செவ்வாய், டிசம்பர் 16, 2003

என்னுயிர்த்தோழன் ரேடியோ - 2

என்னுயிர்த்தோழன் ரேடியோ - இதற்குமுன்

பாலிடெக்னிக்கில் படிக்கும்போது நூலகத்தில் இருந்து ரேடியோ பற்றிய விதம்விதமான புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. ஓம்ஸ் அருணாசலம் என்பவரின் புத்தகங்கள் நாவலை விட சுவாரசியமாய் இருக்கும். இதில் சில மேலை நாட்டு ஆங்கிலப் புத்தகங்களும் அடக்கம். கைப்பட ஒரு ரேடியோ செய்தே ஆகவேண்டும் என்ற ஆசை நாளொரு மேனியாய் வளர்ந்து வந்தது. அதிலும் இந்த கிரிஸ்டல் ரேடியோ என்பதின் மேல் அப்படியொரு மோகம்! அதில் ஒரு புதுமை(!) கிரிஸ்டல் ரேடியோ இயங்க மின்சாரம் தேவையில்லை. வானொலி நிலையத்தில் இருந்து ஒலிபரப்பாகும் மின்காந்த அலைகளின் சக்தியிலேயே அவை வேலை செய்யும். அதை செய்ய என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று எழுதி மளிகை சாமான் லிஸ்டைப் போல் எழுதி, அண்ணனிடம் திணித்து, பாடாய்ப் படுத்தி... அதிலும் 1940 களில் எழுதப்பட்ட அமெரிக்க புத்தகத்தைப் பார்த்து எழுதிய பாகங்கள், பொள்ளாச்சியில் எப்படிக் கிடைக்கும்? அவர் பேருந்து பராமரிக்கும் பணிமனையில் வேலை செய்ததால் உதிரிப்பாகங்கள் வாங்கும் கடைக்குப் போவார். 'அங்கு கேட்டால் கிடைக்கும், வாங்கிவா' என்று அழாத குறையாக நெருக்க, அவரும் அந்த லிஸ்டைக் கொண்டுபோய்... அதுக்கப்புறம் அந்த லிஸ்ட் ப்த்திப் பேச்சு எடுத்தாலே அடிவிழும் என்பது மாதிரி ஆகிவிட்டது.

அண்ணன் வேலை ஓரளவுக்கு நிரந்தரமான பிறகு முதலில் வாங்கிய பொருள் ரேடியோ! வீட்டுக்கு விருந்தாளி வந்த சந்தோஷம்! அப்போது ஒரு ரேடியோ வாங்க ஒருவர் தன் ஒரு மாதச் சம்பளத்தை செலவு செய்ய வேண்டியிருந்தது. இன்று இந்த அமெரிக்காவில் ஒரு ரேடியோ வாங்க ஒருவர் தன் ஒருவேளை சாப்பாட்டுக்கு ஆகும் பணத்தைச் செலவு செய்தால் போதும். காலமும், இடமும் வசதிகளை எப்படித்தான் மாற்றுகின்றன? ஆனாலும், இன்னும் இந்தியாவில் இதே சமன்பாடு வேலை செய்யாது. ஒரு 20-30 ரூபாயில் ஒருவேளை சாப்பிட்டுவிடலாம். ஆனால் ஒரு ரேடியோ வாங்க இன்னும் சில நூறுகள் செலவு செய்துதான் ஆகவேண்டும் (இலவசமாய் FMகாரர்கள் கொடுக்கிறார்களாமே, இன்னொரு விளம்பர வாய்ப்பு!)

ரேடியோ எஞ்சினீரிங்(?) மூன்றுமாத்தில் சொல்லி கொடுக்கிறோம் என்று வரும் விளம்பரங்களைப் பார்த்தால் ஆசை ஆசையாய் இருக்கும். எப்படியாவது வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அதற்குப் பணம் சேர்த்து அந்தப் பயிற்சிக்குப் போய் எல்லாம் கத்துக்கொள்ள வேண்டும், அதை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மனம் கணக்குப் போட்டது. ஆனால் உண்மையில் வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் அந்த வேலை பிடித்துபோய் ரேடியோ எஞ்சினீரிங் படிக்க முடியாமல் போய்விட்டது. பாவம் ரேடியோ உலகம், ஒரு நவீன மார்க்கோனியை இழந்துவிட்டது!

கோவையில் பகுதிநேரப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆள் வீட்டில் இருக்கிறதா என்பதை ரேடியோ சத்தம் கேட்கிறதா என்பதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இரவு ஒன்பது மணிக்கு கல்லூரியிலிருந்து வந்ததும் 15 நிமிட ஆங்கில செய்திகள். அந்த செய்திகளின் தமிழாக்கத்தை அடுத்த நாள் காலை ஏழேகாலுக்கு சரோஜ் நாராயண்ஸ்வாமி சொல்வார். ஆங்கிலம் புரிதலில் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள இது ஒரு தினசரி வாய்ப்பு. அதற்கு மேலும் விளக்கத்தை மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு அலுவலகத்தில் படிக்கும் இந்து பேப்பர் வழியாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த சுழல் பொது அறிவுக்கு மட்டுமல்லாமல், ஆங்கில எழுத்தறிவு, உச்சரிப்பு இரண்டுக்கும் பெரிய அளவில் கைகொடுத்தது. ஆங்கிலத்தில் லீவு லெட்டர் மட்டுமே எழுதத் தெரிந்த நிலையிலிருந்து பூனா வரை நேர்முகத் தேர்வுக்கு போகவும், சம்பளத்திற்குப் பேரம் பேசவும் தைரியம் வந்ததுக்கு ரேடியோவும், இந்து நாளிதழும் தான் காரணம்.

ரேடியோவைப் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்து இரவுகளில் வரும் இனிமையான பாடல்களைக் கேட்டுக்கொண்டே உறங்கிப்போவது ஒரு சுகானுபவம். பாட்டுக் கேட்க ஆரம்பித்தவுடன் தூக்கம் வந்துவிடும். நிறுத்திவிட்டுத் தூங்க முயற்சித்தால் தூக்கம் வராது. இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. இதற்கு முடிவுகட்ட வேண்டி ஒரு நண்பனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தேன். அவன் இயந்திரவியல் படிக்காமல், மின்னியல் படித்தவன். ரேடியோவுக்கு, 'சிறிது நேரத்துக்குப்பின் தானாக அணையும் ஒரு டைமர் செய்துதா' என்று அவனை நச்சரித்ததில் அவன் ஆளைப்பார்த்தாலே கிட்ட வராமல் ஓடிப்போகிற அளவுக்கு ஆனதுதான் மிச்சம்.

பட்டப் படிப்பை வெற்றிகரமாக (உண்மையிலேயே பெருவெற்றிதான்:-) முடிக்கப் பெரிதும் காரணமான நண்பர் அழகிரியும் ரேடியோப் பைத்தியமாய் இருந்ததால் மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. அவர் அறையில் தான் இருவரின் கூட்டுப்படிப்பு. என்ன பாடம் படித்தாலும் ரேடியோ மட்டும் உயிரோடு இருக்கவேண்டும். ரேடியோவை அணைத்துவிட்டுப் பாடம் படிக்கவே முடியாது. அதுவும் தனிமையில் என்றால் ரேடியோ நிகழ்ச்சிகள் முடிந்தபின் விழித்திருக்கவே முடியாது. அத்தோடு அன்றைய நாள் நிறைவு பெரும்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...