சனி, டிசம்பர் 20, 2003

தமிழர் வளர்ச்சிக்குத் தமிழ்

தமிழும் மற்ற மொழிகளும்...

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பார் பாரதியார். இன்னொரு இடத்தில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என்பார் அவரே. எது உண்மையில் சிறந்த மொழி? ஒவ்வொரு மொழியும் அதை நன்கு அறிந்து ரசிப்பவருக்கு இனிமைதான். ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் போட்டி நடத்துவது, 'என் அம்மாவின் பாசம் உயர்ந்ததா, உன் அம்மாவின் பாசம் உயர்ந்ததா' என்று கேட்பதற்கு சமம். முதலில் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது என்பது வீண்வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. 'கணினிக்கு சம்ஸ்க்ருதம் ஏற்றது, இசைக்கு தெலுங்கு ஏற்றது, இதுக்கு இந்தி ஏற்றது, அதுக்கு ஆங்கிலம் ஏற்றது' என்பதெல்லாம் சரியெனப்படவில்லை.

எது ஒருவருக்கு சமூக அடையாளம்?

என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் சமூகம், பொழுதுபோக்கு, சமயம், அரசியல் என்ற பல விஷயங்களில் ஒருவர் தன் மொழிப் பின்புலத்துக்கேற்பத் தான் பங்கேற்கிறார். இங்கு ஒன்றை அவதானிக்கலாம்: ஒரு நாட்டில் பிறந்தவரை அடையாளப்படுத்தும்போது அவர் நாட்டையோ, மதத்தையோ, நிறத்தையோ யாரும் முன்னிறுத்துவது இல்லை. ஒரு ஆங்கிலேயரை, He is an Englishman என்கிறார்கள், He is an Englandman என்பதில்லை. அதே போல், French, Dutch, Polish, Spanish, Italian, Chinese, Japanese...என்றுதான் சொல்கிறார்கள். முறையே, Franceman, Netherlandman, Polandman, Spainman, Chinaman, Japanman.. என்று சொல்வதில்லை. இது ஏனென்றால், ஒருவர் மதம் மாறலாம், குடியுரிமை பெற்று வேற்று நாட்டு குடிமகனாகலாம், அவரால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரே அடையாளம் தாய்மொழி. அதன் காரணமாகவே இவ்வாறு என்றும் நிரந்தரமான அடையாளத்தால் ஒருவரை அழைப்பது. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, இக்கருத்துடன் ஒத்துப் போனாலோ போகாவிட்டாலோ, தமிழர் குடும்பத்தில் பிறந்து தமிழரோடு வளர்ந்தவர் அனைவரும் சாகும்வரை தமிழரே. புலம்பெயர்ந்தோருக்கும் இது பொருந்தும்.

தமிழ் வாழ ஏதும் செய்ய வேண்டுமா?

'நாம் தமிழுக்கு என்ன செய்தோம்' என்பது அவ்வளவு முக்கியமான கேள்வியல்ல. இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் சுற்றமும் நட்புமே சுருங்கிக் கொண்டு வருகையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் தேவையும் இருக்கிறது? ஆனால் தமிழ் வாழாமல் அழிந்தால் தங்கள் வாழ்வும் பங்கப்படும் என்பதைத் தமிழர் புரிந்தால் தானாகத் தமிழ் வளரும். 'ஒருவருக்கு மொழி வெறும் சாதனமல்ல, அது அவருக்குப் பின்புலமும் கூட' என்ற திரு இராம.கி.யின் கருத்தில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு:

மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்?

தமிழர் தமிழைப் பயன்படுத்துவது போதாதா?

தமிழர் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், தன் சுற்றம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் தங்கள் மொழியை பேணுவதும் காலத்திற்கேற்ப மேம்படுத்துவதும், இற்றைப்படுத்துவதும்(!) அவசியமாகிறது. மீண்டும் திரு இராம.கி அவர்கள் சொல்வதைப்போல '..இன்றைக்குத் தமிழ் என்பது பழம்பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை..' தமிழின் உபயோகத்தை பரவலாக்கி வீட்டுக்குள், தொலைக்காட்சியில், திரைப்படத்தில், பூஜை அறையில் மட்டும் அல்லாமல் பள்ளியில், அலுவலகத்தில், வணிகத்தில் பயன்படுத்தினால் தானே தமிழ் நிலைக்கும். அல்லாவிடில் தமிழ் சிறுகச்சிறுக அழிந்தே விடாதா? அப்புறம் எங்கிருந்து அடையாளம் கிடைக்கும்?

தமிழரல்லாதோருடன் வணிகம் செய்கிறோம், நுட்பம் பேசுகிறோம், இங்கெல்லாம் தமிழால் ஆவதென்ன?

தேவையான கேள்விதான். இன்றைக்கு இந்தியாவிற்கு வெளியே தன்னை நிலைப்படுத்திக்கொண்ட இந்திய மொழியினரிடையே தமிழர் மிகுந்திருப்பதற்கு அவர்தம் ஆங்கில அறிவும் காரணம்தான். தமிழில் அலுவல், வணிகம், நுட்பம் செய்யும்போது, அது உலக அளவில் நம்மவர் பின்தங்கிவிடுவதற்குக் காரணமாகிவிடக்கூடாது. பன்னாட்டு மொழித்திறமை தொடர வேண்டும். அதனுடன் உள்ளூரில் தமிழ் முழக்கம் பரவவேண்டும். முக்கியமாக அலுவல், வணிகம், நுட்பம் (சாத்திரங்கள் என்று பாரதி பொதுவில் சொன்னதை எல்லாம்) சார்ந்த துறைகளில் தனித்தமிழ், உயர்தனிச்செம்மொழி என்றேல்லாம் முழங்காமல் முடிந்தவரை அனைவராலும் எளிதில் விளங்கக்கூடிய, சுருக்கமான சொற்கள் பாவிக்கப்படவேண்டும். கிரந்த எழுத்துகள், மற்றும் 'காபி, பஸ், ரயில்' போன்ற சுவீகரிக்கப்பட்ட சொற்கள்,ஆகியவற்றையெல்லாம் முழுமனதோடு அரவணைத்துச் செல்ல வேண்டும். கணினி, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் அனைத்துலகும் பயன்படுத்தும் பெயர்சொற்கள், உரிச்சொற்களை (முக்கியமாய் முதலெழுத்துச் சுருக்கங்களான USB, RAM போன்றவற்றை) அப்படியே தமிழ் எழுத்துகளுடன் பயன்படுத்தலாம் (Tarnsliteration). தமிழ்ப்படுத்துதல் பற்றி இன்னும் சில கருத்துகளை அறிய திரு. நாகூர் ரூமி மற்றும் திரு. வெங்கடரமணன் குறிப்பிட்டவற்றைப் படிக்கலாம்.

தமிழில் இத்தகைய சாத்திரங்கள் கிடைக்க என்ன செய்யலாம்?

அதற்கு வசதியும் நேரமும் இத்தகைய சாத்திரங்களில் பரிச்சயமும் உடைய தமிழர், தங்கள் அறிவை தங்கள் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். 'சாத்திரங்கள் பற்றி இணையத்தில் தமிழில் தேடினாலும் தங்களுக்குக் கிடைக்கும்' என்ற நம்பிக்கையை ஊட்டலாம். ஒவ்வொரு புதுக் கலையையும் சாத்திரங்களையும் தமிழில் தருவோர், பொதுவான சில வழிகாட்டுதலுக்குட்பட்டு புதுப்புது சொற்பிரயோகத்தை முயலலாம். அப்படியே அவை பயனுக்கு வந்து நிலைபெறும்.

யார் செய்ய முடியும் இதை?

இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழருக்கு இருக்கும் நேரம், வசதி வாய்ப்புகள் உள்ளுர்த்தமிழருக்கு இல்லை. வாரத்தில் 6 நாட்கள் வேலை. தினமும் 12 மணிநேரம் அலைச்சல் என்று சிரமப்படும் மக்களை பொதுக்காரியத்துக்கு எதிர்பார்க்கமுடியாது. ஆனால் வெளிநாடுகளில் பனிபுரியும் நிறையப்பேர் இதைச்செய்ய முடியும் வசதியோடு இருக்கிறார்கள். இந்தியர்களின் மூளைத்திறன் தங்கள் சமூகத்திற்குப் பயனின்றி விரயமாகிறது (brain drain) என்னும் குற்றஞ்சாட்டுபவர்களுக்குப் பிரதியுபகாரமாக இதைச் செய்யலாம்.

எத்தனையோ விஷயங்கள் ஆங்கிலத்தில் சொடுக்கினால் கிடைக்கும் போது, அதையே மீண்டும் தமிழில் மெனக்கெட்டு எழுதி ஏன் காலத்தை விரயம் செய்ய வேண்டும்? அப்படியே செய்தாலும், இவை அந்தந்த நுட்பவியல் வளைர்ச்சிக்கு ஈடாக நிகழ்நிலைப்பட்டிருக்குமா, தேங்கிப்போய்விட்ட அறிவு யாருக்குப் பயனாகும்?

உலகத்தில் ஆங்கிலத்தில் மட்டும்தான் இந்த விஷயங்கள் கிடைக்கின்றனவா? நிறைய ஐரோப்பிய மொழிகளிலும், ஜப்பானிய, சீன, கொரிய மொழிகளிலும் சமகால நுட்ப அறிவு கிடைக்கிறதே. ஏன் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டும்? அவர்கள் தங்கள் அடையாளத்துக்கு தங்கள் மொழி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் சிந்தனை தங்கள் மொழியில் விரிவதைப்போல் இரவல் மொழியில் இருக்காது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். காலங்காலமாய் இரவல் தொழில்நுட்பத்திலேயே குளிர்காய்ந்துவிட்ட எம் மக்களுக்கு சிந்தனைச் சுதந்திரத்தைப் பெற இவை அவசியமாகிறது. ஆங்கிலம் போன்ற மொழியில் இருக்கும் அளவுக்கு விரிவாகவும், நிகழ்நிலைப்பட்டதாயும் இன்றைக்கு இல்லாவிட்டாலும், ஒரு தமிழர் இத்தகைய இயல்களில் அடிப்படை அறிவு பெறுவதற்கு பயனாகும் அளவுக்காவது இவை கிடைக்கும் வண்ணம் செய்யலாம்.

தமிழில் இருக்கும் பழம் இலக்கியங்களைப் படித்தறிந்து கொள்ளவே இங்கு நிறையப்பேருக்கு நேரமில்லை, புதிது புதிதாய் நாவல்கள், கவிதைகள் வேறு, அதையெல்லாம் விடுத்து, யார் (நண்பர் ஒருவர் சொன்னது போல் 'அமெரிக்கப் பேத்தியின் ஒரு அறுபது வயசு தாத்தா, ஐரோப்பிய தமிழனின் ஐம்பது வயசு அப்பா, குமுதம்/விகடன் கூட புரட்டி மட்டுமே பார்க்கும் பதினெட்டு வயசு தங்கை, ஏற்கனவே புருஷனுக்கு ரேடியா ஷாக், அமேசான் ஆசை பட்டியல் அறிந்த மனைவி, ஆகிய இணையத் தமிழர்..') இதையெல்லாம் படிக்கப் போகிறார்கள்?

இலக்கியங்கள் படிப்பது அவற்றை ரசிப்பவர்க்குத்தான் பிடிக்கிறது. சாமானிய மக்கள் பொழுதுபோக்குக்கு வார/மாத இதழ்கள் வாசிப்பது பெரிய குறிக்கோளுடன் அல்ல. ஆனால் இந்த நுட்பவியல் விருப்பப்பட்டுப் படிப்பவருக்கு மட்டுமே. விருப்பம் இருந்து, தேவை இருந்து, ஆனால் வேற்றுமொழியறிவு இல்லாதவர் தெரிந்து கொள்வதற்காகவே இவை பயன்படப்போகின்றன. ஒரு மசாலாப்படம் குடும்ப முழுமைக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக, 'கவுண்டமணி ஜோக், கவுன் போட்ட கன்னியர் ஆடும் கனவுக்காட்சி, கட்டிப்பிடித்து அழும் அண்ணன்-தங்கை, கடைசியில் அலறலுடன் வரும் போலீஸ்' என்று எடுக்கிறார்களே அப்படிப்பட்டதல்ல நுட்பவியல். தேடிப்போய், தேவைப்படுபவர் தான் படிப்பர்.

நாளும் மாறிக்கொண்டிருக்கும் நுட்பவியலை விட என்றும் படிக்கக் கூடிய இலக்கியங்கள் படைக்கலாமே!

ஒரு உவமானத்திற்காக திருக்குறளை எடுத்துக்கொள்வோம். அறம், பொருள், இன்பம் என்று திருவள்ளுவர் 133 அதிகாரங்களைப் படைத்திருக்கிறார். அறம், மனிதனைப் பக்குவப்படுத்த, அவன் மன நிலையைத் தயார்படுத்த உதவுகிறது. பிள்ளைப் பருவத்தில் மனிதன் பெறும், அறிவுரைகள், பள்ளிக் கல்வி இவற்றுக்கு ஒப்பாகும் இது. பொருள், அவன் வளர்ந்து வாலிபனாகி இவ்வுலகில் பொருளீட்டி, பகைவரை வென்று, நண்பரை நேசித்து, கூடி வாழ்ந்து, அரசில் பங்கெடுத்து, அவன் செய்ய வேண்டிய சமூகக் கடமைகளை முன்னிறுத்தும். இன்பம், இப்படி இரு நிலைகளிலும் வெற்றி கண்ட மனிதன் தன் உள்ளத்தே களிப்பதற்கான வழிமுறைகள் கேளிக்கைகள், காதல், தாம்பத்யம், இவற்றைப் பற்றி இருக்கும்.

சமகால இலக்கியம் என்பது இந்த இன்பத்துப்பால் போன்றது. பழந்தமிழ் அறநூல்கள், பக்தி இலக்கியங்கள் அவனுக்கு அறக் கல்வியை அளிக்கின்றன. ஆனால் பொருளியல்? அவை பற்றிய தமிழ் நூல்கள், செய்யுள்கள், எவ்வளவு இருக்கின்றன? திருக்குறளிலேயே ஒன்றைக் கவனிக்கலாம், 133 அதிகாரங்களிஅறம் - 38, பொருள் - 70, இன்பம் - 25 என்ற அளவிலே அமைந்திருப்பதை. பாதிக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் பொருள் விளக்கப்பட்டிருப்பதே அதன் முக்கியத்துவத்துக்கு சான்று. இத்தனைக்கும், அன்றைய பொருட்பால் பெரிதும் அரசியல், அமைச்சியல், படையியல், நட்பியல், குடியியல், என்றுதான் போகும். இன்றைய நுட்பவியலும் அதற்குள் அடக்கவேண்டுமென்றால் இந்த 50 சதவீதம் கூடப் போதாமல் பொருட்பால் இயல்களுக்கு 75 சதவீதம் பங்கு அளிக்கப் பட்டிருக்கும்! ஆனால், இன்று தமிழில் எழுத்து முயற்சிகள் இந்த முக்கியமான பகுதியை விட மற்றவற்றிலேயே அதிகம் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. இந்த நிலை மாறினால்தான், தமிழ்ச் சமுதாயம் பொருளியல் கருத்துகளில் தெளிவுபெற்று சிந்தனையை சீர்தூக்கி முன்னேறினால் தான், பொருளாதார உயர்வுபெற்று, பின் இன்பத்துப்பாலில் சுகிக்க முடியும். இதனால் இன்றைக்கு எழுத்தாளராய், கவிஞராய் இலக்கியம் படைப்போரை நிறுத்தச் சொல்வதாய் ஆகாது. மாறாக இன்னும் அதிகமாக நுட்பவியல் சாத்திரங்களை தமிழில் கொண்டுவர அனைவரும் தங்களானதை செய்யலாம் என்று அழைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...