புதன், நவம்பர் 14, 2007

புனித பிம்ப தமாஷ்!

பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்ப்பேன். நடந்ததை அசைபோடுவது வயசான காலத்தில் நல்ல பொழுதுபோக்கல்லவா? :P

இன்று அதில் பார்த்த ஒன்று பயங்கர சிரிப்பை வரவழைத்தது பத்ரி சேஷாத்ரியின் கருத்துச் சுதந்தரம் என்ற இடுகைதான் அது. அதில் பத்ரி (மறுமொழி மட்டுறுத்தல் ஆசான்:), இவர் சொல்லபோய்த்தான் ப்ளாக்கரின் புதுசாய் அந்த வசதி வந்தது எனக்குத் தெரிந்தது, அதுக்குமுன்பே அது இருந்ததுபோலவும் நாங்கள் தான் ஒளித்துவைத்தது மாதிரியும் இன்னொரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருப்பது வேறுகதை) தன் மட்டுறுத்தல் கொள்கைகளாக அப்போது இவர் அறிவித்தது:
கருத்து ரீதியாக நான் செய்யப்போவது (இப்போதைக்கு) இதுதான்:

  1. spam, தேவையற்ற வெட்டி விளம்பரங்கள் ஆகியவை வெட்டப்படும்.
  2. மூன்றாவது மனிதர்களை (என்னை அல்ல) பற்றி ஒருவர் எழுதும்போது defamation/libel என்று நான் அதைக் கருதினால் அதனை வெளியிட மாட்டேன்.
  3. என்னைப் பற்றி எந்த விமரிசனத்தையும் வெட்டமாட்டேன் - ஆனால் கீழ்த்தரமான "கெட்ட" வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதை வெட்டுவேனா மாட்டேனா என்று இன்னமும் யோசிக்கவில்லை.
  4. ஒரு பதிவுக்குச் சம்பந்தமற்ற பின்னூட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.

இவைதான் இப்பொழுதைக்கு...

அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க:) ) என்னைச் சூழ்ந்து தர்ம அடி போட்டபோது என்னால் யாருக்கும் பதில் தர நேரமோ, பொறுமையோ, மனநிலையோ வாய்க்கவில்லை.
அப்போது நடுநிலைவியாதிகள் வேசம் போட்டுக்கொண்டிருந்த முக்கால்வாசி பதிவர்கள் 'எங்கேயோ மழை பெய்யுது, எங்கேயோ காத்தடிக்குது' என்ற மோன நிலையில் இருந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன் பரண்மூலம் அன்று நடந்த கூத்துக்களையெல்லாம் இன்று படித்து ரசித்து சில பதிவுகளில் என் மறுமொழியையும் இட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பத்ரியின் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள் (இதற்கு அவர் முதலில் வைத்த தலைப்பு '... சில அறிவிப்புகள்', அது என் 'அறிவிப்பு' இடுகைகளைக் கிண்டல் செய்ய விரும்பி, பிறகு அப்பட்டமாக எழுதினால் தன் புனித பிம்பத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று எண்ணி இப்படி மாத்தீட்டாருன்னு இப்ப புரியுது, எளவு, அன்னிக்குப் புரியலை! ஆதாரம்: இன்னும் தமிழ்மணம் தரவுத்தளத்திலுள்ள தலைப்பு '...அறிவிப்புகள்'தான், இதுபற்றிய என் மறுமொழியையும் பார்க்கலாம்.)

அதில் முதல் வாக்கியம்: 'இது தமிழ்மணம் பற்றிய பதிவல்ல:-)'

இன்றைக்கு இவங்க அரசியல் எல்லாம் புரிந்துவிட்டதால், இதை விட்டுவிட மனமில்லாமல் ஒரு கேள்வி கேட்டேன்: 'ஊர் உலகத்தில் நடப்பதைப்பற்றியெல்லாம் எழுதுபவருக்கு தன்னைச்சுற்றி நடப்பதைப் பற்றி எழுத ஒண்ணுமில்லையா? நல்லாருக்கு உங்கள் பரந்த பார்வை' (இந்தாளு இதைக்கூட நிறுத்தி வைப்பாருன்னு தோணாம அதை சேமிச்சுக்கூட வைக்காமப் போயிட்டேன்!)

அதுக்கு முன் வேறு இடுகைக்கு நான் எழுதிய மறுமொழிகள் உடனுக்குடன் மட்டுறுத்தப்பட இது மட்டும் பலநாள் கிடந்தது. இன்னொருமுறையும் எழுதிக் கேட்டேன். ம்ஹும். பெட்டி பூட்டுனது பூட்டுனதுதான்.

இதில் என்ன தனிமனிதத் தாக்குதல், என்ன 'கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகள்', ஒரு எளவும் புரியலே!

புனித பிம்ப .சிருகள் வாழ்க!

டிஸ்கி:
1. 'நான் இதுவரைக்கும் 900 கமெண்டு போருக்கேன் சார்வாள் ஒண்ணையும் நிறுத்தலை, தங்கம்'னு சர்டிபிகேட் கொடுக்கறவங்க அப்பீட்டாகிக்குங்க. இங்க, வராததைப் பத்தி மட்டும்தான் பேச்சு.
2. 'இங்கே மட்டும் மட்டுறுத்த மாட்டியா, எல்லாம் போடுவியா?'ன்னு கேக்கறவங்களுக்கு 'ராசா, இது ஒரு *சர்வாதிகார*, *த..க் கம்மனாட்டியின்* வலைப்பதிவு, இங்க நான் வெச்சதுதான் சட்டம், இஷ்டமிருந்தா எழுது இல்லாட்டிப் போயிட்டே இரு'ங்கறதுதான் பதில்.
3. சாரைப் பத்தி அறிவுத்திருட்டு அது இதுன்னு எழுதி ஒய்ஞ்சவங்க எதுனா இங்க வந்து கும்முனா, 'அது என்னோட சட்ட அறிவுக்குட்பட்டே மட்டுறுத்தப்படும், எதுக்கும் நான் கியாரண்டி இல்லை'ங்கைறதையும் சொல்லிடறேன்.
4. 'பட்டறை மேளாவுல பலரும் பேசுனதையெல்லாம் வலையேத்துனவர் என் உளறலை ஏன் ஏத்தலைங்கற காண்டுலதான் கரிக்க்கிறான் வயத்தெரிச்சல் புடிச்சபய'ன்னாலும், 'ஆமா அப்படின்னே வெச்சுக்க, இப்ப அதுல என்ன தப்புங்கறேன்'ன்னு இப்பவே கேட்டுக்கர்றேன். அதுமட்டுமில்ல, இந்தியா டுடே போட்டாவிலிருந்து, ரிப்போர்ட்டர்ல எம் பொண்டாட்டி சொன்னதா அவனவன் விருப்பத்தை எளுதிக்கிட்டதிருந்து, சிஎன்என் ஐபிஎன் சன் டிவி விடியோவில் தமிழ்மணப் பக்கத்தையே காமிச்சுங்கூட தமிழ்மணம்க்கிற லோகோ வராமப் பாத்துகிட்ட கதையெல்லாம் வெளிவரும், கபார்தார்!

மக்களே, கடைசியா, சார் எழுதறதெல்லாம் 'politically very correct', ஆனா நான் சொல்லிக்கறது 'people, be alert!'

திங்கள், நவம்பர் 12, 2007

சோதனைக்கு எலிகள் தேவை (தமிழ் எலிகள்!)

பயந்துடாதீங்க மக்களே :)

செல்போனில் முதலில் தமிழைக் 'கண்டுபிடித்து' செல் தமிழ் ஆசான் பட்டத்தைப் பெற்றதும் ('யாரு கொடுத்தா எங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது ஆமா:P) ) கை துருதுருன்னு இருக்குதுங்க. ('அட இரும்பு புடிச்சவன் கையே, அது துறுதுறு'!ன்னு மனசாட்சி சொல்லுதுங்கோ)

இதில் தமிழில் குறுஞ்செய்தி கோர்த்து அனுப்பினால் யுனிகோடாகவே போகிறதா, பெறுபவர் போனில் யுனிகோடு உடைகிறதா உடையவில்லையா என்றெல்லாம் யோசனையாகவே இருந்ததுங்க. உடனே எனக்கே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், அது சரியாகவே தெரிந்தது. பத்தாயிரம் ரூபாய் போன் வைத்துள்ள என் நண்பருக்கு அனுப்பினேன் கட்டம் கட்டமாகத் தெரிகிறது.

இப்ப நான் கேட்பது, உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் உங்கள் இந்திய செல் எண் கொடுத்தால் நான் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பி சோதிக்க விரும்புகிறேன். எற்கனவே முத்து நெடுமாறனின் செல்லினம் போன்ற பல ஜாவா செயலிகள் மூலமாக தமிழ் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருந்தாலும், மேலதிக கருவி/சேவை/பதிவிறக்கம் ஏதும் இல்லாமல் தமிழில் அனுப்பப்படும் முதல் குறுஞ்செய்தியைப் பெற உங்களை அழைக்கிறேன். குறுஞ்செய்தி செலுத்திய கோமகன் பட்டத்தை யாராவது பிடித்துக்கொள்ளுமுன் அதைப் பிடிக்க வேண்டாமா? என்ன குறுஞ்செய்தி ஏற்ற குலக்கொழுந்து பட்டத்துக்கு நீங்க தயாரா?

இங்கேயோ தனி மடலிலோ செல் எண்ணைத் தரலாம். அஞ்சல்: akaasi (at) gmail (dot) com

ஞாயிறு, நவம்பர் 11, 2007

சத்தமில்லாமல் ஒரு புரட்சி: செல்பேசிகளில் யுனிகோடு தமிழ்



சில வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சரியாகக் கிடைக்காத பிரச்னையால் பல மாதங்கள் அவதிப்பட்டபின் இயல்பாக எலக்ரானிக்ஸ் பொடிஜாமான்களில் சோனிக்கு பெரிய பிரமுகர் அந்தஸ்து;-) இருப்பதை உணர்ந்திருந்தும் இந்தியாவில் செல்பேசித்துறையில் நோக்கியாவின் அனுபவம் அதிம் என்பதால் நோக்கியாவை ஒருமுறை பாவித்து நோக்கியாவது பாவப்பட்ட என் செல் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டு நோக்கியா 2630 என்ற கைக்கு அடக்கமான பைக்கு லகுவான (66 கிராம் எடை) ஒரு போனை வாங்கினேன்.

ஏற்கனவே மின்னஞ்சலை செல்பேசியில் பார்க்க ஆசைப்பட்டு மாசம் 49 ரூபாய் என்ற தொடக்க நிலை ஜிபிஆரெஸ் சேவைக்கு பிஎஸென்னெல் சந்தா கட்டியும் அதை என் பழைய போனில் சரியாக பயன்படுத்தவில்லை. இதிலாவது சரியாக அமைப்பிக்கலாம் என்று ஆசைப்பட்டு கொஞ்சம் போராடி, பின் ஜிமெயில் அப்ளிகேசனை இறக்கியும் அது சரியாக வேலை செய்யாமல் போக, பின் இந்த நேரடி முகவரியில் முயற்சிக்கவே அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதும் ஆஹா, ஒரே ஜாலிதான் போங்க.

ஜிமெயிலில் வந்த தமிழ் யுனிகோடு செய்திகளும் அருமையாகத் தெரிவது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்! பிறகுதான் வழக்கமான நோண்டல் ஆரம்பம். நம் வலைப்பதிவுகள் எப்படித் தெரியும் என்று பார்க்க ஆசைப்பட்டு எனக்கு மிகவும் பிடித்த தங்கமணியின் வலையைத் திறந்து பார்க்க, அட... அட... அட... ஆனந்தம் போங்க. பக்கங்கள் எல்லாம் தெளிவாத் தெரியுது! கீழே பாருங்க.




இந்த வகை செல்பேசிகளில் யுனிகோடு எழுத்துரு (Unicode font), யுனிகோடு திரைஎழுதி (rendering engine-equivalent to uniscribe in MS) மற்றும் யுனிகோடு உள்ளிட செலுத்தி(input driver) ஆக மூன்று அடிப்படை அம்சங்களும் வாங்கும்போதே நிறுவப்பட்டு வருகின்றன. மேசைக்கணினி/ மடிக்கணினிகளிலேயே தமிழ் உள்ளிட்ட மக்கள் மொழிகளுக்கான அனுசரணை சரிவர நிறுவப்பட்டு விற்கப்படாத நிலையில், செல்பேசியில் சத்தமிலாமல் இது நடந்து வருவதைக் காண மகிழ்வாய் இருக்கிறது.

(இதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மூடிக்கிடந்த இந்தப் பக்கங்களுக்கு உயிருட்டுகிறேன். இனி வாரம் ஒருமுறையாவது எழுதுவேன்)

செவ்வாய், ஜூலை 25, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -12

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10 பாகம் 11

பல பதிவுகள் திரட்டிப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டது தவிர்க்க முடியாத தற்காலிக நடவடிக்கை என்பதை விளக்கிச் சொல்லியும் இங்கே அதைப் புரிந்துகொண்டவர்களை விட புரிந்துகொள்ளாதவர்களே அதிகம். சில நிரலாளர்களை வைத்து அடுத்த பதிப்பைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டிருந்தேன். எப்படியும் சில வாரங்களில் முடியாவிட்டாலும் ஓரிரு மாதங்களில் இந்த விலக்கத்துக்கு முடிவு கட்டமுடியும் என்று உறுதியாக நம்பினேன். ஏனென்றால் புதிய பதிப்பில் தானியங்கியாக எல்லாப் பதிவுகளையும் சுற்றிவந்து புது இடுகையைத் தேடுவதற்குப் பதிலாக, அவரவரே, இடுகை எழுதிப் பதிப்பித்த உடனேயே அடுத்த நொடியிலேயே தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கும் வழிசெய்ய எண்ணியிருந்தேன். நம் சமூகத்தில் இன்னும் பலர் தன் உரிமை/கடமை, அடுத்தவர் சிரமம் போன்ற எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகவும், அடுத்தவர் செயலுக்கு எப்போதும் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதில் முனைப்பாகவும் இருப்பது இப்போது தெளிவாக விளங்கியது. ஏதேதோ பிரச்னைகளில் என் மேல் காட்டம் கொண்டு அடங்கிப்போனவர்களெல்லாம், இந்த வாய்ப்பைக் கையில் எடுத்து என்னை விளாசி மகிழ்ந்தார்கள்.

இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். வலைப்பதிவு உலகில் பல புதுமைகளைக் கொண்டு தமிழ்மணம்.காம் இரண்டாம் பதிப்பு 2006 ஜனவரி 14ஆம் நாள் தைத்திங்கள் மலர்ந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் நண்பர் தேன்கூடு தளத்தையும் பொதுப்பயனுக்கு வெளியிட்டார். தானாக இடுகைகளைத் திரட்டிய காலம் போய் ஒவ்வொருவரையும் அவர்களை சேர்க்கச் சொல்லியிருக்கிறோமே, அவர்கள் செய்யாவிட்டால் மொத்தத் திரட்டியுமே தோல்வியில் முடியுமே என்ற ஐயம் இருந்தாலும், பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்கள் பெறப்போகும் கூடுதல் பயன்கள் காரணமாகவும் இந்த சவாலை சமாளிக்கமுடியும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சிலர் எங்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம் முதல் பதிப்பை தொடர்ந்து இன்னொரு முகவரியிலாவது அளியுங்கள் என்றெல்லாம் சொல்லியும்கூட அதைச் செய்யாமல் பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டாம் பதிப்பு முன்பிருந்ததைவிடவும் அதிக வரவேற்பைப் பெற்றது வாசகர் வருகைக்கணக்கிலிருந்து தெரிந்தது.

தமிழ்மணம் 2.0-ன் புதிய சிறப்பம்சங்கள்:
  • ஆபாசம், வன்முறை போன்ற காரணங்கள் தவிர நுட்பம்/கணித்திறன் பற்றக்குறையால் எந்த வலைப்பதிவையும் விலக்கி வைக்கத் தேவைப்படாதது.
  • வலைப்பதிவர் தன் மின்னஞ்சல் முகவரியைத் தமிழ்மணத்துக்கு அளித்தல்.
  • வலைப்பதிவர் தானே தன் இடுகையை திரட்டிக்கு அறிவித்தல். இதனால் ஒரு நொடிநேரத் தாமதமும் இல்லாமல் பதிப்பித்த உடனே பலரையும் சென்று சேர்த்தல்.
  • ஒவ்வொரு இடுகையையும் வகைப்படுத்துதல்
  • குறிச்சொல்லிடுதல் (பிறகு ஏற்படுத்தப்பட்டது)
  • வலைப்பதிவின் தலைப்பு/ஆசிரியர் பெயர்/கருப்பொருள் உரை போன்றவற்றைத் திரட்டி தானே எடுத்துக்கொள்ளுதல். மேலும் இவற்றில் பதிவர் ஏதும் மாற்றம் செய்தால் அடுத்த முறை பதிவு திரட்டப்படும்போது அந்த மாற்றம் திரட்டியில் இற்றைப்படுத்தப்படுதல்.
  • வலைப்பதிவரின் வில்லையளவுப் படம் காட்டுதல்/தானே இற்றைப்படுத்தல்
  • இந்த வார நட்சத்திரங்களை நன்றாக முன்னிறுத்தல், படம்/அறிமுகம் காட்டுதல், சென்ற வார நட்சத்திரங்களின் படம்/அறிமுகம்/எழுதிய இடுகைகள் பட்டியல்/மின் நூல் ஆக்குதல்
  • பல இடுகைகளைத் தொகுத்து மின்நூலாக்குதல்
  • தேதிவாரியாக இடுகைகளைப் பட்டியலிடல்
  • வகை (தலைப்பு) களைத் தெரிவு செய்து பட்டியலிடல்
  • 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக இடுகையிலிருந்து ஒற்றை/பல இடுகைகளின் மின்நூல் ஆக்குதல், இடுகையின் வகையைக் காட்டுதலோடு, அதே வகையில்(தலைப்பில்) எடுதப்பட்டவற்றுக்குப் பயணித்தல், வாசகர் பரிந்துரைத்தல்.
  • 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக புது இடுகையை தமிழ்மணத்துக்கு அறிவித்தல், கருவிப்பட்டையில் தேவைப்படும் அமசங்களைத் தெரிவு செய்தல்.


பெரும்பாலான இந்த வசதிகள் தானுணர்த்தியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.


இந்த மாற்றத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும், தாங்களாக முன்வந்து தங்கள் வலைப்பதிவைப் பட்டியலில் சேர்த்தமைக்காக நன்றி. இதில் இக்கட்டான சூழ்நிலையில் விலக்கிவைக்கப்பட்ட பதிவுகளும் அடங்கும்.


இன்று வாழ்வில் வேறு உந்துதல் காரணமாக தமிழ்மணத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்துச் செல்ல எண்ணும்போது இந்த நுட்பங்களுக்காக நான் செலவிட்ட பணத்தையேனும் பெற்றுக்கொள்வது என்னளவில் தார்மீக வரையறையில் சரியானதே என்று நம்புகிறேன். அதனாலேயே தமிழ்மணத்தை இன்னொருவருக்கு என்னால் இலவசமாக அளிக்க இயலவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். ஏற்கனவே கிடைத்த அனுபவங்கள் என்னை அப்படி வைக்கவில்லை. புரிந்துகொள்பவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.


இத்துடன் இந்தத் தொடரை முடிக்கிறேன். தமிழ்வலைப்பதிவுகள் உலகில் சென்ற 3 ஆண்டுகள் இயங்கியதில் கிடைத்த பல சுவையான அனுபவங்களை, இன்றியமையாத பாடங்களை எனக்குக் கிடைத்த பெறற்கரிய பரிசாக எண்ணுகிறேன். இந்தப் பரிசை எனக்குக் கிடைக்கச் செய்த, என்னுடன் ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.

திங்கள், ஜூலை 24, 2006

Seminar on Blogs at CSI, Coimbatore

கோவையில் வரும் புதனன்று வலைப்பதிவுகள் பற்றிய நுட்பங்களின் அடிப்படைகளை விவரிக்கும் கருத்தரங்கு ஒன்றைத் தயாரித்து அளிக்கிறேன். கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் ஆதரவில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு, வலைப்பதிவில் ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். ஆங்கிலத்தில் நடக்க இருக்கிறதானாலும் பொதுவில் எளிமையான நுட்பங்களைப் பற்றியதானதால் மொழி ஒரு தடையாக இருக்காது என்று எண்ணுகிறேன். இதில் கிடைக்கும் அனுபவத்தையும் வரவேற்பையும் பொறுத்து, தேவைப்பட்டால் இன்னொருநாள் தமிழிலும் அளிக்க முயல்வேன்.

நன்றி.

There is going to be a seminar by me on Blogs: Technology, Services, Tools and Aggregators under the aegis of Computer Society of India, Coimbatore Chapter. It is held at the CSI Hall near Race Course, at 6:30 Pm on 26th July, Wednesday. I welcome friends interested in the subject of blogging. Please call me at 98941 11554 to confirm your particpation.

Thanks,
-Kasi

சனி, ஜூலை 22, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -11

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 |பாகம் 10

ஆபாச மறுமொழிகள் யாரிடமிருந்து வருகின்றன என்று பலருக்கும் தெரிய வர வர ஆபாசத்தின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வந்தது. டோண்டு ராகவன் போன்றோர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் பிரச்னையை வளர்ப்பதற்கும் அவர்கள் செயல்பாடே காரணம் என்றும் பலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். யார் சொல்வது சரியென்றெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுவது தமிழ்மண நிர்வாகிகளுக்கு சாத்தியமில்லாத காரியமில்லாததால் யாரும் இடையீடு செய்யவில்லை, இது எப்போதும்போலத் தொடர்ந்து கொண்டிருந்தது.

காலப்போக்கில் தமிழ்மணத்தில் வெட்டி அரட்டைப் பதிவுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவற்றுக்கு மறுமொழிகிறேன் பேர்வழி என்ற பெயரில் புரியாத குழூஉக்குறிகளில் யாரையாவது மறைமுகமாக சீண்டி எழுதப்படுபவை, எண்ணிக்கையைக் கூட்டுகிறேன் பார் என்ற ரீதியில் மறுமொழிக் குப்பைகள் என்று பல நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருந்தன.

எது பொதுவான வாசிப்புக்குத் தகுதியான பதிவு என்று கண்டுணரும் அனுபவம் இல்லாத ஒரு புதியவர் தமிழ்மணம் முகப்புக்கு வந்து இடுகைகளை வாசிக்க ஆரம்பித்தால் பயிரோடு வளரும் களைகள் போல இவ்வகை இடுகைகளே அதிகம் தட்டுப்படும் அளவுக்கு இவை அதிகரித்தன. கூடவே மதரீதியான சண்டைகளைக் கொண்ட பதிவுகளும் வளர ஆரம்பித்தன. வலைப்பதிவுகளின் அடிப்படை அம்சமே சுதந்திரம் என்ற கொள்கையால் இவற்றை தவறென்று ஒதுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்மணத்தில் இவை தொடர வேண்டுமா என்ற நெருடல் இருந்துகொண்டே இருந்தது.

'தமிழ்மணத்தில் இவை தேவையா?' என்பது தமிழ்மணத்தின் 'புனித பிம்ப'த்துக்கு பங்கம் வந்துவிட்டதே என்ற பொருளில் சொன்னது அல்ல. ஆழமான சுதந்திரமான சிந்தனைகள் தமிழில் எழுதப்பட, ஊக்கம் பெற, கவனம் பெற ஒரு இடம் வேண்டும், தமிழின் பயன்பாடு இணையத்தில் அதிகரிக்கவேண்டும், தமிழ்க் கணிமை/கருவிகள் வளரவேண்டும் போன்ற நோக்கங்களுக்கு சற்றும் பொருந்தாத இவற்றுக்காக நானும் மற்ற நிர்வாகிகளும் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவு செய்து உழைப்பது சரிதானா, தேவைதானா என்ற நெருடல் அது. ஆனாலும் எதுவும் செய்ய இயலாமல் சும்மா இருந்தேன்.

நாம் சும்மா இருந்தாலும் மற்ற சூழல்கள் சும்மா இருக்கவேண்டுமே! முக்கியமாக நுட்பரீதியான சவால்கள் தமிழ்மணத்தின் பதிவுகளின்/இடுகைகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக பெரிதாகி வந்தன. தமிழ்மணம் திரட்டி அப்போது தானியங்கியாக இருந்தது. அதாவது பட்டியலில் இருக்கும் ஒரு வலைப்பதிவில் புதிதாக எதுவும் எழுதப்பட்டால் வலைப்பதிவர் ஏதும் செய்யாமலேயே புது இடுகை தமிழ்மணத்தால் திரட்டப்பட்டுவிடும். இது தமிழ்மணம் திரட்டி தன் பட்டியலில் இருக்கும் எல்லாப் பதிவுகளையும் சுற்றுவரிசையில் ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை தேடி எடுப்பதால் சாத்தியப்பட்டது. இந்தத் தேடும் திறன் இணைய வழங்கியின் கணித் திறன், பயன்பாட்டு அழுத்தம், வழங்கியின் இணையத் தொடர்பின் வேகம் பொன்றவற்றைச் சார்ந்தது.

தமிழ்மணம் தொடங்கிய போது 108 பதிவுகள் இருந்தன. சாதாரணமாக ஒரு சுற்றுத்தேடல் 5 நிமிடத்துக்குள் முடிந்தது. அப்போது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு சுற்று நிகழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே இதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் 2005 செப்டம்பரில் 800-க்கும் அதிகமான பதிவுகள், கூடவே அதிக வாசிப்பு எண்ணிக்கையினால் கூடிய பயன்பாட்டு அழுத்தம், எல்லாம் சேர்ந்து, இந்த 'ஒரு சுற்றுத் தேடலுக்கான' நேரத்தை பெருமளவு அதிகரித்திருந்தன. சில சமயங்களில் ஒரு சுற்றுக்கு 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் கூட ஆனது. 20 நிமிடத்துக்கு ஒரு சுற்று என்று மாற்றி, பிறகு 30 நிமிடத்துக்கு ஒன்று என்று மாற்றியும், பல சமயங்களில் முதல் சுற்று முடியும் முன் அடுத்த சுற்று ஆரம்பிக்கும் சிக்கல் வந்தது. இதனால் பட்டியலில் கடைசியில் உள்ள சில பதிவுகள் ஒவ்வொரு சுற்றிலும் தவற விடப்பட்டு தொடர்ந்தாற்போல பல மணிநேரம் திரட்டியில் அகப்படாமலே இருந்ததும் நிகழ்ந்தது. இதற்குத் தீர்வு நுட்பரீதியில்தான் சாத்தியம் என்பதால் நுட்ப விஷயங்களில் மற்ற நிர்வாகிகளைப் பெரிதும் ஈடுபடுத்தியதில்லையாதலால் அவர்களிடம்கூட விவாதிக்கவில்லை.

தமிழ்மண நிரல்களை மாற்றியமைப்பதன் மூலம் திரட்டி இயங்கும் விதத்தை மாற்றியமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக முடியும், என்றாலும், இன்னும் பொருத்தமான நிரலாளர் குழு எதுவும் எனக்கு அகப்படவில்லை. எனவே மூன்று மாதமாக எழுதப்படாமல் இருந்த பல பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கி வைத்தேன். அந்தப் பதிவர்கள் பெரிதாகக் கோபிக்கவில்லை. ஆனால் சிலர் பெயருக்கு மீண்டும் ஒரு இடுகையை எழுதி நடப்புப் பட்டியலில் மீண்டும் இடம் பெற்றார்கள். சில வாரங்களுக்குப்பின் இந்த தேடும் நேரச் சிக்கல் மேலும் அதிகரித்தது. ஒரு சுற்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. சில பதிவுகள் 24 மணி நேரமாகியும் திரட்டப்படவில்லை.

இக்காலத்தில் தமிழ்மணத்தின் வாசகர் வருகையும் குறைய ஆரம்பித்திருந்தது. தமிழ்மணத்தை வாசிக்கும்போது உருப்படியான பதிவுகள் கிடைப்பது குறைந்துகொண்டு வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்தேன். வகைப்படுத்தல் போன்ற நுட்பத்தீர்வுகள் வாசகர் வருகையை அதிகரிக்க வாய்ப்பிருப்பினும், நிரல் மேம்படுத்த எனக்கு வசதிப்படவில்லை. உடனடித் தேவையாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக உணர்ந்தேன். இருக்கும் பட்டியலில் சிலவற்றை நீக்கி பட்டியலை சிறிதாக்கினால் ஒழிய மொத்த தமிழ்மண இயக்கமுமே சீர்கெடும் என்ற நிலை. ஆகவே ஒரு தவிர்க்க முடியாத இடைக்கால நடவடிக்கையாக ஒரு மாதமாக எழுதப்படாதவை, மதரீதியானவை, சக வலைப்பதிவர்களை கேலிசெய்வதை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டவை, வெட்டி அரட்டை மறுமொழிகளுக்காகவே எழுதப்படுபவை ஆகிய பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கிவைத்தேன். இதனால் மீண்டும் பதிவுகள் முழுமையாகத் திரட்டப்பட்டன.

குறிப்பு: என் வலைப்பதிவு kasi.thamizmanam.com சில நாட்களில் என்னைவிட்டுப்போகும் முகவரி என்பதால் முடிந்த வரை தொடுப்புகள் கொடுப்பதைத் தவிர்க்கிறேன்.
-தொடரும்

திங்கள், ஜூலை 17, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -10

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9

வலைப்பதிவிலிருந்து விலகுவதாகச் சொல்லியிருந்த மாலன், சென்னை சந்திப்புக்கு முன்பே யாஹூ360 என்ற சேவையைப் பயன்படுத்தி மீண்டும் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கியிருந்தார். இந்த சேவையில் ஒரு அம்சம், தன் வலைப்பதிவில் யாரையெல்லாம் மறுமொழிய அனுமதிக்கலாம் என்பது நம் கையில் இருக்கிறது. அனாமதேயங்களுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் போலிகளுக்கும் இங்கே வேலையில்லை. அன்றைக்கு ப்ளாக்கர்.காம் மறுமொழிச் சேவையில் இம்மாதிரி வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்று முக்கியமாகப் பயன்படுத்தப்படும் மறுமொழி மட்டுறுத்தல் வசதியும் ப்ளாக்கர்.காம் அளிக்க ஆரம்பிக்கவில்லை. அதனாலேயே மறுமொழிகள் விஷயத்தில் தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை என்று சொன்னோம். மறுமொழி மட்டுறுத்தல் வசதியை 2005 நவம்பரில், அதாவது இந்த சந்திப்பு நிகழ்ந்து சுமார் 4 மாதங்கள் கழித்தே ப்ளாக்கர்.காம் நடப்புக்குக் கொண்டு வந்தது.

நமக்குத் தெரிந்தவர்களை மட்டும் வாசகராக வைத்துக்கொண்டு வலைப்பதிவில் ஈடுபடுவது எல்லாருக்கும் உவப்பான செயலாக இருக்கமுடியாது. வலைப்பதிவின் திறந்த நிலையே அதன் வளர்ச்சிக்கு ஒரு அடிப்படைக் காரணி. மாலன் போலி ஒழிப்புக்கான தீர்வாக ப்ளாக்கர்.காம்க்கு பதிலாக யாஹூ360 சேவையை பரிந்துரை செய்தார். போலிகளைக் கட்டுப்படுத்த சில கூடுதல் வசதிகள் என்பதைத் தவிர பெரிய நிறைகள் யாஹூ 360-ல் இல்லை. ப்ளாக்கர்.காம்-ஓடு ஒப்பிடும்போது பல வகைகளில் இது குறைப்பட்ட வசதியே. இன்று எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் யாஹூ 360-இல் இயங்குகின்றன என்பதிலிருந்தே இது புலப்படும். போலி ஒழிப்புக்காக மட்டும், வசதியான, ஆற்றல்மிக்க, நுட்பரீதியாக மேம்பட்ட ஒரு சேவையை விட்டு இடம் மாறுவது பலருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை. ஆகவே இந்தப் பரிந்துரையை பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், இதே யாஹூ360 சேவையைப் பயன்படுத்திய இன்னொரு வலைப்பதிவர் ஏற்கனவே தமிழ்மணத்தில் சேர்க்கைக்கு அளித்திருந்ததும், அது சேர்க்கப்பட்டு திரட்டப்பட்டுக்கொண்டிருந்ததும் மாலன் அறிந்திருக்கவில்லை. எனவே இதுவும் தமிழ்மணத்தோடு இயங்கக்கூடிய, ப்ளாக்கர்.காம்-க்கு மாற்றான இன்னொரு சேவை என்பதை சரியாக உணர்ந்து முன்னிறுத்தாமல், தமிழ்மணத்துக்குப் பதிலாக ஒரு சேவை என்ற ரீதியில் அவர் எழுதிவிட்டார். நான் சென்னை சந்திப்புக்குப் போகும்வரை மாலன் இம்மாதிரி ஒன்று எழுதி அது சர்ச்சைக்குள்ளாகியிருப்பதுகூட எனக்குத் தெரியாது. ப்ளாக்கர்.காம்-க்கும் தமிழ்மணத்துக்கும் வேறுபாடு தெரியாத பல புதியவர்களைப்போல மாலன் எழுதியிருக்க முடியாது என்றும், ஆகவே அவரின் நோக்கத்தையே சந்தேகிக்க வேண்டியிருப்பதாகவும் பலர் பதிவுகளில் விவாதிக்கவும் பிரச்னை இன்னும் பெரிதாகிப் போனது மிகுந்த வருத்தமளித்த ஒரு செயல்.

இந்த சமயத்தில் வந்திருந்த சிலரின் இடுகைகள் இன்று தேடும்போது, திருத்தப்பட்டிருக்கின்றன அல்லது நீக்கப்பட்டிருக்கின்றன. பலர் வாசிக்க ஒரு இடுகையைப் பதிப்பித்த பின் ஒரு வரியை மாற்றினாலே அதைக் குறிப்பிட்டு செய்ய வேண்டும் என்று ஒரு கொள்கையை நான் உள்பட பலர் இங்கே ஒரு நெறிமுறையாக வைத்திருக்கிறோம், ஆனால் அறிவிப்பின்றி இப்படி முழு இடுகைகளே நீக்கப்படுவது சரியா என்பதை வாசிப்பவர்களின் முடிவுக்கு விடுகிறேன். இன்று கூகிளின் சேமிப்பிலிருக்கும் (cached pages) பக்கங்களை வாசித்தால் பிரச்னையின் தீவிரமும் சிலர் எடுத்த தவறான நிலைப்பாடுகளும் தெரியவருகின்றன. தாங்கள் தவறாக எழுதிவிட்டதை உணர்ந்தோ என்னவோ அப்பக்கங்களை அவர்களே நீக்கிவிட்ட நிலையில் அவற்றிலிருந்து மேற்கோள்காட்டுவது நாகரிகமில்லை என்றாலும் 'வரலாற்றை மறந்தவர் அதே வரலாற்றை வாழ்ந்து பார்க்க வைக்கப்படுவர்' என்ற கூற்றுக்கேற்ப வரலாற்றை முற்றிலும் மறக்கவும் முடியவில்லை. அந்த சர்ச்சைகளிலிருந்து பிருந்தாவனம் கோபியின் ஒரு மறுமொழியை மட்டும் கூகிளின் சேமிப்பிலிருந்து எடுத்து இங்கே மேற்கோளிடுகிறேன்.

//
இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்மணம் ஒரு பட்டியலிடும் தளம், அவ்வளவே.

அவரவர் தங்கள் ப்ளாக்கர் தளங்களில் எழுதுவதை பட்டியலிடும் ஒரே காரணத்துக்காக, தமிழ்மணத்தை குறை சொல்ல முடியாது.

தமிழ்மணத்தில் ஒரு வலைப்பூவை பட்டியலிடச் செய்வது மிக எளிது. தொழில்நுட்ப ரீதியாக ஒரு வலைப்பூ RSS Feed சேவையை அளிக்குமானால் அதனை தமிழ்மணத்தில் பட்டியலிட முடியும்.

Yahoo 360ன் RSS feed சேவையை பயன்படுத்தி அது வழங்கும் வலைப்பூக்களையும் தமிழ்மணத்தில் பட்டியலிடச் செய்வது எளிது.

மாறவேண்டியது அழுக்கடைந்த சில மனித மனங்களே அன்றி Blogger சேவையிலிருந்து Yahoo 360க்கோ அல்லது தனிப்பட்ட வலைப்பூக்களுக்கோ அல்ல என்பது என் கருத்து.

உங்கள் தளத்தின் வருகையாளர்கள் தமிழ்மணத்தையும் Blogger/Yahoo 360 சேவையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தப் பின்னூட்டம்.

நன்றி!

ப்ரியமுடன்,

கோபி

By கோபி(Gopi), at 4:35 PM
//

இதுபோன்ற சர்ச்சைகள் வரும்போது தானாக முன்வந்து பலர் தங்கள் கருத்துக்களை எழுதுவதும், அவர்கள் சொல்வது என்னையோ தமிழ்மணத்தையோ ஆதரிக்கும் ரீதியில் இருந்துவிட்டால் அவர்களை 'என் அடியாட்கள்/அல்லக்கைகள்' என்று குறிப்பிட்டு, 'எது கேட்டாலும் இந்த ஆள் பேசமாட்டானாம், அவனின் அடியாட்கள் பேசுவார்களாம்' என்று சிலர் எழுதுவதும் பலமுறை கண்டிருக்கிறேன். எந்த அணியிலும் சேர விரும்பாத, யாருடனும் தொலைபேசியில் மட்டுமல்லாமல், மின் அரட்டையிலும் கூடத் தொடர்புகொள்ள விரும்பாத, இலக்கிய, சிற்றிதழ் குழுக்களை அறிந்தும்கூட இராத எனக்கு இத்தகைய தன்னார்வலர்களின் ஆதரவு ஒன்றே ஊட்டம். அது மட்டும் இல்லையென்றால் இந்த தமிழ் இலக்கிய அரசியல் சூழல் புரிந்த அன்றே தமிழ்மணத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போயிருப்பேன்.

ஆனாலும், 'தமிழ்மணத்தை இழுத்து மூடிவிட்டுப் போ' என்ற ரீதியில் ஒரு முகமிலி எழுதும் அளவுக்கு பிரச்னை வளர்ந்தது என் மனதில் பட்ட முதல் காயம். ஆனால் யாருக்கோ தமிழ்மணம் வழியாக இத்தனை பேர் எழுதுவது பிடிக்காததால் இதைச் சொல்வதாக எடுத்துக்கொண்டேன். அதற்காகவாவது இது தொடர வேண்டும், இன்னும் உத்வேகத்துடன் நடக்கவேண்டும் என்று உறுதிபூண்டேன். என் நேரவசதிக் குறைவினால் அதன்பின்னர் தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு நிரல் எழுத சம்பளத்துக்கு ஆள் தேடுவதில் ஈடுபட்டேன். இத்தனை சச்சரவுகளின் போது பலரும் கொடுத்த அனுபவமும், தொழில்ரீதியாக மென்பொருளாளன் அல்லாத என் ஒருவன் கைப்பாட்டில் உருவான தமிழ்மண நிரல்பொதியில் திறமூல நிரல்குழுக்கள் எதுவும் கைவைத்து மேம்படுத்துவது என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாததாலும், நான் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.

இதற்குள் என் இல்லத்திலும் அகலப்பாட்டை இணைப்புப் பெற்றுவிட்டேன். ஓரளவுக்கு நிர்வாகப் பணிகளிலும் மீண்டும் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். அமெரிக்காவை விட்டுக்கிளம்பியதிருந்து அதுவரை செல்வராஜ்/மதி/பரி மூவருமே நிர்வாகப் பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பங்களிப்பு எப்போதையும் விட அந்த மாதங்களில் மிகுந்த அவசியமானதாக இருந்தது. அவர்கள் பொறுப்பேற்காவிட்டிருந்தால் இடையில் பெரிய தொய்வு ஏற்பட்டிருக்குமென்பதில் ஐயமில்லை.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...