சனி, ஜனவரி 10, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3

அப்பா பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே அம்மாவுக்கு நல்ல சம்பளத்துக்கு '·பாரின் ஆ·பர்' ஒன்று கிடைத்துவிட்டது. முன்பு வாங்கின சம்பளத்துடன் ஒப்பிட்டால் மூணு நாலு மடங்கு சம்பளம், அது மட்டுமில்லாமல் வேலை செய்தவரைக்கும், திறமையுள்ளவரைக்கும் சம்பாதிக்கலாம், வரம்பில்லா ஊதியம்! ஆண்/பெண் வித்தியாசம் இல்லை, எல்லாருக்கும் ஒரே அளவு அங்கீகாரம்.

ஆனால் அந்த வேலை நடக்குமிடம் சித்தூரிலிருந்து 5-6 கிலோமீட்டர் தூரத்தில், கொண்டம்பட்டி தாண்டிப் போக வேண்டும். 'வன்கலம்' சம்பந்தப்பட்ட வேலையாதலால் கடப்பாரை, மண்வெட்டி, கூடைதான் கருவிகள். 'ஏரி போடுதல்' என்று அழைக்கப்பட்ட அந்த வேலையின் 'ஸ்டேட்மென்ட் ஆ·ப் வொர்க்' எளிமையானது. சாலை ஒரங்களில் ஒரு அடி ஆழத்தில் பத்துக்குப் பத்து சதுரத்தில் குழி வெட்டி அதில் இருக்கும் மண்ணை அடுத்து சாலைக்கோ, அல்லது ஒரு வரப்பு மாதிரி திட்டுக்கோ அணைப்பாய் கொண்டுபோய் பரப்ப வேண்டும். இந்த ஒரு குழி ஒரு யூனிட். அதற்கு ஒண்ணே கால் ரூபாய் என்று நினைக்கிறேன். அதுமாதிரி ஒருவர் எத்தனை குழி முடிக்கிறாரோ அத்தனை சம்பளம். எந்த உச்ச வரம்பும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அத்தனையும் டாக்ஸ்-·ப்ரீ. அந்த வறட்சிக் காலத்தில் இறுகிப்போன நிலத்தை அகழ்ந்து தோண்டி எடுப்பது எவ்வளவு சுகமாய் இருந்திருக்கும்....

இதில் ஒரு சிரமம், வெயில் ஏற ஏறக் களைப்பு அதிகமாகும். எனவே காலையில் 'பலானு'விடிய (வெளிச்சக் கீற்று தெரியும்போது) 'க்ளையன்ட் சைட்'டில் இருந்தால்தான் சூரியனோடு போட்டிபோட்டு நான்கைந்து குழி முடிக்க முடியும். எல்லாம் உச்சி வேளை வரைதான், அதற்கப்புறம் ஜெயிப்பது அவன்தான். இதற்காக காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலையை முடித்து, தூக்கில் எடுத்துக்கொண்டு, நடக்க ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும். பிறகு ஒரு இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி, 'போர'டிக்காமல் இருக்க அரட்டை அடித்துக் கொண்டு 'நிலா' வெளிச்சத்தில் திரும்பவும் நடந்து, மூன்று மணி வாக்கில் வீட்டுக்கு வந்து சேர்ந்து, திண்ணையில் விழுந்தால், நாங்கள் 4 மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும்போது நாங்கள் வந்தது கூடத் தெரியாமல் அப்படியொரு தூக்கம்! பிறகு எழுந்து, 'இன்னிக்கு நான் சுப்பிரமணியை விட ஒரு குழி அதிகமா வெட்டினேன்' என்று பெருமையாகச் சொல்லும் அம்மா...

எழுத்தெல்லாம் கலங்கலாய்த் தெரிவதால் இதற்குமேல் எழுதமுடியவில்லை...நாளை தொடரலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...