புதன், ஜனவரி 14, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7

கோவை போனபின், வாழ வழியற்ற பெண்கள் நிறையப்பேருக்குக் கைகொடுக்கும் இட்லிக்கடை அம்மாவுக்கும் கைகொடுத்தது. அலுவலகம் ஒன்றில் வெள்ளைச்சட்டை வேலை பார்க்கும் என் மாமாவுக்குத் தன் வீட்டு வாசலில் இட்லிக்கடை என்பது கொஞ்சம் கௌரவக்குறைவாய் இருந்ததால், அம்மா பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் வாசலில் கடை நடத்தினார். ஓரளவுக்கு இது நன்றாகப் போனது, எனவே அம்மாவால் யாருக்கும் சுமை இல்லை என்கிற அளவில் நாட்கள் நகர்ந்தன.

என்னதான் பெரிய கொள்கைகளோடு அரசாங்கங்கள் திட்டம் போட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது வரும் சிக்கல்கள், திட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகின்றனவே. பெரியப்பாவின் திட்டம் ஆமைவேகத்தில் போகும்போது, பெரியம்மாவின் திட்டு முயல்வேகத்தில் ஓடி, மூன்று மாதத்துக்குப் பின் எனக்கும் அடுத்த இடம் தேடவேண்டி ஆனது. பொறுத்துக் கொண்டுதான் இருந்தேன், ஆனால், ஒரு ப்ரேக்-பாயின்ட் வந்தது. அங்கே இருக்க விடுத்த அழைப்பு திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு ஏழெட்டு மாதம்தான், அதற்குப்பின் பத்தாவது பரீட்சை முடிந்துவிடும், அப்புறம் என்ன படிப்பேன், எங்கே படிப்பேன், ஒன்றும் தெரியாது. ஆனால் அதற்குள் இந்த நிகழ்வு. இந்த எட்டுமாதம் பொடியனுக்கு எங்கு இடம் கிடைக்கும்? அழுதுகொண்டு கோவைக்குப் போனேன். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும், எனக்குத் திட்டு விழும் என்று பயந்தேன். 'அழுகாதீடா, மலை போல மனுசனே போயிட்டாரு, இனி இதெல்லாம் என்ன..' என்று சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் உள்ளே இருந்த உரமேறிப்போன நெஞ்சை உணர்த்தின.

ஆனாலும், இன்னும் எட்டு மாதத்திற்கு எங்கே தங்கப் போகிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் ஒரே இருட்டாய் இருந்தது. அந்த இருட்டிலிருந்து எனக்கு ஒளிகொடுத்தவர் என் சின்ன அம்மச்சி, (அம்மாவின் அம்மாவின் தங்கை.) அவரொன்றும் வசதியானவரில்லை, அங்கும் மாதாமாதாம் சம்பளம் கொண்டுவந்து யாரும் கொட்டுவது கிடையாது. நானும் அவரின் நேரடிப் பேரன் கிடையாது. ஆனால், அவரும் அம்மாவுக்குப் புதிதாய்க் கிடைத்த வெள்ளைப்புடவைப் பரிசை ஏற்கனவே பெற்றுவிட்ட பாட்டாளி. ஆறு மக்களுடன் தனியாய் நின்று, போராடி நிமிர்ந்துகொண்டிருப்பவர். அவரின் நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு மகனும் என் அண்ணனைப்போலவே பள்ளியிறுதிக்குமேல் படிக்க முடியாமல் பலவேலைகளுக்குப் போய்க் கஷ்டப்படுவதும் என் மேல் பரிவு வரக் காரணமாயிருக்கலாம். ஆனால் அவர் கொடுத்த ஆதரவு, அந்தச் சமயத்தில் கோடி ரூபாய்க்குச் சமம்.

அவர் இருப்பது பொள்ளாச்சியில் இருந்து 16கி.மீ. தள்ளி, புதுப்பாளையம் கிராமம். ஆனால், அங்கிருந்து டவுன் பஸ் வசதி ஓரளவுக்கு இருந்தது. சந்தை நாட்களில் மாலையில் பொள்ளாச்சியில் இருந்து பஸ் ஏறுவதற்குள் பெரிய பாடாகிவிடும். ஒரு மாமன் அங்கேயே தனிக்குடித்தனம் இருந்தார். இன்னும் மூன்றுபேர் வேறு இடத்தில் இருந்தார்கள். அங்கு மின்சாரவசதியும் கிடையாது. அது ஒரு பெரிய பிரச்னையாய் இல்லை. புதுப்பாளையத்தில் இருந்த எட்டு மாதங்களும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல், காலையில் 7 மணிக்கெல்லாம் எனக்கு சமையல்செய்து சாப்பிடவும் கொண்டுபோகவும் கொடுத்துவிடும் அம்மச்சி. இத்தனைக்கும் அவரும் காட்டு வேலைக்குப் போகவேண்டும். பஸ்ஸுக்கு மட்டும் அம்மா பணம் கொடுத்துவிடும். மற்றபடி என்னைத் தன் சொந்தப் பேரனைவிடப் பார்த்துகொண்டார் அம்மச்சி.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...