புதன், டிசம்பர் 03, 2003

சுவையான கேள்வி பதில்கள்

ரெண்டு நாள் ஹெவியாப் போட்டுத் தாக்கினதுக்கு ஒரு நிவாரணம், இன்று சும்மா துக்கடா. பருவ(?) இதழ்களில் வந்த கேள்வி-பதில் பகுதிகளில் இருந்து நான் ரசித்த சில.
___________________________________________________________________

கோல்டன் அ. ஷாகுல், வந்தவாசி: இறைவனால் பூமியில் படைக்கப் படுகிறோம். வாழ்க்கையில் (பூமியில்) இன்பம், துன்பம், சோகம், வெற்றி, தோல்வி, பொறாமை என இப்படி வாழ்ந்துகொண்டிருக்கையில், காலம் முடிந்துவிடுகிறது. புதைக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ மீண்டும் இறைவனிடம் போய்ச் சேருகிறோம். இது இறைவனின் விளையாட்டு என்றால், விளையாடுவதற்கு நாம்தானா கிடைத்தோம்?

ஹாய் மதன் - ஆனந்த விகடன்:  தெரியலையே! இந்த அகண்ட வெளியில் இன்னும் எவ்வளவு கிரகங்களில் இந்த விளையாட்டு நடக்குதோ?! கிரிக்கெட் விளையாட ஒரே ஒரு கிரவுண்டை மட்டுமே இறைவன் தேர்ந்தெடுத்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை!

___________________________________________________________________

ஜீபா, திருப்புகலூர்: ஒரு அறிவுரை ப்ளீஸ்..!

இளசு பதில்கள் - தமிழன் எக்ஸ்பிரஸ்: வசதியானவர்களே! நீங்கள் மனசாட்சிப்படி நடந்து கொண்டு உங்கள் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுங்கள்.

வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களே! நீங்கள் மனிதராகப் பிறந்ததற்கும், பிறந்ததனால் செய்த தவறுகளுக்கும் தண்டனையை அனுபவியுங்கள்.

ஏனெனில் இதுதான் இன்றைய உலகின் நிலை. இதில் அறிவுரையால் ஆகப் போவதென்ன?

___________________________________________________________________

வி.சுப்ரமணியம், திருப்பூர்: கார்த்திகை மாதம் ஐயப்ப சீசன் தொடங்கி விட்டது... பக்தர்களுக்கு உங்களின் ஆலோசனை ஏதாவது?

அந்துமணி பதிலகள் - தினமலர் வாரமலர்: கடன் வாங்கி மாலை போடாதீர்; அப்படியாவது ஐயப்பனை தரிசிக்கும் எண் ணம் வேண்டாம்! மலையில் இருந்து இறங்கியதும் பாட்டிலை "ஓப்பன்' செய்யாதீர் கள்–அதை தவிர்ப்பதற்காக – மனதை கட்டுப்படுத்துவதற்காக 41 நாள் இருந்த விரதத்திற்கு மதிப்பில்லாமல் போகும்! சபரி மலை செல்வதை, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் ஜாலி டிரிப்–குடும்பத்திலிருந்து, மனைவியிடமிருந்து நாலு நாள் விடுதலை என்பது போலவும் கருதாதீர்கள்!

___________________________________________________________________

வி.ஜி. சத்தியநாராயணன், சென்னை-61: ராமனை காட்டுக்கு அனுப்பி 'வனவாசம்' இருக்கச் செய்தது பதினான்கு வருடம்.. இந்தியாவில் ஆயுள் தண்டனை என்பது பதினான்கு வருடம்.. இரண்டையும் ஒப்பிட முடியுமா?

ஏன்? எதற்கு? எப்படி? - ஜுனியர் விகடன்: இந்த 'பதினான்கு' ஒற்றுமை ஆச்சரியம் தான். மேலும், கம்பனின் பாடலைப் பாருங்கள்..

'ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய்..' என்ற கம்பராமாயணத்தின் மிகப் பிரசித்தமான விருத்தம் அது. ''ராச்சியத்தை பரதனே ஆள நீ காட்டுக்குப் போய் புண்ணிய நதிகளில் குளித்துவிட்டு 'ஏழிரண்டாண்டில்' சீக்கிரமே வந்துவிடு என்று உன் அப்பாதான் சொன்னார்!'' என்கிறார் கைகேயி.

ஆயுள் தண்டனையை, கணவனின் எதிரிலேயே இவ்வளவு தேன் தடவிச் சொல்ல ஓர் அழகான இளம் மனைவியால்தான் முடியும்!

___________________________________________________________________

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...