திங்கள், ஜனவரி 12, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5

பொள்ளாச்சி போனபின்னும் அம்மா வேஸ்ட்காட்டன் மில் ஒன்றில் பஞ்சிலிருந்து கொட்டை, குப்பையெல்லாம் பொறுக்கி சுத்தம் பண்ணும் வேலைக்குப் போனார். நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலை. பெரிய குடோனில் வரிசையாய்ப் பெண்கள் தரையில் உட்கார்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் ஏதோ கல்யாணத்தில் பந்தி வழங்குகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.

புதிய இடமாதலால் கோட்டாம்பட்டியில் அப்பாவுக்கும் வெட்டி நண்பர்கள் இல்லை. ஒன்றுக்கு இரண்டாய் இருந்த நூலகங்கள் எங்கள் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கின. அங்கே என் பள்ளித்தோழன் பாபுவுக்கு ஒரு ட்யூஷன் மாஸ்டர். அவரை பாபுதான் போய் அழைத்து வருவான், கொண்டுபோய் விடுவான். ஏனென்றால் அவர் முகத்திரண்டு கண்ணில்லாதவர். பிறகு எப்படி பாபுவுக்கும் அவன் தம்பிக்கும் பாடம் சொல்லிக்கொடுப்பார்? ஒரே முறை இவர்கள் தங்கள் பாடத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தால் போதும், பிறகு, அங்கேயும் ஹார்ட் டிஸ்க் கெட்டி, கப்பென்று வாங்கி ரைட்-ப்ரொடெக்ஷன் போட்டு உட்கார வைத்துக்கொள்ளும். மனிதன்தான் எப்பேற்பட்ட இயந்திரம்! ஒரு சென்சார் வேலை செய்யவில்லையென்றால் வேறொன்று எவ்வளவு எளிதில் கூடுதல் பொறுப்பேற்கிறது! அவர் காட்டியதுதான் பள்ளிப்படிப்புக்கு மேல் என்ன படிக்கலாம் என்ற வழி. அண்ணன் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. 'அது முடிந்ததும் பி.யு.சி. படிக்கவேண்டாம், பாலிடெக்னிக்கில் பி.டி.சி. படிக்கச்சொல்லுங்கள். பிறகு முடிந்தால் பி.இ. இல்லையென்றால் டிப்ளமா... வேலை எளிதில் கிடைக்கும்' என்ற மந்திர உபதேசம். ஆனால் அந்த உபதேசத்தை பயன்படுத்திக் கொள்ள அண்ணனுக்குப் கொடுத்துவைக்கவில்லை, அதற்கு அடுத்த வருஷம் தம்பிக்குப் பயன்பட்டது.

கால்பரீட்சை லீவில் சித்தூர் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒரு சேதி வந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் இரண்டு இடம் பெறும் மாணவர்களை சேர்த்து, ஊராட்சி ஒன்றிய மட்டத்தில் இன்னொரு தேர்வு வைத்து அதில் தேறுபவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் என்று ஒன்று கொடுப்பார்கள். அது வருடத்திற்கு 1000 ருபாய் மதிப்புள்ளது. அப்பா பால் மொத்தவியாபரம் செய்யும்போது ஆயிரம் ரெண்டாயிரம் என்று நோட்டுப்புத்தகத்தில் கணக்கெல்லாம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். மற்றபடி ஆயிரம் ரூபாய் அந்தக் கட்டத்தில் பெரிய பணம். எப்படியோ தேர்வு நேரத்துக்குள் தகவல் கிடைத்து 'கல்லு மெத்தை' பள்ளிக்கூடத்தில் போய்ப் பரீட்சையும் எழுதினேன்.

எழுதியது மறந்துபோய் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பின பின் ஒருநாள் தேர்வான ஓலையும் வந்தது. ஆனந்தமோ ஆனந்தம், ஆனால் அதில் ஒரு சிக்கல். அந்த 1000 ருபாய் ஹாஸ்டல் வசதியுள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்தாலே கிடைக்கும். அதே பள்ளிகளில் வீட்டில் இருந்து படித்தால் வருடத்திற்கு 500 ரூபாய். அதை விடுத்து வேறு எந்தப்பள்ளியில் படித்தாலும் 150 ரூபாய். நான் படித்துக் கொண்டிருந்த மூணுமாடிப் பள்ளி 150 லிஸ்டில் வந்தாலும், நல்லவேளையாகத் தொலைவில் இருந்த கல்லுமெத்தைப் பள்ளி 500 ரூபாய் லிஸ்டில் வந்தது. 'கல்லுமெத்தை' என்ற நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு வகுப்பாசிரியர் ராஜலட்சுமி டீச்சருக்கு ஏக சந்தோஷம், ஏதோ பெரிய படிப்பாளி கிடைத்துவிட்டான் தன் வகுப்புக்கு என்று. பொடியனைத் தனக்கு நடைத்தோழனாக நியமித்து, தான் மாலையில் தன் வீட்டில் எடுக்கும் ட்யூஷனில் இலவசமாய்ச் சேர்த்தும் கொண்டார்.

இன்னும் விளக்குகள் வரவில்லை, வழிகாட்டிகளே தலை காட்டுகிறார்கள். இன்னும் ஓரிருநாளில் முதல் விளக்கை சந்திக்கலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...