திங்கள், டிசம்பர் 15, 2003

தொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம்

இன்றைய செய்தித்தாளில் படித்த நிறைவான செய்தி. AICTE என்ற இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான ஆட்சிக்குழு பொறியியல் பட்டத்திற்கான பாடத்திட்டத்தில் வடிவமைப்பு மற்றும் புதுமையாக்கல் (design and innovation) கோட்பாடுகளைப் புகுத்தப் போகிறது. 'பொறியியலின் சாரம் வடிவமைப்பே' (Design is the essence of Engineering) என்பதை என்று நம் கல்வியாளர்கள் புரிந்துகொள்கிறார்களோ அன்றுதான் நம் பொறியாளர்கள் முழுமை பெறுகிறார்கள்.

மனிதனால் தயாரிக்கப்படும் செயற்கைப் பொருட்களை சிந்தித்து உருவாக்குபவரிடமிருந்து, பயன்பெறுவர் வரை இருக்கும் அடுக்குகளை முக்கியமாக பின் வருமாறு வகைப்படுத்தலாம். உதாரணமாய் ஒரு வானொலிப் பெட்டியை எடுத்துக் கொள்வோம். அதன் நிலைகள்:

1. அடைப்படை ஆராய்ச்சி/கண்டுபிடிப்பு (Invention):அதன் அடிப்படை அறிவியல் கருத்தான மின்காந்த அலைகளின்மேல் ஒலி அலைகளை ஏற்றி இறக்குதல் ஒரு விஞ்ஞானியால் (மார்க்கோனி என்று கொள்வோம்) கண்டுபிடிக்கப்படுதல். அதற்கு என்ன மாதிரியான அலைவரிசைகள் ஏற்றவை, எத்தகைய மின்சுற்றுகள் தேவை போன்ற விஷயங்கள்.

2. வடிவமைத்தல் (Product design): என்ன மாதிரிக் கருவி யாருக்குப் பிடிக்கும், என்ன விலைக்குப் போகும் என்பதிலிருந்து, எந்த மாதிரி திருகு குமிழ் எளிதில் உடையாது, எந்தப் பிளாஸ்டிக் வார்ப்புக்கு எளியது என்பது வரை எண்ணற்ற சிறுசிறு விஷயங்களை அலசி ஆராய்ந்து ஒரு ஸ்தூல வடிவம் கொடுத்தல்.

3. தயாரிப்பு முறைகள் தீர்மானித்தல் (Process Engineering): எத்தகைய ஆலையில் எவ்வாறான இயந்திரங்கள்/கருவிகள்/முறைகள் கொண்டு மேலே சொன்னவாறு வடிவமைக்கப்பட்ட வானொலிப் பெட்டியைச் செய்யலாம் என்பதை தீர்மானித்தல். என்னென்ன பாகங்களைத் தானே செய்யலாம், எதை வெளியில் வாங்கலாம் என்பதுபோன்ற நிறைய முடிவுகள் எடுத்தல்.

4. இயந்திரம்/கருவிகள் அமைத்தல் (Tooling): தயாரிப்பு முறைத்திட்டப்படி தேவைப்படும் புதிய அச்சுகள்/கருவிகள்/பிரத்தியேகமான இயந்திரங்கள் ஆகிவற்றை வடிவமைத்து, உருவாக்கி, சோதித்து, தயாரிப்பு ஆலைகளுக்கு அளித்தல்.

5. பொருள் தயாரித்தல் (Manufacturing): ஒரு ஆலையை நிறுவி, ஆட்கள் அமர்த்தி, இயந்திரங்கள்/கருவிகள் அமைத்து, கொள்முதல் போட்டு மூலப்பொருட்களை வாங்கி, விறபனைக்குத் தாயாராக வானொலிப் பெட்டிகளை தயாரித்தல்

6. சந்தைப்படுத்தல், விற்பனை, அதற்குப் பிந்திய சேவை (Marketing): அவ்வாறு தயாரான வானொலிப் பெட்டிகளை சரியான விளம்பரம் செய்து, சில்லறை வியாபாரிகளை நியமித்து, சரக்கு வினியோகிக்கத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி விறபனை செய்தல். வாங்கியோருக்கு ஏற்படும் குறைகளைக் களைய சேவை மையங்களை ஏற்படுத்தி நிர்வகித்தல்.

இதில் முதல் நிலை மட்டுமே அறிவியல். இரண்டாம் நிலையிலிருந்து அறிவியல்->தொழில்நுட்பம்->பொறியியல் என்று பரிணாமிக்கிறது. இத்தகைய ஒவ்வொரு நிலையிலும் இந்திய மூளை மற்றும் கரங்களின் பங்கு எவ்வளவு என்று ஆராய்ந்தால், கீழ்க்கண்டவாறு அமைவதைக் காணலாம்.


இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள் கிட்டத்தட்ட 100% இந்தியர்களாலேயே சந்தைப்படுத்தல்/விற்பனை/சேவை செய்யப்படுகிறன. அவற்றில் 95% இந்தியர்களால் தயாரிக்கப்பட்டவைதான். அவற்றைத் தயாரிக்க பயன்பட்ட கருவிகளில் ஒரு 75% இந்தியாவில் தயாரானவையாக இருக்கும். அந்தக் கருவிகளுக்கான திட்டமிடுதல் ஒரு 50% இந்தியர்கள் பங்கேற்றதாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட பொருட்கள்? அவை 25% இருந்தாலே நாம் இன்று எங்கோ போயிருப்போம். என் தாழ்மையான அனுமானம், நானும் ஒரு வடிவமைப்புப் பொறியாளன் என்ற உரிமையில் சொல்கிறேன், இதில் இந்தியப் பொறியாளர்களின் பங்கு 5-10% என்ற அளவிலேதான் இருக்கும். உலகத் தரத்துக்கு பொருட்களை வடிவமைக்க வேண்டிய ஒரு நிறுவனத்தின் துறைத்தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, எத்தனையோ இளம் பொறியாளர்களை நேர்காணல் செய்தவன் என்ற முறையில் நம் இந்த பலவீனத்தை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். இதை என்று நம் கல்வியாளர்களும், ஆசிரியர்களும் உணர்கிறார்களோ அன்று தான் இந்தியாவுக்கு விடிவுகாலம். அழைப்பு மையங்களாலும், மென்பொருள் சேவையாளர்களாலும் இன்று நாம் பெறுவது போல் தொன்றும் இந்த முன்னேற்றம் ஒரு நீர்க்குமிழி, நம் சொந்த பூமிக்கு எந்த விதத்திலும் பெரிய நீண்டகாலப் பயன் அளிக்காத ஒன்று என்பது என் கருத்து.

காலங்காலமாக இந்திய பொறியியல் அன்னியத் தொழில்நுட்பத்தை பெரிதும் சார்ந்தே இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவின் தொழிற்புரட்சி, மேற்சொன்ன நிலைகளில் ஐந்தாம் நிலையில் இருந்து தொடங்கியது. அதை மேலேஎடுத்துச் சென்று முதல் நிலைக்குக் கொண்டு வருவது நம் இன்றைய கடமை.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...