செவ்வாய், ஜனவரி 22, 2008

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை சற்றுமுன் கண்டேன். (நன்றி: ஸ்ரீனிவாசன்) சில உடனடியான கருத்துக்கள்:

நல்ல ஸ்கிரிப்ட். பொதுவாக வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாத/அரைகுறையாகத்தெரிந்த ஒருவருக்கு நன்றாகப் புரியவைக்க இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பணியாற்றியிருக்கிறது. தயாரித்தவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்.

சில குறைகள்: (அதானே, அது இல்லாமலா?:-))
  • முற்பாதியில் எழுத்தாளர்கள் தொல்லை அதிகம். 'பத்திரிகைகளில் இடம் கிடைக்காத புனைவு எழுத்துக்களுக்குத்தான் வலைப்பதிவுகளே' என்று ஐயுறும் அளவுக்கு கதை,கவிதை என்று போனது,பிற்பாதியில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் மனுஷயபுத்திரனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் விடவும் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் *சென்னையிலேயே* இருக்கிறார்களே இன்னும் ஏன் எழுத்தாளர்கள் பிரேமை என்றுதான் தெரியவில்லை. இவங்க தொல்லை தாங்கமுடியலப்பா! :-)
  • தமிழ்மணத்தைப் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டது, அடுத்த முறை சரிசெய்யப்பட்டு விடும்:-) அப்போதுகூட தமிழ்மணம் இணையத்தில் சுயம்புவாக இருக்கவில்லை என்பதும், ஒரு வேலைகெட்டவன் செய்தான் என்பதையும் சொல்லியிருக்கலாம். (அதுசரி அவன்தான் சென்னையில் இல்லையே, சென்னையில் இருப்பது என்ற அடிப்படைத் தகுதிகூட இல்லாதவனைப் பற்றியெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது!:P) இன்னொன்றும் சொல்லிக்கணும்: 'உலகின் முதல் திரட்டி'க்கெல்லாம் நான் பொறுப்பில்லை, மா.சி.யின் கருத்து. ('சரி' போலத்தான் தோணுது!)
  • பத்ரியின் விளக்கம் நன்றாக இருந்தது. புனைவுகளை விடுத்து பொதுவாகக் குறிப்பிட்டதும் சேர்த்து.கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். மா.சி. சொன்னதும் புனைவுகளைப் பற்றி அதிகமில்லாததால் நன்றாக இருந்தது. (ஜால்ரா என்று சில வக்கிரங்கள் சொல்லட்டும, கவலையில்லை)
  • சில முக்கியமான யு.ஆர்.எல்.களை பெரிய எழுத்தில் காட்டியிருக்கலாம். அது காரணத்தோடுதான் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  • தமிழில் எல்லாரும் எழுதணும் என்ற ஸ்ரீனிவாசனின் அழைப்புக்கு ஒரு சபாஷ். வலைப்பதிவு என்று சொல்லாமல் ப்ளாக் என்றே பேசியதற்கு ஒரு குட்டு! (தலைப்புக்கு அர்த்தம் வந்தாச்சா?:-))

23 கருத்துகள்:

மு. மயூரன் சொன்னது…

//ஆனாலும் மனுஷயபுத்திரனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் விடவும் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் *சென்னையிலேயே* இருக்கிறார்களே இன்னும் ஏன் எழுத்தாளர்கள் பிரேமை என்றுதான் தெரியவில்லை. இவங்க தொல்லை தாங்கமுடியலப்பா! :-)//


அருமையான விமர்சனம்.
இந்தப்போக்குக்குறித்த நெடிய சலிப்பும் கோபமும் எனக்கிருக்கிறது.

ILA (a) இளா சொன்னது…

அண்ணாத்த முழு வேகத்துல இருக்கீங்க போல (Full form)

இராம்/Raam சொன்னது…

//கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். //



ஓ... அப்போ அந்த ராசி எழுமலை நீங்கதானா????? :D :D :D

துளசி கோபால் சொன்னது…

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லைன்னு இருக்கு காசி:-))))

அதுவரை மக்கள் வலைப்பதிவுகளைப் பற்றிக் கொஞ்சமாவேனும் தெரிஞ்சுக்க வகை செஞ்சுருக்காங்களே.

நம்ம சீனிவாசனும் பதிவு & இடுகைலே கொஞ்சம் குழம்பிட்டாரோன்னு தோணுச்சு.

பரவாயில்லை. இந்தவரை எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி தொலைக்காட்சியில் வந்ததைப் போட்டுருக்கார். இதுலே தானம் கொடுத்த மாட்டை......

வேணுமா?:-))))

மத்தபடி சென்னையில் இல்லாதவரைக் குறிப்பிடலைன்னு நானும் கவனிச்சேன்.....:-))))

Kasi Arumugam சொன்னது…

மயூரன், ஒத்த அலைவரிசை:-)

இளா, இப்படித்தான் கொஞ்சநாள் முந்தி வேற ஒருத்தரும் சொன்னார். இன்னிக்கு எனக்கு திரிபுப்பெயர் வைத்து சந்தோசப்பட்டுக்கிறார். நான் என்னிக்கி நின்னு ஆடினேன்,. எல்லாம் ஃப்லூக் தான்;-)

இராம், உலகமே ஒரு நாடகமேடை:P

துளசி, அட நான் என்னங்க சீனிவாசனைப்பத்திச் சொல்லிட்டேன் இப்ப பழமொழியெல்லாம் இழுக்குறீங்க? இதுகூட சொல்லைன்னா பிறகென்ன வலைப்பதிவு. எல்லார்கிட்டயும் ஆமாம் போட்டு 'பின்னூட்ட நாயகன்' பட்டமெல்லாம் வாங்கி எங்க மாட்டிவைக்கிறது?;-))

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...

//கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். //



ஓ... அப்போ அந்த ராசி எழுமலை நீங்கதானா?????
//

ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்....
:)

துளசி கோபால் சொன்னது…

//'பின்னூட்ட நாயகன்' பட்டமெல்லாம் வாங்கி எங்க மாட்டிவைக்கிறது?;-))//

அது சரி:-)))))))))))))))))))))))

Unknown சொன்னது…

காசி,
//மனுஷயபுத்திரனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் விடவும் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் *சென்னையிலேயே* இருக்கிறார்களே//

இன்னும் வலைப்பதிவை அச்சு ஊடகத்திற்கு மாற்றாகவும், அச்சு ஊடகத்தில் எழுதமுடியாதவர்கள் இங்கே எழுதுவதாகவும்,இங்கெ எழுதுபவர்கள் எல்லாம் அச்சு ஊடகத்தை அடுத்த குறிக்கோளாக கொண்டுள்ளார்கள் என்பது போலவும் .. இலக்கியவியாதி வகையறாக்களால் கட்டமைக்கப்படுகிறது.

அதனாலேயே இன்னும் பழைய எழுத்து வியாபாரிகள் (Writing professionals....who writes for living)வலைப்பதிவை அவர்களின் அச்சு ஊடகக் கண்ணாடி வழியாகவே பார்க்கிறார்கள். பல நேரங்களில் இந்தக் கண்ணாடிதான் அவர்களை எழுத அறிவுரை சொல்ல வைக்கிறது.

கட்டமைக்கப்பட்ட பழைய இலக்கணங்களின் சட்டகத்திற்குள்ளேயே அனைவரையும் பார்ப்பது என்பது ,புதிய சிந்தனைகளை தடுக்கும்.

வலைப்பதிவு என்பது ஒரு சுதந்திரமான ஒன்று. கேட்க யாரும் இல்லாவிட்டாலும் பார்க்-ல் ஸ்டூல் மேல் நின்று பேசுவதைப்போல.

**

// இதுகூட சொல்லைன்னா பிறகென்ன வலைப்பதிவு. எல்லார்கிட்டயும் ஆமாம் போட்டு 'பின்னூட்ட நாயகன்' பட்டமெல்லாம் வாங்கி எங்க மாட்டிவைக்கிறது? //

:-))

பெயரில்லா சொன்னது…

அதானே ? ஏன் காட்டலை ? ஏன் சொல்லலை ? ஏன் வரலை ? ஏன் விடலை ?

(எப்படியோ, எல்லா கேள்வியும் கேட்டுட்டேன்..)

லக்கிலுக் சொன்னது…

////கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். //

ஆமாண்ணே. யாரு அது? அர்னால்டு பாடி, பரமசிவன் அஜித் பேஸ்கட்டில் பார்க்க அழகா இருந்தாரே?

பி.கு : ராசி ஏழுமலையை பற்றியும் கிருஷ்ணகுமார் ஏதோ சொன்னாராம். அது தேவையில்லைன்னு எடிட் பண்ணிட்டாங்கன்னு ஒரு வதந்தி இருக்கே? மெய்யாலுமா?

பி.குக்கு பி.கு : நிகழ்ச்சியை தயாரித்தவர் இதற்கு முன்பாக விஜய் டிவியில் “நிஜம்” நிகழ்ச்சியை தயாரித்தவராம். குழந்தைப் பதிவருக்கும், இந்நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்புமில்லையாம். குழந்தை மெயின்லே இருக்காம். நிகழ்ச்சி வந்தது 24 ஹவர்ஸிலாம்.

தோசை, ராசி ஏழுமலை பதிவர்களையும் பேட்டி எடுக்க சொன்னபோது “கோயமுத்தூருக்கு போக டைமில்லே பாசு” என்று நிகழ்ச்சி தயாரித்தவர் சொன்னாராம். இதனால் தான் ‘ஜன்னல் பாலனின்' பேட்டியும் கூட எடுக்கமுடியவில்லையாம். அவசரத்துக்கு அமெரிக்க அம்மணியின் பழைய க்ளிப்பிங் ஒன்றை போட்டு நிகழ்ச்சியை ஒப்பேத்தினாராம்.

பி.குவுக்கு பி.குவின் மூலமாக கிடைக்கும் நீதி : “கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்!!!”

Kasi Arumugam சொன்னது…

கோவி. கண்ணன், இப்பத்தான் புரிஞ்சமாதிரி ஏன் இந்த நடிப்பு?:-)

துளசி, //அது சரி// பின்ன எது தப்பூ? ;-)

பலூன்,
//இன்னும் வலைப்பதிவை அச்சு ஊடகத்திற்கு மாற்றாகவும், அச்சு ஊடகத்தில் எழுதமுடியாதவர்கள் இங்கே எழுதுவதாகவும்,இங்கெ எழுதுபவர்கள் எல்லாம் அச்சு ஊடகத்தை அடுத்த குறிக்கோளாக கொண்டுள்ளார்கள் என்பது போலவும் .. இலக்கியவியாதி வகையறாக்களால் கட்டமைக்கப்படுகிறது.//
அது என்னமோ இந்த கதை கவிதையிலெல்லாம் ஆர்வமில்லாத எனக்கு இது மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. உங்களுக்கும் மயுரனுக்கும்கூட அதே சிந்தனை வருவதில் வியப்பில்லை. ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன். (இந்த எழுத்தாள ஆசையால் பதிப்பாளரோடு குலவ வேண்டிய தேவையும் வந்துவிடுகிறது பாவம்!)

ரவி, வெளங்கலையே! (என்னிக்குத்தான் வெளங்கிச்சு!:-))

லக்கிலுக்,
//அது தேவையில்லைன்னு எடிட் பண்ணிட்டாங்கன்னு ஒரு வதந்தி இருக்கே? மெய்யாலுமா?//
ஆமாம். மெய்தான்:P

எல்லாத்தையும் நாங்க நம்பிட்டோம்கிறதுக்கு இந்த ஸ்மைலித்தொடர், சரியா? :-)))))))))))))))))))))))))))

//“கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்!!!”// கண்ணாடி முன் நின்று தினமும் 108 வாட்டி சொன்னா ரொம்ப நல்லதுன்னு தினமலர்ல உங்க ராசிக்கு பலன் போட்டிருக்கான்.

enRenRum-anbudan.BALA சொன்னது…

காசி,
தகவலுக்கு நன்றி (நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை;-))

Anyway, two mistakes-ஐ (சலங்கை ஒலியில் கமல் சொல்வதைப் போல!) சுட்டிக்
காட்டியே ஆக வேண்டும் !

1. தமிழ்மணம் குறித்து நிகழ்ச்சியில் பேசியபோது, உங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்.

2. வலைப்பதிவுகள் பற்றிப் பேசக்கூட எழுத்தாளர்களால் தான் முடியுமா ?? (உங்கள் கருத்து தான்!) எதற்கு தமிழ் சார்ந்த எல்லாவற்றிலும் இவர்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது சுத்தமாக புரியவில்லை :(

எ.அ.பாலா

ILA (a) இளா சொன்னது…

அண்ணாத்த, ஒரு விஷயம், கஷ்டமாத்தான் இருக்கும். 2005-2006களில் வந்தவங்களுக்குமட்டும்தான் காசி பற்றியும், அவர் பட்ட கஷ்ட(நஷ்டங்களையும்), அதனால எங்கள மாதிரியான மக்கள் அனுபவிச்ச பலன்களும் தெரியும். இப்போ 2008. 2 வருஷத்துல தமிழ்மணமும் கை மாறியாச்சு, காசியும் தடம் மாறியாச்சு(சேவை செய்ய வைக்க போய்ட்டீங்க). இன்னும் 2 வருஷத்துல காசி/சந்திரமதி/செல்வராஜ்/இளவஞ்சி/.. etc மறக்கப்படுவார்கள். அவுங்க யாரு ஒரு பதிவர் தானேன்னு, புதுசா வரவங்க கேட்டுக்குவாங்க. அதனால என்ன சொல்ல வரேன்னா....

நாஞ்சொல்லித்தான் மக்கள் கேட்கப்போறாங்களாக்கும்.. விடுங்க வேலைய பார்ப்போம்..

ILA (a) இளா சொன்னது…

//உங்கள் மறுமொழிக்கு நன்றி. இந்த வலைப்பதிவில் பார்வையாளரின் ஐ.பி. எண் அறிந்துகொள்ளும் எந்த கருவியும் அமைக்கப்படவில்லை. கூகிள் அனலிடிக்ஸ் கருவி மூலம் பார்வையாளர் வருகை பற்றிய தொகுப்புத் தகவல்களே திரட்டப்படுகின்றன. அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்ற அதே வேளையில் அனாமதேயர்கள் தங்கள் உண்மை முகத்துக்குத் தகுந்த மரியாதையை எதிர்பார்க்க முடியாது. மறுமொழிகள் என் மட்டுறுத்தலுக்குப் பின்னரே வெளியாகும்.//
பின்னூட்டம் போட வந்தா பயப்படுற மாதிரியா இப்படி ஒரு போர்டு வைப்பீங்க.. பீதிய கிளப்புதுங்க

manjoorraja சொன்னது…

என்னமோ சொல்ல வர்றீங்கங்கறது மட்டும் நல்லா புரியுது. ஆனா என்னான்னுதான் யோசிச்சிகிட்டிருக்கேன்.

Kasi Arumugam சொன்னது…

//...விடுங்க வேலைய பார்ப்போம்..///

பெயரில்லா சொன்னது…

///ரவி, வெளங்கலையே! (என்னிக்குத்தான் வெளங்கிச்சு!:-))///

ஹி ஹி, வெளங்காம சொல்றதே ஒரு கலைதானுங்களே :)))

கோவைக்காரருக்கு குசும்புபற்றி சொல்லியா தரனும் ? அது கோவைக்காரவுகளுக்கு பால்வாடியிலேயே சொல்லித்தர்ர சமாச்சாரமாச்சே...

அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை - எனிவே, மாஸ்டர் டிகிரி வரைக்கும் போய்ட்டவங்க, பால்வாடியையும், பத்தாவது டிகிரியையும் நியாபகம் வெச்சு திரும்பிப்பார்ப்பாங்கன்னு நினைக்கிறது தப்புத்தானுங்களே...

(ஆனா பத்தாவது சர்ட்டிபிக்கேட் தான் ஒரிஜினல் ஏஜ் ப்ரூப்பாமே ??? )

உங்களப்பத்தி எல்லாருக்கும் தெரியும்...இருந்தாலும் வேனுமுன்னே இருட்டடிப்பு செய்யுறாங்கன்னு சொல்வது எந்த அளவு உண்மைன்னு தெரியலை ( எனக்கு)

Kasi Arumugam சொன்னது…

எ.அ.பாலா,
நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லுங்க. அதுதான் சரியாக இருக்கும்.:-)

இளா,
//பீதிய கிளப்புதுங்க//
'பயப்படத்தேவையில்லை'ன்னு சொல்ல வைத்த தகவல் பலகையைப் பாத்துப் பயப்படற ஆளை இப்பத்தான் பாக்கறேன்.:-)

உங்கள் அந்தரங்கத்தை நான் பாதுகாக்கிறேன், உங்க மரியாதையை நீங்களே காத்துக்குங்கன்னு சொல்றேன். வெளிப்படையா இருக்கறவுங்களை நானும் யாரைவிடவும் மரியாதையாகவே நடத்துகிறேனா, இல்லையா? அந்தரங்கமும் வேணும், மரியாதையும் வேணும்னா, சாரி, பாசு.

ராசா,
புரியலைன்னா விட்டுடுங்க, இதென்ன அத்தனை பெரிய தத்துவமா என்ன! :)

ரவி,
அப்படியா? தகவலுக்கு நன்றி.:P

பெயரில்லா சொன்னது…

காசி,

பத்தியாளனும் அடிப்படையில் எழுத்தாளன்தானே ? பொதுவாக எழுத்தாளன் தொல்லையில்லாத ஜந்து. பேச்சாளனாகும்போதுதான் பிரச்சனையாளன் ஆகிறான். புனைவுகள் கற்பனையில் மூழ்கடிக்குமானால் தவறு எழுதுபவரிடம் உள்ளது. ரசிக்கப்படும் புனைவுகள் எல்லாமே நிஜத்தை தொட்டுக் கொண்டிருப்பவைதான். புனைவுகளின் சமன்பாடு இதுதான்.

உண்மை + உண்மை = கற்பனை

உதா: குதிரை + கொம்பு = குதிரைக் கொம்பு
:-)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

//// கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
வலைப்பதிவு என்பது ஒரு சுதந்திரமான ஒன்று. கேட்க யாரும் இல்லாவிட்டாலும் பார்க்-ல் ஸ்டூல் மேல் நின்று பேசுவதைப்போல/////

/////////Kasi Arumugam - காசி said...
கவிதையிலெல்லாம் ஆர்வமில்லாத எனக்கு இது மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. உங்களுக்கும் மயுரனுக்கும்கூட அதே சிந்தனை வருவதில் வியப்பில்லை. ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன் //////

ரசிக்க வைத்த,சிந்திக்க வைத்த,ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

Indian சொன்னது…

விடுங்கண்ணே, இன்னிக்கு கணினித் துறையில் நுழையும் அநேகம் பேருக்கு F.C கோஹ்லி, தேவங் மேத்தா யாருன்னு தெரியாது. அதுக்காக அவங்கல்லாம் சும்மான்னு ஆயிருமா?

PRABHU RAJADURAI சொன்னது…

"தமிழ்மணம் இணையத்தில் சுயம்புவாக இருக்கவில்லை என்பதும், ஒரு வேலைகெட்டவன் செய்தான் என்பதையும் சொல்லியிருக்கலாம்"

தமிழ்மணத்தின் வரலாறு இங்கே பல பதிவர்களால், அழிக்க முடியாமல் பதியப்பட்டு விட்ட பின்...இந்தக் கவலையெல்லாம் எதற்கு?

Kasi Arumugam சொன்னது…

சத்யராஜ்குமார்,

//பத்தியாளனும் அடிப்படையில் எழுத்தாளன்தானே ?//

பெயர் வரையறையை யாராவது செய்திருக்கிறார்களாதெரியவில்லை. நான் எழுதிய சிலுவான இடுகைகள் ஒவொன்றையும் பத்திகளாக, அதனால் என்னைப் பத்தியாளனாகக் கருதுவேனே ஓழிய ஒருக்காலும், *ஒருக்காலும்* என்னை எழுத்தாளனாகக் கருதவே மாட்டேன். எனக்கு இதுக்கு மேல் சொல்லத்தெரியவில்லை... :(

//பொதுவாக எழுத்தாளன் தொல்லையில்லாத ஜந்து.//பிரச்சனையில்லாத ஜந்துகள் சுவாரசியமில்லாதவையாயிற்றே:-) யாருக்கு வேணும்!

கருத்துக்கு நன்றி.

indian, பிரபு ராஜதுரை, நான் சொல்லவந்தது வேறு, மேலும் விவாதிக்க விரும்பவில்லை. விட்டுவிடுவோம்!

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...