திங்கள், நவம்பர் 17, 2003

குட்டிக் குரங்கும், மனக் குரங்கும்

நேற்று ஒரு நண்பர் இல்லத்தில் ஒரு ISKCON கிருஷ்ணபக்தர் தன் பேச்சின் இடையே, 'மனிதனுக்கு எதைவிடவும் மிகவும் முக்கியமானது எது' என்பதை விளக்க அக்பர்-பீர்பால் கதை ஒன்றைச் சொன்னார். அக்பர் கேட்ட இந்தக் கேள்விக்கு பீர்பால் 'தன் உயிர்தான்' என்று பதில் சொன்னாராம். அதை நிரூபிக்க ஒரு விளக்கத்துக்கும் ஏற்பாடு செய்தாராம்.

ஒரு குழிக்குள் ஒரு தாய்க்குரங்கையும் அதன் குட்டிக் குரங்கையும் விட்டார்கள். அவை தானாக மேலே ஏற முடியாத அளவுக்கு அந்தக் குழி ஆழம். அந்தக் குழிக்குள் நீரை நிரப்ப ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் நீர் குட்டிக் குரங்கை முழுக ஆரம்பிக்க, தாய் அதைத் தூக்கிக் கொள்கிறது. 'பார், பீர்பல், தாய்க்கு குட்டியின் மேல் உள்ள பாசத்தின் மகிமையை' என்றாராம் அக்பர். மேலும் நீர் மட்டம் ஏற, தாய் அதைத் தோளில் இருத்திக்கொள்கிறது. இன்னும் மேலே ஏற, குட்டியைத் தன் தலைக்கு மேல் இரு கைகளாலும் தாய் தூக்கிக் கொண்டு சிரமப்பட்டுக் காக்கிறது. அகப்ர் முகத்தில் புன்னகை. பீர்பாலோ நீர் இன்னும் ஏறட்டும் என்கிறார். இப்போது தாய்க் குரங்கின் தலைக்கும் மேல் நீர்.

தாய், குட்டியை விட்டு விட்டு, தன்னைக் காத்துக்கொள்ளத் தத்தளிக்கும் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் சொன்னது: தன்னைக்காத்துக்கொள்ள அந்தத் தாய் குட்டியைக்கீழே போட்டு அதன் மேல் ஏறி நின்றதாம்.

பீர்பால் தன் வாதத்தில் வென்றிருக்கலாம், அதை இவரும் நமக்குப் புரிய வைத்திருக்கலாம், ஆனால் உதாரணம் என்னவோ மனதைப் பிசைவது மாதிரி இருக்கிறது. வீட்டுக்கு வந்தும், அந்தக் குட்டியும், குரங்கும் மனதை விட்டுப்போக மறுக்கின்றன. அந்தக் குட்டி உயிருக்காகப் போராடுவது, அதுவும் தாயிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் காட்சி மனத்திரையில் திரும்பத்திரும்ப ஓடுகிறது.

பெற்ற குட்டிகளைத் தின்னும் விலங்குகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனாலும் இது மனதை என்னவோ பண்ணுகிறது.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...