புதன், ஜூலை 08, 2009

சிந்தாநதி

சிந்தாநதியுடனான என் தொடர்பு சுமார் ஐந்தாண்டுகளாகத் தொடர்வது.

எழுத்தார்வம், கணிமை நுட்பம், ஊடகங்கள் பற்றிய தெளிவு, அனைத்துக்கும் மேலாகத் தமிழ்மேல் ஆழ்ந்த பற்று இவை ஒருங்கே அமையப் பெற்றவர் சிந்தாநதி. அனுராக் என்ற பெயரில், வலைஞன் என்ற வலைப்பதிவை நடத்தியபோது அறிமுகமானார். பின் ஒரு புதுமையான உருவமாக வெளிப்பட விரும்பி, சிந்தாநதி என்ற பெயரிலேயே கடந்த 3 - 4 ஆண்டுகளாக அறியப்படுபவர். பலமுறை மின்னஞ்சலூடாகவும், மின் அரட்டையூடாகவும் எண்ணங்களைப் பரிமாறிக்கொன்டிருந்தோம். பலமுறை போனில் பேசியிருக்கிறோம். நேரில் சந்திக்காவிட்டாலும் பழகுவதற்கு இனிய நண்பராகவும், கண்ணியமும் மதிப்பும் பொறுமையும் சக மனித உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் தன்மையும் அவரிடத்தில் நான் கண்டு வியந்தவை.
கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் வலை உலகில் நடப்பவற்றில் அதிகம் ஈடுபடமுடியாததால் இப்போது அதிகம் பேசவோ ஊடாடவோ இயலுவதில்லை. ஒருமுறை மின்னஞ்சலிலும் போனிலும் பிடிக்கமுடியாமல் 'சிந்தாநதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்' என்று என் வலைப்பதிவில் கூவியும் இருக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் மீன்டும் ஒருமுறை போனில் அழைத்தார். நீண்ட நேரம் பேச வாய்க்கவில்லை. எதோ ஒரு நுட்ப சிக்கலுக்கு விடை கேட்டார். தமிழ் தட்டுவதற்கே பொங்குதமிழ் தேடும் நிலையில் நானிருக்கையில் அவருக்கு என்ன சொல்லமுடியும்? என்னவோ சொன்னேன். அது பலித்ததா என்றுகூட நினைவில்லை.

உமர்தம்பியையும், சாகரனையும் கலந்து செய்த வார்ப்பாம் சிந்தாநதி, அவர்களைப் போலவே தமிழ் கணிமைக்காக, தமிழ் வலைக்காக தன் உழைப்பைச் செலவிட்டார். இது பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குழும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

7 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

உங்கள் முந்தைய இடுகையும் சிந்தாநதி குறித்து :( திரும்பி வந்தவர் இப்படி மறைவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை :(

Jayaprakash Sampath சொன்னது…

மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

சிந்தாநதி தான் அனுராக் / வலைஞன் என்கிற விஷயம் இப்போதுதான் தெரியும். அனுராக் ஆக அவர் வலைப்பதிந்து கொண்டிருந்த காலத்தில், பின்னூட்டங்கள் மூலமாக உரையாடியதுண்டு. தமிழ்ப் பதிவர் பட்டறையின் பொழுது, கூகிள் குழுமத்திலும் உரையாடியதுண்டு. தமிழ்க்கணிமையில் நிசமான ஆர்வம் கொண்டவர்.

அனுராக் அவதாரத்தின் பொழுது, தமிழ்மணம் நட்சதிரம் ஆக்கப்பட்டார். அந்த அறிமுகத்தில், அவர் இளம் வயதில் இருந்தே உடல் நோய்வாய்ப்பட்டவர் என்று எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மறைவு என்று தோன்றுகிறது.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் மண நட்சத்திரமாக இருந்த பொழுது, அவர் தந்த சுயவிபரம் இங்கே :

Boston Bala சொன்னது…

அஞ்சலி :(

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

அதிர்ச்சியாய் இருக்கிறது. :-(

சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

DJ சொன்னது…

க‌வ‌லை த‌ரும் செய்தி :-(

இரா.சுகுமாரன் சொன்னது…

ஒரு கவலை தரும் செய்தியாக உள்ளது.

அன்று ஒரு நாள் இரவு நெடுநேரம் தூங்காமல் இணைப்பில் இருந்தார். ஏன் இவ்வளவு நேரம் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற போது என்ன செய்வது மின்சாரம் இப்போது தான் வந்தது என்று சொன்னார்.

அதன் பின் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

manjoorraja சொன்னது…

இணையம் மூலம் கிடைத்த நல்ல நண்பர்கள் பலரில் சிந்தாநதியும் ஒருவர். அவருடன் பலமுறை கூகில் சாட்டில் உரையாடியிருக்கிறேன். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு மிகுதியாக இருந்தது. உடல்நலக்குறைவினாலேயே அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நல்லதொரு இணையம் தாண்டிய நண்பரை இழந்துவிட்டோம்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...