வெள்ளி, செப்டம்பர் 26, 2003

அரிச்சந்திரன் மகன்

சில வருடங்களுக்கு முன் சன் டிவியில் ஒரு தொடர். குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைவாய் இருந்த தொடர். 'ரமணி vs. ரமணி' என்று, பிரித்விராஜ் &வாசுகி என்று நினைக்கிறேன், அவர்கள் இருவரும் நடித்தது. நல்ல காமெடி, ஆனால் வக்கிரம் இல்லாமல், மெல்லியதான காமெடி. யாருக்குப் பிடித்ததோ இல்லையோ, எனக்கும் என் மனைவிக்கும் ரொம்பப் பிடித்தது.

அதில் இறுதியாக ஒரு தத்துவம் வரும். 'ஒவ்வொரு பெற்றோரும் தான் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் என்று உள்மனதில் ஏக்கம் கொண்டுள்ளார்களோ, அப்படியெல்லாம் தங்கள் குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுவார்கள்' என்பது போல். (பார்த்து நாளாச்சில்லையா, கரெக்டாச் சொல்லமுடியலே)

நேற்று என் மகனை ஒரு விஷயத்திற்காகக் கடிந்து கொண்டபோது அதைத்தான் நினைத்துக் கொண்டேன். அவன் எப்போதும் தன்னுடன் வைத்து விளையாடும் Gameboy Advance என்ற கைக்கடக்கமான வீடியோ விளையாட்டு அது. கொஞ்சம் விலையான பொருள் ($100).


gameboy advance sp pictures

நேற்று யாரோ ஒரு அண்டை வீட்டுப் பையன் விளையாடக் கேட்டான் என்று கொடுத்து விட்டு வந்ததாகச் சொன்னான். இந்த அமெரிக்கக் கிராமத்தில் அப்படி எளிதில் ஏமாந்துவிடும் வாய்ப்பு இல்லையென்பதால் 'ஏண்டா கண்டவனிடம் கொடுத்தாய்?' என்று கோபிக்கவில்லை நான். ஆனால் அடுத்த கேள்வியில் கோபம் வந்து விட்டது.

'அவன் பேர் என்ன?'

'தெரியலை'

ஏதோ தமிழ்ப் படத்தில் காதலில் விழுந்துவிட்ட ஹீரோவிடம் நண்பர்கள் கேட்பதுமாதிரி இல்லை?

'கழுதை, பேர் கூடத்தெரியாதவனிடம் எப்படிக் கொடுத்தாய்? என்ன புளுகிறியா?' என்று எகிறிவிட்டேன்.

ஒருவேளை எங்காவது தொலைத்துவிட்டு, அதைச்சப்புக்கட்ட இப்படி உடறானா?

'இல்லை எனக்கு அவன் வீடு தெரியும்' என்றான்.

'சரி, cartridgeஐக் கொடுத்தியா, முழு Game-ஏவா?'

ஏனென்றால் இவன்கள் இந்த cartridge-ஐ அப்பப்ப பண்டமாற்று பண்ணிக்கொள்வான்கள்.

'எல்லாம் தான்'

எனக்கு நம்பிக்கையில்லை. அதற்குக் காரணம் இருந்தது. கோவையில் GCTயில் பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போது கையில் இருந்த ஒரே சொத்தான சைக்கிளை, ராத்திரி பள்ளியில் அமர்ந்திருக்கும்போதே எவனோ திருடிக்கொண்டு போக, அங்கும் இங்கும் தேடி, கல்லூரி வளாகத்தில் குடியிருந்த பேராசிரியரிடம் ஓடிச்சென்று புலம்பிவிட்டு பின் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லத்தைரியம் இல்லாமல் நண்பனிடம் இருப்பதாகப் பொய் சொன்னவனின் மகன் அல்லவா? எனவே 'தன்னைப்போல் பிறரையும் நினை' என்ற மந்திரப்படி என்னைப்போலவே என் மகனும் பொய் சொல்கிறான் என நினைத்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

என்னையே நான் கடிந்து கொண்டேன், அடுத்த நாள் என் மகன் தன் பள்ளியிலிருந்து வரும்போதே அந்த விளையாட்டுக் கருவியுடன் வரும் வரை!

'எப்படிடா உன்கிட்டயே இருக்கு இப்ப?'

'அதுவந்து...நான் Game Cartridge மட்டும் தான் அவன் கிட்டக் கொடுத்திருக்கிறேன், முழுக் கருவியல்ல' என்றானே பார்க்கலாம்.

'அப்புறம் நேத்து என்கிட்ட முழுதும்னு சொன்னே?'

'அப்படித்தான் நெனச்சேன், ஆனா இப்ப ஸ்கூல் பேக்கில பார்த்தப்பத்தான் தெரிஞ்சது'

எனக்குத் தலை சுற்றியது. இவன் எனக்கு அப்பனா இருக்கான்!

இவன் என்ன சொல்லுகிறான்? எனக்கு இன்னும் புரியவில்லை. இப்போது அந்தப் பேர் தெரியாத நண்பனின் வீட்டுக்குபோய் அந்த cartridgeஐ வாங்கப்போய் இருக்கிறான். வந்தால்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...