1981 மே மாதம். எல்லாப் பரிட்சைகளும் முடிந்தது. ப்ராக்டிகல்ஸ், ப்ராஜக்ட் வொர்க்..எல்லாம் முடிந்தது. எல்லாருக்கும் ஆங்கிலத்தில் எப்படி அப்ளிகேஷன் எழுதலாம் என்று...இல்லை, இல்லை, ஒரு அப்ளிகேஷனின் டெம்ப்ளேட்டே கொடுத்தார்கள். அதில் அங்கங்கு பெயர், முகவரி, இத்யாதிகளைத் தூவினால் அப்ளிகேஷன் ரெடி. 'கண்ணுங்களா, இனிமே கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு, வேலை தேடிப் பிழைச்சுக்குங்க' என்று, தாய்க் கோழி வளர்ந்த குஞ்சுகளைக் கொத்தித் துரத்துமே, அதுபோல துரத்திவிட்டார்கள். எந்தக் கம்பெனிக்குப் போடறதுன்னுதான் தெரியலே. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. எனவே, பிரிவு பெரிதாய் வருத்தவில்லை.
ராமலிங்கம் என்று ஒரு வொர்க்ஷாப் வாத்தியார். எனக்கு சின்னதிலிருந்தே கைவேலை எல்லாம் நல்லா வரும்கிறதாலே ஓரளவுக்கு செய்வேன். அதைப்பாத்து அவருக்கு ஒரு பிரியம். அவர் கடைசி நாள் கேட்டார், 'ஏம்ப்பா, பக்கத்திலே தொழிற்பேட்டையிலே ஒரு வேலை இருக்கு, போறயா?'. தொழிற்பேட்டை எங்க வீட்டில் இருந்து பாலிடெக்னிக் தாண்டி இன்னும் ஒரு கி.மீ. கூடப் போகணும். வெளியூருக்கெல்லாம் போய் வேலைதேடுவதை விட இது நல்லதாச்சேன்னு சரின்னு சொன்னேன்.

அம்மாவை இனி வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ரொம்ப வருடங்களுக்கப்புறம் இப்போதுதான் ஓய்வு கிடைத்தது.
அதற்குள் அண்ணனுக்குக் கல்யாணப் பேச்சு வந்தது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். வயசும் ஆகவில்லை. மதுரை காமராஜ் திறந்த வெளிக்கல்வியில் முதல் வருடம் பி.காம். கூட முடித்துவிட்டார். இன்னும் இரண்டு வருடம் பொறுத்திருந்தால் முடித்திருப்பார். ஆனால் யாரோ என்னவோ பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தைக் காரணம் காட்டி, இதுதான் சாக்கென்று நானும் அந்தக் கம்பெனியில் இருந்து கழன்று கொண்டேன். சொல்லப் போனால் மீண்டும் திரு. ஹரிஷங்கரைப் பார்த்து சொல்லிக்கொண்டு வரக் கூட தைர்யமும் விருப்பமும் இல்லை. நான் 'நின்னுட்டேன்', அவ்வளவுதான்.
அண்ணி உடுமலை அருகே ஒரு மில்லில் வேலை பார்த்தார்கள். அண்ணனும் அண்ணியும் வேலை செய்யும்போது நாம் வேலையில்லாமல் இருப்பது நல்லாயில்லை. என்ன செய்யலாம்? எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன், ஹீரோ சென்னைக்கு ரயிலேறி, ப்ரீப்கேசோடு சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆபீஸ் படியேறி வேலை தேடுவதை. நமக்கு சென்னைக்கெல்லாம் போக முடியாது, ப்ரீப்கேசும் இல்லை. அதற்காக விட்டுவிடமுடியுமா?
ஒரு பாக்ஸ்-ஃபைல் எனப்படும் பெட்டிவடிவ ஃபைலில் சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு, கோவைக்கு, பஸ் ஏறினேன். எங்கு போவது என்று தெரியாது. ஆனால் கோவைக்குப் போகும் வழியில் ஒரு சிறுதொழில் பேட்டை (மறுபடியும் சிறுதொழிலா :-( ) இருந்தது. அதுதவிர வேறு சில கம்பெனிகளையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒவ்வொன்றாய்ப் போய் முட்டிப்பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக