக்கலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கலாம்:)

enRenRum-anbudan.BALA சொன்னது…

மதனின் இந்த பதிலில் "உள் நோக்கம்" இருப்பதாக நான் நினைக்கவில்லை, காசி !
அதே சமயம், தன்னை அறிவுஜீவி என்று நினைத்துக் கொண்டு அவர் கொஞ்சம் லூட்டி அடிப்பது நடந்து கொண்டு தான் உள்ளது ! நல்ல கார்ட்டூனிஸ்ட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது:

சுஜாதா இரங்கல் கூட்டத்தில் பேசப்பட்டவற்றை தொகுத்து பதிவுகள் இட்டுள்ளேன். வாசிக்கவும்.

எ.அ.பாலா

கல்வெட்டு சொன்னது…

காசி,
//ஒருத்தரின் ஒரு திறமையினால் கவரப்பட்டு அவரை இன்னொன்றுக்கும் தகுதியானவராய் வரித்துக்கொள்ளும் நிலைமை இங்கே சாதாரணம்.//

நச்...

அதுதான் இங்கே நிறைய நடக்குது.

மதன் மட்டும் அல்ல , ஞாநி-யின் பாலியல் தொடரும் அப்படி வந்ததுவே. அவரின் ஓ பக்கங்களின் செல்வாக்கைப் பார்த்து சும்மா இதையும் எழுதுங்க என்று சொல்லியிருப்பார்கள்.

***

மதன்..

இவர் அஒரு நல்ல ஓவியர். (கார்ட்டூனிஸ்ட்... ம்ம் .. பிரபு இராஜதுரை சொன்னதுதான்)

இவரை தடாலடியாக வரலாற்று ஆசிரியராக்கி ,தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்ல வைத்தார்கள்.

ஆய் மதனில் இவர் சொல்வதை எழுத்து ஒவியமாக எடுத்து சிரித்துக் கொள்ளலாமே தவிர சிந்திக்கக்கூடாது :-))

**

தொழில் ரீதியாக கேள்வி-பதில் என்று நாம் சொல்ல ஆரம்பித்தால்கூட இப்படி ஏதாவது ஒன்றை உளர ஆரம்பிப்போம் என்றே நினைக்கிறேன்.

எதையாவது அந்த வாரத்திற்கு பக்கத்தை நிரப்ப வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போது சிந்தனை வரட்சி ஏற்படும் யாராக இருந்தாலும்.

Kasi Arumugam சொன்னது…

கருத்துக்கு நன்றி, பாலா,

//மதனின் இந்த பதிலில் "உள் நோக்கம்" இருப்பதாக நான் நினைக்கவில்லை//

நானும் நினைக்கவில்லை, அப்படிச் சொல்லவில்லை; அதற்கும் கண்டனத்துக்கும் சம்பந்தமுமில்லை:)

சுஜாதா இரங்கல் கூட்டப் பதிவுகள் பார்த்தேன். நன்றி, திகட்டுகிறது, சில சமயம் புன்முறுவலூடே ரசிக்கமுடிகிறது.

கல்வெட்டு,

கருத்துக்கு நன்றி. //தொழில் ரீதியாக கேள்வி-பதில் என்று நாம் சொல்ல ஆரம்பித்தால்கூட இப்படி ஏதாவது ஒன்றை உளர ஆரம்பிப்போம் என்றே நினைக்கிறேன்.// மெத்தச் சரி.

பெயரில்லா சொன்னது…

//மதன் மன்னிப்புக் கேட்கவேண்டும். அபத்தமான ஹாய் மதனை ஆ.வி. நிறுத்தவேண்டும். ஆ.வி.யையே நிறுத்த நாள் பார்த்துக்கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது!//

I think Madhan did not really have any intention while writing answer to this question. And yes, as a male he thinks from a male perspective. Is'nt it natural for him to answer that way?. Had somebody asked the same question, you would probably thought in the same line. Now you are acting as though you are too good (romba nallavana nadikareenga).

On the other hand, i too have a feeling that had he considered the word "intellignt" as common to both gender, it would have been better. However, you must understand that there is no perfect answer to such questions. Answers depend on individual's experience and surrounding. While condemning the "less correct" answer be alright, asking Madhan to apologise is way too much.

You know these things very well - in fact better than me. But you want to feel important by criticising "Hai Madhan". Probably you are thought paralysed by the famous five minute fame.

Hey my friend Kasi, we afterall are humans and we tend to make mistakes. Dont take Madhan's answers this seriously. Good luck. :)

anony munna

கிரி சொன்னது…

அன்பு காசி மதன் அந்த எண்ணத்தில் கூறி இருப்பதாக எனக்கு தோன்ற வில்லை. அப்படி கூறி இருந்தால் நான் அதை ஆதரிக்கவில்லை. இது பொதுவாக அனைவரும் அறியாமல் கூறுவது தான், தொடர் பழக்கத்தினால். இந்நிலை கூடிய விரைவில் மாறும் என்று கருதுகிறேன். மதன் ஒரு சிறந்த கார்ட்டூன் வரைபவர் அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் எனக்கு கிடையாது. ஆனால் கேள்வி பதில்களில் சில சமயம் நம்மை அறியாமலே தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு, பொது வாழ்வில் உள்ளவர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது தான்......இது தவிர உங்களுடைய வலைதள செய்திகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நன்றிகள் பல. எனக்கு இப்போது தோன்றிய எண்ணம் அல்லது முயற்சி உங்களுக்கு 5 வருடம் முன்பே தோன்றியதை நினைத்து உங்களை மனதார பாராட்டுகிறேன், என்னுடைய பின் தங்கிய நிலை அல்லது வலை பற்றிய அறிவு இல்லாமையை (கணிப்பொறி துறையில் இருந்தும்) நினைத்து மனம் நொந்தேன். சரி லேட் ஆகா வந்தாலும் லேட்டஸ்ட் ஆகா வர முயற்சிக்கிறேன் :). என் முயற்சிக்கு உங்கள் வாழ்த்து தேவை.

Kasi Arumugam சொன்னது…

அனானி முன்னா, கிரிராஜ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஒரு பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது, டிரைவர் குடித்திருப்பது தெரிந்து, 'எப்படிக் குடித்துவிட்டு வண்டியோட்டலாம்?' என்று நான் கேட்டால், என் நண்பர்கள் 'விடுப்பா, நம்மள்ள கூட எத்தனை பேரு குடிக்கிறது சகஜந்தானே, அவர மட்டும் ஏன் குத்தஞ் சொல்லுறே'ன்னு என்னைப்பாத்துக் கேட்டா என்ன சொல்வது? 'அய்யா, அவர் குடிக்க விரும்பினால் குடிக்கட்டும், டூட்டி முடிஞ்சு பொறுப்பை ஒப்படைச்சுட்டு சவுரியமா போய்க் குடிக்கட்டும், பொறுப்பில இருந்துட்டு இப்படிச் செய்யக்கூடாது'ன்னு நான் சொல்வேன், நீங்கள் எப்படிச் சொல்வீர்கள் நண்பர்களே? மதன் தன் நண்பர்களுடன், பார்ட்டிகளில் எப்படியோ இருக்கட்டும். லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட ஒரு முன்னணிப் பத்திரிகையில் பத்தியாளராக, அபிப்ராயங்களை உருவாக்க, மாற்றியமைக்க வாய்ப்புள்ள ஒரு பொறுப்பிலிருந்து இப்படிச் செய்வது சரியல்ல.

மதனின் பார்வையில் வெளிப்பட்ட கருத்து கண்டனத்துக்குரியது. அது உள்நோக்கமோ இல்லையோ, தெரிந்தோ, தெரியாமலோ, நாமும் செய்வதாலோ, நாம் செய்யாததாலோ, தவறு! கண்டிக்கிறேன்!

என் கண்டனம் என்ன செய்யும்?

நான் வர மாட்டேன் என்று கீழே இறங்கிவிடுவதால் எல்லாரும் பஸ்ஸிலிருந்து இறங்கிவிடுவார்கள் என்று நம்புமளவுக்கு நான் ஏமாளியுமல்ல. எதுவானால் எனக்கென்ன என்று சும்மா இருக்க நான் கோமாளியுமல்ல.

manikandan சொன்னது…

இதில் என்ன ஆணாதிக்க போக்கை கண்டீர்கள் ?

இதன் உள்ளர்த்தம் என்னவெனில் ஆண்களை விட பெண்கள் புத்திசாலி என்பதே. இதில் எனக்கு பெண்ணாதிக்கம் தான் தெரிகிறது. இந்த பதிலை படித்த எனது அவள் "பார்த்தாயா" என்றால்.

ஆணாதிக்கத்தில் ஊறிய ஒருவரே இதனை இப்படி புரிந்துகொள்ள முடியும் என்று நான் சொல்கிறேன். தங்களின் பதில் ?

மதன் மற்றும் ஆவியை நிறுத்திவிட்டால் ஆதிக்க கருத்துக்கள் நின்றுவிடுமா ?

பிரபு ஐயா, தமிழ்நாட்டில் எழுத்தில் காணப்படும் கருத்து சுதந்திரம் இன்னும் கார்ட்டூன்களுக்கு வந்து சேரவில்லை. எதையாவது வரைந்து தொலைத்தால் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவார்கள்.

இது போன்ற கேள்வி/பதில்களில் ஒருவர் அவருடைய கருத்தை சொல்கிறார்கள். பிடித்தால் படியுங்கள் இல்லையேல் கிழித்து குப்பைதொட்டியில் போடுங்கள்.

எதையாவது அந்த வாரத்திற்கு பக்கத்தை நிரப்ப வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போது சிந்தனை வரட்சி ஏற்படும் யாராக இருந்தாலும்.

நிச்சயமாக. அது கூட இந்த உளறல் பதிலுக்கு காரணமாக இருக்கலாம்.
விலை கொடுத்து வாங்கி கிழிக்க வேண்டி இருக்கிறது.

Suchi MML சொன்னது…

எனதான் சொனாலும் பெண்ணை புத்திசாலியாக வைத்திருப்பது நல்லதல்ல . ஒரு உறைக்குள் ஒரு கத்திதான் இருக்கவேண்டும்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...