செவ்வாய், டிசம்பர் 30, 2003

நண்பர்களிடையே சில நம்பிக்கைகள்

இணையம் வழியே மட்டும் அறிமுகமான ஒரு நண்பருடன் நேற்று ஒரு சிறு மின் அரட்டை. அதிலிருந்து சில வரிகள் இங்கே: (சேமிக்காமல் விட்டுவிட்டேன், ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன், எனவே அச்சு அசலாக இருக்காது, கோபிக்க வேண்டாம் நண்பரே)

நண்பர்: Good evening!
நான்:வணக்கம்.
நண்பர்: மாலை வணக்கம் அல்லவா?
நான்: வணக்கம், அவ்வளவுதான் மாலை வணக்கம், காலை வணக்கம் எல்லாம் கிடையாது.
..
..
..
நான்: 'சுனில், யுவர் டின்னெர் இஸ் கெட்டிங் கோல்ட்'ங்கிற மாதிரி சத்தம் கேக்குது. [நினைத்துப்பார்க்க: 'சியர்ஸ் எல்காட் டிவி விளம்பரம்']சாப்பிடணும்..
நண்பர்: டின்னரா, இன்னேரத்திலா? [மணி 11க்கும் மேல் ஆயிருந்தது]
நான்: ஆமாம்
நண்பர்: இரவு உணவு..இதுக்கு என்ன தமிழில்? எங்க வீட்டுக்காரம்மா கிண்டல் பண்ராங்க '...காசியோடு பேசாதீர்கள், அப்புறம் இரவு உணவு, கொட்டைவடிநீர்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க':-))
நான்: நமக்குத் தெரிஞ்சதெல்லாம் சோறுதான்...
..
..
தமிழில் பேசுவதும் எழுதுவதும் என்னமோ ஒரு பண்டிதத் தனம் என்பது மாதிரி ஒரு பிரமை இவரைப் போன்ற நண்பர்களுக்கு இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழில் சிந்திக்காமல் தமிழில் பேச/எழுத முயன்றால் இதுதான் நடக்கும். தங்களுக்குள் வணக்கம் சொல்லிக் கொள்ளும்போது 'காலை, மாலை' என்றெல்லாம் சேர்த்துச் சொல்வதில்லை. வணக்கம் நமக்கு என்றும் வணக்கம்தான். சொல்லப்போனால் சந்திக்கும்போதும் வணக்கம்தான் விடைபெறும்போதும் வணக்கம்தான். யாரோ வணக்கம் சொல்லும்போது காலை/மாலையை சேர்த்துச் சொல்லுகிறார்கள் என்பதற்காக அதே வழியில் சிந்தித்து அந்த சிந்தனையைத் தமிழ்ச் சொல்லாக்கினால், அந்தத் தமிழ் பண்டிதத் தமிழாகத்தான் இருக்கும்.

இவர்கள் இன்னொன்றை மறந்துவிடுகிறார்கள். அதாவது மேற்கத்தியவர் கூட, 'இன்றைய காலை நல்லதாக ஆகுக' என்று 'வாழ்த்து'த்தான் சொல்கிறார்கள், 'வணக்கம்' அல்ல. அப்படி வாழ்த்தும் போதுதான் நேரம் பற்றிய குறிப்பு தேவைப்படுகிறது. இந்த வாழ்த்தும் முறையே மேற்கத்திய நாடுகளிலேயே சமூகத்திற்கு சமூகம் மாறுபடுகிறது. ஜெர்மன்காரருடன் பேசும்போது, காலை ஒரு 9 மணிக்கு மேல் போய் 'நற்காலை' வாழ்த்தினீர்களானால் முழிப்பார். அவர்களுக்கு அதற்கு மேல் 'நன்னாள்' வாழ்த்து சொல்லித்தான் பழக்கம். அதே போல் சுலபமாக 'நல்லிரவு' வாழ்த்துகிறோமே ஆங்கிலத்தில், அதை அவர்கள் மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவர். கொஞ்சம் நெருக்கம் குறைந்தவர் அப்படி வாழ்த்தினால் அவர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பர். இவையெல்லாம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடும்.

அதே போலத்தான் இந்த 'இரவு உணவு'ம். அவர் கேட்க நினைத்தது 'சாப்பிட்டாச்சா?' என்பது. ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்ததால் 'Had your dinner?' என்று யோசித்து, அதற்கு தமிழில் சொல்லுக்குச்சொல் மொழிமாற்றம் செய்ய நினைத்து, டின்னருக்கு 'இரவு உணவு'என்று சொல்லி, அது நீளமாக, கவர்ச்சியின்றி இருப்பதால் அதைக் குத்திக்காட்டி, அதனுடன்கூட எப்போதும் இது மாதிரி வாதிடுபவர்களுக்கென்றே எவரோ கண்டுபிடித்த 'கொட்டைவடிநீரை'ப் போட்டு. அடாடா, எத்தனை கஷ்டம் இவருக்கு. 'சாப்பிட்டாச்சா?' அல்லது 'சாப்பாடு ஆச்சா?' என்றால் 'ஆச்சு, இல்லை' என்று எளிமையாக, சுருக்கமாக முடியவேண்டியது... இந்த மாதிரி சிந்திப்பது ஒரு அதீதமான நிலைப்பாடு என்பது என் தாழ்மையான கருத்து. இப்படித் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த சிலர்தான் போட்டோ பிலிமை ஆங்கிலத்திலும் 'கழுவுவபர்கள்'. இடியாப்பத்தை ஆங்கில மொழிமாற்றம் செய்து 'extruded and steamed rice flour' என்றால் எப்படி இருக்குமோ அது போல்தான் காப்பியை இப்படி கொட்டைவடிநீராக்குவதும்.

யோசித்துப் பார்த்தால், இந்த மாதிரி வணக்கம்/வாழ்த்து/உணவு எல்லாத்திலும் நேரத்தை நுழைக்கவேண்டிய அவசியம் ஐரோப்பியருக்கு இயற்கையில் இருந்திருக்கலாம். கோடையில் இரவு 9 மணிக்கும் வெளிச்சம் இருக்கிறது. வாடையில் காலை எட்டு மணிக்கும் இருளாய் இருக்கிறது, எனவே ஒருவர் தற்போதைய வேளையை அவ்வப்போது நினைவு படுத்தவும் தேவை இருந்திருக்கலாம். வருடம் முழுதும் பெரிய அளவில் பகல் இரவு மாறாத வெப்ப மண்டல வாசிகளான நம் மக்களுக்கு இவை தேவையில்லாமல் இருந்திருக்கலாம். இதெல்லாம் ஒரு ஊகமே. இதற்கு யாரும் வழக்குத் தொடுக்க வேண்டாம்.

ஒரு விதத்தில் நண்பர் நன்மையே செய்திருக்கிறார். அவருடன் அரட்டை என்னவோ 10 நிமிடம்தான் இருக்கும். ஆனால் அதை வைத்து ஒரு நாள் வலைப் பதிவை ஒப்பேற்றிவிட்டேனே, நன்றி நண்பரே. இதனால் அவர் என்னவோ தமிழுக்கு எதிரி என்றோ நான் தான் அவ்வையாரின் ஒரே பேரன் என்றோ ஆகாது. அவர் கதை, கவிதையெல்லாம் எழுதும் எழுத்தாளர். நான் எந்திரங்களுடன் புழங்கும் பொறியாளன். என்னைவிட அவரால் தமிழுக்கு நிறைய அளிக்க முடிந்திருக்கிறது. அவரை வைத்து இந்தப் பதிவை நான் ஓட்டிவிட்டேன் அவ்வளவுதான்:-))

இதையெல்லாம் அப்போதே ஏன் சொல்லவில்லை? இப்போதுதான் தோன்றியது, சொல்கிறேன். அப்புறம் வேறு எதற்கு மெனக்கெட்டு வலைப்பதிப்பது? நமக்குத் தோன்றியதை வீட்டுக்குள்ளேயெ சொல்லிக்காமல் வீட்டுத் திண்ணைக்கு வந்து சொல்வது போலத் தானே இந்த வலைப்பதிவுகள். வீதியில் உலா வருகிற சில பேச்சுத் தோழர்களுக்கு நாம் சொல்வதில் சுவாரசியம் ஏற்பட்டால் நின்று கேட்கப்போகிறார்கள். சிலர் பதிலுக்கு ஏதாவது சொல்லியும் போவார்கள். நம்மோடு ஒத்துப் போகாதவர்கள் நகைத்துக்கொண்டு வேறு வேலையோ வேறு திண்ணையோ பார்த்துப் போய்விடுகிறார்கள். மிகச் சிலர் மட்டுமே நம் திண்ணையில் உட்கார்ந்து தங்கள் அபிப்ராயத்தையே பெரிதென்று வாதிடுகிறார்கள். இதில் சிலர் முகமூடி வேறு அணிந்துகொள்வதால் இன்னும் பிரச்னை. நாம் என்ன வழக்காடு மன்றமா நடத்துகிறோம்? அல்லது இது என்ன ஊர்ப்பொதுச்சாவடியின் திண்ணையா? வாதம் முத்திப்போனால், நாகரிகம் கருதி (நம் வீட்டுத்திண்ணையாச்சே, கசமுசன்னு சத்தம் கேட்டால் நல்லாவா இருக்கு?) அய்யா வணக்கம், சென்று வாருங்கள், தங்கள் வருகைக்கு நன்றி என்று சொல்லி கதவைச் சாத்தி வீட்டுக்குள் வந்துவிட வேண்டியதுதான். திண்ணையில் போய்ப் பேசினால் இதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது, என்ன செய்ய?

1 கருத்து:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

இதே போன்று நான் சிந்தித்த போது எழுதியது:

வாழ்த்துகள்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...