வெள்ளி, ஜனவரி 02, 2004

சாமானிய சங்கீதம்

நண்பர் நா.கண்ணன் தன் வலைப்பூவில் சங்கீத நினைவுகள்-02 என்ற தலைப்பில் இன்று இசையரசி திருமதி. சுதா ரகுனாதன் அவர்களுடன் தன் சந்திப்பை நினைவு கூர்ந்திருக்கிறார். எங்கள் வீட்டிலும் கொஞ்சம் கர்நாடக இசைப் பாடல்கள் ஒலிக்கக் காரணம் சுதா ரகுனாதன் தான் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். கண்ணன் பாட்டுக்களில் ஈடுபாடு வந்தபிறகு கொஞ்சம் தேடி சுதா ரகுனாதனின் பாடல்களில் இருந்து சிலவற்றை Music India Online தளத்தில் கண்டு எடுத்தேன். இப்போது தினமும், ஏற்கனவே சொன்ன மூன்று பாசுரங்களுடன், சுதா ரகுனாதனின் பல கண்ணன் பாடல்களும் தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கின்றன.

ராகத்திற்கும், தாளத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கூடத் தெரியாதாகையால் இதிலெல்லாம் முன்பு ஒரு ஒட்டாமை (ஒவ்வாமை என்று கூடச் சொல்லலாம்) இருந்தது. இவரின் கண்ணன் பாடல்களைக் கேட்ட பிறகு அப்படி எந்த உணர்வும் இல்லாமல் விரைவில் பிடித்துப்போயிற்று. தமிழிசையின் பலமாகவும் இருக்கலாம். கண்ணன் மேல் ஏற்பட்ட பிடிப்பாகவும் இருக்கலாம். அற்புதமான வரிகளில் பாடல்களை அமைத்த ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர், பாபனாசம் சிவன், அருணாசலக் கவிராயர், போன்றோரின் இசைத் திறமையும் சொல்லாட்சியும் காரணமாய் இருக்கலாம். சுதா ரகுனாதனின் குரல் இனிமையாக இருக்கலாம். இல்லை எனக்கு வயசாகிவிட்டதால் கூட இருக்கலாம்:-)) ஆனால் இந்தப் பாடல்கள் மனதில் உட்கார்ந்துவிட்டது மட்டும் உண்மை.

தினமும் கேட்கிறோம், இதுவரை ஒரு 200 முறை கேட்டிருப்போம், இன்னும் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய்க் கேட்பதுபோல இருக்கிறது. இம்மாதிரி கற்பூர வாசனையை ஏன் என்னை மாதிரிக் கழுதைகள் எல்லாரும் அனுபவிக்கும் விதமாய் எல்லா இசைக்கலைஞர்களும் கொடுக்கக் கூடாது? அல்லது ஏற்கனவே கொடுக்கிறார்களோ என்னவோ, எனக்குத்தான் தெரியவில்லையோ? ஆண்களில் உன்னிகிருஷ்ணன் பாடிய நிறையத் தமிழ்ப் பாடல்கள் ஒரு 'பாகவதர்'பாடின மாதிரியில்லாமல் மனசோடு ஒட்டுகிறது. இன்னும் நிறையத் தேடிப் பிடிக்கவேண்டும். அதிலும் அந்த ஜகத்ஜனனி நன்றாகப் பிடித்துப் போயிற்று.

வானொலியைத் தொடர்ந்து கேட்ட அந்த நாட்களில் இந்த கர்நாடக இசை எதுவும் மனதில் ஒட்டவில்லை. இவர்கள் யாருக்கு வானொலி சேவை நடத்துகிறார்கள், என்னேரம் பார்த்தாலும் புரியாத மொழி, அல்லது ராக ஆலாபனை, ஒரு வார்த்தையை திருப்பித் திருப்பி ஜவ்வாக இழுத்து...உடனே ரேடியோப்பெட்டியை சிலோனுக்கு மாற்றிவிடுவோம், அல்லது அணைத்துவிடுவோம். வெகுஜன மக்களுக்கு அன்னியமாகிப் போய்விட்ட இந்த இசை வடிவத்தை, இம்மாதிரி தமிழ்ப் பாடல்கள் மனதின் அண்மைக்குக் கொண்டுவரும். இதைப் பாடகர்கள் புரிந்துகொண்டால் எல்லாருக்கும் நல்லது. நடக்கும் என்று நம்புவோம்.

நாங்கள் கேட்கும் அந்தப் பாடல்களைக் கேட்க விரும்புகிறவர்கள் இங்கே போனால் கேட்கலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...