வியாழன், டிசம்பர் 11, 2003

கெட்டிக்காரனும் பொய்யும் புளுகும்

நேத்து ஒரு பதிவுக்கு தலைப்புக் கொடுக்கவேண்டி யோசித்தபோது, 'ஆணோ பொண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது' என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்தது. அதோடு கோர்வையா முன்பு கேட்ட இன்னொரு கதையும் ஞாபகம் வந்தது. அதை இன்னிக்கு எடுத்து உடறேன்.

ஒரு ஊர்லெ ஒரு பெரிய பணக்காரர் (பண்ணையார்னு போட்டதை மாத்திட்டேன், பண்ணையார் என் கதை எல்லாத்திலயும் வர்றார், விடுகதையானாலும்! கெட் லாஸ்ட் பண்ணையார்!) இருந்தார். அவர் சம்சாரம் மாசமா இருந்தாங்க. அவருக்கு, பொறக்கப்போறது ஆணா பொண்ணான்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அப்ப ஸ்கேன் எல்லாம் இல்லை. பக்கத்து ஊர்லே பேர் போன ஜோசியர் ஒருத்தர் இருந்தார். வண்டிவெச்சு ஆளனுப்பி அவரைக் கூட்டீட்டு வந்தார். வந்தவர் கைரேகை, மை, அது இதுன்னு என்னென்னமோ போட்டுப் பாத்துட்டு, 'அய்யாவுக்கு ராஜா மாதிரி பையன் தான் பொறக்கும்'னு அடிச்சுச் சொல்லிட்டார்.

அய்யாவுக்கு செரியான சந்தோசம். அவருக்குத் தடபுடலா விருந்து எல்லாம் செஞ்சு போட்டு, எக்கச் சக்கமாப் பணம், பவுன் எல்லாம் குடுத்து வண்டியிலே கொண்டுபோய் விட்டுட்டு வர வெச்சார்.

சிங்கக்குட்டி பெத்துக்குடுக்கற பொண்டாட்டியை தாங்கு தாங்குன்னு தாங்கினார் அய்யா. அப்பறம் குழந்தையும் பொறந்துது. ஜோசியர் குட்டும் உடைஞ்சுது. பொறந்துது பொட்டப்புள்ளை!

'கூப்புடுறா அந்த ஜோசியனை'ன்னு சத்தம் போட்டார். ஆள் பறந்து போய் ஜோசியரைக் கூட்டீட்டு வந்தாச்சு. 'என்னய்யா நீ ஜோசியம் பாத்த லட்சணம்? பையன் பொறப்பான்னு அடிச்சு சொன்னே, இப்ப என்ன ஆச்சு பாத்தியா? எனக்குப் பொண்ணு பொறந்ததனால ஒண்ணும் கெட்டுபோகலெ, ஆனா இனிமே இந்த ஜில்லாவிலயே நீ ஜோசியம் பாக்கறேன்னு சொல்லி வாயைத் தொறக்கக் கூடாது' அப்பிடின்னு தாட் பூட்டுன்னு கத்துனார்.

'அய்யா கொஞ்சம் இருங்க. நான் பொய் சொன்னது வாஸ்தவமுங்க. ஆனா என் ஜோசியத்தை குறை சொன்னா அது ஆகாதுங்க. பொண்ணு தான் பொறக்கும்னு ஜோசியம் பாத்த அன்னிக்கே எனக்குத் தெரியுமுங்க. ஆனா, அதை உங்க கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுதுங்க? பையன்னு சொன்னாலாவது, அந்த சந்தோசத்தில நீங்க உங்க சம்சாரத்தை நல்லாக் கவனிச்சுக்குவீங்க, மாசமா இருக்கறவங்களை நல்லப் பாத்துக்கறதுக்காகவாவது பொய்சொல்லலாமேன்னுட்டுத் தான் அப்பிடிச் சொன்னேன்'ன்னு அசராமச் சொன்னார் நம்மாள், ஜோசியர்.

'அதெல்லாம் சரித்தான், இதை எப்பிடி நான் நம்பறது? நீ இப்ப என்கிட்ட சமாளிக்கறதுக்காக இப்படிச் சொல்றேன்னு நான் சொல்றேன். அதுக்கென்ன சொல்லப் போறே?'ன்னு அய்யா கேட்டார்.

'அய்யா, எங்கூட வாங்க'ன்னு சொல்லி ஜோசியர் எந்திரிச்சு, 'எரவாரத்திலே கையைவிட்டு அங்க ஒரு காயிதம் கிடக்கும், அதை எடுங்க' அப்பிடின்னார். அய்யா அதேமாதிரி ஓரு இடுக்கிலிருந்து ஒரு சுருண்டுகிடந்த பழைய காயிதத்தை எடுத்தார். 'அய்யா இதில் என்ன எழுதியிருக்குன்னு படீங்க'ன்னு சொன்னார். 'பெண்'-படிச்சார் அய்யா. இந்த மாதிரி கேள்வி வரும்னு அன்னிக்கே எனக்குத் தெரியும். அதுனாலதான், ஜோசியப்படி நான் கண்ட உண்மையான பலனை இங்க எழுதி வெச்சுட்டுப் போனேன்', அப்பிடின்னார் நம்மாளு. 'இப்ப ஒத்துக்கிறீங்களா என் ஜோசியத்தோட செல்வாக்கை?'

'அட, ஆமாய்யா, நீ உம்மையிலேயே பெரிய ஜோசியர் தான். அதுமட்டுமில்ல, பெரிய மனுஷனும் கூட. எல்லாரும் நல்லா இருக்கட்டும்னுதான் மாத்திச் சொன்னேன்னு நான் ஒத்துக்கறேன்'ன்னுட்டு, இன்னும் கொஞ்சம் பணம், நகை எல்லாம் குடுத்து வண்டியிலயே கொண்டுபோய்விட்டுட்டு வரச்சொன்னார்.

மறுபடியும் பணம், நகையெல்லாம் சன்மானம் வாங்கிட்டு வந்த ஜோசியர்கிட்ட அவர் சம்சாரம் கேட்டுது, 'பையன் பொறந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?'ன்னு. நம்மாளு சிரிச்சுக்கிட்டே சொன்னார், 'அந்த எரவாரத்தில ஓட்டு சந்தில நான் வெச்சிட்டு வந்த காகிதம் யாருக்குத் தெரியப் போகுது, பொங்கலுக்கு வெள்ளையடிக்கறப்ப குப்பையோடு குப்பையாப் போயிருக்கும்'னு.

அ.சொ.பொ.
எரவாரம்: ஓட்டு வீடுகளில் திண்ணைக்கு மேல் கைக்கைட்டும் இடத்தில் அகப்படும் இடுக்கு.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...