வியாழன், மே 11, 2006

கோவையில் ஏன் திமுக கூட்டணி அடிவாங்கியது?

கோவை:

மொத்தத்தொகுதிகள் : 15
அதி.மு.க.+ : 10
தி.மு.க.+:5

கோவை நாடாளுமன்றத்துக்குட்பட்டவை: (இப்போது வென்றவர்கள்)
கோவை மேற்கு (அ.தி.மு.க.)
கோவை கிழக்கு (அ.தி.மு.க.)
சிங்காநல்லூர் (அ.தி.மு.க. - ஐ.என்.டி.யு.சி.)
பேரூர் (அ.தி.மு.க.)
பல்லடம் (அ.தி.மு.க.)
திருப்பூர் (கம்யூ.மா.)

கோவையில் பெரும்பாலும் கோவையைச் சுற்றியுள்ள 6 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு முன்பு இருந்தது. 1984 தேர்தலில் இந்திராவின் சாவையும் எம்ஜியாரின் நோவையும் வைத்து அடித்த அலையிலே கோவை நாடாளுமன்றத்துக்கு 1 லட்சத்துக்கும் மேல் வித்தியாசத்தில் காங்கிரசை வெற்றி பெறச் செய்தவர்கள், அந்த நாடாளூமன்றத்தொகுதிக்குட்ப 6-ல் 5-ல் திமுக அணியை வெற்றிபெறச் செய்தார்கள். ஆனால் அப்போதெல்லாம், திமுக ஆட்சியில் கட்டிய மேம்பாலம், குடிசைமாற்று வாரியத்தில் கட்டித்தரப்பட்ட வீடுகள் போன்ற வரலாறு இவர்கள் மேல் நம்பிக்கையை அளித்திருந்ததும், நிறுவனப்பட்டுப்போயிருந்த தொழிற்சாலைகள், அவற்றின் தொழிற்சங்கங்கள் அவற்றின் தாக்கமும் (அப்போது தி.மு.க. வுடன் கம்யூனிஸ்டுகள் மட்டும்) காரணம். இன்று தொழிற்சூழல் மாறிவிட்ட நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் நீர்த்துப்போயினர். முந்தைய தி.மு.க. ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படியாக கோவைப்பகுதியில் பெரிய திட்டங்கள் செய்திருக்கவில்லை. ஒரு 100 அடி நீளப்பாலத்துக்குப்போய் போகவர 12 ரூபாய் தண்டம் கட்டும் வகையில் ஏற்கனவே இருந்த நொய்யல் பாலத்தை விரிவாக்கியதோடு சரி! எனவே நகர்ப்புறத்தில் திமுகவின் செல்வாக்கு சரிந்திருக்குமோ?

சொல்லமுடியவில்லை. நான் அறிந்த வரையில் கடந்த 15 ஆண்டுகால சிறுதொழில்/சிறுவணிக வளர்ச்சி வரலாற்றை எடுத்துக்கொண்டால் இரண்டு அதி.மு.க. ஆட்சிக்காலத்திலும் நன்றாக இருந்த 'பணப்புழக்கம்' இடையில் இருந்த தி.மு.க. ஆட்சியில் சரிந்தது மக்கள் மனதில் இன்னும் ஆழமாக இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் பெரிய முதலீடு எதுவுமில்லாததாலும், டாடா, பிர்லா, அம்பானி, ப்ரெம்ஜிக்களின் ஆதரவும் இல்லாமலும், சிறுதொழிலையும், வணிகத்தையும் மட்டுமே நம்பியிருக்கும் கோவைப் பொருளாதாரம் இன்னொரு அடியை வாங்கத் தயாராக இல்லை. தொடர் குண்டுவெடிப்புகளுக்குப்பின் வீழ்ந்துவிட்ட கேரளாவிலிருந்தான சவுளி/நகை/ஹார்ட்வேர் வியாபாரம், ரியல் எஸ்டேட் சந்தை இப்போதுதான் எழுந்து நிற்கின்றன. கோட்டைமேடு வழியாகப் போவதே சிரமமாயிருந்த காலம் போய் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதும் இந்த 5 ஆண்டுகளாய்த்தான். இதுவெல்லாம் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ள விஷயங்களாக இருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்தே இந்த மாநிலம் தழுவிய அளவில் தி.மு.க. அணி நன்கு வெற்றிபெற்றும் இங்கே அடி வாங்கியதுக்கு நான் விசாரித்த அளவில் காரணங்கள். இதில் எது சரி எது தவறு என்றெல்லாம் தெரியவில்லை.

12 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

//காலம் போய் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதும் இந்த 5 ஆண்டுகளாய்த்தான். //

சட்டம் ஒழுங்கு சீராய் இருப்பதும் ஒரு காரணம் என்றுதான் கூறுகின்றனர்.

Sivabalan சொன்னது…

சார்,

கோவை செய்திய்த்தான் எதிர் பார்த்திருந்தேன்!!


நல்ல அலசியிருக்கிறீங்க!!


//கோட்டைமேடு வழியாகப் போவதே சிரமமாயிருந்த காலம் போய் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதும்// இது உண்மை சார்!


ஆனாலும் மலரவன் எப்படி வெற்றிபெற்றாருன்னு தெரியல!!

supersubra சொன்னது…

அம்மா வருவதற்காக ஒரே நாளில் மேட்டுப்பாளையம் சாலையை முடிந்த அளவு சரிசெய்த சாதனைக்குத்தான் அவ்வளவு ஓட்டும் என்று நினைத்தேன்

வெற்றி சொன்னது…

எந்த ஒரு கட்சி சார்பு இல்லாமல், நடுநிலையாக அலசியுள்ளீர்கள். நல்ல அலசல். நன்றி.

மாமன்னன் சொன்னது…

கோட்டைமேடு எங்கே இருக்கிறது? அதன் வழியே போவதில் என்ன பிரச்னை?

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

ப்ரியன் சொன்னது…

மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க வென்றதிற்கு அவர் சார்ந்த சமூகம் பெரிய காரணம் சென்றமுறையும் இதுவே நிகழ்ந்தது.

Unknown சொன்னது…

தொண்டாமுத்தூரில் எஸ்.ஆர்.பி நின்றதே தவறு.ஜாதி ஓட்டுக்களை கண்ணப்பன் முழுமையாக பெற்று வென்றார் என்றே தோன்றுகிறது.கோவை கிழக்கு அல்லது மேற்கில் எஸ்.ஆர்.பி நின்றிருக்கலாம்.மலரவன் ஓரளவு நல்ல மேயராக செயல்பட்டதால் வென்றார் என தோன்றுகிறது.தண்ணீர் பிரசினையை சமாளித்தது,வீட்டு வரி உயர்வை தடுத்தது,பெரிதாக பிரச்சினை வராமல் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியது என ஓரளவு நல்ல பெயரை வாங்கியிருந்தார்.சட்டம் ஒழுங்கு கோவையில் இந்த 5 ஆண்டுகளும் நன்றாகவே இருந்தது.தொழில் துறை தலையெடுத்தது,நிலபுலன்கள் விலை ஏறியது,விவசாயம் ஒழுங்காக நடந்தது என மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருந்தனர்.போதாக்குறைக்கு சிறுதுளி இயக்கம் செய்த வேலைகள் ஏதோ அரசு செய்தது போல் பிரமையை உண்டாக்கி விட்டது.கோவை மேற்கில் பாஜகவுக்கு 10,000 ஓட்டுக்கள் என்றுமே உண்டு.வெள்ளலூர்,கடைவீதி பகுதியில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உண்டு.அந்த ஓட்டுக்களை அ.திமுக அள்ளிவிட்டது போல் தோன்றுகிறது.கடைவீதி பகுதி உள்குத்து அரசியலே இதற்கு காரணமோ என்னமோ?போதாகுறைக்கு வைகோவின் சமூகத்தினர் கோவை மாநகரில் அதிகம்.மேயர் தேர்தலில் தனித்து நின்றே மதிமுக வேட்பாளர் நல்ல ஓட்டு வாங்கினார்.வைகோ கூட்டணி இங்கு வேலை செய்துள்லதுபோல் தான் தெரிகிறது

சிங்காநல்லூர் கம்யூனிஸ்ட் கோட்டை என்பார்கள்.அதை அடித்து உடைத்திருக்கிறது அதிமுக.ஐஎன்டியுசிக்கு சீட்டு கொடுத்து தொழிலாளர் ஓட்டுக்களை அள்ளியிருப்பது போல் தோன்றுகிறது.

கிணத்துக்கடவுக்கு நெகமம் கந்தசாமிக்கு திமுக சீட்டு கொடுத்தும் அவர் தோற்றிருக்கிறார்.தாமோதரனுக்கு ஜாதி ஓட்டுக்கள் அங்கு அதிகம்.நெகமம் கந்தசாமிக்கு திமுகவினர் கண்டிப்பாக ஓட்டு போட்டிருக்க மாட்டார்கள்.எம்ஜிஆர் ஆட்சியில் அவர் ஆடிய ஆட்டம் அப்படி.அவினாசியும் பொள்லாச்சியும் என்றுமே அதிமுகவின் கோட்டை.

தலித் ஓட்டுக்கள் கோவையில் என்றுமே அதிமுகவுக்கு என்பார்கள்.தென்,வட மாவட்டங்களை போல் இங்கு வலுவான தலித் இயக்கங்கள் கிடையாது.(இதற்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் சொந்த ஊர் குனியமுத்தூர்).கோவை தலித்துகள் தெலுங்கு பேசுபவர்கள்.புதிய தமிழகமும் விடுதலை சிறுத்தைகளும் வேறு தலித் சமூகங்களை பிரதிநிதிப்படுத்துகின்றனவே தவிர இவர்களை அல்ல.

கோவை தேர்தலின் அதிசயங்கள்

1.இங்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டுக்கு நிலையான ஓட்டு வங்கி உண்டு.அது என்ன ஆச்சு?
2.இங்கு பெரும்பான்மையாக உள்ள மலையாளிகள் கம்யூனிஸ்ட்,காங்கிரசுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.அந்த ஓட்டு என்ன ஆச்சு?

Kasi Arumugam சொன்னது…

அனைவருக்கும் நன்றி. பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்த் கட்சிக்குப் போய்விட்ட நடுநிலை வாக்குகளே தி.மு.க. வீழ்ச்சிக்குக் காரணம். என் தொகுதியில் வெறும் 14 வாக்கில் கம்யூனிஸ்ட் கோட்டைவிட, விஜயகாந்த் வேட்பாளர் 30,000க்கும் மேல் வாக்குகள் வாங்கியிருக்கிறார். இது 10%க்கும் மேல்.

priya சொன்னது…

சென்ற மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொப்பறை தேங்காய் ஊழலை மறந்துவிட்டீர்களே! அதனால் பாதிக்கப் பட்டது கோவை மாவட்ட தெற்கு தஞ்சை மாவட்ட(பேராவூரணி) விவசாயிகள்-தான்.

Chellamuthu Kuppusamy சொன்னது…

நல்ல அலசல் காசி அவர்களே... எஸ்.ஆர்.பி & கண்ணப்பன் பற்றி எடுத்துச் சொன்ன செல்வனுக்கும் நன்றி.

-குப்புசாமி செல்லமுத்து

oosi சொன்னது…

SRB தோல்விக்கு அவர் எந்த உருப்படியான செயலையும் செய்யாததே காரணம்...

மாமன்னன் சொன்னது…

//கோட்டைமேடு எங்கே இருக்கிறது? அதன் வழியே போவதில் என்ன பிரச்னை?//

இந்த கேள்வி மிகவும் கஷ்டமான கேள்வியா? இதற்கு யாருக்கும் பதில் தெரியாதா?

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...