வெள்ளி, டிசம்பர் 12, 2003

என்னுயிர்த்தோழன் ரேடியோ

இலங்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபன, தமிழ்ச்சேவை-2ல் காலையில் ஏழு மணிக்கு வரும் 'பொங்கும் பூம்புனல்' தான் அப்போதெல்லாம் எங்களுக்கு சுப்ரபாதம். அந்த 'ஒளிபிறந்த போது, மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா... ' என்ற பாடலின் இசை தூங்கிக் களைத்துப் போன உடலுக்கும் மனத்துக்கும் அப்படியொரு புத்துணர்வு ஊட்டும். எங்க உள்வீட்டுக்கும் (பெட்ரூம்) சீனிவாஸ் மாமா வீட்டுக்கும் இடையே ஒரு சுவர், அனால் அதில் விட்டத்துக்கும் மேல் ஒரு மூங்கில் தப்பை(சட்டம்)யால் ஆன டயமண்ட் வடிவ தடுப்புத்தான்.

சீனிவாஸ் மாமா கரண்ட் ஆபீஸில் வேலை பார்த்தார்; அவர் வீட்டில் ரேடியோ எல்லாம் இருந்தது. அங்கு பேசுவதெல்லாம் இங்கு கேக்கும். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் அறிந்து கொள்ள ஒரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால் பாட்டு மட்டும் பைசா செலவில்லாமல் கேட்டுக்கிட்டே இருப்போம். கடிகாரமும் இல்லாமல் என் அண்ணனுக்கும் எனக்கும் பல்லு விளக்குவதிலிருந்து பள்ளிக்குப் போவது வரை ரேடியோ தான் கடிகாரம், ரேடியோதான் அம்மா. நாலு மணிக்கெல்லாம் அம்மா எழுந்து வேலைக்குப் போயிருப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குளிக்கும் விஷயத்தில் நாங்கள் இங்குள்ள அமெரிக்கக் குழந்தைகளுக்கு முன்னோடிகள்;-)

சீனிவாஸ் மாமா வீடுதாண்டி, எங்க பெரியப்பா வீட்டிலும் ரெண்டு அக்காமார் இருந்ததால் ரேடியோ இடைவிடாது ஒலிக்கும். ஒலிச்சித்திரங்கள் ஒரு மணிநேரம் ஆளைக் கட்டிப்போடும். அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப ஒரு ஈஸ்ட்மென் கலர் படமே கண்ணுக்குள் தெரியும். என்னிக்காவது ஒலிச்சித்திரத்துக்குப் பதில் படப்பாட்டுப் போட்டானென்றால் அக்காக்கள் குஷியாவர், எங்களுக்கோ ஏமாற்றம்!

இது எல்லாத்தையும் விட எனக்கு மிகவும் பிடித்தது, கடைக்கார ஆத்தா வீட்டில் ஒரு மாமா இருப்பார்; அவர் ரேடியோவில் பாட்டுக்கேட்பது தான். அதில் விஷயம் என்னன்னா, அவர் ரேடியோவை அப்பப்ப பிச்சு வச்சு வேடிக்கை காட்டுவார். இங்கதான் ஐசக் நியூட்டனுக்குப் பேரனாச்சே, ரேடியோவை உள்ளுக்குள் பார்க்கும் வாய்ப்பை விடமுடியுமா. அங்கேயே நிப்பேன். அவர் அப்பப்ப திருப்புளியால் திருகுவார், தட்டுவார். திடீர்னு ரேடியோவுக்கு லீவு விட்டுவிடுவார்! எனக்கு அங்கு மட்டுமே கிடைத்த ஒரு தரிசனம், ரேடியோப்பெட்டிக்குள் சிகப்புக் கலரில் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு ஒரு சிறு நகரம் போல் பெட்டி பெட்டியாய் இருக்குமே, அந்த அதிசயக் காட்சிதான். மெதுவாக எரியும் வால்வு ரேடியோ ஒரு உயிருள்ள வஸ்துவாகவே தெரிந்தது. முதலில் சின்ன சைசில் TMSசும் சுசிலாவும் (அதென்ன, எம்ஜியார் பாடினாலும், சிவாஜி பாடினாலும் ஏன் அவங்க பேரச்சொல்லாம இந்த ஆளு பேரச் சொல்றாங்க?) அந்த கலர் லைட்டு எரியும் உலகத்தில் வசிக்கிறார்கள் என்றே நெடுநாள் நம்பினேன். ரயில் தண்டவாளத்தில் காந்தம் செய்ய எண்ணின அந்த நாட்களில்!

தோழமை தொடரும்...

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...